2
-
காரைக்குடி உணவகம் – அளவில்லா சாப்பாடு
எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடனும்.
எப்பொழுது வேண்டுமானலும் சாப்பிடனும்.
எல்லாவற்றையும் சாப்பிடனும்.
ஆனால் ஆரோக்கியத்தில் குறையேதும் வந்து விடக்கூடாது.
இதுதானே நாம் அனைவருக்கும் இருக்கும் ஆசை? ஆனால் எதார்த்தம் என்பது எல்லா இடங்களிலும் தலைகீழாகத்தானே இருந்து தொலைக்கின்றது.
என் தாத்தா இறந்த போது வயது 84. இரண்டு ஈடு இட்லி சாப்பிட்டு முடித்த பிறகு தான் எதிரே இருப்பவர்களிடம் பேசத் தொடங்குவார். அடுத்து வேகம் மட்டுப்படுமே தவிரக் குறையாது. ஒரு ஈடு என்பது எட்டு என்ற எண்ணிக்கை கொண்டது. சாம்பார் சட்னி போன்ற சமாச்சாரங்கள் என்றால் தூக்கி கடாகி விடுவார். அம்மியில் அரைத்த மிளகாய் துவையல். செக்கில் ஆட்டிய நல்லெண்னெய். கலந்து கொண்டு குழப்பிக் கொண்டு தின்பதைப் பார்ப்பவர்களுக்குப் பேதி வந்து விடும். ஆனால் காலையில் அருகே இருந்த ஊரணிக்கரையில் ஏழெட்டு சுற்று வந்து விடுவார். மாலையில் 4 கீலோமீட்டர் தொலைவில் உள்ள கோவிலுக்குத் தினந்தோறும் சென்று வருவதைப் பார்த்து இருக்கிறேன்.
தூங்கும் போது சொல்லிவிட்டு தான் படுத்தார். காலையில் எழுந்த அவர் உடம்பு இருந்தது. உடம்பில் மூச்சு இல்லை.
அப்பாவுக்கு 60வது வயது முடியும் வரைக்கும் உணவு விசயத்தில் அப்பனுக்குத் தப்பாத பிள்ளையாக இருந்தார். அசைவ வெறியர் என்றே அழைகக்லாம். ஆனால் கடைசிக் காலத்தில் வந்த சர்க்கரை நோயை அவர் பொருட்படுத்தவே இல்லை.
பெரும்பாலும் சர்க்கரை நோயாளிகளைக் கவனித்துப் பாருங்கள். சர்க்கரை நோய் வந்துள்ளது என்று தெரிந்ததும் மருத்துவரிடம் செல்லத் தொடங்குவர். தினந்தோறும் மருத்துவர் சொல்லும் மருந்துக்களையும் எடுத்துக கொள்வர். ஆனால் நாளுக்குள் நாள் உடம்பு இளைத்துக் கொண்டேயிருக்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருப்பார்.
அப்படி என்றால் உண்ட மருத்தின் பலன் தான் என்ன? வைத்திருந்த கட்டுப்பாடுகள் என்ன தந்தது என்றால் மிஞ்சுவது ஒன்றுமே இல்லை.
இதற்குப் பினனால் உள்ள மருத்துவத் தண்டவாளங்களைப் புட்டுப்புட்டு வைத்துக் கொண்டிருக்கின்றார் சென்னையில் உள்ள ஒரு இஸ்லாமிய மருத்துவர். மருந்தில்லா மருத்துவம் என்ற பெயரில் சென்னை, கோவை போன்ற இடங்களில் கூட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றார்.
எனக்குத் தெரிந்து அரசியல்வாதி வைகோ ஒருவர் தான் சர்க்கரை நோயை எப்படிக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதையும், உடல்நலத்தையும் எப்படித் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதை நடைமுறை சார்ந்த விசயங்களில் சாதிதது காட்டிக் கொண்டிருப்பவர்.
இதைப் போலத்தான் என் அப்பாவும் மருத்துவர் கொடுத்தனுப்பும் எந்த மருந்துகளையும் உண்ண மாட்டார். அதுவொரு மூலையில் கிடக்கும். காரணம் சாப்பாடு மேல் கை வைத்து விடுவார்கள் என்ற பயம். மாரடைப்பில் தான் மரணம் அடைந்தார். எளிதான முறையில் இயல்பாகப் பேரூந்தில் வந்து கொண்டிருந்த போது தான் இறந்தார். ஆனால் கடைசி ஒரு வருடத்தில் தான் நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. உணவு தான் அவரை மனிதனாகச் சுறுசுறுப்பான இளைஞராகக் கடைசி வரையிலும் கொண்டு செலுத்தியது.
20 வயது வரைக்கும் நாம் சாப்பிட்ட சாப்பாட்டின் அளவுக்கும் 40 வயது ஆனதும் மாறிப்போவதற்கான ஒரே காரணம் நமது உழைப்பின் அளவும் தன்மையும் மாறிவிடுவதே.
