5
4.காரைக்குடி உணவகம் – ருசியா சாப்பிட்டு பழகுங்க
எனக்கு ருசியா சாப்பிடத்தான் பிடிக்குமென்பவர்கள் மட்டும் இந்தப் பக்கம் வந்து நில்லுங்க?
என்ன எல்லோருமே மொத்தமாக வந்தாச்சா?
அப்ப எல்லாருமே என்னைப் போலத் தீனி திங்ற குரூப் தான் போல. சரித்தான்.
இந்த நாக்கு ருசிக்கு அலைந்து அலைந்து பர்ஸ் கனம் குறைந்தாலும் கண்ட இடத்தில் சாப்பிட்டு வயிறு கதறினாலும் பாழும் மனசு கேட்டால் தானே என்கிறார்களா?
வாங்க இன்றைய ருசியைப் பற்றி ருசிகரமாகப் பேசுவோம்.
தொடக்கத்தில் காட்டில் கிடைத்ததை, கண்டதை பிடித்துப் பச்சையாகவே தின்றார்கள். பிறகு சுட்டுத்தின்றார்கள், அப்புறம் வேக வைத்தார்கள். கடைசியாகப் பல கலவைகளைச் சேர்க்கத் தொடங்கிய போது தான் ருசி என்ற வார்த்தைக்கு அர்த்தம் கண்டு பிடித்து அதன் பின்னே அலைய ஆரம்பித்தார்கள். இன்று ஒரு கோழி தான். ஆனால் இந்தக் கோழியில் ஆயிரெத்தெட்டு சுவை.
ஆனால் இத்தனை ஆயிரம் வருடங்கள் கழித்து நாகரிகம் வளர்ந்து நாம் பலவகையில் முன்னேறி விட்டோம் என்று சொல்லிவிட்டு மறுபடியும் காய்கறிகளைப் பச்சையாகச் சாப்பிடுங்க. அது தான் சத்தானது என்கிற நிலைக்கு வந்து விட்டோம். ஆனால் நாம் தான் எம்பூட்டு மாறிவிட்டோம் கித்தாய்ப்பாய் அலைகின்றோம்.
ருசி உணவா? இல்லை பசிக்காக உணவா என்று இன்று பட்டிமன்றம் முதல் பாட்டுமன்றம் வரை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. ருசியைத் தொடர்ந்து விரும்பினால் கூடிய சீக்கிரம் உனக்குப் பசியே எடுக்காத அளவுக்குக் குடல் கெட்டு விடும் என்று பயமுறுத்துகிறார்கள்.
ஒரு தட்டு நிறையக் கஞ்சி. ஒரே ஒரு பச்சை மிளகாய்.
வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அவர்களின் கையைத் தொட்டுப் பார்த்தால் இரும்பு போல இருக்கும். எப்படி?
நோய்களுக்குக் காரணம் இந்த ருசியா?
முதலில் நோய்க்குக் காரணம் மனம்.
குழப்பமாக இருக்கின்றதா?
சாப்பாட்டில் நாம் பார்க்கும் சோறு, குழம்பு, காய், பொரியல், கூட்டு, மோர், ஊறுகாய் போல நம் பழக்கவழக்கங்களில் உள்ள விசயங்கள் எந்த அளவுக்கு நம்மைப் பாதிக்கின்றது? நாம் சாகின்ற வரைக்கும் விரும்பி சாப்பிட நினைக்கும் அளவை எப்படிக் குறைக்கின்றது என்பதைப் பார்க்கலாம்.
இப்போதைய வாழ்க்கையில் சோறு தான் கவலை.
எல்லோருமே இதைத்தான் விரும்பி சாப்பிடுகின்றார்கள். இன்று கவலை இல்லாத மனிதனே இல்லை. அடுத்த வேளை சோற்றுக்கு அலைபவன் முதல் ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்து வைத்து விட்டு அதைக் காப்பாற்ற, அதற்கு மேலும் சாம்பாரிக்க அலைவர்கள் வரைக்கும் இந்தக் கவலை தான் படாய்ப் படுத்துகின்றது. இந்தக் கவலை எண்ணங்கள தான் முதலில் வயிற்றைத் தாக்குகின்றது.
ஒரு விசயத்தைக் குறித்து நீண்ட நேரம் கவலைப்பட்டுக் கொண்டே இருந்து பாருங்கள். உங்கள் உடம்பில் மாறுதல்களை உங்களால் உணர முடியும்.
இப்போது சங்கடப்பட்டாலும் குடி சந்தோஷம் வந்தாலும் குடி என்பது போல எதற்குத் தான் கவலைப்படுவது என்கிற விவஸ்த்தையே இல்லாமல் போய்விட்டது. ஆனால் கவலைப்பட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்று ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருந்த போதிலும் கவலைப்படுகின்றார்கள் என்பது தான் ஆச்சரியம்.
