உட்பூசல், இழப்பைத் தரும்
கருத்து :தேவையற்ற தாழ்வு மனப்பான்மை கதை .
பழைய காக்கைக் கதை:
இந்தக் கதை, மனிதர்கள் கால்நடைகளோடு கால் நடையாக, பல மைல் தூரம் நடந்து சென்ற, அந்தக் காலத்தைச் சேர்ந்தது.
ஒன்றே ஒன்று, இந்தக்காலம், அந்தக்காலம் என்றில்லாமல் எந்தக் காலத்திலும் உண்டு. அதுவே, சாலையோர, அதிவிரைவு உணவகம் – இன்றைய பாஸ்ட் புட் ஜாயிண்ட். அவற்றிலும் மாற்றங்கள் இல்லாமலில்லை.
பெரியதொரு மரத்தடியில், பெரும்பாலும் ஓரு பாட்டி இந்த கடையை நடத்துவார். அவர், உணவு தயாரிப்பிலிருந்து, வினியோகிப்பது, பாத்திரங்களைக் கழுவுவது காசு வசூலிப்பது, காவலாளியாக, முதலாளியாக பல அவதாரங்கள் எடுத்து எல்லா காரியங்களையும் சுறுசுறுப்பாக செய்வார்.
தற்காலத்தில் பாஸ்ட் புட் கடைகளில் காணப் படுவதுபோல கட்டிடம், கம்ப்யூட்டர், ஏசி, டேபிள், நாற்காலி என்று எதுவுமே கிடையாது. வாடிக்கையாளார்கள் உணவை கையில் ஏந்தி உண்பார்கள்.
உண்பவர்கள் எல்லோரும் தரையில் தங்கள் முறைக்காக காத்திருப்பார்கள். காகம், நாய் முதலான மிருகங்கள் தொலைவில் இருந்து, வடையைத் தட்டிச் செல்ல, தக்க தருணத்திற்காகக் காத்திருக்கும். இந்த கையேந்தி உணவகத்தில் தயாரான உணவின் மணம் காற்றில் கலந்து, வெகுதூரம் வரை செல்லும்.
காகம் ஒன்று, பாட்டி களைத்திருந்த நேரத்தைக் கவனித்து வந்தது. மரத்திலிருந்து பறந்து வந்து வடை ஒன்றை கொத்தி எடுக்க, பாட்டி ஒரு நீண்ட குச்சியுடன் காக்கை மீது பாய்ந்தாள். பாட்டியின் அடியிலிருந்து ஒரு மாதிரியாகத் தப்பிய அந்தக் காகம் பத்திரமாகத் தன் மரக்கிளையை வந்தடைந்தது.
வசதியாக அமர்ந்து வடையை தின்று பசியார நினைத்த அந்த வேளையில், மரத்தின் கீழே, நரி ஒன்று, தன்னை நோக்கிப் பார்ப்பதை உணர்ந்தது.
நரி அன்பு வழிய காகத்தைக் கூப்பிட்டது.
காக்கை அண்ணாவே, என்னைத் தெரிகிறதா? நான் தான் உங்கள் பரம ரசிகன், என்றது நரி. இப்பொழுது, காக்கைக்கு வடையை உண்பதா அல்லது நரியுடன் பேசுவதா என்று குழப்பம் சிறிதும் இல்லை. ஆமாம் என்று சைகையாக தலையாட்டியது காகம்.
வாயைத் திறந்துதான் பதில் சொல்லுங்களேன் என்று அன்புடன் கேட்டுக் கொண்டது அந்தப் பொல்லாத நரி. காகத்தை எப்படியாவது பேசவைக்க வேண்டும். அப்படிப் பேசும்போது, கீழே விழும் வடையை எடுத்துச் சென்று தின்ன வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன்.
உங்கள் இனிய குரலில் பாடல் ஒன்றைக் கேட்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன், என்று சொல்லி, மணம் வீசும் வடையை தின்ன, துடித்து நின்றது அந்த பொல்லாத நரி.
காக்கைக்கு மிக்க மகிழ்ச்சி. இவ்வளவு நாளில் நம் குரலைப் பற்றி எவரும் பேசியதும் இல்லை, பாராட்டியதும் இல்லை. இந்த நரிக்குத்தான் நம் குரலின் இனிமை புரிந்திருக்கிறது என்றெல்லாம் எண்ணி மகிழ்ந்தது.
நரி, என்ன காக்கையாரே, ஏதோ சிந்தனையில் மூழ்கிவிட்டீரே. பாட விருப்பம் இல்லையா, என்று நரி கேட்க, பதில் சொல்ல வாயைத் திறந்ததுதான் தாமதம். வாயிலிருந்த வடை தரையில் விழுந்தது. வடையை கௌவிய நரி வேகமாக ஓடி மறைந்தது.
காக்கைக்கு பல வருடங்களாகியும் தனது பாட்டை கேட்காமல் நரி ஏன் ஓடியது என்பது புரியாத புதிராகவே இருந்தது. இது காகத்தின் பழைய கதை.