கடநத நான்கு வருடங்களாக நான் ஒரே எடை அளவு. அதே தன்மை. குடும்ப நோய்கள் எதுவும் இதுவரையிலும் அண்டவில்லை. எந்த உடற்பயிற்சியும் செய்வதில்லை. பலசமயம் அவசர வேலையின் பொருட்டு அதிகாலை 4 மணிக்கு வெளியே செல்லும் போது பருத்த உடம்பை தூக்கிக் கொண்டு மூச்சு வாங்கிக் கொண்டு நடைபயிற்சி என்று பலரும் செல்வதைப் பார்த்துக் கொண்டே நான் செல்வதுண்டு.
என் கட்டுப்பாடு. என் ஆரோக்கியம். என் விருப்பம்.
கட்டுப்பாடு இருந்தால் வாழ்க்கை. கட்டவிழ்த்து விட்டால் கருமாதி. இதுதான் எளிய தத்துவம்.
ஆனால் நானும் சாப்பாட்டு ராமன் தான்.
கட்டுப்பாடு என்று எத்தனை வைத்துக் கொண்ட போதிலும் சமயம் கிடைத்தால் விளாசி தள்ளிவிட்டு அப்புறம் அய்யோ அம்மாவென்று தடுமாறுவதுண்டு. இருந்தாலும் என்னை மாற்றிக் கொள்ள எண்ணமில்லை என்பதை விட மனமில்லை என்பது தான் உண்மை. ஆனால் உடம்பில் எதையும் தங்கவிடுவதே இல்லை.
காலையில் நீங்கள் கழிப்பறை சென்று உட்கார்ந்தவுடன் குறுகிய நேரத்தில் வெளியே வந்து விட முடிந்தால் நீங்க லட்சாதிபதி. அங்கே போய் முக்கல் முனங்கலுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டியிருக்குது என்றால் உடல் மன ஆரோக்கியத்தின் தன்மையை அதிகப்படுத்த வேண்டும் என்று அர்த்தம்.
இரவில் படுத்த அதிகபட்சம் அரைமணி நேரத்திற்குள் ஆழ்ந்த தூக்கம் உங்களைத் தழுவிக் கொள்கின்றதா? நீங்க தான் கோடீஸ்வரன். ஆனால் இங்கே பலருக்கும் கனவில் வருபவர்கள் தான் உதவி புரிகின்றார்கள்.. காரணம் உண்பது உறங்குவது இந்த இரண்டுக்குள் தான் நம் அத்தனை பேர்களின் வாழ்க்கையும் இருக்கிறது.
பெரிய நாம் நினைத்தே பார்க்க முடியாத என்று ஏராளமான காரியங்களை மனதில் வைத்திருப்போம். ஆச்சரியமான சாதனைகள் என்று எத்தனை நாம் கடந்து வந்தாலும், கடக்க நினைத்தாலும் அடிப்படையில் இரவு வந்தால் படுத்தவுடன் தூக்கம் வர வேண்டும். மூன்று வேளையும் பசியெடுத்தால் தான் சாப்பிட முடியும். வயிறு தொடர்ந்து பொருமிக் கொண்டேயிருந்தால் சீக்கிரம் நாலு பேர்கள் நம்மைத் தூக்கப் போகின்றார்கள் என்று அர்த்தம்.
பல சாதனைகள் செய்து விட்டு தனது உடம்மை வேதனையாக வைத்துக் கொண்டால் என்ன ஆகும்?
வாழ்க்கை முழுக்கச் சோதனை தான்.
இஞ்சித்தேன்.
இஞ்சியைச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி (சிலர் காய வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் இஞ்சியைக் காய வைத்தால் சுக்கு என்று மாறி அதன் தன்மையும் மாறி விடும் என்றும் சொல்கின்றார்கள்) அதனை நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சியில் கழுவிய தண்ணீர் பதம் சென்றதும் இஞ்சியின் அளவுக்கு மிதக்கும் அளவுக்குச் சுத்தமான தேனில் மூன்று நாட்கள் ஊறவைக்க வேண்டும். மூடியுள்ள பாத்திரத்தை வெயிலில் வைத்து விடுங்க. மூன்று நாளில் இஞ்சி தேனை நன்றாக ஊறிஞ்சி விடும்.
காலையில் பல்துலக்கி விட்டு வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி தேனுடன் எடுத்து (தேனும் இஞ்சியும் சேர்ந்து இருக்க வேண்டும்) சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகள்?
முக்கியமான நோய் எதிர்ப்புசக்தி உருவாகும். எதிரிகளைச் சமாளிக்கப் பணத்தைப் போல மனமும் உடலும் உறுதியாகத்தானே இருக்க வேண்டும்.
