"

1959-ல் …..

அது என்ன மாயமோ .. மந்திரமோ தெரியவில்லை. சின்ன வயதிலிருந்தே யாரும் புகைக்கும் போது வரும் வாசனை (நாற்றம்…??) மிகவும் பிடித்தது. அந்தக் காலத்தில் திரையரங்குகளில் புகைப்பிடிக்கத் தடையேதும் இல்லாததால் என்னை மாதிரி ஆட்களுக்கு உள்ளே நுழைந்ததும் வரும் புகை மண்டலம் ரொம்பவே பிடிக்கும். அதைவிட படம் ஆரம்பித்ததும் அங்கங்கிருந்து புகை மண்டலங்கள் ப்ரொஜெக்டரின் ஒளி ஓட்டத்தில் தெரிய ஆரம்பிக்குமே அந்தக் காட்சி கூட ரொம்ப பிடிக்கும். அப்படியே அந்த ஒளி வட்டத்தின் அடியில் குவிந்து ஆரம்பிக்கும் புகை அப்படியே மெல்ல மேலே எழுந்து .. பிரிந்து .. மெல்லிய மேகமாகப் போகுமே … அதையெல்லாம் பார்த்து ரசிக்கணும்; முகர்ந்து அனுபவிக்கணும்.

இப்படி இருந்த நமக்கு எப்படியாவது புகைக்க வேண்டுமென்ற ஆவல் சின்ன வயசிலேயே வராமல் போய்விடுமா? வந்தது. ஆனால் எப்போன்னு நினைவில் இல்லை. ஆனால் ஒரு இடம், நேரம் மட்டும் நினைவில் இருக்கிறது. ஒரு இந்துக்கோவில் பக்கத்தில் மேளம் அடிப்பதற்கோ எதற்கோ ஒரு உயர மேடை கட்டியிருப்பார்கள். நான் அதில் உட்கார்ந்திருக்கிறேன். கோவிலில் ஏதோ விசேஷம் போலும். கீழே நல்ல வெளிச்சம். எனக்கு ‘புகைத் தாகம்’ வந்திருக்கும் போலும்! ஒரு பேப்பரைச் சுருட்டி பீடி மாதிரி உருட்டி, ஒரு தீக்குச்சியை உரசி பற்ற வைத்தேன். பற்ற வைக்கும் போது மூச்சை உள்ளே இழுக்கணும் அப்டின்ற ‘இயற்பியல்’ மட்டும் தெரிந்திருந்தது. அதே போல் இழுத்தேன். அம்மாடி … தொண்டைக்குள் தீப்பிடிச்சது மாதிரி அம்புட்டு புகை .. இருமல் … கண்ணீர் .. இப்படியாச்சு என் முதல் புகைப்பிடித்த திருவிழா! எந்த வயசு என்று எதுவும் நினைவில்லை. ஏதோ ஒரு சிறு வயது. .. ஏதோ ஒரு கிராமத்து நிகழ்வு – இது மட்டுமே நினைவில் உள்ளது. எங்கே, எப்போது … ? எதுவும் நினைவில்லை.

நாமளும் வளர ஆரம்பிக்க வேண்டாமா? வளர்ந்து வரும் காலத்தில் இதற்கெல்லாம் மதுரை சரியில்லை என்று உணர்ந்து, நமது அடுத்த ‘போர்க்களம்’ நமது சொந்த ஊர்தான் என்று நிர்ணயம் பண்ணியிருந்தேன். எங்கள் ஊர்ப்பக்கம் வீட்டில் பெண்கள் எல்லோரும் அனேகமாக பீடி சுற்றுவார்கள். வீட்டிலோ, வீதியிலோ, முற்றத்திலோ நாலைந்து பேர் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டே பீடி சுற்றுவதை ஊரில் எங்கும் காணலாம்.

