"

கதை 7.

கருத்து: இன்றும், என்றும் (பெருமளவு),  குரங்கு குணமே மனிதனில் ஒளிந்துள்ளது.

story 7 mds2

 

இந்த பழங்காலக் கதையில் இரண்டு பாகங்கள் உண்டு. முதல் பாகத்தை நாம் கேட்டிருக்கிறோம். என்றாலும், மீண்டும் ஒரு முறை படிப்போமே.

நீண்டு வளைந்து செல்லும் ஒரு நெடுஞ்சாலை. மக்கள் தங்கள் வாழ்கைப் பயணத்திற்கு  அவசியமான சாலைகளை அந்தக்கால அரசன் அமைத்துத் தந்தான்.

சாலையின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்த மரங்கள். அரசன் அன்று அமைத்து தந்தாலும், ஆண்டவன் அருளாலேயே பல ஆண்டுகள் வளர்ந்து நிற்கிறதோ? ஒரு மரம் பாகுபாடின்றி பல விதமான உயிர்களுக்கும் அடைக்கலம் தருகிறது.

வாகன வசதி எதுவும் கண்டு பிடிக்கப்படாத காலம். சாலையோர மரங்கள், பயணிகள், வெயில் காலத்தில் நிழலில் தங்கி இளைப்பாரச்   செய்யப்படிருந்த ஒரு ஏற்பாடு.

அந்த  மரங்களில் பலவகை உயிர்களும் உல்லாசமாக வாழ்ந்து வருகின்றன, இதில் முக்கியமானது    கூட்டமாக   வாழும் குரங்குகள்.  இவர்களே நமது முன்னோர் என்று விஞ்ஞானிகள் இனம் கண்ட, வானத்தில் வாழும் மனிதர்கள். அதாவது, வான் – நரர்கள். ( வான் நரர்கள் மருவி வானரமாகியதோ)?

இப்போது கதையை பார்ப்போம்.

மாரி,  ஓரு   தையல் நிபுணர்.  அவர் மட்டுமல்ல.   அவர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு   எப்போதுமே   தலைக்கு மேல்தான் வேலை. அதாவது பல வகை தொப்பிகளை தயாரிப்பதுதான் அவர்களுடைய வேலை. அதன் வருமானத்தில் தனது வாழ்கையை நடத்துபவர்கள்.

வித விதமான தொப்பிகளைத் தயாரித்து, அதை   அடுத்துள்ள பெரிய ஊர்களில் விற்பது வழக்கம். தயாரான தொப்பிகளை மூட்டையாகக் கட்டி, தலையில் சுமந்து, தாய் தந்த உணவுப் பொட்டலத்தை உடன் எடுத்துப் பயணமானான் மாரி, என்ற மாரியப்பன்.

சூரியன் நடுவானத்தை   எட்ட,  பசியும்   நடந்த   களைப்பும் மாரியைத் தாக்கலானது. எனவே, மாரி  மரநிழலில் அமர்ந்து கட்டுச் சோற்றைச் சாப்பிட்டான். அதன் பின், உறக்கம் உடலைச் சாய்க்க, மரங்களின் நிழலும் உற்சாகம் தந்ததால் மரத்தின் அடியிலேயே, மாரி, ஆனந்தமாக உறங்கலானான்.

உறக்கம் கலைந்து எழுந்த மாரிக்கு  ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. மூட்டையில் இருந்த தொப்பி எதையுமே காணவில்லை. தன் தலையில் இருந்த தொப்பி மாத்திரம் தப்பித்ததை உணந்தான். சுற்றிலும் தன் பார்வையை ஓடவிட்ட போது, திருடன் யார் என்று தெரிந்தது.

உறங்கிய அதே மரத்தின் மேலே, பல குரங்குகள் தலையில் தொப்பியுடன் காணப்பட, வியாபாரி மாரிக்கு விஷயம் புரிந்தது.

என்ன செய்வதென்று தெரியாமல், கோபத்தில் தனது தொப்பியைக் கழட்டி தூர எறிந்தான். எதிர்பாராத விதமாக, குரங்குகள் அனைத்தும்  தமது தலையிலிருந்த தொப்பிகளைக் கழற்றி எறியலாயின.

குரங்குகளின் தனிக்குணம் மாரிக்கு ஒரு மாதிரியாகப் புரிந்தது. அது மற்றவரைக் காப்பியடிப்பது. மற்றவர் செய்வதை தானும் அதேபோலச் செய்வது.

எப்படியோ, ஒரு மாதிரியாக எல்லா தொப்பிகளையும் பொறுக்கி  எடுத்து, அதன்  பையிலே சேர்த்து பயணத்தை தொடங்கியதாக அந்த நாள் கதைமுடிகிறது.

அடுத்து, புதிய  தலைமுறைக் கதை:  குரங்கும் – குல்லாய்களும்.

பல வருடங்கள் உருண்டோடின.

