"

கதை 21

கருத்து: சுமுக உறவு  நன்மை தரும்.

அது ஒரு மத்ய தரக் குடும்பங்கள் வாழும் காலனி. 

அதில் ஒரு பெரிய பதவி வகிக்கும் ஓருவர் வீடு ஒன்றைக்  கட்டி,  அதில்  குடியேறுகிறார். அதிகார போதையோ, அல்லது  அந்த மனிதன் பிறந்த வேளையின் கோளாறோ,    அந்தக் காலனியில் வசித்தவர்களை    கிரகங்கள் படுத்தும் பாடோ   தெரியாது.   அங்குள்ள ஒவ்வொரு குடும்பத்துடனும் ஏதேனும் ஓரு விதத்தில்,  இவருடன் ஒரு சண்டை, தகராறு, மன வருத்தம் என்று தொடர்ந்தது.

ஒருநாள்,  தனது அடுத்த வீட்டில் இருந்த  வீட்டின்       குடும்பத்துடன்  ஒரு   வேண்டாத விவாதம் தொடங்கி அதுவே விவகாரமாக முடிந்தது. குறிப்பாக, கணவன் அருகே இல்லாதபோது, அந்த வீட்டு பெண்மணியின் மனம் வெகுவாகவே புண்படும் விதமாகப் பேசினார், அந்த வயதான அதிகாரி.

கூடியிருந்த மற்றவர்கள் முகம் சுளித்தனர். நல்ல கல்வியும்  உயர்ந்த பதவியும் வகிக்கும் ஒருவர், இப்படி நடந்து கொள்வது அனைவருக்கும் அதிசயமாகவும் இருந்தது.

சம்பவம் நடந்து சில நாட்களில் மழைக்காலம் தொடங்கியது. பெரியவர்  குடும்பத்துடன்  வெளியூர்  சென்றிருந்தார்.  கொண்டு சென்ற பெட்டிகளப் பார்த்தால், அவர் ஊர் திரும்ப கட்டாயம் ஒருவாரமாவது ஆகும்.

இவர் சென்ற அன்றே, நள்ளிரவு வேளையில், கொட்டும் மழையில், பெரியவர் வீட்டில் திருடர்கள் புகுந்திருந்தனர். உள்ளே இருந்த பீரோக்கள் மற்றும் பெட்டிகளையும் உடைக்கும் சப்தம் பெரும்பாலும்  கொட்டும் மழையில் கரைந்து போனது.

இடையிலே, சிறிது நேரம் மழை நின்றபோது, கேட்ட சத்தத்தில், பெரியவர் வீட்டில் ஏதோ திருட்டு நடப்பதை பின் வீட்டுக்காரர்கள் ஊகித்தார்கள். இது இந்த திமிர் பிடித்த பெரிய மனிதருக்கு இறைவனே தந்த தண்டனை என்று போலீஸையோ அல்லது மற்ற காலனிவாசிகளையோ எச்சரிக்கைகூட செய்யாமல், நிம்மதியாக உறங்கிவிட்டார்கள்.

இந்த   சம்பவத்தை  அடுத்து,   களவு போன பொருளை மீட்க இதே பெரிய மனிதர் உயர் அதிகாரிகள்,  போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் என்று பல மாதங்களையும் ,  பல நூறு லிட்டர் பெட்ரோலையும் வீணாக்கினார்.

அண்டை   அயலாருடன்  நட்புடன்  இருந்திருந்தால்  இந்த நிலை வந்திருக்குமா?                  

அடுத்த கருத்து: நாம்  பிடித்ததை  விடவேண்டும், என்பது.

நாம் பிடித்ததை விட்டுவிட்டால், நம்மைப்  பிடித்த தீங்குகள் விலகிவிடும் என்பது  எல்லா மதங்கம்  காட்டிய வழி.

மதங்கள் புகட்டிய சில வழிகள்,   இன்று உருமாறி உள்ளன.

உதாரணமாக, காசி ராமேஸ்வரம் போன்ற புண்யத் தலங்களுக்கு செல்லும் போது, நமக்குப் பிடித்தமான ஒன்றை விட்டு விடுவது  என்ற சம்பிரதாயம் உண்டு. இந்த விட்டுவிடுதல் இல்லாமல் ஆன்மீக பயணம் முற்றுப் பெறாது என்பார்கள்.

மேலும், விரிவாக சொன்னால்,  நாம் மிகவும் விரும்பிய ஒரு காய், ஓரு கனி என்று விடவேண்டிய ஐட்டங்களை  அடுக்குவார்கள்.

மனைவியினால்   துன்புற்ற   ஒருவர்,   எனக்கு   மிகவும்   பிரியானது என்   மனைவிதான்.   அதனால்  அவளை அப்படிப்பட்ட ஒரு புண்ணிய  பூமியில் விட்டுவிட  இருப்பதாக கூறுவதும் உண்டு.  இதுவும் செல்லுபடியாகாது!

இதையா, முன்னோர்கள் சொன்னார்கள்? நமக்கு பிடித்தது எதை ? விடவேண்டியது எதை?

நமக்கு பிடித்ததை என்பதைவிட நாம் பிடித்ததை என்று சற்று வித்யாசமாகச் சிந்தித்துப் பாருங்கள். நமக்கு பிடித்த காய் கனிகள் விலை அதிகமானாலோ, அல்லது அது விற்பனையில் இல்லாவிட்டாலோ, தானாக நம்மிடமிருந்து போய்விடும். அதனால் பிரச்சனைகள் இல்லை.

பிரச்சனை தருவது, நாமாக, தேடி அலைந்து, பிடித்து வைத்த சில நம்பிக்கைகள்,  பொருள்கள், மற்றும் நினைவுகள். அவைகள்தான் எத்தனை? அவைகள் நம்முடன் இருப்பதற்கும், அவைகளினால் துன்பம் வருவதற்கும் காரணம், நாம் அதை இறுக்கப் பிடித்து வைத்து இருப்பதே.

நாம் சிறிது பிடியை தளர்த்தினால் போதும். பிடித்தது தானாக ஒடிவிடும். அது ஒடிவிட துன்பமும் தானாகவே விலகிவிடும். நாம் பிடியை தளர்த்தாமல், அய்யய்யோ எனக்கு வேதனை தாள முடியவில்லையே என்று கதறினால் போதுமா ?

ஒருவிதத்தில் அடுத்து வரும் கதையின் குரங்குகளுக்கும் நமக்கும் வித்யாசம் ஏதும் உண்டா?  படியுங்கள்.

License

Icon for the Public Domain license

This work (எல்லா வயதினருக்கும் பயன் தரும் சிறுகதைகள் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book