"

அது .. இதுன்னு 10 வருஷம் முடிஞ்சி போச்சு – நான் பதிவராகி.

24.4.2005-ல் முதல் பதிவிட்டிருக்கிறேன். என்ன எழுதணும்னு அன்னைக்கும் தெரியலை; இன்னைக்கும் தெரியலை. ஆனால் இன்னும் விடாம எழுதிட்டு வந்திருக்கிறேன்.

ஆரம்பிச்ச வருஷம் ரொம்ப உன்னிப்பா இருந்திருப்பேன் போலும். 118 பதிவுகள். நிறைய சொந்தக் கதை சோகக் கதை எழுதியிருக்கிறேன். மதங்களைப் பற்றியும் எழுத ஆரம்பித்து விட்டேன். மதங்களைப் பற்றி எழுதினால் பின்னூட்டங்கள் எப்படியிருக்கும்? காட்ட சாட்டமாத்தான் இருந்தது.

2006 – இந்த ஆண்டும் கொஞ்சம் முக்கியமான ஆண்டாக இருந்திருக்க வேண்டும். மூட நம்பிக்கைகளுக்கு எதிர்த்து நிறைய பதிவுகள்; அடுத்து என்னை நீதி மன்றத்திற்கு இழுப்பேன் என்ற அச்சுறுத்தலுக்கு உள்ளான ‘இடப் பங்கீடு’ பற்றிய பதிவுகள்.

2007, 2008,2009 – வேகம் குறைந்த காலம் போல் தெரிகிறது.

2010 – இன்னும் கொஞ்சம் அதிகப் பதிவுகள்.

2011-லிருந்து பதிவுகள் குறைவு தான்.

2012 – 78; 2013 – 84; 2014 – 115; 2015 – இது வரை – 26

பழைய பதிவுகளையும், அவைகளுக்கு வந்த பின்னூட்டங்களையும் பார்த்தேன். ஒரு வேற்றுமை நன்கு தெரிந்தது. பழைய காலத்தில் பின்னூட்ட எண்ணிக்கைகள் அதிகம். இதற்கு இரண்டு விஷயங்கள் காரணமாக இருக்கலாம். எழுதிய பதிவுகளின் ‘சூடு’ ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அடுத்து அப்போது பின்னூட்ட எண்ணிக்கைகள் பொதுவாகவே பதிவுலகத்தில் அதிகம். ஆனால் இப்போது பின்னூட்ட எண்ணிக்கைகள் எல்லோருக்குமே மிகக் குறைவு என்று தான் நினைக்கிறேன்.

எண்ணிக்கைகளை விட பழைய பின்னூட்டங்களைப் பார்க்கும் போது மனதில் ஒரு மகிழ்ச்சி. நிறைய பின்னூட்டங்கள் வெறுமனே ஒரு கருத்தைச் சொல்லிச் செல்வதற்குப் பதில் தனிப்பட்ட அன்பைப் பல பின்னூட்டங்களில் பார்க்க முடிந்தது. ஏதோ எழுதியிருக்கிறாய் .. நானும் ஏதாவது சொல்லிவிட்டுப் போகிறேன் என்றில்லாமல் எல்லாமே ஈரத்தோடு இருப்பதாகப் பட்டது. Many comments had a very personal touch. I could feel the warmth even when I read it now. மக்கள் நெருங்கியிருந்ததாகத் தோன்றுகிறது. பல சச்சரவுகள் இருந்தாலும் .. the stay was pleasant. அதுக்காக இப்போது மோசம்னு சொல்லலை. it is just neutral now! எல்லோரும் வர்ரோம் … போறோம் அப்டின்றது மாதிரி.

அப்போ இருந்த நண்பர்களில் பலரை இப்போது ‘பார்க்கவே’ முடியவில்லை. போரடித்து ஒதுங்கி விட்டார்களா .. இல்லை.. வாழ்க்கையில் இன்னும் முக்கியமானவைகளில் ஆழ்ந்து ஈடுபட ஆரம்பித்து விட்டார்களா? சிலரை மீண்டும் இழுக்கக்கூட முயற்சித்தேன். அட .. போங்கய்யா .. பொழைக்கிற வழியைப் பார்க்கிறோம்னு சொல்லிட்டுப் போய்ட்டாங்கன்னு நினைக்கிறேன்.

