"

 கதை 19

story 19 mds 2உங்களைச் சுற்றி இப்படியும் மனிதர்கள் இருக்கக்கூடும்.

ஓரு ஆசிரியர், தன் மாணவர்களுக்கு, மூட நம்பிக்கைகளைக் களைந்து வாழவேண்டியதன் அவசியத்தை வலியுருத்தி ஓரு கதையைக் கூறினார்.

மனிதனின் அமைதிக்கு சில கடும் எதிரிகள் உண்டு. அதில் முக்கியமான ஒன்று மூடநம்பிக்கைகள். தினசரி வாழ்க்கையில் நமது செயல்களில் பெரும்பாலும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்தே. பல நம்பிக்கைகளுக்கு ஆதாரம் இல்லைதான். ஆனால் கடவுளை, ஆசிரியரை, பெற்றோரை நம்புவது மூடநம்பிக்கையாகாது.  தீவிரமாக சிந்தித்தால் நம்பிக்கைகளில், ஏதோ ஓரு அடிப்படை பொதிந்திருப்பதை உணரமுடியும். அடிப்படை  காணமுடியாததை அறிவால்  உணருவதற்கு

முயற்சி செய்ய வேண்டும்.

இந்த கதையின் நாயகன் மூடநம்பிகைகளில்  மூழ்கியவர். அவர் வீட்டு கொல்லைப் புரத்தில் மிகப் பெரிய ஒரு மரம் ஒன்று இருந்தது. அப்பொழுது, வெய்யில் காலம். சரியாக பராமரிக்கப்படவில்லையோ? பயிர்களை அழிக்கும் நுண்-உயிரினங்களின் வேலையோ ? மரத்தின்   எல்லா   இலைகளும் உதிர்ந்திருந்தது.

அடுத்த வீட்டில் வசிக்கும் மனிதர், வீட்டின் நாயகனை அணுகி, ஒரு வீட்டில் வாடிய மரம் இருக்கலாகாது. அப்படி இருந்தால், வீட்டில் வசிப்பவர்காளுக்கு ஏதேனும் கெட்ட நிகழ்வுகள் வந்த வண்ணம் இருக்கும் என்றும். அதை வெட்டி எறிவதே உசிதம் என்றும் தமது அனுபவ அறிவை விலா வாரியாக விளக்கினார். 

தானே அதற்கான மனிதர்களை ஏற்பாடு செய்து தருவதாகவும், அதற்குத் தேவையான செலவை மாத்திரம் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினார்.

சாதாரணமாக பிரச்சினைகள் என்று ஒன்று இல்லாமல் இருக்க மனிதன் ஒரு ஞானியாக இருக்க வேண்டும் அல்லது எதுவும் உணராத மன நோயாளியாக  இருக்கவும் வாய்ப்புண்டு.

அங்கும் இங்கும் இல்லாத, இரண்டுக்கும் இடைப்பட்ட மனிதர்கள்தான்  நாம் அனைவரும்.   நமது குரங்கு குணத்தில் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத இரு நிகழ்ச்சிகளுக்கு முடிச்சுகள் போடுவது. பின்னர் அதைக் கண்டு பயப்படுவது, அழுவது, அல்லது மகிழ்வது.

கதாநாயகன், தனது பிரச்சனைகளையும் அடுத்த வீட்டு மனிதனின் அறிவுறைகளையும் முடிச்சிட்டார். சரியாகத் தோன்றியது. பட்டுப்போன மரத்தை தட்டிவிட முடிவு செய்தார். தனது துயரங்களிலிருந்து விடுபடும் நேரம் வந்ததென்று மகிழ்ந்தார்.

விறகு வெட்டியின் கூலியையும் தானே ஏற்றார்.

அடுத்த நாள், அடுத்த வீட்டு அன்பர், மரம் வெட்டும் தொழிலாளிகளுடன் வந்து, தானே முன்னின்று, மரத்தை வெட்டினார்.

அதே   மனிதர்களின் உழைப்பில்   வெட்டிய  மரத்தை சிறு துண்டுகளாக   மாற்றினார்.  எல்லாவற்றையும்    தனது    வீட்டுக்கு எடுத்துச்  சென்றார்.   அடுத்த    இரண்டு  மாதங்களுக்கு   அவசியமான விறகு   கிடைத்த    மகிழ்ச்சியில்     திளைத்தார்.     மனிதரின்  மனைவியோ,   தனது    அடுத்த     வீட்டுக்காரரை    ஏமாற்றி விறகு சேர்த்த தன் கணவனின் புத்தி கூர்மையைப் பாராட்டினாள்.

முதல் வீட்டின் சொந்தக்காரருக்கு தான் ஏமாந்தோம் என்று உணர பல நாட்களும், சில நண்பர்களும் தேவைப்பட்டது. வெட்டிய மரத்தின் அருகே புதியதாக மரம் ஒன்றிற்கான விதை ஒன்றை நட்டார். வருடங்கள் ஓடின.

இந்த கதையின் புதிய உருவம்.

சுமார் நாற்பது வருடங்கள் கடந்தன. காலம் முதியவர்களைத் தன்னோடு கொண்டு சென்றது. இரு வீடுகளிலும் அவரவர் மகன்கள் தங்கள் குழந்தை குட்டிகள் பேரப்பிள்ளைகள் ஆகியோருடன்  வாழ்கிறார்கள்.

தனது தந்தை தனது காலத்தில் விதை நட்டு நீர் ஊற்றி வளர்த்த  மரம் இன்று வளர்ந்து, காய்த்து, ஒய்ந்து போனது. மரம் தன் இலைகளை எல்லாம் இழந்து நின்றது.