இப்போது காக்கைக் கதையின் புதிய வடிவம்:
காலங்கள் உருண்டோடின. கிராமங்கள் நகரங்களாகின. குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் மறைந்தன. பலவகை மோட்டார் வாகனகங்கள் வந்தன. பாதையோரக் கடைகள், கடையில் சுட்ட வடைகள், மற்றும் காக்கைகள் எல்லாமே இன்றும் உண்டு.
கடைகள் மாறின, பாட்டிகள் நடத்தி வந்த நடைபாதைக் கடைகள் சிறிது சிறிதாக மறைந்தன. குக்கிராமங்களிலும் பாதையோரம் பல சின்ன சின்ன ஓட்டல்கள் தோன்றிவிட்டன.
காக்கைகளுக்கு, ஓட்டல்களிலிந்து வடையைத் திருடி உண்பது இப்போதெல்லாம், வழக்கமாகியது.
அன்று கிடைத்த வடையை நிம்மதியாக தின்று மகிழலாம் என்று நினைத்திருந்த வேளையில், மரத்தின் கீழிருந்து ஒரு குரல். அதுதான் நரியாரின் நயவஞ்சகக் குரல்.
அழகான காக்கையாரே! என்னை நினைவிருக்கிறதா?
தயங்காமல், தன் தலையை ஆட்டியது காகம்.
உங்கள் இனிய குரலில் ஒரு பாட்டு பாடுவீர்களா என்று அடுத்த கேள்வியைத் தொடுத்தது, நரி.
காக்கை, அங்குமிங்கும் பார்த்தது. பிறகு, அருகே கண்ட சிறியதொரு மரக் கிளையில் தன் வாயிலிருந்த வடையை மாட்டியது. பின், கீழே குனிந்து, நரியாரே, உங்களுக்கு என்ன பாட்டு கேட்க விருப்பம் என்று கேட்க, மெதுவாக அங்கிருந்து நகரத் தொடங்கியது நரி.
நரியாரே, நான் நீங்கள் விரும்பிக் கேட்ட எந்த ஒரு பாடலையும் பாடுகிறேன், கேட்டுவிட்டுப் போகலாம் வாருங்கள் என்று காகம் அழைக்க, தலை தெரிக்க ஓடியது நரி.
காகத்தின் குஞ்சு ஒன்று நடப்பது புரியாமல் விழிக்க, பெரிய காக்கை கீழே கண்டவாறு விளக்கியது.
நமது மூதாதையர், தற்கால மனிதர்களைப் போல, தாழ்வு மனப்பான்மைக்கு அடிமையாகி, உடைமைகள், உரிமைகள், உற்றார்-உறவினர் என்று இழந்த கதைகளை நான் கேட்டிருக்கிறேன். மனிதர்களில் மட்டும் இல்லை, எந்த உயிரினங்களிலும் ஏற்ற தாழ்வுகள் இல்லை என்பதை யாருமே உணரவில்லை.
எவருமே, எல்லா இடங்களிலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் உயர்ந்தோ தாழ்ந்தோ இருப்பதில்லை.
எல்லோருமே, ஏதோ ஓரு சமயம் – ஏதோ ஓரு இடத்தில் உயர்ந்திருப்பதுண்டு. அதைப் போலவே எல்லோரும் பல இடங்களில் பல சமயங்களில் தாழ்ந்திருப்பதும் இயற்கையே. அதனால் எவறுமே தன்னையும், மற்றவரையும் தாழ்த்தியோ, உயர்த்தியோ மதிப்பிடுவது அறியாமையாகும். இந்த அடிப் படை அறிவு கொண்டவர்கள் என்றுமே அடிமையாக வாழமாட்டார்கள்.
நம் மனதில் எளிதாக தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி நம்மை அடிமைபடுத்தும் தீய மனிதர்களுக்கு, நம்மிடையே குறைவே இல்லை. அப்படிப்பட்ட தாழ்வு மனப்பான்மை கொண்டவரை இனம் கண்டு, அவர்களை அடிமையாகச் செய்வது, அவர்களைச் சுரண்டுவது தீய மனிதர்களின் தினசரித் தொழில்.
அதில், பெருஞ்செல்வம் ஈட்டும், பல தொழில் அதிபர்களும் அடக்கம். பாஷன் உடைகள், அலங்காரப் பொருள்கள், அழகு சாதனங்கள், போன்ற அவசியம் இல்லாத பொருள்களை உருவாக்கி விற்பனை செய்வது தாழ்வு மனப்பான்மை கொண்டவரை மொட்டையடிக்கும் தந்திரங்களே?
கருப்புத் தோலை வெள்ளையாக மாற்றும் கிரீம் விற்பனையை எடுத்துக் கொள்ளுங்கள். அதை வாங்கி ஏமாறும் மக்கள் யார்? தன் தோல் நிரத்தால் தாழ்வு மனப்பான்மை கொண்டவராகத் தானே இருக்க வேண்டும்?
அது போதாதென்று, பிறர் உதவி இல்லாமல் தங்களுக்கு தாமே தாழ்ந்த மனப்பான்மையை உருவாக்கிக் கொள்ளும் மாங்காய் மடையர்களுக்கும் என்றும் குறைவில்லை.