அன்றும் இன்றும் அதே இளமையை எழுத்துக்களில் தொடர்ந்து ஓட விடுவது நம்ம துளசி டீச்சர் மட்டும் தான் என்று நினைக்கின்றேன். கூடாமல் குறையாமல் தன் அனுபவங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவரைப் போல் நெடுநாட்களாக பதிவுலகில் நின்று நல்ல பதிவுகள் கொடுக்கும் பதிவர் வேறு யாராவது உள்ளார்களா? எனக்குத் தெரிந்து வேறு யாருமில்லை.

நெடுநாளாக ’காணாமல்’ போயிருந்த ஜிரா இப்போ வந்து அப்பப்போ எழுதுகிறார். ரொம்ப லேட்டஸ்ட்டா வந்தது $செல்வன். நிறைய எழுதியவர்.இப்போ இந்தியாவுக்கே / கோவைக்கே வந்திட்டார். இனிமே எப்டின்னு பார்க்கணும். இக்பால் செல்வனை வாசிக்கும்போதெல்லாம் இந்த செல்வன் எனக்கு நினைவில் வருவதுண்டு. என்ன காரணமோ தெரியவில்லை. வெளிநாட்டிலிருந்து உள்நாட்டு விஷயங்களில் காட்டிய நாட்டமோ என்னவோ தெரியவைல்லை.

பதிவுகளிலேயே இருவர் எழுத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர்களைப் பற்றி முன்பே பல முறை சொல்லியுள்ளேன். ஒருவர் இளவஞ்சி.

Oh! .. no .. not Agassi ..!

ஆனா அகாசி மாதிரி ….

இவரின் பல பதிவுகளில் முதல் பத்தியை சிரித்துக் கொண்டே படிக்க ஆரம்பிப்போம். ஆனால் பதிவை வாசித்து முடிக்கையில் கண்களில் கண்ணீர் இறங்கி ஓடும். என்ன கலையோ .. மனுஷனுக்கு மனச உருக்குற கலை கைவந்த கலை. நல்ல நகைச்சுவை உணர்வும் இருக்கும். அந்த வகைப் பதிவுகளும் நிறைய எழுதியிருக்கிறார்.

மொட்டும் மலரும்

நிழல்படங்கள் எடுப்பதிலும் வல்லவர். இன்னும் கோவிலுக்குப் போகும் காரைக்குடிப் பெண்களின் தலையில் இருந்த மல்லிகைச் சரப் படம் கண்முன் நிற்கிறது. இவரது கடைசிப் பதிவு: June 22, 2010

அடுத்தவர் செல்வநாயகி. இவரைப் பற்றி என்னால் அதிகம் சொல்ல முடியாது. காரணம் அவரின் தமிழ். ஒவ்வொரு சொல்லும், எழுத்தும் அழகில் முக்குளித்து மிக்க அழகோடு பிறக்கும். அவரது கவிதை, உரைநடை .. எல்லாமே தனி அழகு. பின்னூட்டங்களில் கூட அவரின் தமிழ் நடைக்கு அழகுண்டு. இவரது பதிவுகள் பற்றிப் பேச, எழுத நல்ல தமிழ் வேண்டும். என்னிடம் அது இல்லை. ஆகவே ‘கழண்டு கொள்கிறேன்’!! இவரது கடைசிப் பதிவு – ஜூலை 13, 2012.

இவர்கள் இருவரும் அதிகம் எழுதாதது தமிழுக்கு இழப்பு.. Don’t attach any trace of exaggeration to this. I MEAN it.

இன்னும் பலர் நினைவில் வந்து போகிறார்கள்.

பலருக்கு ஒரு நல்ல ‘பிள்ளையார் சுழி’ போட்டுக் கொடுத்த காசி …

முதன் முதல் பதிவெழுத வந்த போது உதவிய மதி கந்த சாமி …

தன் ஒரே ஒரு பதிவால் – இந்து மதம் பற்றிய பதிவு – பலர் மனத்தில் இடம் பிடித்த தங்க மணி …அப்பதிவை பின்னாளில் நான் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் பதிவுகளையும் காணோம்.

