"

கதை 20     

கருத்து:   தியாகங்கள் சமுதாயத்திற்கு அவசியம்

   story 20 mds 2

காட்டில்,    எலிகளின்    ஒரு சிறப்புப்  பொதுக்கூட்டம். சமீப காலத்தில் இந்த எலிகள் கூட்டத்தில் விவாதிக்கப்படுவது ஒரே ஒரு   பிரச்சனைதான். நகரத்திலிந்து   சமீபத்தில் குடியேறிய ஒரு பூனையின் தொல்லை.   இதைச்    சமாளிக்க என்ன    செய்வது என்ற     கேள்விக்கு   விடை!

இதில் சிறப்பு என்னவென்றால், இங்கே கூடியுள்ள எலிகள் கூட்டத்திற்கு வந்த எல்லாமே சாதாரண, காட்டு  எலிகள் இல்லை. காட்டைச் சுற்றியுள்ள கிராமங்களிலோ அல்லது நகரங்களிலோ பிறந்து வளர்ந்து கடைசியில் ஒரு அமைதியான வாழ்க்கையைத் தேடிக் கடைசிக் காலத்தில் காட்டில் குடியேறியவை.   

பொரியியல் கல்லூரி காண்டீனில் பிறந்து வளர்ந்ததால், சிறிதளவு எஞ்சினியரிங்  அறிவு தனக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் எலி ஒன்று  உண்டு.  தன் வயதான காலத்தில் நகரத்தின் நரக வாழ்வு பிடிக்காமல், காட்டில் வந்து செட்டிலான பல எலிகளில், இதுவும்  ஒன்று. 

விமானத்தின் குப்பைக் கூடையில் சிக்கி, தவறுதலாக பல வெளிநாடுகள் பயணம் செய்து, தட்டுத்தடுமாறி ஊர் வந்து சேர்ந்தது என்ற வகையில் அகில உலக எலி ஒன்றும் இந்தக் கூட்டத்தில் பங்கு கொண்டது.

அரசாங்க அலுவலகங்களில் பிறந்த எலி. பொதுத்துறை எலி. என்று பல பின்னணிகளுடன் பல திசைகளிலிருந்தும் வந்து காட்டில் குடியேறிய எலிகள்தான் இவை. ஒரு வகையில் காட்டைவிட்டு அகலாத எலிகளை விட மேற்கண்ட எலிகளே,   தற்காலக் காடுகளில் காணப்படுகின்றன.

காட்டு எலிகளில் சற்று வயதான எலி ஒன்று  கூறியது,      சிறிது நாட்களாக, புதியதாகக் காட்டிற்கு வந்த ஒரு பூனையினால் நமது வாழ்க்கையில் சிக்கல்கள் அதிகமாகி உள்ளது. அவசியப்பட்டபோது பயமில்லாமல் நடமாட முடியவில்லை.  இந்தப் பூனை, எங்கிருந்து எப்போது வருகிறதென்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களின் குடும்பத்தில் நான்கு நபர்களை இந்த பூனை கொன்று தின்று விட்டது என்று கோபமாகக் கூறியது.

ஒரு நகர எலி, தனது முறை வந்தபோது, நகரங்களில் எலிகளைத் தடுக்க பூனைகளை வளர்த்தாலும் பயன் ஒன்றும் இல்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

எனென்றால், பூனைகள் மனிதர் சாப்பிடும் உணவுகளை மட்டுமே தின்பதை பழகியுள்ளன. பூனையின் உணவு பால், பழம் ரொட்டி என்றாகிவிட்டது. எனவே நகரமே, எலிகளுக்கு காட்டைவிட பத்திரமானது, வாழ வசதியானது என்றது. இதைக் கேட்டு, காட்டு எலிகள் எல்லாம் கூடி, இது பொய் என்று கூச்சலிட்டன. அதைத் தொடர்ந்து  நகர எலி கூட்டத்திலிருந்து வெளியேறியது.

விமானத்தில் வெளிநாடு சென்ற எலியோ,  நான் ஜெர்மெனி சென்றபோது ….  என்று  தொடர, காட்டு எலிகள் அதை பேச அனுமதிக்கவில்லை. ஓ..ஓ  என்று கூச்சலிட்டன. அதனால், அந்த உலகம் சுற்றிய எலி, கோபத்தோடு அமர்ந்தது. இந்த காட்டுமிராண்டி எலிகளுக்கு என் மேல் ஒரே பொறாமை. அதன் பின் விளைவுதான் இது என்று முனகிக் கொண்டது.

ஒரு நடு வயது எலி, எல்லா எலிகள் கூறியதையும் அலசி, தனது ஆலோசனையை முடிவாக தெரிவித்தது.

பூனைக்கு,  நகரத்திலிருந்த   கடை   ஒன்றிலிருந்து, ஒரு வெண்கல மணி ஒன்றை, ஓரு எலி திருடி வரவேண்டும். வேறு ஒரு எலி அதைப் பூனையின் கழுத்தில் கட்ட வேண்டும்.  அப்போது, பூனை வருமுன், அதன் மணி ஓசைவரும். நாம் எல்லோரும் எச்சரிக்கையாகி,   தப்பிவிடலாம்  என்று விளக்கியது. இந்த தீர்மானத்தை எல்லா எலிகளும் வரவேற்றன.

ஆனால் ஒன்றுமே இவற்றை நிறைவேற்ற முன் வரவில்லை.

இதுவரை, மணியை திருடி கொண்டு வருவது யார் என்றும், பூனையின் கழுத்தில் கட்டுவது யார் என்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாததினால் பூனைகள் மணிகளின்றி சுதந்திரமாக திரிவதும், எலிகள் பூனைக்குப் பலியாவதும் பல தலைமுறைகளாகத் தொடர்கின்றன.

பல எலிகள் இப்போதெல்லாம் பல நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்கின்றன. எலிகளுக்கு எலிக்ட்ரானிக் அறிவுகூட அதிகமாகியிருக்கிறது.

கடந்த எலிகள் மகாநாட்டில், மணியை  பூனையின் கழுத்தில் கட்டுவதை விட ஒரு ஆர் எப் ஐ டி  ஒன்றை  பூனையின் வாலில் கட்டுவது பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. ஆனால் அதைக் கொண்டுவருவது யார், கட்டுவது யார் என்ற முக்கிய கேள்விகளுக்கு பதில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

முடிவுரை:

தியாகங்கள் சமூகத்திற்கு அவசியம். சிலர் செய்யும் தியாகம் சமூகத்திலுள்ள மற்ற அனைவருக்கும் பயன் தரும். கூட்டங்கள், தீர்மானங்கள், விவாதங்கள்,  போன்ற ஆயுதங்கள் காலங்களைப் பின்னே தள்ளவும், பிரச்சினைகளை ஒத்தி வைக்கவும் மட்டுமே உதவும்.  தாங்கள் செயலாக்கத்தை தள்ளிவைக்க, பொருப்பிலிருந்து  தப்பிக்க,  மனிதன் கண்டுபிடித்த  பொல்லாத சாதனங்கள் தான் இவைகள்.

License

Icon for the Public Domain license

This work (எல்லா வயதினருக்கும் பயன் தரும் சிறுகதைகள் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book