"

7

6.கழுகுக்கூட்டங்கள்

நான் இருபது வயது வரைக்கும் மருத்துவமனைகளுக்குச் சென்றதே இல்லை. ஊரில் இருந்த ஒரே சிறிய அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திலும் பெரும்பாலும் வயதானவர்களின் கூட்டம் தான் அதிகமாக இருக்கும். எப்போதும் போல அதே வெள்ளை மாத்திரை. ஊதா நிற களிம்பு. அங்குப் பணியிலிருந்தவர் தனியாகக் கிளினிக் வைத்திருந்தார். அவர் வரும் ராஜ்தூத் வண்டி இன்னமும் நினைவில் உள்ளது.

ஆனால் சித்த மருத்துவம் படித்தவர்கள் அல்லது தெரிந்தவர்கள் வைத்திருந்த பத்துக்குப் பத்து அறையில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். நான் மட்டுமல்ல. குடும்பத்தில் எவருக்கும் அடிக்கடி மருத்துவமனைகள் பக்கம் செல்லும் நிலையில் இருந்ததே இல்லை. காரணம் செமத்தியான சாப்பாடு. அதற்குச் சமமான உழைப்பு. வீட்டில் வேலையாட்கள் அதிகளவு இருந்த காரணத்தால் வீட்டு விறகடுப்பு திருவண்ணாமலை தீபம் போலவே எப்போதும் எறிந்து கொண்டேயிருக்கும்.

நொறுக்குத் தீனி வகையாறாக்களோ, கடைகளில் விற்கும் நொந்து போன பலகாரங்களையோ தின்றதில்லை என்பதை விட அதற்கு வாய்ப்பும் அமைந்ததும் இல்லை.

ஊருக்குள் நிரம்பியிருந்த குளங்களிலும், வழிந்து நிற்கும் கண்மாயிலும், காட்டுச் சிவன் கோவில் பகுதியில் இருந்த தாமரைக்குளமும், ஒட்டியிருந்த பெரிய கிணற்றில் நீச்சலே தெரியாமல் குதித்து வெளியே வந்த போதிலும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஜல்பு (ஜலதோஷம்) பிடித்ததே இல்லை.

இராமநாதபுர மாவட்டத்தின் வெயிலின் தாக்கம் மட்டும் வருடந்தோறும் மறக்காமல் உடம்பில் வேணல்கட்டியை கொண்டு வந்து விடும். முகம் முழுக்கக் கட்டி பெரிதாக வரும். வீட்டில் எப்போதும் போல மஞ்சளை அறைத்து போட அடுத்தச் சில வாரங்களில் காணாமல் போய்விடும்.

திருப்பூர் வந்த போது மாறிய பழக்கவழக்கங்கள், நேரந் தவறிய உணவுகள், உணவக சாப்பாடுகள், இரவு நேர தொடர் உழைப்பு என்று மூன்று வருடங்கள் கொடுத்தப் பலனால் டைபாய்டு வருடந்தோறும் வந்த போது சற்று முழித்துக் கொண்டேன். திருமணம் ஆகும் வரையிலும் ஒல்லி உடம்பில் ஓராயிரம் நம்பிக்கைகள் இருந்த காரணத்தால் அதுவே பல சமயங்களில் எதிர்ப்பு சக்தியாக இருந்து உதவி கொண்டிருந்தது.

குழந்தைகள் வந்த பிறகு தான் ஆங்கில மருத்துவர்களுக்கும் எனக்கும் ஒரு பெரிய போராட்டமே தொடங்கியது.

முதன் முதலாக நண்பர் சொல்லி பல்லடம் சாலையில் இருந்த தமிழ்நாடு திரையரங்கம் இருந்த அந்தப் பெண் மருத்துவரை சந்தித்தோம். பத்துக்குப் பத்து அறையில் தான் இருந்தார். பரிசோதனைகள் முடிந்த பிறகு உங்களுக்கு இரட்டைக்குழந்தைஎன்று அவர் சொன்ன போது தப்பா எடுத்துக்காதீங்க என்று சொல்லி விட்டு அவர் அனுமதியை எதிர்பார்க்கமலேயே அவர் கையை வலிக்கும் வரையிலும் குலுக்கிய போது என்னை வினோதமாகப் பார்த்தார்.

அது தான் அவருடனான முதல் சந்திப்பு.

இனிதாகத் தான் தொடங்கியது. ஆனால் சில மாதத்திற்குப் பின்பு எங்கள் இருவருக்கும் கைகலப்பு என்கிற ரீதிக்குக் கொண்டு வந்து நிறுத்தியது.