நான் சின்னப்பயலாக இருந்த அந்தக் காலத்தில் எங்கள் பாட்டையா வீட்டில் யாரும் பீடி சுற்ற மாட்டார்கள். below our prestige …! வீட்டில் பாட்டையா காலங்கார்த்தால எழுந்திருச்சி, வயல் வேலைக்கு ஆட்களை விரட்டி அனுப்புவதில் குறியாக இருப்பார். நான் எழுந்திருக்கும் போதே அப்பாம்மா பெரிய பானை ஒன்றில் மோர் கடையும் ஒலி கேட்கும். பெரிய மத்து வைத்து கயிறு போட்டு கடைந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. அத்தைமார்கள் வரிசையாக பாட்டையா நடத்திய பள்ளியில் ஆசிரியைகள். குடும்பம் அப்போது உச்சத்தில் இருந்தது.

முதல் கட்டு மெத்தையில் ஆறு ஏழு அடி உயரத்திற்கு நெல் குலுவைகள் சில நிற்கும். எல்லாவற்றிலும் நெல். அதற்கு மேலே உள்ள மெத்தையின் கூரை நடுவே ஒரு ஓட்டை. அங்கே காயப்போடும் நெல் மழை நாளில் நனைந்து விடக்கூடாதே என்று போட்ட ஒரு ஓட்டை. மழை வந்ததும் காயப்போட்ட நெல்லை கூட்டி, அந்த ஓட்டை மூலம் கீழே தள்ளிய ஒரு நாள் அனுபவம் இன்னும் நினைவிலிருக்கிறது. சரி … அப்படியெல்லாம் இருந்த வீடு எல்லாமுமாய் மாறி இப்போது இருக்கும் நிலையைச் சமீபத்தில் பார்க்கும் போது சோகமே மிஞ்சியது. பாட்டையா காலத்தில் நின்றிருந்த பீடி சுற்றல் இப்போது உறவு வீடுகளில் வழக்கமாகி விட்டது. மூன்று தலைமுறைகளில் இந்த பீடி சுற்றல் ஒரு reference point போல் ஆகி விட்டது. ம் ..ம்.. பாட்டையா வீட்டுப் பொருளாதாரம் அப்படி ஆகிப் போச்சே என்று சமீபத்தில் ஊருக்குப் போனபோது தோன்றியது. அப்படியே அம்மா ஊருக்குப் போனால் அங்கே எல்லாமே அப்படியே மாறி இருந்தது. அங்கே இருந்த செழிப்பு மனதுக்கு மகிழ்ச்சி. சரி …. நாம புகை விஷயத்துக்கு மறுபடியும் வருவோம்.

நானும், மதுரையிலிருந்தே வரும் பெரியப்பா வீட்டு அண்ணனும் ஒரு விடுமுறையில் பீடி குடித்து விடுவது என்று முடிவெடுத்தோம். ஊருக்கு வந்தாச்சு. கடையில் போய் பீடி வாங்கினால் அடுத்த நிமிடமே வீட்டுக்கு செய்தி வந்து விடும். ஊரில் அனைவரும் சொந்தக்காரர்கள் தானே… ! என்ன செய்வது …? ஆபத்பாந்தவனாக வந்தான் ஜான்சன். எங்கள் வயதுக்காரன். அவர்கள் வீட்டில் பீடி சுற்றுவார்களாம். நான் ஒரு கட்டு பீடி எடுத்துட்டு வந்திர்ரேன் என்றான். அடுத்து தீப்பெட்டி, அதுவும் யாரோ வீட்டிலிருந்து ‘சுட்டு’ விட்டு வருகிறோம் என்றார்கள்.

