கதை 9
கடவுளும் – மனிதனும்.
அது ஒரு மழைக் காலம். சிறு மழைகள் சில சமையங்களில், ஒன்று சேர்ந்து வெள்ளப் பெருக்காக மாறி பல உயிர்களையும் பலருடைய உடமைகளையும் கவரும் காலம் இது.
அரசாங்க இயந்திரங்கள், வெள்ளத்தில் சிக்கிய உயிர்களை காக்க பல இடங்களில் தயார் நிலையில் உள்ளன.
ஓரு கிராமம். அங்கே ஒரு தீவிர பக்தர் வாழ்ந்து வந்தார்.. இறைவன் மீது அவர் கொண்டுள்ள நம்பிக்கை அளவில்லாதது.
திடீரென்று ஓரு கிராமத்தின் அருகே, மற்ற பருவத்தில் நீரில்லாமல் வற்றிக்கிடந்த ஆறு ஒன்று, பெருக்கெடுத்தது. வெள்ளமாக ஊருக்குள் நுழைந்தது. படிப்படியாக ஓவ்வொரு வீட்டுக்குள்ளும் விரைந்து சென்றது. இதனால் அந்த கிராமத்திலுள்ள வீடுகள் மனிதர்கள், பிராணிகள், என்று ஒன்று ஒன்றாக அனைவருமே துன்புற்றார்கள்.
அரசாங்க இயந்திரம் தனது முழுத் திறமையில் இயங்கியது. பல வாகனங்கள், இயன்றவரை, மக்களை மட்டுமின்றி அவர்களின் ஆடு, மாடு கோழி மற்றும் முக்கிய உடமைகளையும் பத்திரமான இடத்திற்குக் கொண்டு சென்றன. அப்போது தன் வீட்டிலிருந்து அசையாமல் நின்றிருந்த பக்தரை, அதிகாரிகள் அணுகினார்கள்.
பக்தரோ, அவர்களின் உதவியை ஏற்க பக்தர் மறுத்துவிட்டார்.
வெள்ளம் அதிகரித்தது. உதவிக்குக் காத்திருந்த மக்கள் மரக்கிளைகளிலும் வீட்டுக் கூரைகளிலும் அந்த கிராமத்திலுள்ள மேட்டுப் பகுதியிலும் தஞ்சம் புகுந்தனர். நேரம் செல்லச் செல்ல வெள்ளத்தின் தீவிரம் அதிகரித்தது.
வாகனங்கள் நகரமுடியாத அளவு தண்ணீர் மட்டம் உயரவே ராணுவத்தைச் சேந்த சிப்பாய்களும் அதிகாரிகளும் தனது படகுகளுடனும், மிதவைகளுடன் வந்து மீதமிருந்த மக்களைக் காப்பாற்றி வந்தனர்.
அவர்களும், நமது பக்தரை, மிதவையில் ஏறிக்கொள்ள அழைப்பு விடுத்தர்கள். அந்த அழைப்பையும் பக்தர் மறுத்து விட்டார்.
வெள்ளம் கட்டுகடங்காமல் போக, எஞ்சிய சில கிராமத்து மக்கள் மரத்தின் கிளைகளில் வீடுகளின் கூரைகளில் ஏறி நின்றார்கள். அதில் அந்த தீவிர பக்தரும் ஒருவர். அவர்களை காப்பாற்ற இராணுவம், ஒரு சில ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்க, அதில் வந்த அதிகாரிகள் விடுத்த அழைப்பையும், பக்தர் மறுத்தார்.
இருள் சூழ்ந்தது. ஆற்று வெள்ளத்துடன் மழையும் சேர்ந்து கொண்டது. அனைத்து கிராம மக்களும், தங்கள் ஆடுமாடுகளுடன் பாதுகாப்பான இடங்களில் சேர்ந்தார்கள். பக்தர் மட்டும் வெள்ளத்தில் நடுவில் இருந்தார்.
பக்தருக்கு, நேரம் செல்லச் செல்ல, குளிருடன் காய்ச்சலும் கூடியது. மழையில் நனைந்த பக்தர் மாத்திரம் மரத்தில் எஞ்சியிருந்தார்.
அவர், தன்னைக் காப்பாற்ற இறைவனை வேண்டியிருந்தார். இறைவன் இன்னும் வந்து சேரவில்லை. காய்ச்சல், குளிர் இவைகள் போதாதென்று இப்போது கோபமும் உடன் சேர்ந்தது. எங்கும் நிறைந்த இறைவன், தன் பக்தர்களை காப்பாற்றாமல், அவர்களைத் தவிக்கவிட்ட கல்நெஞ்சம் கொண்ட இறைவன் என்று சுடு சொற்களால் ஏசினார்.
பக்தனின் கோபத்திற்கு ஒரு, அசரீரி (உடலற்ற ஒரு உயிர் என்னும் பொருள் கொண்டது) பதில் கூறியது. வானத்திலிருந்து. இறைவன் எழுப்பிய ஒலியோ?)
அது கூறியது –
அற்ப மனிதா. நான் உன்னை மட்டுமல்ல, என் பக்தர்கள் அனைவரையும் காப்பாற்ற ஓருமுறை அல்ல, மூன்று முறை வந்தேன். முதல் முறை வாகனங்களுடனும், இரண்டாம் முறை படகுகளுடனும், கடைசியாக, ஹெலிகாப்டருடனும் வந்தேன். பக்தர்கள் மற்றும் பக்தர் அல்லாதவர் உள்பட அனைவரும். என் உதவியை ஏற்றனர். நன்றியும் தெரிவித்தனர்.
நீ மட்டுமே, என்னை. அடையாளம் கண்டு கொள்ளவில்லை. நான் நீட்டிய உதவிக்கரங்களை, ஒதுக்கினாய். போதாத குறைக்கு இப்போது என்னை ஏசுகிறாய், என்றார் இறைவன்.
வாசக நண்பர்களே ! கடவுள், நாம் காலண்டர் படங்களில், சினிமாவில் காண்பது போல கருடன், காளை முதலான வாகனங்களுடன் வரவதற்க்காகவே பக்தர் காத்திருந்தார் போலும் !
இது நடைமுறைக்கு உதவாது.
இறைவன், தண்டனையோ, உதவியோ, மனிதர்கள், மற்றும் அவர் படைத்த உயிர்கள் மூலமாகத்தான் நடை படுத்துவார் என்று உணரவேண்டும். பக்தர் உணர்ந்தாரோ – இல்லையோ, அது நமக்கு தெரியாது. வாசகர்களே, நீங்கள் உணர்ந்தீர்களா?