"

கதை 16

கருத்து: நட்பு என்னும் மாயை

story 16 mds 2

உலகத்தில், மாயை எல்லோரையும் ஆட்டிப்படைப்பதாகப் பெரியவர்கள் கூறக் கேட்டிருப்போம்.  மாயை  என்ன செய்யும்?

இல்லாத ஒன்று இருப்பதாகவும், இருக்கும் ஒன்றை இல்லாததாக நாமெல்லாம் அறிவதும் மாயையின் சேட்டையாக அறிகிறோம்.

எனக்கு   தெரிந்து, இந்த   கம்ப்யூட்டர் யுகத்தில்   மனிதனை   விடாமல் பற்றியிருக்கும் இரண்டு மாயை – முதல் காதல், இரண்டாவது அதன் உடன் பிறப்பான   நட்பு.

காதல் பரவாயில்லை. திருமணம் ஆனபிறகு திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடும்.  ஆனால் இந்த நட்பு என்ற மாயை,  நின்று நிதானித்து வாழ்நாள் முழுவதும் நம்மை அழிக்கும்.

இதை  விளக்க    ஒரு  அருமையான    பழைய    கதை.     இந்தக்   கதைதான், வாசகர்கள்  நட்பின் உண்மையான பரிமாணத்தை,நாம்   சுத்தமாக உணர்ந்து,    உஷாராக    வாழ்வதற்கான    ஒரு கடைசி சான்ஸ்.

இந்த கதையைப் படித்தபின் நீங்கள், உங்கள்  நண்பர்களின் மத்தியில்,  இந்த கதையின் வரும் மூன்று கதாபாத்திரங்களில் ஒருவராக, உங்களை    நீங்களே    அறிந்து    கொள்வீர்கள்.

ஒரு காடு.   அதை   அடுத்து    ஒரு சிற்றூர்.  ஒரு நரி   காட்டிலிருந்து,  அந்தச் சிற்றூருக்கு, அடிக்கடி வந்து போகும். அந்தச் சிற்றூரில் நரிக்கு நண்பன் ஒரு கழுதை.    பசிக்கும் போதெல்லாம்  பழய குப்பைகளைக் குடைந்து அதை உணவாகக் கொண்டிந்த ஒரு கழுதை நரிக்கு  நெருங்கிய நண்பனாகியது.

நரியினால் நேரடியாக ஆபத்தில்லை என்று அறிந்தே கழுதை நரியின் நட்பை ஏற்றது.

வேகமும் பலமும் இல்லாத கழுதையால் எந்த உபயோகம் இல்லாவிட்டாலும் ஆபத்தும் இல்லை அல்லவா? எனவே நரி – கழுதை நட்பு நீடித்ததில் அதிசயம் ஏதும் இல்லை.

தன் வயிற்றில் குப்பை கூளங்களை அடைத்து, உடல் உழைப்பை மனிதனுக்குத் தாராளமாகத் தந்து உயிர்வாழும் ஓரு சாதுவான பிராணி. ஆற்றாமை தவிர வேறு ஒன்றும் பேசக் கிடைக்காத இந்த கழுதைக்கு நரி நல்ல நண்பன்.  கழுதைக்கு, காணும் போதெல்லாம்,  தனது குறைகளை கொட்ட ஓரு வடிகால்,  இந்த நரி நண்பன்.

இந்த கழுதைக்கு சிறிதும் உணவே தராமல், உழைப்பை மட்டும் குறைவில்லாமல் பெறும் ஓரு சலவைத் தொழிலாளி, அதன் முதலாளி.

காட்டிலிருந்து வரும்போதெல்லாம் நாட்டு நடப்புகளை, கழுதை, தன் நண்பன் நரிக்குத் தெரிவிக்கும்.

இப்போது காட்டிற்கு வருவோம்.

இந்த   நரிக்கு    காட்டில் ஒரு நண்பன்.    அது   ஒரு   சிங்கம். சிங்கத்திற்கு பலம் வேகம் இரண்டும் உண்டு.

சிங்கத்துடன் உண்டான  நட்பினால் நரிக்கு பிற விலங்குகளிடையே  தனி  மரியாதை  கிடைத்தது.  நரியின் மீது  காட்டின்     மிருகங்களிடையே   ஓரு   பயத்தைக்கூட ஏற்படுத்தியது. சிங்கத்தை போன்ற பலம் இல்லாவிட்டாலும் ஒட்டத் திறனில் அவ்வளவு பின் தங்கியதில்லை, இந்த நரியார்.

