கதை 18
கருத்து: திட்டுவது என்றுமே பயன் தராது
ஒரு காலத்தில், மனிதனின் உடைகளை சுத்தம் செய்யதற்கு என்றே ஓரு தொழிலும், அதே தொழிலை மாத்திரம் பரம்பரையாக பல குடும்பங்கள் தொடர, சலவைத் தொழிலாளர் என்ற தொழில் அடிப்படையில் ஒரு ஜாதியே உருவாகியது.
அன்றும், இன்றும் கழுதை சலவை தொழிலாளியோடு இணைக்கப்பட்டு உள்ளது. இது, வண்ணாரின் அங்கீகரிக்கப்பட்ட வாகனம் எனலாம். பல நூறு ஆண்டுகளாக அரேபிய நாடுகளில் செல்வந்தர்களுக்கு குதிரைகள் என்றும் மற்றவர்களுக்குக் கழுதைகள் என்றும் ஒரு நியதியாகி விட்டது.
இந்தக் கதையில், கதாநாயகன் ஒருவர் கழுதை ஒன்றை ஓட்டிகொண்டு செல்கிறார்.
சும்மா போகவில்லை. இடைவிடாது, வசவுகள். யாருக்கு ? எல்லாம், கழுதைக்குத்தான். போதாததற்கு கையில் இருந்த குச்சியால் அப்போது அடி வேறு !
நீ உயிர் வாழ்வதே உபயோகமில்லதது. உன்னால் யாருக்கு என்ன உபயோகம் ? என்ற வசைபாடு அடியைத் தொடரும். அவ்வப்போது கழுதைக்கு காலால் உதையும் தருவார் எஜமானர்.
இதை எல்லாம் சகித்துக்கொண்ட கழுதை, முதுகில் சுமை, அதோடு இலவசமாக வழங்கப்பட்ட அடி, உதை, வசவுகள் அனைத்தையும் தாங்கி, அமைதியாக நடந்து வந்தது.
ஒரு சுபி ஞானி, அதே சாலையில் நடந்து வர, இந்த காட்சியைக் கவனித்து வந்தார்.
ஒரு கட்டத்தில், கழுதையை துன்புருத்தியவாறு சென்ற இந்த கோபக்கார மனிதருக்குப் புத்தி புகட்டும் எண்ணத்துடன் கழுதையின் எஜமானனை சூசகமாகவும் அவர் செய்து வந்த தவறை மென்மையாகவும் சுட்டிக் காட்டினார். அதிலும், ஓரு நகைச்சுவையை கலந்து. அது கீழே வருமாறு.
நண்பரே, இந்த வசவுகளால் யாருக்கு நண்மை? இந்த மிருகம் உங்கள் வசவுகளைப் புரிந்து கொண்டு திருந்தி வாழும் வகையில் படைக்கப் படவில்லை. (சொல்லப்போனால், நம்மில் பல மனிதர்கள் உள்பட அப்படித்தான்).
ஆனாலும், இந்த மிருகத்திடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள உள்ள ஒரு வாய்ப்பை நழுவ விடாதீர்கள். என்றார்.
இந்தக் கழுதையிடமிருந்து நான் கற்றுக்கொள்வதா? அப்படி என்ன இருக்கிறது ? என்று கேட்டார் கழுதையின் தலைவன்.
ஒரு கழுதையின் முன்னிலையில் மௌனத்தைக் கடை பிடிப்பதும், அமைதியைக் காப்பதும், என்று கூறி வேகமாக நடந்தார், ஞானி. (இதில் அடங்கியுள்ள நகைச்சுவை புரிகிறதா?)
வாசகர்கள் கவனத்திற்கு ! ஒழுங்கு தவறும் மாணவர்களைத் திட்டும் ஆசிரியரும், மனைவி மக்களைக் கோபம் கொள்ளும் கணவன்மார்களும், தவறுகளைச் செய்வதும், உத்தரவுகளை நிறைவேற்றாததை வழக்கமாகக் கொண்ட சக தொழிலாளிகளைத் திட்டும் மேலாளாரும், என்றுமே உண்டு.
கோபம், நமது நிலை குலைந்த மன நிலையை மாத்திரமே பிரதிபலிக்கிறது. எதிர்பார்த்து, மற்றும் தனது உத்தரவின்படி அல்லது தான் விரும்பியபடி – பிறர் நடக்கவில்லை என்கிற போது நம்மை அறியாமல் வரும் அனிச்சைச் செயல், கோபம்.
உண்மையில் இது உங்கள் இயலாமையின் எதிரொலி.
இந்த வகை தண்டனைகள் என்றும் பயன் தறாது.
திட்டுகள் (வசைவுகள்) மறந்துவிடும், அடிகளோ நாளாடைவில் மரத்துவிடும்.
பின் என்ன செய்யலாம்? கோபம் வரும்பொழுது, ஒன்று முதல் நூறு வரை (மனதுக்குள்) எண்ணுங்கள். சிறிது நேரம் வேறு சிந்தனைகளில் கவனத்தைச் செலவிடுங்கள். கோபத்தைத் தணியுங்கள். ஏன்? கோபத்தில் எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது.
இப்போதுள்ள சூழ்நிலையில் தம்மை கோபத்து உள்ளாக்கிய சம்பவத்திற்கு தகுந்த பதில் நடவடிக்கை என்னவாக இருக்கலாம் என்று ஒன்றல்ல, பத்து அல்லது இருவது நடவடிக்கைகளைச் சிந்தித்து எழுதுங்கள். ஒவ்வொன்றிகும் பலன் – எதிர்-பலன் என்று ஒவ்வொன்றுக்கும் தனியாக சிந்தித்து எழுதுங்கள்.
சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்து, சத்தம் எதுவும் இல்லாமல் நிறைவேற்றுங்கள்.தேவைப்பட்டால், சக மேலாளர்களையும், மேலதிகாரிகளிடமும் கலந்தாலோசித்துத் திட்டமிடலாம்.
நாட்கள் நகர, இந்த இரண்டு கட்ட நடவடிக்கைகளை சில நிமிடங்களில், அதே சமயம், நேர்த்தியாகவும் நிறைவேற்றும் திறமையும் வளரும்.
போதாத குறைக்கு, குறைக்கும் நாய் கடிக்காது என்ற பழமொழி ஒன்று, உங்கள் திட்டுகளுக்கு காரணமானவர்கள் சொல்ல, உங்கள் மனம் உடைய. ஏன் இதெல்லாம்?
முதன் முதலில் கோபம் கொண்டவரை கண்டு பயந்தவர்கள், நாட்கள் நகரும்போது, அதற்கு, பழகிவிடுவார்கள். பிறகு எதிர்பார்த்திருப்பார்கள்.
கோபப்படுவது என்றுமே பயன் தராது மட்டுமல்ல, கோபம் கொள்பவரின் உடல் நிலையையும் கடுமையாக பாதிக்கும் அபாயமும் உண்டு.