கணபதிராயன் அவனிரு காலைப் பிடித்திடுவோம்! 2

காலையில் குளித்துவிட்டுப் பிள்ளையாரை வணங்கித் தலையின் இருபக்கமும் குட்டிக் கொள்ளுவதால் நல்ல ரத்த ஓட்டமும், நரம்புகளில் புத்துணர்ச்சியும் ஏற்படும். நம் முன்னோர்கள் ஆராயாமல் எதையும் செய்யவில்லை எனினும், நடுவில் வந்த சில பிரச்னைகளால், ஒரு தலைமுறைக்குக் காரண, காரியம் தெரியாமல் போனதால், எல்லாமே மூட நம்பிக்கை என்று ஏற்பட்டு விட்டது. மாறக்கொஞ்ச நாட்கள், இல்லை மாதங்கள் கூட இல்லை, வருடங்களே பிடிக்கலாம் எனினும் மாற்றம் வரும். முதன் முதல் இதை ஆரம்பித்து வைத்தது பற்றிப் பல்வேறு கதைகள் இருக்கின்றது. என்றாலும் முக்கியமாய்ச் சொல்லப் படுவது மகாவிஷ்ணுவின் சக்கரத்தைப் பிள்ளையார் வாங்கி வைத்துக் கொண்டு கொடுக்கவில்லை என்றும், அவர் மனதை மாற்ற விஷ்ணு விளையாட்டுக் காட்டும்போது, தன் தலையில் இரு கைகளாலும் குட்டிக் கொண்டதாயும், அப்போது விநாயகர் சிரித்தபோது வாயிலிருந்து சக்கராயுதம் கீழே விழ, விஷ்ணு அதை எடுத்துக் கொண்டதாயும் ஒரு கதை. விநாயகரை இம்மாதிரி மகாவிஷ்ணு விளையாட்டுக் காட்டியதற்குப் பின்னரே இந்த நெற்றிப் பொட்டில் குட்டிக் கொள்ளும் வழக்கம் ஏற்பட்டதாய்த் தெரிய வருகின்றது

அதன் பின்னர் அகத்தியர் காவேரி நதியைத் தன் கமண்டலத்தில் அடைத்து வைத்திருந்த போது, மக்களுக்குப் பயன் பட வேண்டி, அகத்தியர் மாலைக் கடன்கள் செய்யச் சென்ற போது, அந்தக் கமண்டலத்தைக் கீழே வைத்துவிட்டு மாலைக்கடன்கள் செய்ய ஆரம்பிக்க அப்போது அங்கே அந்தணச் சிறுவனாக வந்த விநாயகர் கமண்டலத்தைக் கவிழ்த்து விடுகின்றார். கமண்டலத்து நீர் பொங்கிப் பெருகிப் பிரவாகமாய் ஓட ஆரம்பிக்க, திகைத்துப் போன அகத்தியர் குறும்பு செய்த சிறுவனைத் தண்டிக்கும் நோக்கத்துடன், சிறுவனைப் பிடிக்க ஓட, விநாயகர் அவர் கையில் மாட்டாமல் அங்கே இங்கே அலைக்கழித்துவிட்டுப் பின்னர் மாட்டிக் கொள்ளுகின்றார். சிறுவனைக் குட்டுவதற்கு அகத்தியர் கையை ஓங்க, விநாயகர் காட்சி தருகின்றார். குட்ட நினைத்த தன் தலையிலேயே குட்டிக் கொண்டு மன்னிப்பும் கோருகின்றார் அகத்தியர். மக்களின் பயனுக்கு ஆகவேண்டியதை அடைத்து வைத்ததாலேயே தான் வந்து இம்மாதிரிச் செய்யும்படி ஆயிற்று என விநாயகர் சொல்ல, அகத்தியரும் தன் தவற்றை ஒப்புக் கொள்ளுகின்றார். (பிள்ளையாரப்பா, கர்நாடகாக் காரங்க காதிலே போய்ச் சொல்ல மாட்டியா???)

