19
18. பயணமும் படங்களும் – மணலுக்குக் கீழே பிணங்கள் 8
உங்கள் வயது 50 வயது என்றால் நீங்க பிறந்த வருடத்தில் தான் நடந்தது. ஒரு வேளை அறுபது வயதை தாண்டியிருந்தால் நிச்சயம் பலரும் சொல்லக் கேட்டுருப்பீர்கள். நான் அப்போது பிறந்திருக்கவில்லை.
நான் ஈழம் சார்ந்த வரலாற்றுப் புத்தகங்களை மற்றும் அது தொடர்பான பல புத்தகங்களையும் படித்துக் கொண்டு வந்த போது தான் முதல்முறையாகத் தனுஷ்கோடியில் 1964ம் ஆண்டு நடந்த கோரத்தாண்டவத்தைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
ஒரு பகுதியையே மொத்தமாகக் கடல் உள்வாங்கிக் கொண்டதையும், அழிந்து போன மக்கள் தொகை போன்றவற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தத் துயர சம்பவம் நடந்து முடிந்து ஐம்பது வருடங்கள் கழித்துத் தனுஷ்கோடி பகுதியில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் சென்று சுற்றி வந்த போது என் மனதில் உருவான உறுத்தலுக்கு அளவேயில்லை.
அந்த மணல்வெளியில் நாம் நடந்து வரும் போது நம்முடைய கால்கள் மணலில் புதைந்து அதன் பிறகே அடுத்த அடி எடுத்து வைக்கும் அளவிற்கு உள்ளது. மொத்தமாக எல்லா இடங்களிலும் மணல் குவியலாகவே உள்ளது.
நான் எடுத்து வைத்த ஒவ்வொரு காலடித்தடத்திற்குக் கீழேயும் எத்தனை பிணங்கள் இருந்ததோ? என்பதை யோசித்துக் கொண்டே சுற்றி வந்தேன். சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் கடல் நீர்.
இதற்கு மேலாக ஹிந்து மத நம்பிக்கைகள் சார்ந்த புராண இதிகாச கதாபாத்திரங்களைச் சிறப்புப் படுத்தும் வழிபாட்டுத்தலங்கள். இயல்பான மனிதர்களைப் போலச் சராசரி உணர்ச்சிகளுக்கு எளிதில் கலங்கி விடாத எனக்குள் ஏராளமான மாற்றத்தை இந்தப் பூமியும் இங்கே வாழ்ந்த மக்களும் தந்தார்கள் என்றால் அது மிகையில்லை.
உள்ளே கால் வைத்ததும் இங்கே மக்கள் இன்னமும் வசிக்கின்றார்களா? என்று தான் முதலில் நண்பர்களிடம் கேட்டேன்.
காரணம் திரைப்படங்களில் உச்சக்கட்ட காட்சியில் கதாநாயகனும், வில்லனும் சேர்ந்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத அத்துவான காட்டில் சண்டை போடுவார்களே? அதைப் போலத்ததான் இருந்தது. இங்கே வசித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதர்களிடத்திலும் பகிர்ந்து கொள்ளப் பல கதைகள் இருக்கின்றது. ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஓராயிரம் சோகங்களும் உள்ளது.
இவர்களின் நாளை பொழுது என்பது நிச்சயமில்லாத வாழ்க்கை. என்ன வேண்டுமானாலும் நடக்கும்? வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் மாறும். அரசாங்கம் இந்தப் பகுதியை “மனிதர்கள் வசிக்க முடியாத பகுதி” என்பதாக மாற்றியுள்ள போதிலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் இந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்லத் தயாராக இல்லை. இதன் காரணமாகவே எந்த அடிப்படை வசதிகளும் இங்கே நிறைவேற்றப் படவில்லை.