ஆனாலும்  மிச்சம் மீதியை தின்னவேண்டிய கேடு கெட்ட பிழைப்பானாலும், சிங்கத்தில் பலத்தில் தன் வயிற்றின் தேவை பூர்த்தியாகிறதென்றால், அண்டிப் பிழைப்பதில் தவறு ஒன்றும் இல்லை அல்லவா? இது நரியாரின் வாதம்.

சிங்கம்  என்ன நினைக்கிறது?

நான் வேட்டையாடியதை எனது   கூட்டத்துடன் தின்று மீதியை விட்டு    வருகிறேன்.    அதற்காக   வெகுநேரம்     காத்திருந்து    மீந்ததைத் தின்கிறது நரி.  தனக்கு  விசுவாசமான ஒரு ஊழியனாகவும், மதி மந்திரியாகவும் இருக்கும் நரியை நல்ல நண்பனாகவே நடத்துவதில் தவறேதும் இல்லை என்று சிங்கம் கருதியது.

சிங்கத்தின் கணிப்பில், நரியினால் உபயோகம் உண்டு ஆனால் தன் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை.

மொத்தத்தில் கழுதை – நரி – சிங்கம் மூன்றின் நட்பும் ஒன்றினால் மற்றதற்கு, இப்போது பயன் உள்ளதோ இல்லையோ தெரியாது.  ஆனால் ஆபத்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த உறவு பல ஆண்டுகளைக் கண்டது.

பலம் பளு இரண்டும், சிங்கத்தை விட, யானைக்கு அதிகம். என்றாலும் யானையின் பெரிய உருவம்   அதனாலான வேகமாக அசைவதற்கு  அல்லது போரிட,  ஒரு தடை.  அதனால்,  இரண்டுக்கும் மேற்பட்ட  சிங்கம் போன்ற  சிறிய மிருங்களால் தனிப்பட்ட யானை ஒன்றை எளிதாக வெற்றி கொள்ள வாய்ப்பு உண்டு. ஆனால் யானைகள் போன்ற பல  மிருகங்கள்  தனியாக  நடமாடுவதில்லை. கூட்டமாகவே செல்வதால், சிங்கமும் யானையிடம் வாலாட்டுவதில்லை.

ஒரு நாள் ஒரு காட்டு யானைக்கும். நமது சிங்க நண்பருக்கும் ஒரு சின்ன மோதல். மோதலில் சிங்கத்தின் ஒரிரு எலும்புகள்  ஆங்காங்கே இடம் பெயர்ந்தன.   சிங்கத்தால் வேட்டையாட இயலாத நிலை. பசியினால் சிங்கம் இளைத்தது. சிங்கத்தை ஓட்டியிருந்தும் ஓசிச் சாப்பாடு கிடைக்காததால்  நரியும் நலிந்தது. (பதவியில் இல்லாத தலைவரைப்போல).

நாட்கள் நகர, பசி தாங்க முடியாமல் தவித்த சிங்கம்,  உணவுக்கு ஏதாவது ஒரு ஏற்பாடு செய்யும்படி நரியைக் கேட்டுக்கொண்டது.

நரிக்கு கழுதையின் நினைவு வந்தது. கழுதையின் நட்பில், முதன் முதலாக, ஒரு உருப்படியான பயனைக் கண்டது நரி. அதாவது தானும் சிங்கமும் இணைந்து கழுதையைக் கபளீகரம் செய்வது தான் அதன் திட்டம்.

அது எப்படி முடியும்? மேலே படியுங்கள்.

நகரத்திற்கு சென்று, கழுதையைக் கண்டு அதன் துன்பமான சூழ்நிலையை ஆதாரமாக வைத்து ஒரு பொய்யைக் கூறி, காட்டுக்குள் அழைத்து வருவது. அதன் பிறகு சிங்கத்தின் குகையில் கழுதையை விட்டு விடுவது முதல் கட்டம்.  அடுத்த கட்டமாக சிங்கம் ஒரே ஒரு அடியில் கழுதையை வீழ்த்தும். பின்னர்  இருவரும் பசியாரலாம் என்றது நரி.

இது நடக்கும் காரியமா என்று கேட்டது  சிங்கம். நண்பனே உங்களுக்கு நகரத்திலுள்ள மிருகங்களை பற்றி அறிந்திருக்க நியாயம் இல்லை.  நான் நாட்டிற்கும் காட்டிற்கும் அலைவதால் நான் அறிந்தது  அதிகம். நகரத்தில் வசிக்கும் மிருகங்கள் மனிதனின் அருகாமையில் வசிப்பதால், மனிதனைப் போலவே அவற்றின் மூளை கெட்டுவிடிவதால், மூளையின் செயலாக்கம் குறைந்தவை.

