41

 
பொதுவாகவே காசிக்குப் போனால் நமக்குப் பிரியமான எதையாவது அல்லது,நம்மிடம் உள்ள தீய பழக்கவழக்கங்களில் எதையாவது விட்டுவிடச் சொல்லுவார்கள் பெரியோர்,ராகவனும் அப்படிப்பட்ட முடிவை எடுத்தார்,அதாவது அவர் விரும்பி உபயோகிக்கும் காசித்துண்டை விட்டுவிடத் தீர்மானித்தார்,

எதையும் ரசித்து செய்யும் ராகவனுக்கு ஆரம்ப நாட்களிலிருந்தே ஒரு பழக்கமுண்டு காசித்துண்டு என சொல்லப்படும் ஒரு வகை காவி நிறத்துண்டை தேவைப் பட்ட போது வாங்குவார். அந்த துண்டினால் என்ன லாபம் என்று கேட்கிறீர்களா . அந்த துண்டு மெலிதாக இருக்கும்,

அதன்காரணமாக குளித்துவிட்டு துடைத்துக்கொள்ள உடலுக்கு உறுத்தாத வண்ணம் இருக்கும்,மற்றும் கொடியில் போட்ட குறுகிய நேரத்திலேயே காய்ந்து விடும் பெட்டியில் அடுக்கும் போது அதிக இடம் அடைக்காது. காசித்துண்டை உபயோகிக்க இவ்வளவு வலுவான காரணங்கள் இருந்தும் காசிக்குப் போனால் முதலில் இந்தக் காசித்துண்டை விட்டுவிடலாம் என்று அவர் முடிவு செய்ததற்கு முக்கியமான காரணம் உண்டு.

அவரிடம் இருந்த துண்டுகள் எல்லாம் நைந்துவிட்டன. அதனால் மீண்டும் காசித்துண்டு வாங்கவேணும் என்று ஒரு நாள் அவர் மனைவியிடம் தைரியமாகச் சொன்னார். எதையுமே சற்று நிதானித்து யோசித்து செய்யும் அவர் மனைவி ராஜம் சற்றும் தாமதியாமல் உடனே சரி வாங்கிவிடுவோம் என்றாள் அப்போதாவது அவர் யோசித்திருக்க வேண்டும் தவறினார்.

மறுநாள் அவர் மனைவி ராஜம் அவளாகவே ஏங்க காசித்துண்டு வாங்கணும்னு சொன்னீங்களே என்று நினைவூட்டினாள் சாதாரணமாக இவர் சொன்னால் கண்டுகொள்ளாமல் இருக்கும் ராஜம் அவளாகவே வலிய வந்து இவர் தேவையை நினைவூட்டினாள் அப்போதாவது அவர் கவனித்து யோசித்திருக்கவேண்டும் தவறினார் .

ஏங்க எப்பவுமே காசித்துண்டு காஞ்சீபுரத்தில் நல்லா இருக்கும்,நாம் ரெண்டு பேரும் காஞ்சீபுரம் போயி காசித்துண்டு வாங்கிவரலாமா என்று கேட்டவுடன், மயங்கிப் போய் அடடா நம் மேல் எவ்வளவு அக்கறை என்று மகிழ்ந்தாரே அப்போதாவது அவர் யோசித்திருக்கவேண்டும் தவறினார்.

தம் வீட்டுக்கருகே உள்ள பல கடைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும் காசித்துண்டு அதற்கு ஏன் காஞ்சீபுரம் போகவேண்டும் என்று யோசனை வந்தாலும் துண்டு நல்ல தரமாக காஞ்சீபுரத்தில் கிடைக்கும் என்று மனைவி கூறியதன் மர்மத்தை அவர் அப்போதாவது யோசித்திருக்கவேண்டும் தவறினார்.
அவர் எண்ண ஓட்டத்தை படித்தவள் போல் காஞ்சீபுரம் போய் ஏன் துண்டு வாங்கவேண்டும்,இங்கே கிடைக்காதா என்றுதானே யோசிக்கிறீங்க..என்றாள் ராஜம்,அதற்கு அவளாகவே ஒரு விளக்கமும் அளித்தாள்,

