"

32

மற்ற நாடுகளில் எப்படியோ? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல்வாதிகளும் எனக்கு ஞானியாகத்தான் தெரிகின்றார்கள். முற்றும் துறந்தவர்களை ஞானி என்றழைத்தால் இவர்களையும் நீங்கள் அப்படித்தானே அழைக்க வேண்டும். குறிப்பாக வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவுமற்ற ஜந்து போலப் பணம் என்பதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வோம் என்கிற ரீதியில் வாழக்கூடியவர்கள்.

சாதாரணக் குற்றவழக்கில் சம்மந்தப்பட்டவர்களைப் புகைப்படம் எடுக்க முயற்சிக்கும் போதும் கூனிக்குறுகி தங்களது முகத்தை மூடிக்கொண்டு செல்லும் மனிதர்கள் மத்தியில் இவர்கள் மட்டும் தான் மகான் போலப் புன்முறுவலோடு அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகின்றார்கள். அதன் மூலம் ஆதாயம் பெறவும் தயங்குவதில்லை.

ஒரு தொழிற்சாலையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் எனக்கு, ஒவ்வொரு நாளும் நித்தமும் கண்டம் போலத்தான் கடக்கின்றது. பலதரப்பட்ட பிரச்சனைகள், தனி மனித வக்கிரம், வன்மம், குரோதம், போட்டி, பொறாமை, அளவு கடந்த ஆசைகளுடன் வாழும் சக மனிதர்களைத் தாண்டி அவர்களைச் சமாளித்து வர வேண்டியதாக உள்ளது.

நம்முடைய இலக்கும் அவர்களுடைய நோக்கமும் வெவ்வேறு திசையில் இருந்தாலும் ஏதோவொரு புள்ளியில் இணைந்து மீண்டும் பிரிந்து மீண்டும் சேர்ந்து செல்லும் போது தான் பிரச்சனையில்லாத நிர்வாகத்தை உருவாக்க முடிகின்றது.

எந்த அளவுக்கு மனப்பக்குவம் இருந்தாலும் இரவு நேரத்தில் தூக்கம் வராத சமயத்தில் தொழிற்சாலைப் பிரச்சனைகள் மனதில் பூதாகரமாக வந்து போகின்றது.

இது போன்ற சமயங்களில் நம் நாட்டில் உள்ள அரசியல்வாதிகளைத்தான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு. எப்படி இவர்களால் நிம்மதியாக வாழ முடிகின்றது. முடிந்த வரைக்கும் நேர்மையாகத்தான் தான் வாழ்ந்து பார்ப்போமே? என்று யோசித்து வாழும் நமக்கே இத்தனை இடைஞ்சல்கள் என்கிற போது நாள்தோறும் அடுத்தவன் காசுக்கு ஆசைப்படும் இவர்களின் மனோநிலையும், இவர்கள் வாழ்க்கையில் தினந்தோறும் சந்திக்கும் சவால்களும் எப்படி இவர்களை நிம்மதியாக உறங்க வைக்கும் என்று யோசித்துப் பார்க்கும் போது பயம் வந்து எட்டிப்பார்க்கின்றது.

தொடர்ச்சியான இரவு வேலைகள் இருந்து குறுகிய நேரம் மட்டும் தான் தூங்கக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அடுத்த நாள் நம் வேலைகளில் காட்ட முடியாத ஆர்வம், போக்கிக் கொள்ள முடியாத சோர்வு, அடுத்தடுத்து உருவாகும் உடல் ரீதியான பாதிப்புகள் என்று நரக வேதனைகளை அனுபவிக்கும் போது தான் ஒரு மனிதனுக்குத் தூக்கம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும்?

ஆனால் ஒவ்வொரு அரசியல்வாதிகளின் தூக்க கணக்கை எடுத்துப் பார்த்தால் அதுவொரு துக்கக் கணக்காகத்தான் இருக்கும். இடைவிடாத அவர்களின் ஒவ்வொரு பயணத்திலும் பயம் தான் பிரதானமாக இருக்கும். பணம் மட்டும் தான் கொள்கையாக இருக்கின்றது. கொள்ளைக்காரன் என்ற பெயர் வந்தபோதிலும்.

தனி மனிதனுக்குக் குடும்பம் என்பது வரம்.