தன் நிலமை எப்படி இருந்தாலும், அதை மோசமாகவே கருதி எப்போதும்   சுய பச்சாதாபம் கொண்டவை. தம்மைச் சுற்றி உள்ள உலகத்தைப் புரிந்து கொள்ள என்றுமே முயற்சிப்பதில்லை. தற்பெருமை, பொறாமை ஆற்றாமை, கோபம், பேராசை ஆகியவற்றுக்கு, மனிதனைப் போலவே அடிமையாகிவிட்டன.

சும்மா பத்து நிமிடம் அவர்களின் துயரமான நிலையைப் பகிர்ந்து கொண்டு,  நாமும் நான்கு சொட்டு கண்ணீர்   வடித்தால்   ஓரேயடியாக நம்மை   நம்பி, சரண் அடைந்து விடுவார்கள். அதோடு, அவர்களைப் புகழ்ந்து நான்கு வார்த்தைகள்    மட்டுமே     சொன்னால்    போதும்,     அவர்கள் ஆயுள் முடியும் வரை நமக்கே அடிமையாக இருப்பார்கள் என்று முடித்தது நரி.

சிங்கம், தன் நண்பன் நரியின் அறிவில் நனைந்து மகிழ, அவசரமாக  அடுத்துள்ள சிற்றூரை நோக்கிப் பாய்ந்தது நரி.

சிற்றூரில், கழுதையார், என்றும் போல இரவில் குப்பைகளுக்கு நடுவில் புல்லை தேடிக்கொண்டிருந்தார். அவருக்கு, அகோரப் பசி. அதோடு பளு சுமந்ததால் உண்டான உடல் வலி. இரண்டும் ஓன்று சேர, வழக்கம்போல, புலம்பியவாரே புல்லைத் தேடினார். 

அப்போது, நரியார் அங்கே வந்து சேர்ந்தார். வழக்கம் போல நலன் விசாரித்தலில் தொடங்கினார்.

பின்னர் தனது திட்டத்தை விவரித்தார். நாட்டில், மனிதனுக்கு உழைத்து வீணாகிச் சாவதைவிட காட்டில் பசுமையான புல்லை இலவசமாக உண்டு உறங்கி மகிழலாமே, என்று தனது முதல் அம்பை எய்தார் நரியார்.

கழுதை சற்று யோசித்து பதில் சொன்னது. நரியாரே, காட்டில் கொடும்    மிருங்கங்கள்   வசிப்பதையும் எந்த      வினாடியும்  உயிருக்கு ஆபத்து வரும் நிலை  உண்டென்று     தான்    அறியுமென்றது.   (அரசு ஊழியர், தனியார்   துறைக்கு   மாறவேண்டிய   சூழ்நிலையில் சிந்திப்பதைப் போல ?)

நரியார் பதிலளித்தார்.

நண்பரே. உங்கள் பயம் ஆதாரமற்றது. நான் காட்டில் தானே வசிக்கிறேன். அதுமட்டுமல்ல காட்டில், நகரங்களில் காணமுடியாத எண்ணிக்கையுள்ள அழகான பெண் கழுதைகளும் உண்டு.   நாட்டுக் கழுதைகளைப் போல இல்லாமல் ஆரோக்கியமாகயும் அழகாகவும் இருக்கும்.   இப்போது பெண்கழுதைகள் அதிகமாகவும்    ஆண் கழுதைகள் குறைவாக இருப்பது காட்டில் ஒரு குறை. அதுமட்டுமல்ல முக்கியமாக பலசாலியாகவும் அழகாகவும் இருக்கும் கழுதைகளுக்கு காட்டில் மிகுந்த தட்டுப்பாடு உள்ளது. எனவே இன்று உங்களை அழைத்து சென்று மூன்று பெண் கழுதைகளுக்கு   மணமுடிக்கும்   திட்டத்தோடு   நான் வந்துள்ளேன். உடனே என்னுடன் வாருங்கள் என்றவுடன், மனதில் குதூகலம் குடி கொள்ள, கழுதை நரியுடன் நடை போட்டது.

நெடிய பயணம் செய்ததால் கழுதை மிகவும் களைத்திருந்தது. பல மணி நேரம் பயணம் செய்து கடைசியாக சிங்கத்தின் இருண்ட குகையை இரண்டு நண்பர்களும் வந்தடைந்தனர். வெளிச்சத்திலிந்து குகைக்குள் வந்த கழுதைக்கு இருட்டைத் தவிர  வேறு எதுவுமே தெரியவில்லை.