காஞ்சீபுரம் போய் துண்டு வாங்கும் சாக்கில் அப்படியே காஞ்சி காமாக்ஷியையும், வரதராஜரையும், அங்கே உள்ள மற்ற திருத்தலங்களையும் தரிசித்து வரலாமே, ஒரு கல்லில் இருமாங்காய் என்றாள் ராஜம் மறுநாள் காஞ்சீபுரம் போக ஒரு வாடகைக் கார் ஏற்பாடு செய்தார், ராஜம் யாரிடமோ தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள். பேசி முடித்துவிட்டு ராகவனிடம் திரும்பிய ராஜம் எங்க எப்பிடியும் நாம கார்லெதானே போய்ட்டு வரப்போறோம் என் தங்கை கல்யாணியும் வரேங்கறா கூட்டிட்டுப் போலாமா என்றாள். அவருக்கும் அது நியாயமாகவே தோன்றியது சரி வரச்சொல்லு என்றார் அப்போதாவது யோசித்திருக்கலாம்.

ஏங்க இப்போ கல்யாணி வரும்போது அவளோட குழந்தைகளை யார்கிட்ட விட்டுட்டு வருவா, அதுனாலே குழந்தைகளையும் அந்தக் குழந்தைகளைப் பொறுப்பா பாத்துக்க அவளோட மச்சினர் பொண்ணு ராதிகாவையும் கூட்டிண்டு வரேன்னு சொன்னா என்றாள் சரி என்றார் ராகவன். அதுனாலே சின்னக் கார் போறாது, பெரிய காரே ஏற்பாடு செஞ்சிருங்கோ என்றாள், சரி என்றார் ராகவன்.
மறு நாள் காலையில் குளித்துவிட்டு பெரிய காரில் ராகவனும்,ராஜமும் ஏறி அமர்ந்தனர் ஏங்க நாம் போற வழிலேதானே தாம்பரம் அங்கே இந்து மிஷின் ஹாஸ்பிடல் கிட்ட கல்யாணி வந்துடறேன்னு சொன்னா அங்க போயி அவங்களையும் கூட்டிகிட்டு போகலாம் என்றாள் ராஜம்.

கார் விரைந்தது டரைவர் சார் ஒரு ஐநூறு ரூபாய் குடுங்க டீசல் போட்டுக்கறேன், அப்புறமா கணக்கு பாத்து கழிச்சிக்கலாம் என்றார் . ராகவன் சரி என்றார். தாம்பரம் போய் கல்யாணி ராதிகா மற்றும் குழந்தைகள் கிஷோர், ஜனனீ எல்லோரையும் ஏற்றிக்கொண்டு அப்படியே ஹைவே மோட்டலில் போய் கார் நின்றது. காலை உணவுக்காக காலை உணவு முடித்துவிட்டு மோட்டலுக்கு 400 ரூபாய் அதன் பிறகு வெளியே இருந்த கடையில் குழந்தைகள் விளையாட பொம்மைகள் எல்லாம் வாங்கிக் கொண்டுஆக மொத்தம் 1500 செலவில் கார் தாம்பரத்தை தாண்டி நெடுஞ்சாலையில் விரைந்து, டோல்கேட்டில் அவர்கள் கேட்ட பணத்தை ராகவன் தன் பையிலிருந்து கொடுக்க டோல்கேட்டையும் தாண்டி ஒரு வழியாக காஞ்சீபுரம் வந்தாயிற்று.

ஏங்க முதல்லே நாம பச்சையப்ப முதலியார் கடைக்கு போயி காசித்துண்டை வாங்கிட்டு அப்புறம் கோயிலுக்கெல்லாம் போகலாம் என்றாள் ராஜம் அப்போது காலை மணி 9. கார் பச்சையப்ப முதலியார் கடைக்கு முன்னால் நின்றது, அனைவரும் கடைக்குள் சென்றனர், அதற்குள்ளாகவே அந்தக் கடையில் பெண்கள் கூட்டம், நீங்க அதோ அங்கே காசித்துண்டு இருக்கு அந்தக் கௌண்ட்டர்லே வாங்குங்க நாங்க சும்மா உள்ளேபோயி பட்டுப் புடவையெல்லாம் புதுசா ஏதாவது வந்திருக்கான்னு பாத்துட்டு வந்துடறோம் . ஜானகி கல்யாணத்துக்கு இங்கேதான் வாங்கப் போறோம் என்ற ராஜம்.

