கதை 23
இன்று மன்னரின் நீதி மன்னறத்தில், தண்டனை வழங்கும் நாள். அரச சபையில் அன்று விசாரணை முடிந்த குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்படும் நாள் இதை வேடிக்கை பார்க்க. ஊர்மக்கள் திரளாக வந்திருந்தார்கள்.
முக்கியமாக, ராசாவுக்கு (அவர்கள் வீட்டில், அவனை அப்படித்தான் கூப்பிடுவார்கள்) என்ன தண்டனை என்று அறிய பல மக்களுக்கு ஆர்வம்.
ராசா, இந்த பகுதியில், ரௌடி ராசா. என்ற பெயர் எடுத்திருந்தான். இன்றைய சமுதாயத்திலும் ரௌடிகளுக்கு ஏக டிமாண்ட். அவர்களைப் போலீஸ் தொடமுடியாது. அரசியல் பெரும் புள்ளிகளின் ஆதரவு பலமானது. தண்டனை தரும் சட்டத்தைப் பலவீனப்படுத்த சிறந்த வழக்கறிஞர்கள் அவர்களிடம் உண்டு.
சிறுவயதில் மற்ற சிறுவர்களின் தின்பண்டங்களைத் திருடுவது என்று தொடங்கினான். அப்போது, அவன் பெயர் திருட்டு ராசா. அவன் தந்தை அரண்மனையில் தலைமைக் காவலாளியாக இருந்தார். தன் ஒரே மகன் தவறு செய்து தண்டனை அடையும் தருவாயில் தனது அதிகாரத்தை மற்றும் அரசரின் அருகாமையையும் பயன் படுத்தி, அவனைத் தப்பிக்க வைத்தார்.
ராசா வளர அவன் செய்யும் குற்றங்களும் வளர்ந்தன. இப்போது தந்தையின் உதவி இல்லாமலேயே தண்டனைகளிலிருந்து தப்பிக்க வழிகளை அறிந்திருந்தான். கொடிய குற்றங்களையும் சாதாரணமாக செய்யும் அளவு வளர்ந்திருந்தான்.
கடைசியாக அரசன் வரை ராசாவின் திருவிளையாடல்கள் எட்டியது. சிறுவதிலிருந்து இன்றுவரை செய்த குற்றங்கள் அனைத்திற்கும் சேர்த்துப் பெரிய தண்டனை ஒன்று கிடைக்கலாம். இது மக்களின் ஏதிர்பார்ப்பு.
அரச சபை திடீரென்று சுறுசுறுப்பாகியது. மந்திரிகள், உயர் அதிகாரிகள் ஆகியோர் தங்கள் ஆசனத்தை அடைந்தனர், அரசர் கடைசியாக வந்து சேர்ந்தார்.
குற்றவாளிகள் சபையின் ஒரு மூலையில் கையில் சங்கிலியால் பிணைக்கபட்டு அமர்த்தப் பட்டிருந்தனர்.
குற்றவாளிகளின் பெயர் ஒவ்வொன்றாக படிக்கப்பட்டது. அவர்கள் செய்த குற்றங்கள், பட்டியலிடப்பட்டு, தண்டனைகள் தெரிவிக்கப் பட்டன.
ராசா, மற்ற குற்றவாளிகளைப் போல, அரசவையின் மத்தியில் கொண்டு வரப்பட்டான். அவன் செய்த கொலைகள், கொள்ளைகள் பல, பட்டியலாகச் சொல்லப்பட்டு, கடைசியாக மரண தண்டனையும் தரப்பட்டது.
ராசா, எந்த விதமான உணர்ச்சியும் காட்டவில்லை. வரும் நாளில், பொதுமக்கள் அனைவரும் பார்வையிட, ஒரு பெரிய மைதானத்தில் அவன் தலை துண்டிக்கப்படும். மக்கள் அதற்குப் பிறகு, யாருமே ராசாவைக் கண்டு பயப்படமாட்டார்கள்.
மரண தண்டனை கைதிகளுக்கு காலம் காலமாக கடைசி விருப்பம் அல்லது வேண்டுகோள் என்று ஒன்று உண்டு, அதுவும் நியாயமாக இருந்தால் மட்டுமே, அனுமதிக்கப்பட்டது.
மந்திரி, இதை அறிவித்தார்.
தன் தந்தையிடம் கடைசியாக சில வார்த்தைகள் பேச வேண்டும் என்று ராசா, தன் விருப்பத்தை தெரிவித்தான்.