கவலைப்படுவதை விட அதைக் கணக்காகப் பிரித்துப் பார்க்க கற்றுக் கொள்ளுங்க. சிலசமயம் உடனடி தீர்வு கிடைக்கும். சிலவற்றுக்குப் பொறுமையாகத்தான் இருக்க வேண்டியிருக்கும். புள்ளைங்க படிக்க மாட்டேன் என்கிறது என்று கவலைப்படுவதை விட அந்தக் குழந்தை ஆர்வமாகப் படிக்க என்ன தடை? என்பதை உணர்ந்தாலே பாதிக் கவலைகளுக்குத் தீர்வு கிடைத்து விடும். நாம் டிவி பார்க்கனும். ஆனால் பிள்ளைகள் படிக்கனும் என்றால் ஆயுள் முழுக்க இது கவலையாகத்தான் இருக்கும்.
கவலைகள் நம்மை என்ன செய்யும்? எங்கே அழைத்துச் செல்லும்?
வயிறு பிசைகின்றதே என்பது போலத் தொடங்கும். வயிறு உருள்கின்றதே என்பதாக மாறும். அது தொடர்ந்து கொண்டே இருந்தால் வயிற்றுக்குள் அமிலம் சுரக்கும். அது வயிற்றுப் புண்ணாக மாறும். இரத்தம் குதியாட்டம் போட்டு பங்காளிங்களா வாங்க வாங்க என்று உடம்பில் உள்ள உறவினர்கள் எல்லாருக்கும் அழைப்பு அனுப்ப அடுத்தடுத்து கடிதாசி போடாமலேயே செய்திகள் கடத்தப்படும்.
கல்லீரல், மண்ணீரல், கனையம் என்று தொடங்கிய இந்தக் கடிதாசி பயணம் கடைசியில் நுரையீரல் போய்ச் சென்று ஹலோ ஹலோ சுகமா? என்று கேட்கும்.
கடைசியில் இருதயம் வரைக்கும் போய்ச சேர்ந்து வாங்க பழகலாம் என்று சேர்ந்து ஆஞ்சியோகிராம் என்ற காதலியை அறிமுகப்படுத்தும்.
அது அலுத்துப் போனவுடன் தேசிய நெடுஞ்சாலை அதாங்க பை பாஸ் பயணத்தில் கொண்டு போய் விடும். .
நேத்து தான் பார்த்து விட்டு வந்தேன். காலையிலே செத்துட்டாருன்னு வந்து சொல்றாங்கப்பா என்கிற சாவுச் செய்திகளை இப்போது சர்வசாதரணமாகக் கேட்க காரணமே இந்தத் திருவாளர் கவலை தான்.
காரணம் அவருக்குள்ளே எத்தனை பிரச்சனைகள்? எத்தனை கவலைகள்?அணிவகுத்து நின்றதோ? எத்தனை நாட்கள் உள்ளே வைத்துக் கொண்டு தடுமாறினாரோ? எவருக்குத் தெரியும். தாங்க முடியாத போது இறுதிப் பயணத்திற்கு அழைப்பு வந்துவிடுகின்றது.
உணவு என்பது உயிர்வாழ்வதற்கு மட்டுமல்ல. அது உங்களை மகிழ்ச்சியடைய வைக்க, உங்கள் வாழ்க்கையைத் திருப்தி படுத்த, திரும்பப் பெற முடியாத நேரங்களை நாம் அனுபவித்து வாழ்கின்றோம் என்பதை உறுதிப்படுத்த என்று இது போன்ற ஆயிரம் வழிகள் மூலம் நாம் நம் வாழ்க்கை அனுபவிக்க முடியும்.
அய்யோ இதைச் சாப்பிட்டால் ஒத்துக்காது. அந்தப் பக்கமே போகக்கூடாது என்று சொல்லிக் கொண்டே ஏக்கத்தைச் சுமந்து கொண்டேயிருப்பவர்களின் வாழ்க்கையைப் பாருங்க. அனுபவிக்க முடியாத வாழ்க்கையில் ஆயிரத்தெட்டு நரக எண்ணங்களைச் சுமந்து கொண்டு தானும் வாழாமல் அடுத்தவரையும் வாழ விடாமல் தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
நான் வாழ்ந்த தொடக்க 20 வருட கிராமத்தில் கோழி என்பதைப் பார்த்ததே இல்லை. அப்பாவுக்குப் பிடிக்காது. திருவிழா சமயங்களில் தான் உள்ளே திரியும் கோழிகள் குழம்பாக மாறும். ஆனால் ஆடும் கடல் உணவில் உள்ள அத்தனை சமாச்சாரங்கயையும் வகைதொகையில்லாமல் ரவுண்டு கட்டி அடித்தேன்.