ஆனாலும் அவர்களின் அப்பாவித்தனத்தையும், ஆடம்பரம் தேவைப்படாத வாழ்கையைப் பார்த்த போதும், அவர்களின் உரையாடல்களும், எதார்த்த மொழியும் ஏராளமான நம்பிக்கைகளை எனக்குள் விதைத்தது. இது போன்ற கோடிக்கணக்கான பகுதிகள் இந்தியாவில் இருப்பதால் தான், இவர்களைப் போன்ற மனிதர்களினால் மட்டுமே காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் இன்று வரைக்கும் இந்தியா உடையாத நாடாக உள்ளது. பரந்த தேசமாக இந்தப் பாரதப் பூமி நமக்குக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது.
ஒரு சின்ன உரையாடலை மட்டும் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
சங்கு, பாசி, மணி இன்னும் பல பொருட்களை வைத்து ஒரு கீற்றுக் கொட்டகையின் கீழ் விற்பனை செய்து கொண்டிருந்த பெண்மணியைப் பார்த்து “கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்று யோசித்துக் கொண்டே கேட்டேன்.
இப்போது பொது இடங்களில் தண்ணீர் கேட்கும் போதே ரொம்பவே யோசிக்க வேண்டியதாக உள்ளது. பக்கத்தில் உள்ள காசு கொடுத்து வாங்க வேண்டிய பாட்டில்களை நோக்கித்தான் கையைக் காட்டுகின்றார்கள்.
“இருங்க தர்றேன்” என்று ஒரு சொம்பு நிறையத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். ஊத்துத் தண்ணீர். மிகுந்த சுவையுடன் இருக்க ஆச்சரியமாகக் கேட்ட போது அவர்கள் குடிநீருக்காகப் படும் அவஸ்த்தைகளைச் சொன்ன போது தொண்டைக்குள் சென்ற தண்ணீர் வெளியே வரட்டுமா? என்று கேட்பது போலவே இருந்தது.
மெதுவாகப் பேசத் தொடங்கினேன்.
அவர் வைத்திருந்த பொருட்களைப் பார்த்தவுடன் அப்போது தான் வீட்டில் இருக்கும் நான்கு பெண்களைப் பற்றி நினைப்பே வந்தது. எல்லாமே அவர்களுக்குத் தேவைப்படும் சமாச்சாரம். இது போன்ற இடங்களில் விலைகள் அதிகமாக இருக்குமே? என்று யோசித்துக் கொண்டு விலைகளைக் கேட்ட போது பரவாயில்லை என்கிற நிலையில் தான் இருந்தது. “நான் அதிகமாக எடுத்துக் கொள்கின்றேன். எனக்குக் குறைத்துக் கொடுப்பீங்களா?” என்று அவரின் மனநிலையை அறிந்து கொள்ளக் கேட்ட போது “நீங்க விரும்பும் விலையில் தருகிறேன்” என்றார்.
சில பொருட்களை மட்டுமே எடுக்கலாம் என்று அவர் கதைகளைக் கேட்டுக் கொண்டே ஏறக்குறைய ஆயிரம் ரூபாய் அளவுக்குப் பாசி, மணி, தோடு, அலங்காரப் பொருட்கள் என்று அனைத்தையும் எடுத்து “மொத்த கணக்குச் சொல்லுமா?” என்று கேட்ட போது அவர் முகத்தில் உருவான பிரகாசத்தைப் பார்க்க வேண்டுமே?
“ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு இன்றையக்குத் தான் ஆயிரம் ரூபாய் வியாபாரம் நடந்துள்ளது” என்றார். அவர் கதையைக் கேட்ட காரணத்தாலும், அங்குள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் ஒவ்வொரு பொருளையும் இரண்டாக எடுத்துக் கொண்டு வந்தேன். இரண்டும் வெவ்வேறு நிறத்தில் இருந்தால் ஒவ்வொரு நாளும் பயன்படுத்த முடியும்.
எடுத்து வைத்த பொருட்களைச் சரிபார்த்துக் கொண்டு வந்த போது வீட்டில் எப்போதும் நடக்கும் பஞ்சாயத்து என் நினைவுக்கு வந்தது.