சிங்கத்திற்கு பிடிபடாத மகிழ்ச்சி. பசியின் கொடுமையிலிருந்து விடுதலை கிடைக்கும் நேரம் நெருங்கி வந்துவிட்டதல்லவா? உடைந்து போன எலும்பும் இயலாமையும் சேர்ந்த  தன்   உடல் நிலையை  மறந்தது.   எலும்புடைந்த சிங்கம், இருட்டில் இருந்த கழுதையின் மேல் தாவியது.

ஆனால் சிங்கத்தின் வலுவிழந்த உடல் முழுவதுமாக ஒத்துழைக்காதலால் சிங்கத்தின் குறி தவறியது. கழுதை நின்ற இடத்திலிந்து சிறிது தூரத்தில் தொப்பென விழ,  கழுதையும் உயிர் தப்பியது.

தாம் ஒரு பேராபத்திலிருந்து தப்பித்தோம் என்ற உணர்வு மட்டும் எஞ்சிய நிலையில் இருண்ட குகையிலிருந்து தப்பித்தோம் பிழைத்தோம், என்று வெளியே ஒடியது   கழுதை.

சிங்கத்திற்கு ஏமாற்றமானால், நரிக்கு ஏமாற்றத்துடன் சிங்கத்தின்மீது கோபமும் வந்தது. அரும் பாடுபட்டு ஏற்படுத்திய ஒரு அருமையான சந்தர்ப்பத்தைச் சிங்கம் அவசரப்பட்டு நழுவவிட்டதே!

நரி தொடர்ந்தது. நண்பரே நீங்கள் உடல் நலிவு கொண்டதை உணருங்கள். இரண்டாவது முறை நான் கழுதையைக் கொண்டு வருகிறேன். அப்பொழுதாவது  நிதானத்தைக் கடைபிடியுங்கள் என்று கூறியது. 

சிங்கத்திற்கு ஒரே அதிசயம். கழுதை மீண்டும் இங்கே வருமா?

ஏன் வராது ? மனிதனுடன் வாழ்ந்து வந்ததால் நகரத்தில்  வாழும்  மிருகங்களுக்கு மூளை என்ற ஒன்று இருக்கிறதா என்றே எனக்கு சந்தேகம். நகரத்து மனிதர்கள், எவ்வளவு தடவை தாங்கள் ஏமாந்தாலும்   மீண்டும் மீண்டும் ஏமாறுவார்கள். ஏமாற்றும்  தலைவரைத் தொடர்வார்கள்.  போலிச் சாமியார்கள் மோசடி எவ்வளவு முறை நடந்தாலும் மக்களுக்கு சாமியார்கள் மீதுள்ள நம்பிக்கை மட்டும் என்றும் குறைவதில்லை.

அதிகவட்டிக்கு ஆசைகாட்டும்  பிளேடு பைனான்ஸ் கம்பெனிகளிடம் வருடம் தவறாமல் ஏமாறுவது,   மாயமாய்  மறையும் சீட்டுக் கம்பெனிகளைத் தேடி முதலீடு செய்வது.

அரசாங்கத்தில் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக  நடக்கும் மோசடிகள்.

இதெல்லாம் நில்லாமல் தொடர்வது ஏன்?

ஆடுகளைப் பாருங்கள். கசாப்புக்காரரை மட்தும்தான் நம்பும். ஏமாற்றுபவர்களை நம்ப மனிதனுக்கு இணை அவர்களுடன் வாழும்  நாட்டு மிருகங்கள் தான் என்று முடித்தது.

சிங்கம் தெளிவு பெற்றது. தான் ஆற்றில் குளித்துப்  புத்துணர்சியுடன் வருவதாகக் கூறி வெளியேறியது.

நரி கழுதையின் கால் தடையத்தைத் தொடர்ந்து சென்று, கழுதையை குகையின்  சற்று தூரத்தில் பிடித்தது. கழுதைக்கு, நரி நண்பன் மேல் ஒரே கோபம்.

நரி, தன் நண்பன் கழுதையாரைப் பார்த்து,  எதற்காக திடீரென்று ஓடிவந்தீர்கள் என்று சாதாரணமாகக் கேட்டது.  இருட்டில் ஏதோ ஒன்று என்மீது பாய்ந்ததை உணர்ந்தேன் ஒடினேன் என்று பதிலளித்தது கழுதை.