முதல் மாதம் சென்ற போது பரிசோதனைகள் முடிந்து அவர் எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டை அவர் கிளினிக்கிற்கு வெளியே இருந்த மருந்துக் கடையில் வாங்கிய போது நான் அவசரத்தில் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அடுத்த மாதம் அவர் கிறுக்கலாக எழுதிய வார்த்தைகளைக் கவனித்துக் கொண்டே குழப்பத்துடன் மருந்துக் கடையில் கொடுத்த மாத்திரைகளை எழுதப்பட்ட சீட்டில் உள்ள முதல் எழுத்தை வைத்து உத்தேசமாக வைத்துக் கொண்டு என்னங்க மாறியிருக்கே?” என்ற போது தான் அவர் எதார்த்தமாக இரண்டுமே ஒரே கம்பெனிஎன்றார்.

மனதில் குறித்து வைத்துக் கொண்டேன்.

ஒவ்வொரு மாதமும் மருந்தும் மாத்திரையும் மாறிக் கொண்டேயிருந்தது.

செலவும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. அடுத்த மாதம் அவர் புதிததாக எழுதிய போது தைரியமாகக் கேட்டேன்.

கொஞ்சம் புரியும்படியா எழுதலாமே?” என்றேன்.

உங்களுக்குப் புரிஞ்சு என்ன ஆகப்போகுது? நான் எழுதிக் கொடுப்பதை வாங்கிக் கொடுங்க. வேற எந்த ஆராய்ச்சியும் செய்யாதீங்க என்றார்.

இடையிடையே அவர் கேட்ட ஸ்கேன் ரிப்போர்ட் முதல் அவர் தனியாக வேலை செய்த மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு வரச் சொல்லி அங்கே சோதிப்பது வரைக்கும் நடந்து கொண்டிருந்தது.

அடுத்த மாதம் ஒரு முடிவோடுதான் சென்றேன்.

மருந்துச்சீட்டு எழுதியவுடன் எங்க சொந்தக்காரர் கடை வைத்திருக்கின்றார். நான் அங்கே வாங்கிக் கொள்கின்றேன்என்றவுடன் வந்ததே கோபம்.

பொறிந்து தள்ளிவிட்டார்.

அதுவரைக்கும் அவர் எழுதிய மாத்திரை மருந்துகளின் விலையை மற்ற கடைகளில் ஒப்பிட்ட போது விலையோ மலைக்கும் மடுவுக்கும் இருந்தது. இது தவிர அந்தக் குறிப்பிட்ட மருந்துகள் அந்தக் கடையைத் தவிர வேறு எந்தக் கடைகளிலும் கிடைக்காது.

நண்பர் வைத்திருந்த மருந்துக் கடையில் ஒவ்வொன்றையும் அவரிடம் விலாவாரியாகக் கேட்ட போது அவர் எழுதிக் கொடுத்த எதுவும் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை என்பதையும் மனதில் குறித்துக் கொண்டு அவரிடம் செல்வதை நிறுத்தி விட்டோம்.

அதன் பிறகே என்ன ஆனாலும் பராவாயில்லை என்று காய்கறிகள், பழங்கள் என்று எங்களுக்குத் தெரிந்த வகையில் மாத்திரை மருந்துக்களைத் தவிர்த்து துணிவோடு இறங்கினேன்.

இன்று அவர் நகர்புறத்தில் மூன்று மாடிகள் உள்ள சொந்த கட்டிடத்தில் இருந்து கொண்டு மருத்துவச் சேவை செய்து கொண்டிருக்கின்றார். குழந்தைகள் வந்த பிறகு அடுத்தப் போராட்டம் தொடங்கியது.

கிடைத்த அனுபவங்களின் பலனாக இயற்கையான சத்து மாவுச் சமாச்சாரங்கள் என்று இரட்டையருக்கு கொடுத்து இந்த மருத்து மாத்திரைகளைத் தவிர்த்த போதிலும் எதிர்பாராமல் வரும் சளித் தொந்தரவில் இருந்து தப்பிக்க முடியவில்லை. ஒரு மருத்துவர் அறிமுகம் ஆனால் அவர் சரியானவர் சரியில்லை என்று உடனே முடிவுக்கு வந்து விடுவதில்லை.

அவர் சொல்லும் அத்தனை விசயங்களையும் அப்படியே ஏற்றுக் கொண்டு செயல்பட்ட போதிலும் அடுத்த நான்கு மாதத்தில் அதே போலப் பிரச்சனை வரும் மாத்திரை மாறும். அதன் வீரியம் கூடும். செலவு அதிகமாகும். பல சமயம் இந்த வீர்யம் தாங்காமல் குழந்தைகளின் நாக்கு உதட்டிலும் புண் வரும்

எந்த மருத்துவரும் பேச அனுமதிப்பதில்லை. அவர்கள் எழுதிக் கொடுக்கும் எந்த மருந்து மாத்திரையும் அவர்கள் குறிப்பிட்ட மருந்துக் கடைகளைத் தவிர வேறு எந்தக் கடைகளிலும் கிடைப்பதே இல்லை.