நாம் ஆசைப்பட்டு ஏதாவது வாங்கிக் கொண்டு சென்றால் வீட்டில் உள்ள நான்கு பேர்களும் அது நொள்ளை இது நொள்ளை. இது கூடப் பார்த்து வாங்கத் தெரியாதா? என்று ரவுண்டு கட்டி அடிப்பது வாடிக்கை. இதை மனதில் கொண்டே நிதி மந்திரியை அழைத்துக் கேட்டு விடலாம் என்று யோசித்துக் கொண்டே அலைபேசியில் டவர் இருக்குமா? என்று பார்த்த போது பிஎஸ்என்எல் வாழ்க என்று கூவத் தோன்றியது.
அந்தப் பெண்மணியிடம் உரையாடிய போது ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. “பணத்திற்கு அப்பாலும் ஒரு வாழ்க்கை உள்ளது. வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக் கொண்டு வாழ முடியும்” என்பதைத்தான் அவர்கள் வாழும் வாழ்க்கை உணர்த்துவதாக இருந்தது.
இங்கு வசிக்கக்கூடிய (ஏறக்குறைய 300 குடும்பங்கள் என்றார்கள்) குடும்பங்களில் உள்ள குழந்தைகள் படிப்பதற்கென்றே ஒரு பள்ளிக்கூடம் உள்ளது. அதுவும் பாதுகாப்பு பிரச்சனையின் அடிப்படையில் சில மைல்கள் தாண்டி உள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரும் போது அந்தப் பள்ளியைத் தாண்டி தான் இங்கே வர முடியும்.
மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தான் பள்ளியும் ஒரு பேரூந்து வசதியையும் (மட்டும்)அரசாங்கம் வழங்கியுள்ளது. இந்தப் பள்ளிக்குச் செல்லக்கூடிய குழந்தைகள் காலையில் ஐந்து மணிக்கு எழுந்து பேரூந்தில் பயணித்துப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். தினந்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் தான் அந்தப் பேரூந்து வசதியை உருவாக்கியுள்ளனர்.
இதே போல மாலையிலும் குறிப்பிட்ட நேரத்தில் அதே பேரூந்து இங்கே வந்து சேரும். அதிகாலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் ஆசிரியர்கள் (ஒன்பது மணிக்கு மேல்) வந்து சேரும் வரையிலும் கொண்டு போன காலை உணவையும் உண்டு, விளையாடி, அதன் பிறகு படித்து முடித்து வருகின்றார்கள்.
இது தொடர்பாகப் பல சோகங்களையும் பகிர்ந்து கொண்டார். இவர்கள் விற்பனை செய்யும் அனைத்துப் பொருட்களும் முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் அண்ணன் நடத்திக் கொண்டிருக்கும் பெரிய கடைகளில் இருந்து தான் வாங்கி வருகின்றோம் என்றார். வாழ்க்கையில் அனைவரும் “நாம் இறந்து விடப் போவதில்லை” என்று தான் பத்து தலைமுறைக்குத் தேவையான சொத்துக்களைச் சேர்த்து விட வேண்டும் என்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களோ அடுத்த நிமிடம் “நமக்குச் சாவு வந்து விடக்கூடும்” என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதால் வாழும் ஒவ்வொரு நொடிப் பொழுதுகளையும் மகிழ்ச்சியாக மாற்றி வைத்துக் கொண்டு எவ்வித அதிகப்படியான எதிர்பார்ப்புகளையும் மனதில் வளர்த்துக் கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மொத்த பயணத்தையும் முடித்து விட்டு வீட்டில் மனைவியிடம் சொன்னேன்.
“அவர்கள் கொடுத்து வைத்தவர்கள். தினந்தோறும் மீன்குழம்பு தான் அவர்களின் தினசரி உணவாக உள்ளது“.