விநாயகர் வழிபாடு

ஆதி சங்கரர் பத்தித் தெரிஞ்சிருக்கும் எல்லாருக்கும், இல்லையா? அவர் என்ன செய்தார்னால், சநாதன தர்மம் என்று சொல்லப்பட்ட, தற்காலத்தில் இந்து மதம் எனக் குறிப்பிடப்படும் நம் போன்றவர்களுக்காக வழிபாட்டு முறையை 6 விதமாய்ப் பிரித்தார். அதை “ஷண்மத வழிபாடு” எனச் சொல்லுவது உண்டு. அவை என்ன என்றால்:

பிள்ளையார் என்று நாம் அன்புடன் கூப்பிடும் விநாயகர் வழிபாடு = காணபத்தியம் என்று கணங்களுக்கு எல்லாம் அதிபதியான “கணபதி” வழிபாடு முதன்மையானது. மற்றவை

சிவனை வழிபடுபவர்கள் = சைவர்கள்

சக்தியை வழிபடுபவர்கள் = சாக்தர்கள்

விஷ்ணுவை வழிபடுபவர்கள் = வைணவர்கள்

முருகனை வழிபடுபவர்கள் = கெளமாரம், குமாரக் கடவுளின் பெயரில் இருந்து கெளமாரம் வந்தது.

சூரியனை வழிபடுபவர்கள் = செளரம் என்றும் பிரித்தார். இறைவன் ஒருவனே. அத்வைதம் எனப்படும் ஆதிசங்கரரின் கோட்பாடும் அது தான். என்றாலும் சாதாரண மக்களுக்காக ஏற்படுத்தப் பட்டது இது. விநாயகரை வைணவர்கள் “விஷ்வக்சேனர்” என்ற பெயரில் வழிபடுகிறார்கள். அத்வைதிகளுக்குக் கடவுள் வேறுபாடு கிடையாது. ஹரியும், ஹரனும் ஒருத்தரே! என்றாலும் விநாயக வழிபாடு அனைவரிடமும் இடம் பெற்றிருக்கிறது.

விநாயகர் சன்னதியை ஒரு முறை வலம் வந்தால் போதுமானது. துளசி விநாயகருக்கு உகந்தது அல்ல. ஆடம்பரமே இல்லாமல் மஞ்சள் பொடியிலேயோ அல்லது, பசுஞ்சாணி உருண்டையிலேயோ விநாயகரை ஆவாஹனம் செய்து வைத்து, அருகம்புல் சாத்தி வழிபட்டால் போதும். உட்கார்ந்த நிலையில் உள்ள விநாயகர் தான் பூஜைக்கு ஏற்றவர். தற்காலங்களில் கிரிக்கெட் ஆடும் விநாயகர் முதல், கணினியை இயக்கும் விநாயகர் வரை விநாயக சதுர்த்தி அன்று பார்க்க முடிகிறது. அவை எல்லாம் வழிபாட்டுக்கு உகந்தவை அல்ல. இவர் நம் உடலில் உள்ள ஆனந்த மய கோசத்துக்கு அதிபதியும் ஆவார். பிள்ளையாருக்கு அருகம்புல் சாத்துவதின் உள்நோக்கமும் என்னவென்றால், அருகு நாம் நட்டால் ஒரு இடத்தில் இராமல் குறைந்தது ஆறு இடங்களில் வேரூன்றும். நம் உடலில் மூலாதாரத்தில் இருக்கும் விநாயகர், குண்டலினி சக்தியை அங்கே இருந்து எழுப்பிக் கொண்டு வந்து மற்ற ஆறு ஆதாரங்களில் தங்கித் தழைக்கச் செய்து கடைசியில் சகஸ்ராரத்தை உணர வைக்கிறார். அது பற்றிப் பார்த்தால் நம் தலையின் உச்சியில் இருந்து உள்ளே உள்ள உள்ளொளியானது புருவம் வரையும், தலையின் பின் பகுதியிலும் இணைக்கிறது. இந்தக் கண்ணைத் தான் ஞானக் கண் என்று சொல்லுவார்கள். இந்த ஞானக் கண் விழிப்பு உண்டாவது மூலாதாரத்தில் இருக்கும் விநாயகரின் அருளால்தான்.

https://upload.wikimedia.org/wikipedia/commons/7/72/Durga-puja-koln-2009-4.JPG