கதை 15
கருத்து:
நட்பு என்னும் மாயை.
மிகப் பழைய காலம். மக்கள் கால் நடையாக பயணங்கள் செய்தார்கள் அப்போது. காடுகள் தான் அதிகம். அதனால் பயணத்தில் காடுகளும் காட்டு விலங்குகளும் மனிதனின் வழியில் குறுக்கிடுவது வழக்கம்.
நல்ல மனிதர் ஒருவர், நல்ல தம்பி என்று பெயர். தனது கிராமத்தை அடைய ஓரு காட்டின் வழியே செல்ல வேண்டும். விலங்குகளால் ஆபத்து வரக்கூடுமென்று வழித்துணைக்குக் காத்திருந்தார்.
காத்திருந்தது வீண் போகவில்லை. அந்தவழியே, தனது கிராமத்தை நோக்கி. பயணமான ஒருவர் இந்த இடத்தை அடைந்தார். அருகே வந்த அந்த நபர் நல்லதம்பியின் நெருங்கிய நண்பர் ஒருவர்தான் என்று தெரிய வந்தது. நல்ல தம்பிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நண்பருடன் பேசியவாரே மிகுந்த நம்பிக்கையுடன் காட்டில் நுழைந்தார்.
பாதி வழியைக் கூட கடக்கவில்லை, எங்கிருந்தோ வந்த ஒரு கரடி இவர்களைக் குறுக்கிட்டது. உயிர் நண்பரோ, கரடியின் சப்தம் கேட்டதும் அருகிலுள்ள மரத்தில் ஏறி அமர்ந்தார். நல்ல தம்பிக்கு மரம் ஏறத்தெரியாது. எனவே தப்பிக்கும் வழி தெரியாமல், கரடியைக் கண்ட மாத்திரத்தில், மூர்ச்சையானார்.
மூர்ச்சையடைந்த நல்லதம்பியின் அருகில் வந்த கரடி, முகத்தருகில் முகர்ந்து பார்த்தது. (கரடிகள் உயிரிழந்த உடலை அண்டுவதில்லை என்பது ஓரு நம்பிக்கை) பிறகு, சிறிது நேரம் சென்று, கரடி காட்டுக்குள் மறைந்தது. அதை எல்லாம் மரத்தின் மீது அமர்ந்து கவனித்து வந்த நண்பன், கீழே இறங்கி வந்து நல்லதம்பியின் அருகே வந்தார். அப்போது நல்லதம்பி நினைவு திரும்பியது. நடந்ததை ஒரு மாதிரியாக ஊகித்திருந்தார்.
நல்ல தம்பியை நண்பர் கேட்டார், கரடி உன் காதருகிலே வந்து ஏதோ பேசியதைப் போல நான் பார்த்தேன். என்ன பேசியது என்று கேட்டார்.
நல்லதம்பி பதில் சொன்னார், ஆபத்து வந்தவுடன் தன்னை மாத்திரம் காப்பாற்றிக் கொள்ள ஒடி மறையும் மனிதர்களை, நண்பர்களாக ஒருபோதும் கருதாதே என்று கரடி சொன்னது, என்று பதில் கூறினார்.