கடும் பின்னூட்டம் மட்டும் இடும் சுடலை மாடன் …

அறிவு சார்ந்த பதிவுகள் மட்டுமே எழுதும் பத்மா அரவிந்தன் …

தமிழ் .. திராவிடம் என்று பதிவுலகில் முழங்கிய முத்து தமிழினி ..

அக்கரைச் சீமையில் இருந்து ஈழத்தமிழர் பற்றிய பல கட்டுரைகளும், நூல்களும் எழுதிய திரு …

பாடப்புத்தகத்தில் வைக்கும் அளவிற்கு மிகத் தரமான கட்டுரைகள் – ஈழம், காஷ்மீர் போன்ற பல வரலாற்றுச் செய்திகளை உள்ளடக்கிய கட்டுரைகள் – எழுதிய தமிழ் சசி …

இதுவரை ஒரு பதிவை வாசித்து மிகச் சத்தம் போட்டு சிரித்தேனென்றால் அது வரவனையானின் பதிவுக்குத் தான்.

flash வைத்து பல புதிர் போட்டிகள் நடத்திய பெனாத்தல் சுரேஷ் …

சுறுசுறுப்புக்கே பெயர் வாங்கிய பொன்ஸ் …

நகைச்சுவை, மாமியார் கதை, கும்மிப் பதிவுகள் – என்று பலவற்றையும் கலந்து கட்டிய கண்மணி …

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் ஒன்றை வைத்து எல்லோரையும் சிரிக்க வைத்த இளைஞர் குழாம் …

வெண்பா மன்னன் & குறுக்கெழுத்துப் போட்டி என்று உலுக்கியெடுத்த இலவசக் கொத்தனார் …

என்னை பெரியப்பா என்றழைத்துக் கொண்டிருந்த மருத்துவர் ராமநாதன் …

சினிமாக்குள் நுழைய முயற்சித்த கதைகளையெல்லாம் எழுதிய வெளிகண்ட நாதர் …

இனிமையான நட்போடு இருந்த நெல்லை சிவா …

இந்து மதத்தினைப் பற்றி நிறைய எழுதிய நேசகுமார் …

நல்ல கருத்துக்களைத் தரமில்லாத வார்த்தைகளால் தந்தமைக்காக தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்ட ஆரோக்கியம் …

சமயத்தொடர்புள்ள பதிவுகளில் நாட்டம் காட்டிய வசந்தன் …

என்னைத் தாத்தா என்றழைத்த மழை ஷ்ரேயா …

‘நல்லா இருங்கடே!!!’ என்று எல்லோருக்கும் ஆசி வழங்கும் ஆசீப் மீரான்…

தனக்கென தனிவழி என்று வாழ்ந்து காட்டி இன்னும் என்னை மிகுந்த பிரமிப்பில் வைத்திருக்கும் ராமச்சந்திரன் உஷா

என்னோடு மதப் பதிவுகளில் வழக்கமாக ஒருவர் பின் ஒருவராய் வந்து என்னோடு வாதாடிய இஸ்லாமியப் பதிவர்களில் மிக மட்டமான ‘மனிதன்’ – பின் வந்த நல்லடியார் –> இறை நேசன் –> நண்பன் –> (இஸ்லாமியப் பதிவர்கள் அனைவரும் புனைப்பெயரில் மட்டுமே எழுதி வந்தபோது தன் சொந்தப் பெயரில் நான் சந்தித்த முதல் இஸ்லாமியப் பதிவர்) சுல்தான் போன்றவர்கள் …

என் கருத்துக்களோடு பலமுறை ஒத்திருந்த inomeno

அடிக்கடி என்னோடு ‘சண்டை’ போட்ட வஜ்ரா …, முகமூடி …

மாற்றுக் கருத்துகளை அளித்த மதுரைக்காரர் கால்கரி சிவா …

நிச்சயமாக இன்னும் பலர் உண்டு. இவர்களும் என் காணாமல் போன நண்பர்களின் பட்டியலில் உள்ளவர்கள் தான். காணாமல் போன இவர்களையெல்லாம் மீண்டும் பதிவுகளில் ‘பார்க்கும்’ நிலை வந்தால் மிக்க மகிழ்ச்சி.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

காணாமல் போன நண்பர் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book