மனிதர்கள் மட்டுமல்ல. முன்னொரு காலத்தில் காக்கைகளும் இந்தத் தாழ்வு மனப்பான்மைக்கு அடிமையாயிருந்தன.
இப்போது காக்கைகளுக்கு அறிவு வந்துவிட்டது.
பொதுவாக. அறிவுபடைத்த எவரையும் வெற்றி கொள்வது சுலபம் இல்லை, என்பதை நரியார் அன்று வரை அறியவில்லை.
நமது முன்னோரின் வாழ்விலிருந்து நாம் கற்க வேண்டிய பல பாடங்களை, நாம் சரியான வயதில் தெரிந்து கொண்டால், தோல்விகளும் குறையும். அதோடு மற்றவர்கள் நம்மை ஏமாற்றுவதிலிருந்து, நாம் காப்பாற்றிக் கொள்ளலாம். நம்மை விடாது தொடரும் பல துயரங்களிலிருந்தும் விடுபடலாம்.
எங்கள் முன்னோர், தான் கருப்பாக இருப்பது, இனிய குரல் இல்லாதது, என்ற சில என்ற காரணங்களால் மிகுந்த தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்தனர்.
ஆனால் அந்த நாளில் காகங்கள் உணராதது – மற்ற பறவைகளை விட பல சிறப்புகள் தங்களுக்கு உண்டு என்ற உண்மையை.
விரோதிகள் எதுவுமே இல்லாத பறவை காகம்.
மனிதர்களால், முன்னோர்களின் பிரதிநிதியாகக் கருதப்படும் ஒரே ஒரு பறவை இனம் காகங்கள் தான்.
தனது முன்னோர்களின் நினைவு நாளில் காகங்களுக்கு மாத்திரமே சிறப்பான விருந்துகள் தரப்படுகின்றன.
காகம் தன் விளக்கத்தைத் தொடர்ந்தது.
சில புனித நாட்களில் தங்களுக்கு உணவு படைக்கப் படுவதும், பல இல்லங்களில், நாங்கள் உண்ட பின்னரே மனிதர்கள் உண்பதும் எங்கள் முன்னோர்கள் அறியாததா?
எனவே எங்களுக்கு இவ்வளவு சிறப்பு உள்ளபோது, இல்லாத சிலவற்றிற்காக எதற்காக தாழ்ந்த மனப்பான்மையுடன் வாழவேண்டும்? என்று முடித்தது பெரிய காகம்.
தன்னை தாழ்வாக நினைப்பவர்கள் எல்லோருமே பிறரின் புகழ்ச்சியை எதிர்பார்ப்பார்கள். பிறரால் புகழப்பட்டவர்கள் அடிமைப்படுத்தப்படுவார்கள். இந்தக் கால கட்டத்தில் காகங்கள், உண்மையை உணர்ந்த காரணத்தினால் புகழ்ச்சிக்கு மயங்குவதில்லை.
அதனால் இப்பொழுதெல்லாம், காகங்கள் பிற உயிர்களால், ஏமாற்றப்படுவதும் இல்லை. மாறாக, யாராவது நம்மைப் புகழ்ந்து பேசினால் எச்சரிக்கையாகிறோம். அதனால் எதிரிகளின் சூழ்ச்சி வலைகளில் சிக்குவதில்லை.
நரிகள் தந்திரமானவை அல்லது கெட்ட எண்ணம் கொண்டவை என்று நரிகளைக் குற்றம் சொல்லாமல், நாங்கள் அறிவில்லாமல் இருந்தோம் ஆகவே ஏமாந்தோம் என்ற உண்மையை ஒப்புக் கொண்டோம். விரைவில் மாறிவிட முடிவு செய்தோம். மாறிவிட்டோம்.
நாங்கள் மாறிவிட்டோம், ஆனால் மனிதர்கள்தான் மாறவே இல்லை, என்று முடித்தது பெரிய காகம்.
வாசகர்களே யாராவது உங்களைப் புகழ்ந்து பேசும் போது, உங்கள் மனம் மகிழ்கிறதா? உங்களைப்பற்றி, உங்களுக்குள்ள பெரிய மனது குறித்துப் புகழ்வதும், செய்த உதவிக்கு பதில் உதவி எதிர்பாராதவர், என்றெல்லாம் யாராவது நாலு நல்ல வார்த்தை பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
இல்லையென்றால் சிலர் உங்களைக் குறித்துப் பெருமையாக பேசுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? அவைகள் உங்களுக்கு மகிழ்ச்சி தருகிறதா?
எச்சரிக்கை! நீங்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவர் என்பதை உணருங்கள். பொய்யாகப் புகழ்ந்தே உங்களை மொட்டையடிக்க நரி போன்ற சிலர் உங்களை சுற்றி பலர் வட்டமிடுவதை உணருங்கள்.
அடுத்தது, குரங்கு ஒன்று வில்லனான கதை.
கருத்து: உட்பூசல், தீய எண்ணங்கள் இழப்பைத் தரும்.