நள்ளிரவில் பல சமயம் கொடுமையான சிக்கலில் மாட்டிய கதையெல்லாம் உண்டு.

குழந்தைகளுக்குப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவரிடம் இது குறித்துக் கேட்ட போது அவர் சிரிக்காமல் சொன்ன பதில்.

ஸ்டாக் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியது தானேஎன்றார்.

நான் போட்டிருந்த செருப்பு வெளியே கழட்டி வைத்து விட்டு வந்த காரணத்தால் அமைதியாகத் திரும்பி வந்து விட்டேன்.

திருப்பூரில் உள்ள தண்ணீரில் மற்றொரு பிரச்சனையும் உண்டு.

வீட்டுக்கு வரும் தண்ணீரும், குடிக்கப் பயன்படுத்தும் தண்ணீரும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு இடத்திலும் இருந்து வரும். தண்ணீர் பற்றாக்குறை காரணமாகப் பல சமயம் லாரியில் வரும் நீரின் தன்மை என்று வெவ்வேறாக இருக்க இதன் பாதிப்பு உடனடியாகக் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கண்கூடாகத் தெரியும்.

சளியில் தொடங்கி வைக்கும். காய்ச்சலில் கொண்டு போய் விடும். சில சமயம் சளி கோழையாக நெஞ்சில் தங்கி விடும். வாங்கி வரும் மாத்திரையும், மருந்தும் அந்த நேரத்தில் கேட்கும். அதன் எதிர்விளைவுகளும் உடனடியாகத் தெரியும். வேறு வழியே இல்லை என்கிற போது பார்த்துக் கொண்டே கடந்து செல்ல வேண்டியதாக இருக்கும்.

கடந்த பத்து வருடங்களில் ஏறக்குறைய ஆறு குழந்தைகள் மருத்துவராவது பார்த்திருப்பேன். ஒன்று வீர்யத்தின் அளவைக் கூட்டி உடனடி நிவாரணத்தில் இறங்கி விடுகின்றார்கள்.அல்லது விற்காத பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத கண்ட மருந்துகளை நம் தலையில் கட்டுவதைக் குறியாக இருக்கின்றார்கள்.

தற்போது ஒவ்வொரு மருத்துவரும் அவர்களின் மருத்துவமனையிலேயே மருந்துக்கடைகளையும் வைத்துள்ளார்கள்.

ஒவ்வொரு சமயமும் உடனடியாக மருத்துவரை மாற்றக்கூடாது என்று யோசித்து யோசித்துப் பலரையும் கேட்டு கேட்டு ஒவ்வொருவரிடமும் சென்றாலும் இறுதியில் மிஞ்சுவது ஏமாற்றமே.

குழந்தைகளைக் குழந்தைகளாகப் பார்க்கும் வெங்கடாச்சலம் என்பவரை சில வருடத்திற்கு முன்பு சந்தித்தேன்.

நான் சந்தித்த போதே அவரின் வயது 70 இருக்கக்கூடும்.

அந்த ஒரு வருடமும் எந்தப் பிரச்சனையும் பெரிய அளவில் சந்திக்கவில்லை. அவரின் சிகிச்சை செய்யும் விதமும் வித்தியாசமானது. உள்ளே நுழைந்ததும் நம்மிடம் விபரங்களைக் கேட்டு விட்டு நம்மை வெளியே அனுப்பி வைத்து விடுவார். அவர் மேஜையில் எப்போதும் கடலை மிட்டாய் வைத்திருப்பார். ஒன்றை எடுத்து முதலில் குழந்தைகளிடம் கொடுத்து விட்டுப் படிப்படியாகப் பேசத் தெரிந்த குழந்தைகளிடம் பேசிக் கொண்டே ஒவ்வொன்றாகக் கேட்டுக் கொண்டே வருவார்.

சட்டையை முழுமையாகக் கழட்டச் சொல்லி அமைதியாகப் பரிசோதனை எல்லாம் முடித்த பிறகு கடைசியாக நம்மை அழைத்துச் சில பொட்டலங்களில் வைத்துள்ள பொடி போன்ற வஸ்துவை கொடுப்பார். சில மாத்திரைகள் மட்டும் எழுதிக் கொடுப்பார். மிக மிக அவசியம் என்றாலொழிய ஊசி போட மாட்டார்.

எட்டு வருடங்கள் கடந்து வந்து நின்ற போது குழந்தைகளின் ஆரோக்கியமென்பது நான் நினைத்த அளவிற்கு இல்லை என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது. ஒவ்வொரு முறையும் பேய்க்கு பயந்து பிசாசுக்களிடம் சிக்குவது போலவே இருந்தது. அப்போது தான் அவரைச் சந்தித்தேன்.

சித்த மருத்துவத்தில் இருந்தவர் அதனை விட்டு வெளியே வந்து வீட்டு புரோக்கர் தொழிலில் இருந்தார்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காரைக்குடி உணவகம் Copyright © 2015 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.