இப்போது மாரியின் பேரன், கார்த்தி, தொப்பி உறுவாக்குவதை ஒரு சிறு தொழில் நிறுவனமாக நடத்தி வருகிறான்.  தாத்தா, தன் பயண மற்றும் வியாபார அனுபவங்களை மகன் மற்றும்  பேரப்பிள்ளைகளுக்குக் கதைகளாய் சொல்லியிருக்கிறார். மறக்காமல், குரங்கு குல்லாய்களைத் திருடி, மீண்டும் திரும்பக்கிடைத்த கதையையும் தான்.

அடுத்த  நகரத்தில் நடந்து வரும் கிரிகெட் மாட்சில், விசிறிகளுக்காகத் தயாரான விசேஷத் தொப்பிகளை விற்பனை செய்ய, தாத்தா மாரி நடந்து சென்ற அதே சாலையில்,  பேரன் இன்று ஸ்கூட்டரில் செல்கிறான்.

ஸ்கூட்டர் டயரில் ஆணி ஒன்று ஏறியதால் கார்த்தியின் பயணம் தடையாகிறது. வண்டியை  மர நிழலில்  நிறுத்தி  விட்டு,          பழுதான  சக்கரத்தைச் சரி செய்ய   சக்கரத்தைக்  கழற்றி எடுத்து, ஓரிரு மைல் நடந்து செல்கிறான்.

திரும்பி வரும் பொழுது வண்டியில் கட்டியிருந்த பெரிய அட்டை பெட்டிகளில் அடைத்திருந்த தொப்பிகள் அனைத்தும் அங்கிருந்த குரங்குகளின்  தலைகளை அலங்கரித்தன.

தாத்தா   சொன்ன  குரங்கும் – குல்லாயும் கதை நினைவுக்கு வர, தாத்தா கடைபிடித்த அதே உத்தியை கையாள முற்பட்டான் கார்த்தி. தனது தலையில் இருந்த தொப்பியைக் கழற்றி தரையில் எறிய, தொப்பி இல்லாமல் வெறும் தலையுடனிருந்த சில குரங்களில் ஒன்று, வேகமாக    முன் வந்து,     பேரனின்   தொப்பியையும்   கவர்ந்து சென்றதாகக் கதை முடிகிறது.

அதிர்ந்து போன நவீன வியாபாரிக்கு, அசரீரி (ஆகாயத்திலிருந்து வந்த குரல்) ஒன்று கூறியது,  அடி மடையர்களா ! குரங்குகள் மாறிவிட்டன. மனிதர்களான நீங்கள் தான் மாறவில்லை.

வாசகர்களே !  புத்தியுள்ள மனிதர்களில் சிலர், நம்மைப் போன்ற பெரும்பாலானோர்   மனதில் குரங்கு குணம் பதிந்திருப்பதை கண்டுபிடித்து, அதையே வியாபாரத் தந்திரங்களாக மாற்றி அமைத்துள்ளார்கள்.

இன்றைய ஃபாஷன் ஷோக்கள்,  நடிகர்களை மற்றும் விளையாட்டு நாயகர்களை மையமாகக் கொண்ட விளம்பரங்கள் எல்லாமே புத்தி குறைந்த, சுய சிந்தனை இல்லாத மனிதர்களின் (பிறரை காப்பியடிக்கும்) குரங்கு குணத்தை  உபயோகித்து, நம்மை மொட்டை அடிக்கும் வியாபாரத் தந்திரங்களே.

இன்றைய  பெரும்பாலான அரசியல் கூட்டங்களும், ஆர்பாட்டங்களும் வேலை    இல்லாத ஏழைகளையும், கூலிக்கு     அமர்த்தி       நடத்தப் படும் நாடகங்களே.    இதை நம்பத்தயாரக      இருக்கும் கோடானு     கோடி மனிதர்கள் இருப்பதற்கும் காரணம், மனிதனில் நீங்காதிருக்கும், குரங்கு குணமே!

குரங்குகள் மாறிவிட்டன.

மனிதர்களே, நாமெல்லாம் குரங்கின் சந்ததியாக இருந்தாலும் கல்வி அறிவு பெற்றாலும், என்னதான் விஞ்ஞானம், தொழில் என்று நாடு முன்னேறம் அடைந்தாலும் உங்கள் அடிப்படை (குரங்கு) குணங்கள் மாறவில்லையே.!

இறைவனும் மனிதர்களும்,

தெய்வ நம்பிக்கை ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அவசியம். பொதுவாக மனித சமுதாத்திற்கு, அதன் ஒற்றுமைக்கு, குற்றங்கள் குறைவான வாழ்கைக்கு தெய்வ நம்பிக்கை அவசியம். 

ஆனாலும், நல்லதோ கெட்டதோ, விஷமோ, அமிர்தமோ எதிலும் ஒரு நிதானம் மற்றும் ஓரு எல்லை அவசியம். இல்லாவிட்டால் என்னவாகும்?  ஒரு ஸுபி கதையும் மற்றும் ஒரு ஆங்கிலப் பழமொழியும்,  இதை உறுதி செய்கிறது.

License

Icon for the Public Domain license

This work (எல்லா வயதினருக்கும் பயன் தரும் சிறுகதைகள் by nat123; நடராஜன் நாகரெத்தினம்; and N.Natarajan) is free of known copyright restrictions.

Share This Book