தும்பிக்கையே எங்கள் நம்பிக்கை – ஜேஷ்ட ராஜன்!

இதனிடையில் பசி, பசி என்று பறந்த அந்தணர் மிதிலாபுரியை விட்டுத் தள்ளி ஒரு குடிசையில் வசித்து வந்த திரிசிரன் என்பவனின் குடிசை வாயிலுக்கு வந்திருந்தார். திரிசிரனின் மனைவி விரோசனை. இருவரும் விநாயகரின் பக்தர்கள். அன்றைய வழிபாட்டை முடித்துக் கொண்டு அன்றைக்குக் கிடைத்த ஒரே ஒரு அருகம்புல் இட்ட நீரை விநாயகருக்கு நிவேதனம் செய்து, அந்த ஒற்றை அருகம்புல்லைக் கணவனுக்கு உணவாய் அளித்துவிட்டுத் தான் அந்த நீரை அருந்தலாம் என விரோசனை எண்ணி இருந்தாள். அப்போது தான் அந்தணர் அங்கே போய்ச் சேர்ந்தார். சோர்வோடு இருந்த அந்தணரைப் பார்த்த திரிசிரனும், அவன் மனைவியும் அந்தணரை வரவேற்று என்ன வேண்டும் எனக் கேட்டனர். அந்தணரும், தனது தாளாத பசியைச் சொல்லி, தான் ஜனகனின் அரண்மனைக்குச் சென்றதாகவும், அங்கே அளித்த உணவு போதவில்லை. ஏதோ போட்டான் அரை மனதாக என்றும் சொன்னார். திடுக்கிட்டனர் திரிசிரனும், விரோசனையும். அத்தனை பெரிய மஹாராஜா உணவளித்தே பசி ஆறாதவர் இங்கே வந்து சாப்பிட்டா பசி ஆறப் போகின்றார்? கவலையுடனே அவரைப் பார்த்து, உள்ள நிலைமையைத் தெளிவாய் எடுத்து உரைத்தார்கள். முதல்நாள் வரையிலும் யாசகம் எடுத்து உணவு உண்டு வந்ததையும், அன்றைக்கு யாசகத்திலும் எதுவும் கிட்டாமல், விநாயகருக்கு வழிபாடு செய்து, அருகை நிவேதனம் செய்து, அதுவும் ஒரே ஒரு அருகம்புல்! அந்த அருகைக் கணவனுக்கு உண்ணக் கொடுத்துவிட்டுத் தான் நீர் அருந்த இருந்ததையும் விரோசனை கண்ணீர் பொங்கக் கவலையுடனே தெரிவித்தாள்.

அந்தணரோ குதித்தார்! “ஆஹா, அருகும், அந்த அருகு இருந்த நீருமா?? இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்? என்னுடைய குஷ்ட நோய்க்கான மருந்தல்லவோ அருகு? அதைத் தீர்க்க இந்த அருகு ஊறிய நீரைவிடச் சிறந்த மருந்து உண்டோ? மேலும் ஜனகன் உள்ளன்போடு எனக்கு உணவு படைக்கவில்லை. அவனிடம் உள்ள செல்வத்தைக் காட்டவும், அவனுடைய செல்வாக்கைக் காட்டவுமே உணவு படைத்தான். உள்ளன்போடு ஒரு கைப்பிடி உணவு கொடுத்தால் வயிறு மட்டுமல்ல, மனமும் நிறைந்துவிடுமே. அதுவும் தும்பிக்கையானுக்கு நீங்கள் இருவரும் நம்பிக்கையோடு படைத்தது வீண் போகுமா??” அந்தணர் அந்த அருகைக் கிட்டத் தட்டப் பறித்து வாயில் போட்டுக் கொண்டு நீரையும் அருந்தினார். என்ன ஆச்சரியம்? அங்கே காட்சி கொடுப்பது யார்? தலை ஆட்டிக் கொண்டு, மத்தள வயிறுடன் உத்தமி புதல்வன் அன்றோ வந்துவிட்டான்? இது என்ன விந்தை? இது மட்டுமா? மேலும், மேலும் விந்தைகள் நடந்தன. திரிசிரனின் மண்குடிசை இருந்த இடத்தில் இப்போது மாளிகை ஒன்று முளைத்தது. களஞ்சியம் நிரம்பி வழிந்தது. தங்கமும், முத்தும், பவளமும், வைரமும் மாளிகையில் காணக் கிடைத்தன. திரிசிரன் தம்பதிகளுக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. பலவாறு விநாயகரைப் போற்றித் துதித்தனர். அத்தோடு நில்லாமல் திரிசிரனுக்கு வந்த பாக்கியம் ஜனகனுக்கும் தெரியவேண்டாமா?