மந்திரி, தயக்கம் இல்லாமல், அனுமதி தந்தார்.
ராசாவின் கை கட்டப்பட்ட நிலையில், தந்தையுடன் பேச அனுமதி அளிக்கப்பட்டது. தந்தை அருகில் வந்தவுடன், யாரும் எதிர்பாராத வகையில், ராசா, தந்தையின் காது ஓன்றை கடித்துத் துப்பினான். ரத்தம் காதிலிருந்து வழிய தந்தை கதறினார். அரச சபையில் கூடியிருந்திவர்களுக்கு ஒரே அதிர்ச்சி.
ராசா சபையோரை பார்த்து, தனது இந்தக் செயலை நியாயப் படுத்தினான். நான் சிறுவனாக இருந்தபோது செய்த குற்றங்களுக்கு, என் தந்தை உரிய தண்டனைகளைக் கிடைக்காமல் செய்ததார். அதனால் ஆரம்பத்தில் திருடனாகவும், பிறகு கொள்ளையனாகவும் மாறி, பின் கொலைகளைக்கூட தைரியமாக செய்யும் அளவுக்கு வளர்ந்தேன். இன்று நான் மரண தண்டனையை அனுபவிக்க இருக்கிறேன்.
எனது தந்தை அவருடைய அதிகாரத்தை, தனது தொடர்புகளை, தவறாக உபயோகித்தது, என்னை சரியான சமயத்தில் திருத்தாமல், தண்டனை கிடைக்காமல் செய்தார். அதுவே என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
நல்ல வழியில் வாழ, என் தந்தை எனக்கு புத்தி புகட்டியதோ, இல்லை, தவறுகளைக் கண்டித்ததோ இல்லை
நான் இதுவரை செய்த குற்றங்களுக்கு என் தந்தைதான் பொருப்பு. ஆனால், அவருடைய குற்றத்திற்கு தண்டனை கொடுக்க சட்டங்களில் இடமில்லை. இதுவே பின் வரும் நாட்களில், மற்ற பெற்றோருக்கு ஓரு பாடாமாக அமைய, ஒரு தண்டனை அவருக்கு தேவை. அந்த தண்டனையை நான் தந்தைக்கு அளித்தேன்.
பிற்காலத்தில் பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்க இது உதவும்.
பின் குறிப்பு – இந்தக் கதை, மிகப் பழைய கதை ஒன்றின் தழுவல். ஆனால் இதில் காணும் கருத்து எந்தக் காலத்திற்கும் பொருந்தும்.
சமூகத்தின் மேல் தட்டில் வசிக்கும் பலர், அதிகாரிகள், தலைவர்கள், பெரும் செல்வந்தர்கள், தொழிலதிபர்கள் உள்பட, பலருக்கு தன் சந்ததிகளை நேர் வழியில் வாழ, தவறு செய்யாமல் தடுக்க எந்த ஒரு முயற்சியும் கொள்வதில்லை. மாறாக அவர்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனைகளிலிருந்து காப்பாற்றுவது நாம் தினம் தினம் செய்திச் சானல்களில் காண்பதே.
மாற்றப்படாத சட்டங்களும், மிக குறைவான தண்டனைகள், லஞ்சத்தில் இயங்கும் அரசு இயந்திரம், பணத்தை வீசி எறிந்தால் சிறைகளில் கிடைக்கும் 5 நட்சத்திர வசதிகள். பரோலில் விடுபட்டு திரும்பாத எத்தனையோ குற்றவாளிகள், பண பலம், அடியாட்கள் வைத்து சாட்சிகளைக் கலைக்கும் வக்கீல்களும் அதற்குத் துணைபோகும் அரசு வக்கீல்கள் என்று குற்றவாளிகளுக்கு உதவி செய்ய எத்தனை வழிகள்?
இவைகள் அனைத்துமே பெரிய இடத்துப் பிள்ளைகள் தவறு செய்ய வசதியாகவே இருக்கின்றன.
இதே தவறுகள் இன்றும் தொடர்கின்றன. இனியும் தொட.ரும். சமூக விழிப்புணர்ச்சி இன்றுவரை ஏற்படவில்லை. மக்கள் சிலர், சட்டம் ஒழுங்கு காப்பவர்களிலும், நீதிமன்றங்களிலும் நம்பிக்கை இழந்து நேரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது அங்கொன்றும் இங்கொன்றும் காணப்படுகிறது.
இது நல்ல மக்களாட்சியில் நிகழக்கூடாது.