"

1966 – 70-ம் ஆண்டுகளில் ….

முதுகலை முடிச்சாச்சி. ஒரு விஷயத்தைப் பல தடவை நானும் சொல்லியாச்சி .. அது என்னன்னா, படிச்சி முடிச்சிட்டோமே அடுத்த என்னென்ன வழி வகைகள் வாழ்க்கையில் இருக்கு; எந்த வழியில் போனால் நல்லது; இல்லை, நமக்குன்னு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தேடல் … ஆசை இருக்கிறதா? வேறு போட்டித் தேர்வுகள் எழுத முடியுமா? … இந்த மாதிரி சிந்தனைகள் ஏதுமில்லாமல் மொட்டையாக குடும்பத் தொழிலே ஆசிரியர் தொழில் என்பது போல் அது ஒன்றை மட்டும் மனதில் இருத்திக் கொண்டு கல்லூரி ஆசிரியர் தொழிலை மட்டுமே பற்றி யோசித்துக் கொண்டு, அந்த வேலையை மட்டும் தேடிக்கொண்டு இருந்து தொலைத்தேன். மற்ற வழிகள், முயற்சிகள் பற்றி எனக்கும் ஏதும் தெரியவில்லை. ஆசிரியராக இருந்தும் என் தந்தைக்கும் அதில் என்னை வழிப்படுத்தத் தெரியவில்லை. இதுவரை சொல்லிக்கொடுத்த ஆசிரியப் பெருமக்களில் யாரேனும் ஒருவர்கூட வாழ்க்கையின் பல பக்கங்களை எடுத்துச் சொல்லி வழிப்படுத்தவேயில்லை. இந்த சோகம் என் வாழ்நாள் முழுவதும் எனக்கிருந்தது. என் மாணவர்கள் என்னைக் குறை சொல்லாமலிருக்க சில முயற்சிகளை என் தொழிலில் எடுத்து வந்திருக்கிறேன். வாழ்வில் குறிக்கோள், அதற்கான முயற்சிகள் என்று மாணவர்களுக்கு அடிக்கடி சொல்வதைத் தவறாமல் செய்து வந்தேன். என் ஆசிரியர்கள் மீது எனக்கிருந்த வருத்தத்தை என் மாணவர்கள் என்னிடம் கொள்ளாத அளவு இதைப் பற்றி அடிக்கடி பேசுவேன். அது என் கடமையென்று எண்ணி அதனைத் தொடர்ந்து செய்து வந்தேன். வேறு சில தனிப்பட்ட முயற்சிகளையும் எடுத்து வந்தேன்.