ஆனால் அரசியல்வாதிகளுக்கு அதுவே சாபமாகப் போய்விடுகின்றது. மக்கள் மனதில் இன்று வரையிலும் நிற்கும் தலைவர்களை இப்போது நினைத்துப் பாருங்கள். ஒன்று குடும்பம் இருக்காது அல்லது குடும்பத்தைப் பத்தடி தள்ளி ஒதுக்கி வைத்திருப்பார்கள். ஆனால் இன்று திமுகவில் தயாளு அம்மா படும் பாட்டைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

தன் பதவியைத் தன் மகனுக்கே விட்டுக் கொடுக்க மனமில்லாத கலைஞரைத்தான் இன்னமும் இந்த தமிழ்ச் சமூகத்திற்காக இத்தனை காலமும் இவர் உழைத்தார்என்ற நம்ப வேண்டியதாக உள்ளது.

ஏன் திமுக இந்தத் தேர்தலில் தோற்றது? அதற்கான காரணங்கள் என்ன? என்று நண்பர் வினா எழுப்பியிருந்தார். ஏன் ஜெயிக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை அவர் சொல்லவில்லை.

திமுகவிற்கு ஊழல் என்ற வார்த்தை புதிதல்ல. ஊழலுக்குப் பல நவீன விளக்கங்களைக் கொடுத்தவர் தான் கலைஞர். விசாரிக்கும் நீதிபதிக்கே மயக்கத்தைத் தரக்கூடிய கலையில் தேர்ச்சி பெற்றவரின் திறமை அவரின் வாரிசுகளிடம் எதிர்பார்க்க முடியுமா?

குற்றவழக்கில் சம்மந்தப்பட்டவர் கனிமொழி. அவர் நீராடியாவுடன் பேசிய உரையாடல்கள் அனைத்தையும் கேட்டவர்கள் மனதில் இப்படித் தோன்றியிருக்கும்?

நிச்சயம் இந்தியாவை ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுத்தவர்கள் தான் ஆள்கின்றார்களா? இல்லை அவர்களைப் பின்னால் இருந்து இயக்குபவர்கள் மூலம் இந்தியா இயங்குகின்றதா என்று.

தன்னைக் கேவலத்தின் உச்சத்திற்கே கொண்டு போனவர் தன் மகள் என்பதால் அவரைக் கலைஞரால் புறக்கணிக்க முடியவில்லை. அவரையும் தைரியமாகத் தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுப்பி வைக்கின்றார். மாவட்டச் செயலாளர்களின் அசைக்க முடியாத ராஜ்ஜியம் ஒரு பக்கம். அவர்கள் தங்கள் வாரிசுகளை முன்னிறுத்தும் முஸ்தீபுகள். ஸ்டாலினின் கோபத்திற்கு ஆளாகி விடுவோமோ என்று யோசித்துப் பம்மினார்களே தவிர நான் திமுகத் தான். என் தலைவர் கலைஞர்என்று இன்னமும் சொல்லிக்கொண்டு இருக்கும் தொண்டர்களை அத்தனை பேர்களும் மறந்து விட்டார்கள்.

ஜெயலலிதா தங்கள் மேல் கேஸ் போட்டு உள்ளே வைத்து விடுவாரோ? என்று பயத்தில் பாதிப் பேர்கள். தாங்கள் சேர்த்து வைத்துள்ள சொத்திற்கு ஆட்சியாளர்களால் பங்கம் வந்து விடுமோ என்று மறுகிக் கொண்டிருந்தவர்கள் மீதிப்பேர்கள். பிறகெப்படி களப்பணி நடக்கும். கடைசியில் கலகலத்து விட்டது. முரட்டுப் பக்தர் தூத்துக்குடி பெரியசாமி முதல் மிரட்டும் மகன் அழகிரி வரைக்கும் உண்டான பஞ்சாயத்துகளைத் தீர்க்க வழியில்லாத கலைஞருக்கு வெற்றி எப்படிக் கிடைக்கும். கட்சி என்பதனை குடும்பத்தில் இருந்து தனியாகப் பிரிக்காத வரைக்கும் திமுக என்ற கட்சிக்கு எந்தக் காலத்திலும் விமோசனம் என்பதே இல்லை.

காங்கிரஸ் வேண்டும். கனிமொழியைக் காப்பாற்ற. . ராசா வேண்டும் தங்கள் குடும்ப மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள. “இனம் காப்போம். மொழி காப்போம். “வீற மறவனே தோள் தட்டி மார் தூக்கி என் பின்னால் வாஎன்று கடிதம் எழுதும் கலைஞருக்கு இந்த முறை வாக்களிக்க வந்த முதல் தலைமுறை வாக்காளர்களின் மனோநிலையை எவரும் புரியவைக்க முயற்சிக்கவில்லை என்பது தான் ஆச்சரியமாக உள்ளது.