இம்மாதிரி தோர்பி கரணம் போடுவதால் மூளை நரம்புகள் தூண்டப் படுவதாய் சமீபத்திய ஆராய்ச்சி சொல்லுவதாய் நம்ம இ.கொ. இங்கே எழுதி இருக்கார் பாருங்க. மனித உருவும், விலங்கு உருவும் இணைந்த கோலத்தில் காட்சி அளிப்பதன் தாத்பரியமும் அனைத்து உயிர்களும் தன்னில் அடங்கும் என்பது தான். கழுத்துக்குக் கீழே மாயை, கழுத்துக்கு மேலே பரம்பொருள் என்ற உருவில் காட்சி அளிக்கின்றார் விநாயகர். நம்முடைய மூளையே சிந்திக்கின்றது அல்லவா?? அத்தகைய சிந்தனையைத் தருவதாலேயே அதை உயர்த்திச் சொல்லப் படுகின்றது. உடல் செயல்படவேண்டுமானால் மூளை சிந்திக்கவேண்டும். அது தலையினுள்ளே இருக்கின்றது. அதேபோல் தலைக்கு ஆதாரமாய் உடல் திகழ்கின்றது. இரண்டும் இல்லாமல் மற்றொன்று இல்லை. உடலால் உழைக்கவும் வேண்டும், அறிவாற்றலால் சிந்திக்கவும் வேண்டும். இதைச் சுட்டிக் காட்டவே விநாயகரின் தலை யானை உருவில் பெரியதாக இருக்கின்றது. பிள்ளையாருக்கு மோதகம் என்னும் கொழுக்கட்டை படைப்பதன் நோக்கம் வெளியே வெறுமையாக இருக்கும் நம் உடலினுள் உள்ளே இருக்கும் இனிமையான அமிர்தத்தைப் போல் வெளியே வெறும் மாவாகக் காட்சி அளித்தாலும் உள்ளே இருக்கும் பூரணம் இனிப்பாய் இருப்பதைப் போல் நம் வாழ்விலும், இனிமையும் பூரணமாய் அளிப்பார் விநாயகர்.எவ்வாறு வெறும் அரிசிமாவினால் செய்த தோலினுள் உள்ளே உள்ள பூரணம் இனிப்பாக இருக்கிறதோ அவ்வாறே நம் உடலின் உள்ளே உள்ள அம்ருதமயமான ஆனந்த நிலையை விநாயகன் துணையால் நாம் அடைவதும் இனிப்பாக இருக்கும்.

தேங்காய் உடைப்பது என்பதும் மிக அரிய ஒரு தத்துவத்தைக் காட்டுகிறது. அந்த ஈசனுக்கு எவ்வாறு மூன்று கண்களோ அவ்வாறே தேங்காய்க்கும் மூன்று கண்கள். ஈசனைப் போன்ற உயர்ந்த தேங்காயைப் பிள்ளையாருக்குப் படைப்பதின் மூலம் நம்மிடம் உள்ள எல்லாவற்றிலும் உயர்ந்த வஸ்துவை இறைவனுக்குக் கொடுக்கிறோம். மேலும் தேங்காயின் ஓடு மிகவும் கெட்டியாய் நம் மண்டை ஓட்டைப் போல் இருக்கிறது. அதன் பருப்பும், உள்ளே உள்ள இனிப்பான நீரும் நம் உடலினுள் மூளைக்கு மிக அருகில் அமைந்துள்ள அமிர்தமய கோசத்தைக் குறிக்கும். நம் மண்டையையே சிதற அடிக்கிற பாவனையிலும், நம் அகங்காரம் அதன் மூலம் அகன்று உள்ளே உள்ள அமிர்தானந்த மய நிலையை நாம் அடைய வேண்டும் எனக் குறிப்பால் உணர்த்தவும் தேங்காய் உடைக்கப் படுகிறது. இது போன வருஷம் போட்ட பதிவில் இருந்து எடுத்தது. சிதறுகாய் உடைப்பதன் தாத்பரியமும் நம் ஆணவம் சுக்குநூறாய்ச் சிதறவேண்டும் என்பதற்கே.

விநாயகரைப் போன்ற எளிமையான கடவுள் வேறு யாரும் இல்லை. அவருக்குப் பிரசாதமாக அவல், பொரி கொடுத்தால் கூடப் போதும். அதுவும் இல்லையா, தெருவில் முளைத்துக் கிடக்கும் அருகம்புல்லைப் பறித்து வந்து சுத்தம் செய்து விநாயகருக்குச் சாற்றினல் போதும். மனம் குளிர்ந்துவிடுவார் விநாயகர். அனலாசுரனை விழுங்கியதாய் விநாயகர் உடலில் சூடு அதிகம் ஆக, அந்தச் சூடு தாங்க முடியாமல் அகில உலகமும் நடு நடுங்க, விநாயகரே தன்னை அருகால் அபிஷேகம் செய்யச் சொன்னதாய்ச் சொல்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்தது அருகம்புல் இதற்கு ஈடு, இணை ஏதும் கிடையாது என்பதைக் கெளண்டின்யர் மனைவி ஆசிரியை செய்த பரீட்சை மூலம் தெரிந்து கொண்டிருக்கின்றோம். தெரியாதவங்க கையைத் தூக்குங்க, கதை நாளைக்கு வரும்!

https://commons.wikimedia.org/wiki/File:Philadelphia_Museum_of_Art_-_Ganesha.jpg