அடுத்து இடம் தேடும் படலம். யார் வீட்டு மாடியிலாவது வைத்துக் கொள்வோமா என்றுதான் முதலில் நினைத்தோம். அதுவும் பெரிய பாட்டையா வீடு – வாழைப்பழக் குலை வீடு – நன்றாக இருக்குமே என்று நினைத்தோம். பெரிய வீடு. மேலே போய்விட்டால் யாருக்கும் தெரியாது என்று நினைத்தோம். ஆனா யாராவது பார்த்து விட்டால் …? ஆக, அந்த இடம் வேண்டாம் என நினைத்தோம். பாட்டையா வீட்டுப் பள்ளிக்கூடத்திற்கு கிழக்குப் பக்கம் ஒரு ஓடை .. அதைத் தாண்டி ஒரு புளிய விளை. அந்த ஓடையில் தான் நாங்கள் வழக்கமாக ‘வேட்டைக்குப்’ போவோம். அங்கே போகலாம் என முடிவு செய்தோம். நாலைந்து பேர் – நான், அண்ணன் (Sam Joseph), ஜான்சன் … இன்னும் இரண்டு மூன்று பேர் போனோம். யார் யாரென்று நினைவில் இல்லை. ஜான்சன் நல்ல பையன்! ஏனென்றால் ‘நான் பீடி எடுத்து வந்து கொடுக்கிறேன். ஆனால் நான் குடிக்க மாட்டேன்’ என்று சொல்லி விட்டான்.

புளிய விளைக்குப் போனோம். ஒரு புளிய மரத்தடியில் உட்கார்ந்து, அங்கிருந்து ஒரு நோட்டம் விடுவோம். பார்வையில் ஏதும் படவில்லையென்றால் பீடி பற்ற வைப்போம். காற்று, பயம், புதிய பழக்கம் – எல்லாம் சேர்ந்து பற்ற வைப்பதே ஒரு பெரிய நிகழ்ச்சியாகப் போனது. ஏதும் சத்தம் கேட்டால் பீடியை அங்கேயே போட்டு விட்டு அடுத்த இடத்திற்கு ஓடுவோம். இப்படியாக ஓடி ஓடி பீடி குடித்தோம். நாற்றம் தெரியக்கூடாதென்பதற்காக புளிய இலைகளை மேய்ந்தோம். பல மணி நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பினோம்.

ஆனாலும் இந்த ‘பீடி உற்சவம்’ எனக்கும் அண்ணனுக்கும் திருப்தி அளிக்கவில்லை. பீடியோடு நின்றால் நம் தகுதிக்கு என்னாவது என்று ஒரு நினைப்போ என்னவோ? சிகரெட் குடித்து விட வேண்டும் என்று நானும் அவனும் ஒரு திட்டம் தீட்டினோம்.

எங்கள் ஊரிலிருந்து ஓரிரு மைலில் ஆலங்குளம் என்றொரு பெரிய ஊர். அங்கு எங்களை யாருக்கும் தெரிந்திருக்காது. ஆக அங்கே போய் சிகரெட் வாங்கி விடலாம். அங்கே போய் சிகரெட், தீப்பெட்டி, வாசனை போக மிட்டாய் எல்லாம் கொள்முதல் செய்து விட்டு, இரண்டு ஊருக்கும் நடுவில் சாலையைத் தாண்டி ஒரு கிணறு – ஏறி இறங்க வசதியான படிகளோடு – தெரியும். அங்கே போய் ‘அடித்து விட’ திட்டம் தீட்டினோம். காசு எப்படி ‘சம்பாதித்தோமோ’ தெரியவில்லை. காசை எடுத்துக் கொண்டு ஆலங்குளம் போனோம். கடையில் நான் தான்சிகரெட் வாங்க வேண்டும் என்பது ‘அண்ணனின் ஆணை’! ஏனென்றால் நான் சின்னப் பையனாம் – அவனுக்கு என்னை விட இரு வயது அதிகம் – அதனால் யாரும் என்னைச் சந்தேகிக்க மாட்டார்களாம்.