அடுத்தவீட்டில் வசித்தவரின் தந்தை, (ஏமாற்றிப் பிழைப்பவர்) தன் மகனுக்கு, தான் பக்கத்து வீட்டு மனிதரை, பல வருடங்களுக்கு முன்னால்  ஏமாற்றிய கதையை விவரமாகச் சொல்லி இருந்திருக்க வேண்டும்.

சரித்திரம் திரும்பிவரும் என்பார்களே.

தனது தந்தை செய்தது போலவே தானும் (40 வருடம் கழித்து) அடுத்த வீட்டு மனிதரை அணுகினான்.

தன் தந்தையைப்போலவே தானும் அடுத்த வீட்டு மனிதரிடம் நயமாக பேசலானார்.

பட்டுப்போன மரம் வீட்டின் முன்புறம் இருந்தால் அதனால் குடும்பத்தில் பல குழப்பங்கள் வரவழைக்கும் என்று பரவலான நம்பிக்கைகள் இருப்பதால், அவர்கள் வீட்டில் இருந்த பட்டுப்போன மரத்தை வெட்டுமாறு யோசனை கூறினார்.

போதாததற்கு, இது போன்ற  பட்டுப்போன மரத்தால் தான் அறிந்த பல நண்பர்களுக்கும், உறவினருக்கும் விளைந்த கேடுகளை விவரமாக எடுத்துக் கூறினார்..

அதோடு நிறுத்தவில்லை, அடுத்து வசிக்கும் தனக்கும் இதனால் கேடுவரும் வாய்ப்பையும் தெரிவித்தார்.

இந்த யோசனையைக்  கேட்டவருக்கு தலையில் மின்னல் போல ஓரு    நிகழ்ச்சி    நினைவுக்கு     வந்தது.  தனது தந்தை,   தன் வாழ்வில் ஏமாந்த சம்பவங்களின்  கோர்வையில்  எங்கோ ஒளிந்திருக்கும் சம்பவம் ஒன்றின் தொடர்பை உணர்த்தியது.    அதனால் மரத்தின் சொந்தக்காரர்    இந்தக் கதையெல்லாம் கேட்டு, அசைவதாகத் தெரியவில்லை.

அதனால்,    சமயோசிதமாக,  தன்னிடம் போதிய பணம் இல்லை என்று பதிலளித்தார். கேட்டவருக்கு சற்று ஏமாற்றம்தான். இருந்தபோதும் வேகமாக ஒரு கணக்கிட்டார். (மரம் வெட்டும் கூலி,  கிடைக்கும்   விறகில்    மிக    சிறிய    பாகம் தான்.    பரவாயில்லை என  தன்னைத் தானே  மனச்சமாதானம்   செய்து கொண்டார்).    அந்த   வெட்டும் செலவைத் தானே  ஏற்க முடிவு செய்தார்.

பின்னர்    தொடர்ந்தார்.  அடுத்த வீட்டு  நண்பரே,   மரம்   வெட்டும் செலவை    நான்     மகிழ்ச்சியுடன்   ஏற்கிறன்   என்றார். பல ஆண்டுகளாக நகமும் சதையுமாய் வாழ்ந்த நட்பான ஒரு குடும்பத்தைக் காக்க நான் செய்யும் செலவு ஒன்றும் பெரிதல்ல என்றெல்லாம் கூறினார்.

அடுத்த நாள், மரம் வெட்டும் தொழிலாளிகளை அழைத்து வந்து மரத்தை வீழ்த்தினார். வீழ்த்திய மரம் சிறு துண்டுகளாக வெட்டப்படும் வரை காத்திருந்தார்.

வெட்டும் வேலை முடிந்தது. தொழிலாளிகள் தங்கள் வீடுகளுக்குச் செல்லத் தயாரானார்கள்.  மரத்தின் சொந்தக்காரர், அடுத்த வீட்டுக்காரரிடம், தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார். தொழிலாளர்களிடம் வெட்டிய விறகுகளை தனது வீட்டில், பின் கட்டில் அடுக்குமாறு கூறினார்.

திடுக்கிட்டார், அடுத்த வீட்டுக்காரர்.

இவ்வளவு   நல்ல எண்ணம்    கொண்ட   உங்களை    இந்த பட்டுப்போன மரம் எங்கள் வீட்டில் தொல்லை செய்யவிருந்த மரத்தின் துண்டுகள் உங்கள் வீட்டிற்கு  வந்து தொல்லை செய்வானேன்? நானே இந்த மரம் முழுவதையும் என் வீட்டிலேயே, நானே சுட்டு எரிக்கிறேன், என்று முடித்தார் மரத்தின் சொந்தக்காரர்.

வேறு ஏதேதோ காரணங்களைக் கதைத்து, விறகுகளை தன் வீட்டிற்கு  எடுத்துச்செல்ல முயன்றார் அடுத்தவீட்டு மனிதர். அதனை உறுதி செய்ய செய்த வாதங்களையும், மென்மையாகவும் சாதுரியமாகவும் பேசி, அவரை அருமையாக வென்றார்.

அடுத்த வீட்டு பெரிய மனிதர், தனது சந்ததிகளுடன் தன் ஏமாற்றத்தை பகிர்ந்து கொண்டால், அவர்கள், பிறரை ஏமாற்ற முயன்று, தோற்று, அதனால் வரும் ஏமாற்றங்களிலிருந்து தப்புவதற்கு வாய்ப்பிருக்கும்.

License

Icon for the Public Domain license

This work (எல்லா வயதினருக்கும் பயன் தரும் சிறுகதைகள் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book