தமிழர்களின் தாய் மொழியை மறக்கடிக்க முன்மொழிந்தவர் எம்.ஜி.ஆர். அதனை வழிமொழிந்தவர் கலைஞர். இதுவே சரியென்று அச்சாரம் போட்டவர் ஜெயலலிதா. பிறகெப்படி இப்போதைய இளையர்களுக்கு மொழி குறித்துத் தெரியும்.

மறவன் என்றால் என்ன? என்று இன்றைய மாணவர்களிடம் கேட்டுப் பாருங்கள். 99 சதவிகித மாணவர்கள் அந்தப்படம் ரீலிஸ் ஆகலையே? என்று தான் சொல்வார்கள். ஒரு திமுக நண்பர் சொன்னது போல இயற்கை கலைஞரை அழைத்துக் கொள்ளும் போது மட்டுமே (குழப்பத்திற்குப் பிறகு) திமுக இயல்பான பாதைக்குத் திரும்பும்.

மற்ற மாநிலங்களை விடத் தமிழ்நாடு பல விதங்களில் முன்னேறியுள்ளது என்று புள்ளி விபரபுலிகள் கதையளக்கின்றார்கள். அதற்குக் காரணம் முரசொலி மாறன் கொண்டு வந்த பன்னாட்டு ஒப்பந்தங்கள். சென்னைக்கு வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தான் காரணம் என்கிறார்கள்.

இன்று நோக்கியாவின் வண்டவாளம் வெளியே வந்துள்ளது. பாதிக்கப்பட்ட அத்தனை பேர்களும் தெருவில் நிற்கின்றார்கள்.

சம்பாரித்த நிறுவனம் அடுத்தவன் கையில் ஒப்படைத்துவிட்டு அம்போ சிவ சம்போ என்று சென்று விட்டார்கள். நோக்கியா சமாச்சாரம் தற்போது வெளியே வந்துள்ளது. தோண்டத் தோண்ட இன்னும் எத்தனை பூதங்கள் வருமோ?

ஒரு பன்னாட்டு நிறுவனம் உள்ளே வந்து தான் இந்தியா வளர வேண்டுமென்றால் ஆட்சியாளர்களின் பார்வைக்கோளாறு என்று அர்த்தம்.

அதற்கு மேலே வரக்கூடிய நிறுவனத்தின் மூலம் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தாங்கள் பெற முடிகின்ற ஆதாயம் தான் காரணம் என்பதை எத்தனை பேர்களால் உணர்ந்து இருக்க முடியும் நம்புகின்றீர்கள்? விலைவாசி உயர்வும், சுற்றுச்சூழல் சீர்கேடும் இங்கே உருவாக முக்கியக்காரணம் இந்த நிறுவனங்களே.

இங்கே மளிகைக்கடை வைத்திருப்பவன் தலைமுறை தலைமுறையாகத் தன் தலையால் தண்ணீர் குடித்தும் அவனுக்கு எந்த அரசாங்கத்தின் ஆதரவும் கிடைத்தபாடில்லை. வங்கியிடம் கடன் கேட்டுச் சென்றால் சென்றால் கம்பால் அடித்துத் துரத்துகின்றார்கள். ஆனால் மக்களின் வரிப்பணத்தைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கின்றார்கள். கேட்டால் நாட்டின் வளர்ச்சியே முக்கியம் என்கிறார்கள்.

இந்த இடத்தில் தான் நரேந்திர மோடி தனித்தன்மையாக இருக்கின்றார். அவர் மேல் வைக்கப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளையும் மீறி தன் பாதையைத் தெளிவாக வகுத்துக் கொண்டு, தன் எதிரிகளையும் சமாளித்துக் குறுகிய காலத்தில் மேலே வந்தவர்.

குடும்பப் பாரம் இல்லை. இன்று வரையிலும் ஊழல் குற்றச்சாட்டு இல்லை. நிர்வாகத் திறமையற்றவர் என்று எவரும் சொல்ல முடியாத அளவிற்கு ஏற்கனவே இருந்த முதல்வர் பதவி மூலம் தன் முத்திரையைப் பதித்தவர்.

மன்மோகன் சிங் ஆட்சியில் வந்தமர்ந்த போது அவரையும் வானாளவ புகழ்ந்தனர். ஆனால் அவரால் நிர்வாகத்திறனுக்கும், ஆட்சி அதிகாரத்திற்கும் உண்டான இடைவெளியை சரியான முறையில் நிரப்பத் தெரியாத காரணத்தால் பழி ஒரு பக்கம். பாவம் ஒரு பக்கம் என்று இன்று பரிதாபமான பிரதமர் பட்டியலில் சேர்ந்து விட்டார்.