மிதிலாபுரியே செல்வத்தில் மிதந்தது. அந்தணரால் உண்ணப் பட்ட உணவுப் பொருட்களைப் போல் பலமடங்கு உணவுப் பொருட்கள், மேன்மேலும் செல்வங்கள், நிறைந்தன. திடீரென வந்த செல்வத்தைக் கண்டு திடுக்கிட்ட மன்னன் விவரம் விசாரித்து அறிந்து கொண்டு திரிசிரனைக் காண வந்தான். அங்கே இருந்த விநாயக மூர்த்ததை வணங்கித் தன் மமதையை அடக்கித் தனக்குப் பாடம் புகட்டியதற்கு நன்றி சொன்னான். விநாயகரும் அவன் முன்னால் தோன்றி, அவனுடைய அறியாமை நீக்கி நல்ல குருவை நாடி ஞானத்தைத் தரக் கூடிய அறிவைப் பெற அருள் புரிந்தார். அதன் பின்னரே ஜனகரும் யாக்ஞவல்கிய மஹரிஷியை நாடி உபதேசம் பெற்று ராஜரிஷியாக மாறினார்.. அருகம்புல் தோல் நோய்கள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை பெற்றது. முக்கியமாய் குஷ்டநோய்க்கு அருகம்புல் மிகச் சிறந்த மருந்து என இன்றைய அறிவியல் கண்டறிந்து கூறியுள்ளதும் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

அவ்வளவு பெரிய சாமிக்கு இவ்வளவு சின்ன வாகனமா என்ற கேள்வி எனக்கும் வந்திருக்கு. ஆனால் ஒரு எலி போன்ற சாதாரணப் பிராணியைத் தன் வாகனமாய் வைத்துக் கொண்டது அவரோட எளிமையையே காட்டுகின்றதுனு அப்புறமா தோன்றியது. எலி பொதுவாய் எல்லாரும் விரட்டும் ஒரு பிராணி. பொறி வைத்துப் பிடிப்போம். அதைத் தன் வாகனமாய் வைத்துக் கொண்டதில் இருந்து எவ்வளவு சிறிய மனிதராய் இருந்தாலும் அவர்களிடமும் ஏதாவது ஒரு முக்கியத்துவம் இருக்குனு புரிய வைக்கிறார் போலிருக்கு. காலால் ஒரு நசுக்கு நசுக்கினால் உயிர் போயிடும் அந்த எலிக்கு. ஆனால் அதை இத்தனை பெரிய தொப்பை உள்ள பிள்ளையார் வாகனமாய்க் கொண்டிருக்கின்றார் என்றால் தன் உடம்பையும் அதற்கேற்றவாறு மிக மிக கனமில்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கின்றார் என்றும் தோன்றுகின்றது.

உட்கார்ந்திருக்கும் இடமோ அநேகமாய் ஏதாவது ஆற்றங்கரையிலோ, அல்லது குளத்தங்கரையிலோ, அரசமரத்தடி போதும். வேறே சுக, செளக்கியங்கள் வேண்டாம். அரசமரத்தின் சலசல, சப்தம் கேட்டால் தான் புரியும் எத்தனை இனிமை என்று. மேலும் மரத்தில் வந்து கூடு கட்டும் பலவிதமான பட்சிகள், அவற்றின் இனிய கானங்கள் சற்று நேரம் உட்கார்ந்து பார்த்தால் புரியும் பட்சிகள் ஒன்றுக்கொன்று நடத்திக் கொள்ளும் பேச்சு வார்த்தை. சாதாரணமாய் நம் நாட்டில் அரசமரத்தை வெட்டுவதில்லை. ஏனெனில் அவை மும்மூர்த்திகளின் சொரூபமாய்ப் பார்க்கப் படுகின்றது. விருட்சங்களுக்கெல்லாம் அரசன் என்பதால் அரசமரம் என்ற பெயர் பின்னால் வந்தது. ஆனால் அதற்கு முன்னால் அந்த மரத்திற்கு வேறு பெயர். ம்ம்ம்ம்????? அதுக்கும் ஒரு கதை உண்டு. மறந்துடுச்சு, நினைவு வரும்போது எழுதறேன். இந்த அரசமரம் மூலத்தில் அதாவது வேர்பாகம் பிரம்மா, என்றும் மத்திய பாகம் விஷ்ணு என்றும், மேல்பாகம், அதாவது தலைப்பாகம் ஈசன் என்றும் சொல்லுவதுண்டு. நீர், நிலைகளில் நீராடிக் குளித்துவிட்டு, இந்த மாதிரி கரையில் உட்கார்ந்திருக்கும் பிள்ளையாரை வணங்குவது மிக மிக உடலுக்கும், மனதுக்கும் நல்லது. அரசமரக் காற்று உடலுக்கு நன்மை செய்யும்.

நீர் தான் உலகில் முதலில் தோன்றியதாய்ச் சொல்லுவார்கள். பின்னர் தோன்றியது மண் எனப்படும் பூமி. பிள்ளையாரைக் களிமண்ணால் பிடிக்கின்றோம். மண்ணில் இருந்து தோன்றியவர் பிள்ளையார். முதலில் தோன்றியவர் என்பதற்காகவும், மண்ணில் இருந்து தோன்றியவர் என்பதாலும் மண்ணில் செய்த பிள்ளையார்களை நீரில் கரைக்கின்றோம். நீரில் அனைத்து தேவதைகளும் குடி இருப்பதாய்ச் சொல்லுகின்றோம். ஆகவே நீரில் கரைப்பதுதான் முறையானது என்பதாலேயே மண்ணும், நீரும் சேர்த்துச் செய்த கலவையான பிள்ளையாரை நீரில் கரைக்கின்றோம். ஆனால் இன்றைய நாட்களில் இது மிக மிக அருவருப்பான ஒரு விஷயமாய்ப் போய் விட்டது.

File:Ganesh mimarjanam 2 EDITED.jpg

https://en.wikipedia.org/wiki/File:Ganesh_mimarjanam_2_EDITED.jpg