கதை 8
கருத்து: தவறான எதிர்பார்ப்புகள்
பழையகால அரேபிய நாடுகளில் ஒன்றில் நடந்ததாகச் சொல்லப்பட்ட ஒரு அருமையான கதை. இந்த கதையின் நாயகர், பலநாடுகளுக்குச் சென்று வணிகம் செய்பவர். ஒரு வியாபாரி. அவர் மிகுந்த கடவுள் பக்தி உள்ளவர்.
பல மாதங்கள், பலநாடுகளில் பயணம் செய்து, வியாபாரம் செய்கிறார். பெரும் செல்வம் ஈட்டி வீடு திரும்புகிறார். தனது வியாபாரத்தில் கிடைத்த பெரும் ஆதாயங்களை தான் சவாரி செய்யும் ஒட்டகத்தின் முதுகில் ஏற்றி வரும் வழியிலே ஒரு ஆலையம் – பள்ளிவாசல் என்று கொள்ளுவோம் – இருப்பதைக் கண்டார்.
தான் பெற்ற செல்வம் இறைவனின் அன்பால் கிடைத்தது. அதனால் அவருக்கு நன்றி தெரிவிக்கக் கடன் பட்டவராக உணர்ந்தார். உடனே, தனது ஒட்டகத்தை வாசலில் நிறுத்தி விட்டு, பள்ளிவாசலின் உள்ளே புகுந்தார்.
சில மணிகள் இறை வணக்கத்திலும், மேலும் சில மணிகள் இறைவனுக்கு நன்றி கூறுவதிலும் செலவிட்டார். இதன் பின்னர், தமது பயணத்தைத் தொடரும் எண்ணத்துடன் பள்ளி வாசலின் நுழைவாயிலை அடைய, ஒட்டகம் ஒடிவிட்டதைக் கண்டுபிடித்தார்.
இப்போது, இறைவன்மீது, இவருக்கு, எல்லை இல்லாத கோபம்.
இப்போது கடவுளை வசைபாடத் துவங்கினார். இறைவா, உன்னை நம்பி, உன்னை வணங்க, நான் பள்ளிவாசலில் நுழைந்தால், என் ஒட்டகம் ஒடிவிட்டது. அதோடு நான் ஈட்டிய செல்வமெல்லாம் மறைந்து விட்டது. இதற்குக் காரணம் எல்லாம் நீயே, என்று தொடங்கி, தாம் அறிந்திருந்த வசைமொழிகள் அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பித்தார்.
அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஸுபி ஞானி ஒருவர் நடந்த விஷயத்தை சில வினாடிகளில் புரிந்து கொண்டார். வியாபாரியின் காதில் விழுமாறு கூறினார்.
கடவுள் நம்பிக்கை எல்லாம் சரி. பள்ளிவாசலுக்குள் நுழையும் முன் ஒட்டகத்தைக் கட்டி வைத்திருக்கலாமே.
வாசக நண்பர்களே ! நமது முன்னோர். ஞானிகள் கடவுளை, மனிதர்களான நம்மைவிட மேலானவர்களாக நமக்கு அறிமுகம் செய்தார்கள்.
ஆனால் அதே கடவுளை, இந்தக்கால மனிதர்கள் எப்படி கேவலமான முறையில் நடத்துகிறார்கள் என்று கவனியுங்கள். கடவுளின், தற்கால அவதாரங்கள் – கூலிப்படைத் தலைவனாக, கைக்கூலி (லஞ்சம்) பெற்று காரியம் செய்யும் அரசு அலுவலராக, கமிஷன் ஏஜண்டாக.
இதுவும் போதாதென்று இந்தக் கதையில் கடவுளை, பொது இடங்களில் டோக்கன் கொடுத்து, வண்டிகளைப் பாதுகாப்பு செய்யும் காண்டிராக்டராக மாற்றி அமைத்துள்ளதாகவும் கொள்ளலாம்.