கிணற்றுக்கு வந்தோம். சிகரெட் … ம்.. பற்ற வைத்தோம். சிகரெட்டின் முதல் பிரச்சனையைச் சந்தித்தோம். பீடியை நல்லா கடித்து வைத்துக் கொள்ள முடியும். இங்கே சிகரெட்டை வாயில் வைத்து இழுப்பதற்குள் முனை எச்சிலால் ஈரமாக … இழுத்தால் இருமல் வர … எப்படியோ ஒரு வழியாக ஒன்றிரண்டு சிகரெட் இழுத்துக் கொண்டிருந்திருப்போம்.

திடீரென்று தலைக்கு மேல் இரு உறவினர்கள் – மச்சான்கள் – வந்து நின்றார்கள். எங்களுக்கு ஏழெட்டு வயது மூத்தவர்கள். கிணற்றுக்குள் இறங்கி வந்தார்கள். ‘ஏண்டா … இப்படி சிகரெட் குடித்துக் கெட்டுப் போறீங்க’ன்னு ஒரே அட்வைஸ் மயம். மீதி இருந்த சிகரெட்டைத் தண்ணிக்குள் வீசியெறியச் சொன்னார்கள். சிகரெட் பாக்கெட்டைக் கிழித்து, அவர்கள் வைத்திருந்த பேனாவை வைத்து, ‘நாங்கள் இனி சிகரெட் குடிக்க மாட்டோம்’ என்று எழுதி அதன் கீழ் எங்களைக் கையெழுத்து போடச் சொன்னார்கள். கையெழுத்து போட்டதும், அந்த அட்டையைச் சுக்கு நூறாகக் கிழித்து கிணற்றுக்குள் போட்டார்கள். ‘இந்த அட்டைகளையெல்லாம் நீங்கள் ஒன்றாக்கினால் இனி நீங்கள் சிகரெட் குடிக்கலாம். அது முடியாவிட்டால் இனி நீங்கள் சிகரெட்டைத்தொடக் கூடாது’. என்று ஒரு புதிய சட்டம் போட்டார்கள். அதை மீறி சிகரெட் குடித்தால் என்னென்னமோ நடக்கும் என்று சொல்லி பயங்காட்டினார்கள்.

நல்ல பிள்ளைகளாய் இருவரும் கையெழுத்துப் போட்டு, அதைக் கிழித்துக் கிணற்றில் போட்டு வெளியே வந்தோம். அதென்னமோ என் அண்ணன் அந்த சட்டத்தைத் தாண்டாமல் சிகரெட்டை விட்டுட்டான். நாம தான் பயங்கர புரட்சியாளனாச்சே! கொஞ்ச நாள் சிகரெட் பக்கம் போகவில்லை. ஆனாலும், ஆசை விடவில்லை. மெல்ல அங்கங்கே, அப்பப்போ அப்டின்னு ஆரம்பிச்சி …. 26 வருஷம் குடிச்சி … 1990 ஜனவரி 6-ம் தேதி இரவு 10 மணி வரை ….. சுகமாக, அனுபவிச்சி, ஆனந்தமா குடிச்சிக்கிட்டு … இருமிக்கொண்டு இருந்தேன்.

ஆரம்பத்தில் பீடி கொடித்து உற்சாகப்படுத்திய ஜான்சனும் ஓரிரு ஆண்டுகளில் ஊரிலிருந்து சென்னை பயணமானான். புளிய விளை பீடிப் போராட்டத்திற்குப் பிறகு அவனோடு ஏதும் தொடர்பில்லாது போயிற்று. ஆனாலும் பீடி, சிகரெட் பிடிக்க ஆரம்பித்தது என்ற நினைப்பு வரும் போதெல்லாம் ஜான்சனும் புளிய விளையும் மனசுக்குள் காட்சிகளாக விரியும். அதோடு சத்தியம் வாங்கிய மச்சான்களும் மனசுக்குள் வந்து தரிசனம் கொடுப்பார்கள்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

காணாமல் போன நண்பர் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book