பருவநிலை மாற்றத்தில் வரும் சளித் தொந்தரவு காணாமல் போய்விடுகின்றது.
எதை வேண்டுமானாலும் உங்கள் வாழ்வில் விரும்பி சேர்த்துக் கொள்ளுங்க.
ஆனால் சளியை உடம்பில் சேர்க்கத் தொடங்கினால் சனி பகவான் சிநேகம் பிடிக்க வருகின்றார் என்று அர்த்தம்.
விரும்பாமலேயே உள்ளே வந்து விடும். பிறகு நீங்களே விரும்பினாலும் வெளியே செல்லாது.
தேன் இஞ்சி உண்ணும் பழக்கத்தைத் தினந்தோறும் பயிற்சியில் கொண்டு வரும் போது தான் நன்றாகப் பசியெடுக்கும். தேனின் மருத்துவக் குணங்களைப் பக்கம் பக்கமாக எழுதலாம். இது நாங்கள் அனுபவத்தில் கண்டு கொண்டிருக்கும் உண்மை.
அதியமானுக்கு ஔவையார் கொடுத்த நெல்லி
அனைவரும் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ள வேண்டியது நெல்லி.
இப்போது இதுவும் தேன் நெல்லி என்கிற ரீதியில் வந்து கொண்டிருக்கின்றது. காசைக் கொடுத்து ஏமாறாமல் நாமே முழு நெல்லிக்காய் வாங்கி வந்து நறுக்கி தேனில் ஊறவைத்துச் சாப்பிடலாம். அல்லது அப்படியே தினந்தோறும் ஒன்றாகப் பச்சையாகச் சாப்பிடலாம். குழந்தைகளுக்குச் சாறாக மாற்றித் தினந்தோறும் அரை டம்ளர் கொடுத்து வரலாம். இதிலும் முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி. இதிலும் கதை கதையாக எழுத வேண்டிய ஏராளமான சமாச்சாரங்கள். இயற்கை மருத்துவம் குறித்து ஏராளமான வலைப்பூக்கள் உள்ளது. தேடிப்பாருங்கள்.
நாம் சாப்பிடும் சாப்பாட்டில் அளவு தேவையில்லை. எதுவும் சாப்பிடலாம். எப்போதும் சாப்பிடலாம். ஆனால் அது உடம்பில் தங்கிவிடக்கூடாது என்பதைக் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்.
சக்தியாக மாற்றப்பட்டு இருக்க வேண்டும். பணத்தை வீட்டில் சேர்த்து வைத்தால் வெகுமானம். செரிக்காத சமாச்சாரத்தை உடம்பில் சேர்த்து வைத்தால் என்னவாகும் என்பது தெரியும் தானே?
செரித்தால் நல்லது. செரிக்காவிட்டால்?
வாயை பொத்திக் கொண்டு இருப்பது அதை விட நல்லது.
இது ரெண்டு மட்டும் தான் இன்றைக்கு உள்ள காரைக்குடி உணவத்தின் சாப்பாடு.
சாப்பாட்டு ராமன்கள் இந்த இரண்டையும் தினந்தோறும் செய்து வந்தாலே மகிழ்ச்சியாக விரும்பியதை சாப்பிட்டலாம். ஆனால் நிச்சயம் நம்மிடம் உள்ள காந்தி தாத்தா சிரிக்கும் பணம் பையிலிருந்தபடியே நம்மைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பார். இன்னும் கொஞ்சம் போடும்மா என்று குழந்தைகள் ஒரு கட்டு கட்டுவதை வேடிக்கை பார்த்தபடியே நாமும் நைஸாக இன்றைக்கு ரொம்ப நல்ல சமைச்சருக்கே என்று கேட்டு வாங்கிச் சாப்பிடலாம்.
ஒரு நிறுவனத்தின் முதலாளியின் முக்கிய வேலை என்ன தெரியுமா? மூன்று வேளையும் தான் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகளை வரிசைப்படி எடுத்துக் கொடுக்க ஒருவரை தனியாக வைத்துள்ளார். நிறுவன வேலை பாதி. இந்த வேலை மீதி.
எப்பூடி?
அந்த மளிகைச் சீட்டு போலவே இருந்த பட்டியலைப் பார்த்து பயந்தே போய்விட்டேன். ஆனால் கடந்த ஒரு வருடமாக அதே நோய்கள்,
மேலும் மேலும் வீர்யமான மருந்து மாத்திரைகள்.
எங்கே நிம்மதி தான் என்ற வாழ்க்கை தான். இயற்கை மருத்துவம் தாமதமாகத்தான் பலன் தரும். ஆனால் நிரந்தரமாக நோயிலிருந்து விடுபட்டு விடலாம். அண்டை வீட்டுக்காரர் நம்மைப் பார்த்து பொறாமைப்பட ஒனிடா டிவி தேவையில்லை.
நெல்லியும் இஞ்சியுமே போதுமானது.