தீனி என்றால் கொஞ்ச நஞ்சமல்ல. குழம்பு என்றால் ரெண்டு தடவை. எலும்புக் குழம்பு என்றால் அதுவும் ரெண்டு தடவை. தெறக்கி வைத்த கறியை தெவிட்டாமல் தினற் அந்தக் காலத்தின் சுவை இன்னமும் நெஞ்சில் இருக்கிறது.
அடுத்து வந்த பத்தாண்டுகளில் முழுக்கோழியை நானே செய்து ஒரு நாளில் ஒரே மூச்சில் அப்படியே விழுங்க முடிந்தது. திருப்பூருக்குள் இருக்கும் அத்தனை அசைவ உணவக வளர்ச்சியிலும் அய்யாவின் பங்களிப்பும் இருந்தது.
அடுத்தப் பத்தாண்டில் எல்லாவற்றையும் பொட்டி கட்டி வைத்து விட்டுப் புள்ளப்பூச்சி போல மாற்றிக் கொள்ளவும் முடிந்தது. தற்போது குழந்தைகள் சுவைக்காகத் தோன்றும் போது அவர்களுக்கு ஒவ்வொன்றாக அறிமுகம் செய்து வைக்கின்றேன்.
ஆசையை அளவு கடந்து அனுபவித்து விட்டு வெளியே வந்து விட வேண்டும். அனுபவிக்கத் தெரிவது போல அடக்கத் தெரியவும் வேண்டும்.
அடுத்த ஒரு வாரத்தில் இவரின் காணொளி காட்சிகளை ஒவ்வொன்றாகப் பார்த்து வந்தால் உங்கள் வாழ்க்கை குறித்த உண்மையான புரிதல்கள் கிடைக்கக்கூடும். உங்களுக்குக் கிடைக்கும் நம்பகத் தன்மை உங்களை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தும்.
என்ன பிடிக்குதோ சாப்பிடலாம். ஆனால் உங்கள் மனம் விரும்பும் உணவாக இருக்க வேண்டும். கலவை சரி இல்லை என்றால் வரும் எச்சரிக்கையை உணர்ந்து கொள்ள வேண்டும். மீறுதல் கூடாது. உணர்ச்சி குவியலாய் இருப்பவர்களின் வாழ்க்கை குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மாறவில்லை என்றால் அவர்களின் அத்தனை எழுச்சியும் படுத்து விடும் என்று அர்த்தம்.
ருசி மட்டுமே வாழ்க்கை என்று பார்த்து சாப்பிட்டவர்களின் வாழ்க்கை பசியின் அருமையை உணராது.
பசித்த பின் உண். எப்போதும் பசியோடு இரு என்பதை அன்று முதல் இன்று முதல் சொல்லியிருப்பதன் காரணமே குடல் என்பது ஒரு சின்னச் சந்து. பத்து பேர் நிற்கினற இடத்தில் நூறு பேரை கொண்டு போய் அடைத்தால் என்ன ஆகும்?. கப்பு வாடை தூக்கத்தானே செய்யும். கடைசியில் நம்மை நான்கு பேர்கள் தூக்கிக் கொண்டு செல்லத்தான் உதவும்.
சாப்பிடுங்க. சாப்பிடுங்க. சாப்பிட்டுக் கொண்டேயிருங்க. இரண்டு பேர் போய் உணவகத்தில் 500 ரூபாய் கொடுத்து அவர்கள் கொடுக்கும் கொஞ்சூண்டு ருசியைத் தின்று விட்டு ஏக்கத்தோடு வருவதை விட அந்தக் காசுக்கு வீட்டில் சமைத்து சாப்பிடும் போது வாழ்வில் என்ன மாறுதல் உருவாகும்?.
ருசியான அளவில்லா சாப்பாட்டுடன் அருமை மனைவியுடன் காதலிக்கவும் நேரம் கிடைக்கும். சமையலின் போது தக்காளி வெங்காயத்தை நறுக்கிக் கொடுத்து நானும் உதவுகின்றேன் என்று சொல்லி நைஸ் செய்வது எப்படின்னு சொல்லித் தரவும் வேண்டுமோ?
நல்லாச் சாப்பிடுங்க. ருசியா சாப்பிடுங்க. ஆனால் வயிற்றில் எதையும் தங்க விடாதீங்க.
தங்கினால் அந்தப் பக்கம் சென்று விடாதீங்க.