முதுகலை முடித்ததும் எப்படியும் மதுரையில் வேலை வேண்டாமென ஒரு ஆசை. குறைந்தது ஒரு 100 மைல் தாண்டி வேலை கிடைக்க வேண்டுமென நினைத்தேன். அதே போல் தஞ்சையில் ஒரு காலியிடம் என்றறிந்து விரைந்தேன். மிக நல்ல துறைத் தலைவர். பார்த்ததுமே வந்திருங்க துறைக்கு என்றார். கல்லூரி முதல்வரிடம் போகச் சொன்னார். அவர் பெயர் பேராசிரியர் முருகன் என்று நினைக்கிறேன். அவர் ஒரு தமிழ்ப்பேராசிரியர். என் மதிப்பெண் பட்டியல்களைக் கொடுத்தேன். முதலில் என் இளங்கலைப் பட்டியலைப் பார்த்தார். தமிழில் முதல் வகுப்பு என்பதைப் பார்த்ததும் வேறு மதிப்பெண்களையே பார்க்கவில்லை. அவரும் சரியென்று சொல்லிவிட்டார். இருந்தும் இன்னொரு படியும் இருந்தது. வீரைய்யா வாண்டையார் என்பவர் தான் கல்லூரியின் தாளாளர்; உரிமையாளர். கல்லூரியிலிருந்து சிறிது தொலைவில் அவர் வீடு. அவரைப் பார்த்து வர ஒரு துணையோடு என்னை அனுப்பினார்கள். அதற்கு முன் விலங்கியல் பேராசிரியர் அவரது ‘டை’ ஒன்றைக் கொடுத்து கட்டிக்கொண்டு போகச் சொன்னார். அன்றுதான் பழைய ஜமீன் தோரணைகளைப் பார்த்தேன். தாளாளரைப் பார்க்கப் போனால் .. அங்கே பெரும் அமைதி. யாரும் பேசாமல் சைகைகளினாலேயே அதிகம் பேசுவதாகப் பட்டது. அவருக்காகக் காத்திருந்து அவரைப் பார்க்கப் போனேன். சீரியஸாகச் சில கேள்விகள். பதில் சொன்னேன். மீண்டும் கல்லூரி. துறை தலைமைப் பேராசிரியர் எனக்கு வேலை கிடைத்து விட்டதாகக் கூறினார். அப்பாடா … ஆனால் only as demonstrator. இந்த வருடத்திற்கு மட்டும் என்றார்கள். ஆனால் இந்தக் கதை பல ஆண்டுகள் தொடர்ந்தன என்பது ஒரு தனிக் கவலைப் படலம். ஆனால் அன்று அதைப் பற்றிக் கவலைப்படக்கூட எனக்குத் தெரியவில்லையோ??!!

வேலைக்குச் சேர்ந்து ஓரிரு நாட்கள். மதியச் சாப்பாடு அங்குள்ள மாணவர் விடுதியில். முதல் நாள் துறை நண்பர்கள் கூட்டிச் சென்றார்கள். சாப்பிட்டு முடிந்ததும் விடுதியின் மேற்பார்வையாளர்கள் அறைக்குச் சென்றோம். பெரிய அறை. மூன்று கட்டில்கள். மூன்று மேற்பார்வையாளர்கள் என்றார்கள். அதில் எங்கள் துறையின் ஜகச்சந்திரன் என்பவனும் ஒருவன். அவன்தான் என்னை அவன் அறைக்குக் கூட்டிச் சென்றான். அந்த அறையில் சினிமா பாடல்கள் ஒலிபரப்ப ரிக்கார்ட் பிளேயர், அம்ப்ளிபயர் எல்லாம் இருக்கும். . அப்போவெல்லாம எல்லாம் அகலமான ரிக்கார்டுகள். மாலையில் சிறிது நேரம் பாடல்கள் போடுவார்கள். காலையும் மாலையும் ஆங்கிலச் செய்திகள் ரேடியோவிலிருந்து போட்டு விடுவார்கள். யார் கேட்பாளர்களோ … யாருக்குப் புரியுமோ!? அதைப் போட்டால் விடுதியில் இரு இடங்களில் உள்ள ஸ்பீக்கர்களில் அலரும். பத்துப் பதினைந்து ரிக்கார்டுகள் இருக்கும். ஆனால் மதியம் உணவு வேளையில் பாட்டுகளைப் போட்டு அந்த அறைக்குள் போட்டுக் கொள்ளலாம்.

