அந்தப் பொன்னுலகின் கனவு விதைக்கப் பட்டது 90களின் ஆரம்பத்தில். காட் என்றும் டன்கல் என்ற ஒப்பந்தங்கள் இந்தக் கனவின் விதைகள் ஆனது. எல்லைகள் இல்லா உலகம், உலகளாவிய வாய்ப்பு என்ற கோசங்கள் சுழன்று அடிக்க ஆரம்பித்தது. கணினித் துறை வேலை என்பதும், அமெரிக்க வாசம் என்பதும் மத்தியத் தரப் பெற்றோர்களின் ஆதங்கம் என ஆகிப் போனது. நியூ யார்க், வாஷிங்டன், கலிபோர்னியா, நியூ ஜெர்சி என்ற ஊர்கள் எல்லாம் எல்லார் வாயிலயும் விழுந்து புரள ஆரம்பித்தது.
உடலால் இந்தியர்களாகவும், சிந்தனையால் ஆங்கிலேயனாகவும் மாறிய குமாஸ்தா வர்க்கம், தன அடுத்த பாய்ச்சலுக்குத் தயார் ஆனது. மாறிய சிந்தனை, மிகப் பெரிய மாற்றத்தைத் தன்னுடன் கொண்டு வந்தது. கல்வி, சுகாதாரம் இரண்டும் அரசாங்கம் தர வேண்டிய தேவை இல்லை என்ற மனப்பாங்கு வளர்ந்தது. தனியார்மயம் என்பதே வளர்ச்சிக்கு ஒரே வழி என்று பேசப் பட்டது.
அரசியல் அடியாள்களும், சாராய வியாபாரிகளும், கந்து வட்டி ஆசாமிகளும் கிடைக்கும் இடம் எங்கும் கல்வி வியாபாரத்தை ஆரம்பித்தனர். பெயர் பலகையும், இடமும் அவர்கள் முதலீடு, கட்டிடமும் மற்ற உள்கட்டமைப்பு வசதிகளையும் பொன்னுலகின் கனவில் இருந்த மக்கள் தங்கள் பங்களிப்பாகத் தர ஆரம்பித்தனர்.
விட்டது தொந்தரவு என்று அரசும் வெற்று அறிக்கைகளை அள்ளித் தெளித்து தனது கடமையை முடித்துக் கொள்கிறது.
எப்படிக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுத்து, முழுமையான ஆளுமைத் திறனை வளர்க்க வேண்டிய கல்விக் கூடங்கள், மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கும் இயந்திரங்களை உருவாக்கும் தொழில்சாலைகளாக மாறிப் போனது.
நன்றாகப் படி, அதாவது நன்றாக மனப்பாடம் செய், அதனைத் தேர்வு நாளில் எழுது, மதிப்பெண்களை அள்ளு, அதன் மூலமாக ஒரு பொறி இயல் கல்லூரியில் நுழை, அங்கே இருந்து கணினித் துறையில் சேர், நல்ல பணம் சம்பாதிக்கும் வேலையில் அமரு, நீ வெற்றி பெற்ற மனிதனாக விளங்கு என்ற மாயச் சுழட்சி வலையில் மாட்டிக் கொண்ட மக்கள் அதையே சரி என்று நம்ப ஆரம்பித்தது.
வெற்றி என்பது தன்னை உணர்தல் என்பது மாறி பணம் சம்பாதிப்பது மட்டுமே என்ற எண்ணம் எல்லா இடங்களிலும் ஆழமாகப் பரவ ஆரம்பித்தது.
நேரம் காலம் இல்லாத வேலை, அதனோடு இணைந்து வந்த மன அழுத்தம், தாங்க முடியாத போட்டி, தனி மனித உறவு என்பதே இல்லாமல், வெடித்துக் கிளம்பும் திருமணச் சிக்கல்கள், எல்லா இடங்களிலும் பெருகி வரும் முதியோர் இல்லங்கள் என்பதே இந்தப் பொன்னுலகம் காட்டும் வளர்ச்சி என்று ஆனது.