பதிலாக, நரியோ, அப்பாவி நண்பரே, உங்களை, கழுதைப் பெண்கள் ஆவலுடன் அணுகினார்கள். நீங்களோ எதையோ கண்டு பயந்து ஓடிவந்துவிட்டீர்கள். கழுதைப் பெண்கள் மூவருக்கும்  நீங்கள் ஒடியதை மட்டுமே அறிவார்கள். காரணமும் புரியாமல்  மனம் உடைந்து அழுது கொண்டே இருக்கிறார்கள்.

உங்கள் வரவை ஆவலுடன்  எதிர் பார்க்கிறார்கள். நீங்கள் வரவில்லை என்றால் மூன்று கழுதை  பெண்களும் தற்கொலை செய்து கொள்ளத்    தயாராக இருக்கிறார்கள். பெண் பாவம் பொல்லாதது என்று அடுத்த சென்டிமெண்ட் அம்பை எய்தது.

பயம், பசி, களைப்பு ஆகிய மூன்றிலும்  மிகவும் நலிந்த கழுதைக்கு நரியைப் பின் தொடர்வதைத் தவிர வேறு வழி எதுவுமே தெரியவில்லை. நரியுடன் ஆடி அசைந்து மீண்டும் ஒரு முறை, சிங்கத்தின் குகையை அடைந்தது.

குளித்துவிட்டு  வருவதாகச்  சென்ற   சிங்கம்,   இன்னமும்  குகைக்குத்    திரும்பவில்லை.    சாதாரண    சமயங்களில் கழுதையை சாய்ப்பது நரிக்கு சுலபமில்லை. ஓரே உதையில் நரியை வானுலகிற்கு     அனுப்பும்   சக்தி  கழுதைக்கு  உண்டு. ஆனால்,  இந்தச் சோர்ந்து நலிந்த கழுதையைச் சாய்க்க    ஒரு சிங்கம் தேவை  இல்லையோ என்று நினைத்தது நரி.

எனவே, நரி மெதுவாக  கழுதையின்  காதை கடித்துத் தின்ன ஆரம்பித்தது. எதிர்பாராத இந்த தாக்குதலில் அதிர்ந்த கழுதை, உடனே பயம் அடைந்து மயக்கமானது. இதுதான் தக்க தருணமென்று கழுதையைக் கடித்து, ருசியான அதன் மூளைப் பகுதியைத் தின்று முடித்தது.

சிங்கம் ஆற்றில் குளித்து முடித்து, நொண்டியவாறு குகைக்கு வந்து சேர்ந்தது.  உடனேயே, உயிரற்ற கழுதையில் தலையில்  மூளை இல்லாமல் இருக்கக் கண்டு, நரியின் மேல் கோபம் கொண்டது.

தந்திர நரியோ. நண்பரே. கழுதைக்கு மூளை இல்லை என்று ஏற்கனவே   உங்களுக்குத் தெரியாதா? இருந்திருந்தால்,      இரண்டாம் முறை இங்கே வருமா என்று கேட்க, சிங்கம் சமாதானமடைந்து.

அதோடு, புத்திசாலித்தனமும் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான நரிக்கு, கழுதை விருந்தில், அதிக பங்கை அளித்து மகிழ்வித்தது.

முடிவுறை – இது   நமது   அன்றாட வாழ்வில், நட்பின் அடிப்படையில்  நடந்தேரும் சம்பவங்கள். இந்த   கதையில்   காணும் மூன்று விதமான கதாபாத்திரங்களை உங்கள் அரசியல் வட்டம், அலுவலக வட்டம் மற்றும் நண்பர்கள் மத்தியிலும்  இருப்பதை நாம் உணரமுடியும்.               

என் அருமை வாசகர்களே! நீங்கள் சிலருக்கு நண்பர்கள். உங்களுக்கும் பல நண்பர்கள். நீங்கள் சில இடங்களில்  கழுதையாகவும், வேறு சில இடங்களில் நரியாகவும்  மிகச் சிறிய இடங்களில் சிங்கமாகவும் இருக்கிறீர்கள்.  உங்கள்    நண்பர்கள் மத்தியில்  யார், என்னவாக     இருக்கிறார்கள் என்று கண்டுபிடியுங்கள். அதே சமயம் உங்கள் நண்பர்களையும் அடையாளம் காணுங்கள்.

இந்தப் பயிற்சி உங்கள் வாழ்வில் துயரங்கள் குறைக்கும். ஏமாற்றங்கள் தவிர்க்கப்படும்.

License

Icon for the Public Domain license

This work (எல்லா வயதினருக்கும் பயன் தரும் சிறுகதைகள் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book