ஒரு நாள் மதியம் சாப்பிடத் தனியாக விடுதி நோக்கி சென்று கொண்டிருந்தேன். பின்னாலில் இருந்து ஒரு அழைப்பு. M.A. Economics முடித்து விட்டு ஆங்கிலத் துறையில் சித்தாள் வேலை பார்ப்பது அப்போதெல்லாம் ஒரு வழக்கம். அதாவது ஆங்கிலம் எம்.ஏ. முடித்தால் சட்டென்று அப்போது ஆங்கிலத்துறையில் வேலை கிடைக்கும். எக்கச் சக்க டிமாண்ட். ஆனால் M.A. Economics முடித்தால் அவ்வளவு எளிதில் வேலை கிடைக்காது. அதனால் ஆங்கிலத்துறையில் சித்தாள் வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள். ஆஹா.. சித்தாள் வேலைன்னா என்னன்னு சொல்லவில்லையே. P.G. முடித்திருந்தாலும் lecturer வேலை கிடைக்காததால் அறிவியல் துறைகளில் demonstrator வேலைக்கோ, மொழித் துறைகளில் tutor வேலையோ கிடைக்கும். இவர்கள் எல்லோரும் lecturer வேலைக்குத் தகுதி படைத்திருந்தாலும், அந்த வேலை கிடைக்காததால் tutor அல்லது demonstrator வேலைக்குச் சேர்ந்திருப்போம். ஆனால் துறைகளில் lecturer ஆக இருப்பவர்கள் இவர்களைக் கீழ்த் தரத்தில் வைத்து நடத்துவார்கள். அவர்களெல்லாம் கொத்தனார்கள் என்றால், tutor, demonstrator எல்லோரும் சித்தாள்களாக நடத்தப்படும் பரிதாபம் தொடர்ந்து நடக்கும். நானும் lecturer பதவிக்கு வந்திருந்தாலும் அப்போது காலியாக இருந்த சித்தாள் வேலையில் தான் சேர்ந்தேன்.

மீண்டும் விட்ட இடத்திற்கு வருவோமா? பிரபாகரன் என்று ஒருவன். ஒல்லியாக, ஜாலியாக இருக்கும் ஒருவன். அன்றுதான் அவனை முதல் முறையாகப் பார்க்கிறேன். அவன் என்னைப் பற்றி ஏற்கெனவே தெரிந்து வைத்துள்ளான். ’எங்கே போகிறீர்கள்?’ என்று ஆங்கிலத்தில் கேட்டான். ஆரம்பிக்கும்போதெல்லாம் ஆங்கிலம் தான்! பதில் சொன்னேன். பின் எங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டோம். தான் விடுதியில் மேற்பார்வையாளராகவும் இருப்பதாகக் கூறினான். ஓரிரு நிமிடங்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு கேள்வி கேட்டான். பயங்கர ‘A’ கேள்வி. யாரும் பழகிய நாலைந்து நிமிடங்களில் கேட்கக்கூடாத கேள்வி என்று வைத்துக் கொள்வோமே! அப்படி ஒரு கேள்வி. ஒரு சில வினாடிகள் கழித்து அவன் கேள்விக்கு straight forward பதில் ஒன்றை சட்டென்று கொடுத்தேன். என் பதில் அவன் கேள்வியை விட ரொம்ப வெளிப்படை. பயல் ஆடி விட்டான். ’தலைவா .. நீ எங்கேயோ போய்ட்ட…’ என்று தமிழில் ஒற்றைப்படை மரியாதையுடன் பேச ஆரம்பித்தான். பயல் வழக்கமாக புதிதாக வரும் என்னை மாதிரி இளம் வயசு ஆளுகட்ட பழக ஆரம்பித்ததும் இந்தக் கேள்வியைக் கேட்பானாம். வழக்கமாக அவர்கள் அனைவரும் வெருண்டு ஒதுங்கி விடுவார்களாம். அவனைப் பார்த்தாலே பயத்துடன் ஒதுங்கி விடுவார்களாம். என்னைக் கேட்ட்தும் நான் பட்டென்று பதில் சொன்னது அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்ட்து என்றான்.same vibes …!