பொன்னுலகின் கனவில் சஞ்சரித்த மனிதன், தன நிலை அறிந்து பார்க்கும் போது தெரிந்து கொண்டது தான் கட்டி இருந்த ஒற்றை வேட்டியும் களவாடப் பட்டதைத்தான். எதையும் பார்க்க விரும்பாத, அல்லது பார்க்கத் தெரியாத மனிதர்கள் இன்னும் கனவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், தாங்கள் நிம்மதியாக இருக்கிறோம் என்ற நினைப்போடு.
கல்விகழகு கசடற மொழிதல் – இது கல்வி என்றால் என்ன என்று தமிழ் கூறும் இலக்கணம். கசடறப் புரிந்தால் தான் கசடற மொழிய முடியும். கசடறப் புரிதலே நடக்காத ஒரு கல்வி முறையில் எப்படி கசடற மொழியும் மாணவர்களை நாம் எதிர் பார்க்க முடியும்.
கற்ப்பித்தல் என்பது வெறும் வேலை இல்லை, அடுத்த தலைமுறைகளை உருவாகும் ஒரு பணி என்ற எண்ணமும், அதனால் வரும் ஒரு ஞானச் செருக்கும் எந்த ஆசிரியர்களுக்கும் இல்லை
தாய் மொழியில் படிப்பதும், பேசுவதும் தேவை இல்லை, புரிகிறதோ இல்லையோ ஆங்கிலத்தில் பேசுபவனே அறிவாளி என்ற எண்ணப் பாங்கு தமிழ் நாட்டில் நிலவி வருகிறது. மொழி என்பது வெறும் எண்ணங்களைப் பகிரும் கருவி இல்லை. அது ஒரு வாழ்வியல், வாழும் முறை, கலாசாரம், வரலாறு என்ற புரிதல் இல்லவே இல்லை. இலக்கியமும் வரலாறும் கற்றுக் கொடுக்கும் பாடங்களைப் படிக்க இங்கே மக்கள் தயாராகவே இல்லை, இதிலும் வேதனை பல ஆசிரியர்களுக்கே இந்தப் புரிதல் இல்லை.
.அறத்தைப் பற்றிய பேச்சே கல்விக் கூடங்களில் இல்லாமல் ஆகி விட்டது, ஒட்டு மொத்த சமுதாயம் முன்னேறாமல் தான் ஒருவன் மட்டும் முன்னேறினால் ( அதாவது பொருளாதார ரீதியில் முன்னேறினால் ) அதனால் வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வு என்பது சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஒரு சமுதாயத்தைத் தான் உருவாக்கும் என்ற உண்மை போதிக்கப் படவே இல்லை. இன்று நாம் தினம் தினம் படிக்கும் திருட்டு, கொள்ளை என்ற செய்திகள் இதனைத் தான் நமக்கு கட்டியம் கூறுகிறது.
பலர் பேசத் தயங்கும் இந்தப் பின்புலத்தில், தன்னையும் தன குடும்ப உறுப்பினர்களையும் பாத்திரங்களாக மாற்றி நண்பர் ஜோதிஜி எழுதிய வலைப் பதிவுகளின் தொகுப்பே இந்த நூல். தனது வாழ்க்கைக் கதையை சொல்வது போல முக்கியமான பல கேள்விகளை இந்த நூலில் எழுப்பி உள்ளார் திரு ஜோதிஜி.
இந்தக் கேள்விகள் எல்லா வீடுகளிலும், பள்ளிகளிலும், சாலைகளிலும் கேட்கப் படட்டும். அந்தக் கேள்விகள் மூலம் ஒரு சிந்தனை மாற்றம் வரட்டும்
என்றும் மாறாத நம்பிக்கையுடன்,
இராமச்சந்திரன் (BKR)
திருநெல்வேலி
வலைபதிவு http://ramachandranwrites.blogspot.ae/