கதை 11
இந்தக் கதை எதற்காகச் சொல்லப்பட்டது என்று புரியவில்லை. ஆனால், நமது தற்போதைய சமுதாயத்தில் மிகவும் உபயோகமான கருத்து ஒன்றை இந்த கதையிலிருந்து மருந்தாகப் பிரித்தெடுக்கலாம்.
இதோ, கதை:
காட்டு நரிகளை நகரங்களில் அடிக்கடிக் காணலாம். அப்படி ஒரு நரி காட்டிலிந்து நகர்ப்புரத்தை நோட்டமிட வந்தது. அந்த நரிக்கு தாங்க முடியாத அளவுக்கு பசி.
மாமிசத்தையே விரும்பி உண்ணும் இந்த நரி, ஒரு திராட்சை தோட்டம் வழியாக சென்று கொண்டிருந்தது.
பசிக்குப் பாவமில்லை என்று, இன்று மாத்திரம் திராட்சைப் பழம் தின்று வயிரை நிரப்ப, ஓரு மாதிரியாக மனதைத் தேற்றிக் கொண்டு, தோட்டத்தில் புகுந்தது.
ஒரு திராட்சைக்கொடியில் கண்ட ஒரு பெரிய திராட்சை கொத்து ஒன்று நரியின் பசியை பல மடங்காயிற்று. தரையிலிருந்து அதிக உயரத்தில் திராட்சை கொத்து ஒன்று தொங்க, நரி பலமுறை அதைப் பிடிக்கத் தாவியது. பல முறை முயன்றும் பலன் கிடைக்காததால், நரி தன் முயற்சியைக் கைவிட்டுவிட்டு, தன் வழியே சென்றது.
தனது தளர்ந்த உடலும், கடும் பசியும் கூட்டாணி அமைத்து நரியை வாட்ட, தழுவிய தோல்விவேறு தன் பங்கிற்கு மனதை வாட்ட, ஓருவிதமாக சமாதனம் அடைய எண்ணியோ என்னவோ, தெரியவில்லை, நரி கூறியது.
சீச்சீ, இந்த திராட்சை புளிக்கும், என்று.
தனக்கு கிடைக்காத போதும், அதை தின்னாமலேயே, திராட்சையின் தன்மையை, நரி, தவறான சான்றிதழ் வழங்கியது எதனால்? யாருக்காக?
(1) தனக்கு அடைய முடியாததை, கீழ்த்தரமாக விமரிசிப்பதாக புரிந்து கொள்ளலாமா? அல்லது,
(2) கிடைக்காத ஒன்றின் பின்னால் வாழ்நாளை வீணடிக்கும் மக்கள் பலருக்கு தன் வாழ்வை எப்படி திருத்தி அமைத்துக் கொள்வது என்பதற்கான ஒரு வழிமுறை எனக் கொள்ளலாமா?
“கிட்டாதாயின் வெட்டன மற”
என்று நாம் படித்தும் பயன்படுத்துவதில்லை.
உதாரணமாக, தோல்வியைத் தழுவும் இன்ஸ்டன்ட் காதலர்கள், சினிமாத் துறையில் புகுந்து சாதனைகளைச் செய்ய விரும்பும் இளைஞர்கள். அது போன்ற, போட்டிகள் நிறைந்த துறைகளில் சந்தர்ப்பம் தேடும் சாதாரண மக்கள்.
டெப்பாசிட் தொகையை தொடர்ந்து இழந்து, தோல்வியை மட்டுமே தொடர்ந்து தழுவும் அரை வேக்காட்டு அரசியல்வாதிகள் – என்று எண்ணற்ற மக்களுக்கு, மேல் கண்ட நரிக்கதையில் கண்ட, இரண்டாவது மனப்பான்மை, உதவிக்கு வரும்.