நரேந்திர மோடி சிறந்த நிர்வாகி என்பதைக் காட்டிலும் மிகச் சிறந்த அரசியல்வாதி. இந்திய அரசியல்வாதிகளுக்குரிய தனித்தன்மையான குணத்தை மனதில் பட்டியிலிட்டு பார்த்துக் கொள்ளவும். அத்தனை குணாதிசியங்களும் இவருக்குப் பொருந்தும்.

மன்மோகன் சிங் முதலாளிகளால் மட்டும் இந்த நாடு வளரும்என்று உறுதியாக நம்பினார். மோடியும் அதே தான் சொல்கின்றார். ஆனால் நிபந்தனைகளுக்கு உட்பட்டதுஎன்றொரு வார்த்தைகளையும் சேர்த்து தான் சொல்கின்றார். பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

அரசியல்வாதிகளைக் குறை சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். நம் தமிழர்களின் அரசியல் அறிவு என்பது உலகப் பிரசித்தி பெற்றது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் கூடப் பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட திமுக, அதிமுக வார்டு கவுன்சிலர் தேர்தல் போலத்தான் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டார்கள். வாக்காளர்களுக்கு இந்தத் தேர்தல் எதற்காக நடக்கின்றது என்பது கூடத் தெரியுமா? என்ற சந்தேகம் வந்துருக்கும்.

கடந்த காலத்தில் நாம் தேர்ந்தெடுத்த நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், ராமராஜன், ரித்திஷ், நெப்போலியன் போன்றவர்களும், கலைஞர் மகன் அழகிரி போன்றவர்களும் அவ்வளவு பெரிய பாராளுமன்ற கட்டிடத்தில் எந்த மூலையில் பதுங்கியிருப்பார்களோ? மொழி குழப்பத்தில் விழி பிதுங்கிப் போய் நிற்கும் இவர்களால் அதிகபட்சம் கிடைத்த பேட்டா காசை வாங்கிக் கொண்டு டெல்லியை ஐந்து வருடத்திற்குள் சுற்றிப் பார்த்தது தான் மிச்சமாக இருக்கும்.

தாங்கள் பிறந்த மாவட்டத்தைப் பற்றியே முழுமையாகத் தெரியாதவர்களும், டெல்லி அரசியல் லாபியைப் பற்றிப் புரிந்து கொள்ளவே முடியாதவர்களையும் வைத்து என்ன செய்ய முடியும்? ஆட்டு மந்தை கணக்காக அனுப்பி ஆத்துல போற தண்ணியை அள்ளிக்குடிக்கஅனுப்பி வைத்தவர்களை நம்பிக் கொண்டு தான் தமிழர்கள் தங்கள் பிரச்சனைகளை இவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்று இன்று வரையிலும் நம்பிக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்களை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டின் எந்தப் பிரச்சனையை டெல்லி வாலாக்களிடம் போராடி ஜெயிக்க முடியும்?

எந்தத் துறையைக் கைப்பற்றினால் நமக்கு வருமானம் அதிகம் கிடைக்கும் என்பதைத் திமுகக் கற்றுக் கொடுத்து விட்டது.

இனி வாய்ப்பு கிடைக்கும் அனைவரும், டெல்லி அரசியலுக்கு ஆசைப்படுபவர்களுக்குப் பால மாடமாகத் தானே இருக்கும்.

படித்த கணவான்கள் வாழும் சென்னையில் பதிவான ஒட்டுச் சதவிகிதத்தை எடுத்துப் பார்த்தாலே நமக்குப் பல உண்மைகள் தெரிய வரக்கூடும். ஒவ்வொரு முறையும் ஜனநாயக கடமையை ஆற்றுபவர்கள் படிக்காத பாமர மக்கள் மட்டுமே. இந்த முறை மட்டும் சற்றுக் கூடுதலாக முதல் முறையாக ஓட்டளிக்க வந்த இளையர் கூட்டம், இது தவிரக் கொலைவெறியை மனதில் தேக்கி வைத்திருந்த நடுத்தரவர்க்கமும் கூட்டணி சேர்ந்து கும்மாங்குத்து குத்தி விட்டார்கள். நோட்டா பட்டன் வைத்தவுடன் இன்னும் பலருக்கு குஷியாகி விட்டது.

ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் ஒவ்வொரு அரசியல்கட்சிகளும் இரண்டு விசயங்களில் கவனமாக இருக்கின்றார்கள். மைனாரிட்டி மற்றும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் ஓட்டு வங்கி. இந்த இரண்டு சமூக மக்களின் ஓட்டுக்களைப் பெற முடியாத எந்தக் கட்சியும் வெல்ல முடியாது என்ற மாயை இந்தத் தேர்தலில் உடைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக உ.பி தங்கத்தலைவி மாயாவதிக்கு இந்தத் தேர்தலில் தலித் மக்கள் கொடுத்த அடி எந்தக் காலத்திலும் மறக்க முடியாத ஒன்று. இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிப்பதில் ஒவ்வொரு முறையும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிக் கொண்டிருந்த உ.பி மாநிலத்தில் குறிப்பிடத்தக்க தொகுதியைத் தவிரப் பெரும்பாலான முஸ்லீம் தொகுதிகள் கூடப் பா..க விற்கே ஆதரவளித்துள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் இப்படித்தான் நடந்துள்ளது.

இந்தத் தேர்தலில் தான் மைனாரிட்டி சமூகம் மெஜாரிட்டி சமூகத்துடன் கூட்டணி சேர்ந்துள்ள அதிசயம் நடந்துள்ளது. இதனால் தான் பா... தனிப்பெரும்பான்மை பெற முடிந்தது. விமர்சித்த புத்திசாலிகள் மௌனியாக மாறி விட்டனர்.

மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். தனித் தொகுதிகள் என்ற அச்சாரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவராவது தாங்கள் ஜெயித்து வந்த அந்தத் தொகுதியை தங்கள் பதவிக்காலத்திற்குள் முன்னேற்றத்திற்குக் கொண்டு வந்து உள்ளனரா? உங்கள் ஞாபகத்தில் வரும் தலைகளைப் பட்டியலிட்டு பார்த்துக் கொள்ளவும். இது நேற்று இன்றல்ல. இந்தியா சுதந்திரம் வாங்கியதிலிருந்து இப்படித்தான் இந்தச் சமூக மக்களை ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்.

வைத்தார்கள் இந்த முறை ஆப்பு?

தமிழ்நாட்டில் பா..க பெற முடியாத வாக்கிற்கு முக்கியக் காரணம் பொருந்தாத உறுப்புகளைக் கொண்ட வினோதமான மிருகம் போல உருவான கூட்டணி. அந்தக் கூட்டணி உருவாவதற்கு முன்னால் உருவான குழப்பங்கள், பேரங்கள். கேவல அரசியலில் சாட்சியாக இருந்தவர்களுக்கு மட்டரகமான பதிலையே வாக்காளர்கள் கொடுத்துள்ளனர்.

மற்ற கட்சிகளை விடத் திமுகத் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு உரிய அங்கீகாரத்திற்காக முன்னெடுப்புகளை எடுத்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

ஆனால் தமிழ்நாட்டில் இந்தச் சமூகத்தின் அத்தனை ஓட்டுகளும் அதிமுக விற்கே விழுந்துள்ளது.

திருப்பூரில் தேமுதிக தோற்றத்திற்கு முக்கியக் காரணம் திருப்பூர் பாராளுமன்றத்தொகுதிக்கு உட்பட்ட கிராமம் சார்ந்த அத்தனை இடங்களிலும் கொத்துக் கொத்தாக மக்கள் அப்படியே இரட்டை இலைக்குத்தான் போட்டுள்ளனர். அத்தனை ஓட்டுகளும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த ஓட்டுக்கள். யார் மேல் கோபம் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை?

ஆனால் நான் திருந்தப்போவதில்லைஎன்று கங்கணம் கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை தமிழ்நாட்டு மக்கள் கைவிடத் தயாராக இல்லை. “நமக்கு வாய்த்த அடிமைகள் எலும்புத்துண்டுக்கு ஆசைப்படுவர்கள்என்பதை அவரும் தெளிவாகவே புரிந்து வைத்துள்ளார். காரணம் நமக்கு மாநிலத்தின் வளர்ச்சியை விட, தகுதியான முதல்வரை விட எனக்குப் பிடிக்காதவன் வந்து விடக்கூடாதுஎன்பதில் நம்மவர்கள் காட்டும் அக்கறை மிக அதிகம். இதன் விளைவுகள் அனைத்தும் அடுத்த ஐந்தாண்டுகளில் நம் வாரிசுகள் அனுபவிக்கப் போகின்றார்கள்.

கூடவே நாமும் சேர்ந்து.

(முற்றும்)

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

காரைக்குடி உணவகம் Copyright © 2015 by Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.