அதன் பின் நல்ல நட்பு. அக்கல்லூரியில் அப்போது இருந்து வந்த வழக்கம் நண்பர்கள் ஒரு டீம் போட்டுக்கிட்டு மத்தவங்களைச் சதாய்க்கிறது. இதில் பயங்கர தீவிரவாதி இவன். அதோடு 1965-ல் தமிழ்நாட்டில் இந்திப் போராட்டம் தீவிரமாக மாணவர்கள் மத்தியில் நடந்தது. அதில் மதுரையில் கொஞ்சம் அதிகமாகவே நடந்தது. ஜீப்பெல்லாம் எரிச்சோம்ல … அதிலும் எங்கள் தியாகராசர் கல்லூரியின் மாணவர்களான காமராசர், காளிமுத்து என்ற இருவரும் தான் இந்தியச் சட்ட்த்தை எறித்து, கைதாகி … பின்னாளில் அதனாலேயே பெரும் இடங்களுக்கு வந்தார்கள். முன்னவர் ஒரு கவிஞராகவும், அடுத்தவர் அமைச்சர், சட்டசபைத் தலைவர் என்றும் ‘முன்னேறி’ விட்டார்கள். அதனால் நான் சேர்ந்த அக்கல்லூரியில் மதுரைக்காரர்களுக்கு ஒரு ‘தனி இடம்’ – அதைப் பயம் என்றும் சொல்லலாம் – உண்டு; அதிலும் நான் தியாகராசர் கல்லூரி மாணவனா .. எனக்கு இரட்டை கிரீடம் சூட்டி விட்டது போலாயிற்று.

இந்தப் பின்னணியில் பிரபாகரன் என்னிடம் ரொம்பவே ஒட்டி விட்டான். ஆனால் பின்னால் தான் தெரிந்தது இந்தப் பயல் வாய்ப்பேச்சில் வீரன். ஆனால் சரியான பயந்த பயல் என்று. என்னடாவென்றால் அவனுக்குத் திருமணம் சொந்தத்திலேயே முடிந்திருந்தது. பெண் படிப்பை முடிக்கவும், இவன் சித்தாள் வேலையிலிருந்து கொத்தனார் வேலைக்கு உயரவும் பெற்றோர்கள் முடிவு செய்து இருவரையும் பிரித்தே வைத்திருந்தனர். பயலுக்கு சாந்தி முகூர்த்தம்னா என்னன்னு தெரியாம உக்காந்துகிட்டிருந்தான். அவன் விடுமுறைக்கு வீடு போகும் முன் நாங்கள் அவனை கொஞ்சம் திரியேத்தி அனுப்புவோம். பெரும் வெற்றி முழக்கத்தோடு திரும்பி வருவான். என்னடான்னு கேட்டால், ஒரு தடவை ‘எப்படி படிக்கிற?’ அப்டின்னு கேள்வி கேட்டு, அது என்னமோ பெரிய இமய மலையைத் தொட்ட மகிழ்ச்சியோடு சொல்வான். அடுத்த தடவை கைவிரல்களை லேசாகத் தொட்டுட்டேன் என்பான். பாவப்பட்டபயல் தான்.

அவன் விடைத்தாள் திருத்துவதும் வேடிக்கையாக இருக்கும். அங்கங்கே விடைத்தாளிலோ, கட்டுரை நோட்டிலோ ஒரு பெரிய வட்டம் போடுவான். என்னடான்னு கேட்டா .. இந்தப் பெரிய ரவுண்டுக்குள் எப்படியும் ஒரு தப்பு இருக்கும்’டா… கேட்டா அதைக் காண்பிப்பேன். ஆனாலும் ஒரு பயலும் எங்கிட்ட வரமாட்டான்’டா என்பான்.

மதியம் சாப்பாடு முடித்து அவர்கள் அறைக்குச் செல்லும் மக்களை ஏதாவது கலாட்டா பண்ணுவது அல்வா சாப்பிடுறது மாதிரி. இந்த மாதிரி வேடிக்கை வேலைகளுக்காகவே என்னை மாதிரி ஆட்களோடு ஜோடி சேர்ந்துக்குவான். அவனோடு இருந்தால் நேரம் போறதே தெரியாத மாதிரி அரட்டை அடிப்பான். ஆனாலும் clean guy. அடுத்த இரண்டு வருடம் கழித்து கொத்தனார் வேலையும் மனைவியும் அவனுக்குக் கிடைத்தார்கள்!!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License

காணாமல் போன நண்பர் Copyright © 2015 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License, except where otherwise noted.

Share This Book