கதை 10
கருத்து: நமக்கு நிகரானவர், நாமேதான்.
ஒரு செல்வந்தர், தன் கழுதையுடன் நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்டார். கழுதைதானே என்று நினைக்காதீர்கள். மோட்டார் வாகனங்கள், ரயில் விமானங்கள் போன்ற .வசதிகள் கண்டுபிடிக்கப்படாத நாட்களில், கழுதைகளை, ஒட்டகங்களை, மாடுகளை, குதிரைகளை – மிகவும் அன்புடனும் பிரியமுடனும் வளர்ப்பது வழக்கம்.
தற்காலத்தில், நமது மக்களுக்கு கார், கப்பல் ஆகாயவிமானம் எப்படியோ, அந்த கால மக்களுக்கு கழுதைகள் ஒட்டகங்கள், குதிரைகள் ஆகியவை.
உதாரணமாக விலை உயர்ந்த வாகனங்களைத் துடைத்து, நிழலில் நிறுத்தி, திருஷ்டி கயறுகளைக் கட்டி காலாகாலத்தில், அதிக செலவில், சர்வீசிங் செய்து பாதுகாப்பது எப்படியோ, அப்படித்தான் பழைய காலத்தில் பொதி சுமக்கும் உயிர்களுக்கு மக்கள் அளித்து வந்த கவனம்.
வழியில் இரவு குறுக்கிட, அந்த நகரில், ஓரு பயணியர் விடுதிகளில் (நம்ம ஊர் நக்ஷத்திர ஓட்டல்கள் போல) பிரபலமான ஒன்றை தெரிந்தெடுத்து உள்ளே நுழைந்தார், விடுதியின் ஓரு இளம் வயதினனான ஒரு அதிகாரியை எதிர்கொண்டார். அவரிடம், வாடகை, வசதிகளை என விவரங்களைக் கேட்டும்,, நேரில் கண்டும் உணர்ந்தார்.
பின்னர், அந்த இளைஞனிடம் கூறினார்:
இளைஞனே. நான் உங்கள் விடுதியில் தங்க தீர்மானம் செய்யும் முன்பாக உன்னைச் சில கேள்விகள் கேட்க வேண்டும். எனக்கு என் கழுதை உயிருக்குயிரானது. அதன் பராமரிப்பில், நலனில் எனக்கு மிகுந்த கவலை உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வித அடிபடை கவனங்கள் தேவைப்படும் இல்லைதா? அவை பருவ காலம் மாறும் பொழுது வேறுபடும். அதுபோல என் கழுதைக்கு இந்த பிரதேசத்தின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற சில தேவைகள் உண்டு, என்று தொடர்ந்தார்.
இடைமறித்த இளைஞன். எங்கள் விடுதியைப்பற்றி நீங்கள் நன்றாக அறிந்திருக்கவில்லை. எங்கள் விருந்தினர்கள், அதாவது வாடிக்கையாளர்கள், அனைவரும் உங்களைப் போல பெருஞ்செல்வந்தர்கள்தான். அவர்களின் கழுதைகள் சாதாரண மனிதர்களை விட அதிக சொகுசான உயிரினங்கள். அவர்களை நன்றாகப் பராமரிப்பதே எங்கள் தனித்தன்மை, என்றான்.
சரி, சரி … அது மட்டுமல்ல என் கவலை. எனது கழுதை அதிக வயதானது. இரவில் அது உறங்க வைக்கோலினால் ஆன படுக்கை விரிப்பது அவசியம் என்றார்.
கழுதையை அன்புடன் தட்டிக்கொடுத்த இளைஞன். இந்த கவலையை, இந்த இடத்திலேயே மறந்து விடுங்கள் என்றான்.
அதுமட்டுமில்லை, வியாபாரி தொடர்ந்தார். வயதானதால், கழுதையின் பற்கள் வலுவிழந்திருக்கிறது. அதனால், அதற்கு அளிக்கப்படும் புல் மிகவும் மிருதுவாக இருப்பது மிகவும் அவசியம். இல்லையென்றால், உண்ணாது உறங்கிவிடும், என்றார் செல்வந்தர்.
இளம் அதிகாரி இடைமறித்தார். ஐயா, உங்கள் கவலை எனக்கு புரியாதா? இதையெல்லாம், எங்களுக்கு சொல்லத் தேவையே இல்லை. இதை எல்லாம் நாங்கள் உணராமல் இருந்தால், நாங்கள் உங்களைப்போன்ற மேன் மக்களுக்கு சேவை செய்ய என்றோ தகுதி இல்லாதவர்களாக மாறிப்போம் என்று பதில் கூறினான் இளைஞன்.
விருந்தினர், இப்போது மன அமைதி கொண்டார். இரவு உணவு கொண்டு, குளிர் – காய்ந்து, பின் தமது அறையில் புகுந்து உறங்கலானார். எவ்வளவு நேரம் உறங்கியிருப்பார் என்று அவருக்கே தெரியாது. திடீரென்று விழித்துக் கொண்டார்.
அவர் உறக்கத்தில், கண்ட ஒரு கனவு அவரை உலுக்கியது. அவரது கழுதை, தாகம் தாங்கமாட்டாமல், உணவின்றி கட்டாந்தரையில் குளிர் வாட்ட, துடித்துக் கொண்டு இருப்பதாகக் கனவு கண்டார்.
சற்று தயங்கினார். பின்னர், அறையிலிருந்து வெளியேறி, லாயத்திற்கு விரைந்தார். அங்கே கண்ட காட்சியில் அவருடைய ரத்தம் உறைந்தது.
அவர், கனவில் கண்ட காட்சிக்கும் நேரில் கண்ட காட்சிக்கும் வித்யாசம், அதிகமில்லை.
பின் குறிப்பு:
நமது உடமைகளிலும், உறவுகளிலும் நமக்குத் தோன்றும் அக்கறை, அதைச் செயல்படுத்து விதம், மற்றும் பாதுகாக்கும் விதம், வேறு மனிதர் எவருக்கும் வராது.
இந்தக் கதைக்கு ஆதாரம் ஓரு ஸுபி கதை. இந்தக் கதையைப் படித்தபோது என் மன்தில் உதித்த எண்ணம், இதுதான்:
மார்க்கெட்டிங் மக்கள் எல்லாக்காலத்திலும் இப்படித்தான் இந்தார்களா? பல நூறு வருடங்களாக, இன்று வரை மாறவே இல்லையா? இவர்கள் மாறவே மாட்டார்களா?
அடுத்ததாக, உங்களுக்குச் சொந்தமான விலை உயர்ந்த எலக்ட்ரானிக் சாதனங்கள், மொபைக், கார் முதலானவைகளை நெருங்கிய நண்பர்களுக்குக் கடன் கொடுங்கள். திரும்பி வரும்போது அதன் நிலமையை அலசுங்கள். மேலே கண்ட கதையின் கருத்து புரிந்துவிடும்.