நீங்க இந்தக் குழந்தைகளை உங்க கூட வெச்சுக்கோங்க, என்றபடி பெண்கள் கூட்டத்தில் கரைந்து காணாமல் போனார்கள் பெண்மணிகள் குழந்தைகளை வைத்துக்கொண்டு ராகவன் சமாளித்துக்கொண்டிருந்தார் கடை ஊழியர் சொன்னார் சார் ஒரு போன் போட்டு கேட்டுகிட்டு வரகூடாதா காசித்துண்டு இருந்ததெல்லாம் வித்துப்போச்சு நாளைக்கு வந்துடும் என்றார்.
வெகு நேரம் பொறுமையோடு காத்திருந்து நாகரீகம் கருதி தன் கோவத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு ராஜத்தை தேடிக்கொண்டு கடையுள்ளே பேந்தப் பேந்த முழித்தபடி உலாத்தினார் ராகவன்.

இரு புறமும் குழந்தைகளை கையில் பிடித்தபடி பெரிப்பா எனக்கு ஓண்ணுக்கு போகணும் என்றான் கிஷோர் கடைக்காரரை அணுகி ஏம்பா இந்தப் பையன் ஒன் பாத்ரூம் போகணுமாம் பாத்ரூம் இருக்கா என்றார் ஒரு வழியாக அவர்களை அழைத்துக்கொண்டுபோய் கையெல்லாம் சுத்தம் செய்து அழைத்து வந்தார்.
ராகவன், ஜனனீ பெரிப்பா இங்கே நாங்க வரும்போதெல்லாம் எங்க அம்மா பக்கத்து தெருவுலெ ஒரு பட்டாணிக் கடை இருக்கு பெரீய மார்கட் இருக்கு அங்கே கூட்டிண்டு போயி கடலை சுடச்சுட வாங்கிக் குடுப்பாங்க என்றாள்.

இருவரையும் அழைத்துப் போய் அந்தக் கடையில் கடலை குடுப்பா என்றார், அந்தக் கடைக்காரர் அடேடே வாம்மா உங்க அம்மா வரலையா அடிக்கடி வருவாங்களே என்றார் ராகவனுக்கு திக்கென்றது. ஒரு வழியாக மீண்டும் கடைக்கு வந்து உள்ளே சென்று அவர்களைக் கண்டு பிடித்து என்னம்மா செய்றீங்க மணியாச்சு சீக்கிரம் வாங்க கோயிலுக்கு போகணும் என்றார்.

கடை ஊழியர் சார் பொறுமையா இருங்க இப்போ ஒரு மணி ஆவுது கோயிலெல்லாம் மூடி இருப்பாங்க. நாலு மணிக்கு திறப்பாங்க என்றார் சரி என்றார் ராகவன். சரி எல்லாருக்கும் பசிக்கும் நீங்க எல்லாரும் போயி உங்க சாப்பாட்டை முடிச்சிட்டு வந்திருங்க நீங்க கேட்டபடி எல்லாப் புடவையையும் எடுத்து வைக்கிறோம் வந்து பாருங்க என்றார் கடைக்காரர் மரியாதையாக. அனைவரும் காரில் ஏறி உட்கார்ந்து ஹோட்டல் சரவணபவனுக்குள் நுழைந்து இடம் கிடைக்காமல் காத்திருந்து அதன் பின்னர் ஒரு வழியாக கிடைத்த இடத்தில் உட்கார்ந்து உணவை முடித்துவிட்டு மீண்டும் கடைக்கு வந்தனர், முகமலர்ச்சியுடன் வரவேற்றார் கடைக்காரர்.

மீண்டும் குழந்தைகளோடு போராடி எப்படியோ சமாளித்துக்கொண்டிருந்தார் ராகவன், மணி நாலு சரி கோயிலுக்கு கிளம்பலாம் என்றாள் கையில் ஒரு பெரிய பட்டுப்புடவை மூட்டையுடன் ராஜம், கடைக்காரர் கொடுத்த ரசீதுச் சீட்டை பார்த்தார் ராகவன் 10318.00 ரூபாய், தன்னுடைய பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து மௌனமாக அவரிடம் அளித்துவிட்டு, கடையிலிருந்து கிளம்பினார்.
கடைக்கு வெளியெ வந்தவுடன் கல்யாணி ஐயோ மறந்தே போச்சு இன்னிக்கு ராத்திரி எஙக் வீட்டுக்காரர் சிங்கப்பூருக்கு போறார் இனிமே கோயிலுக்கெல்லாம் போயிட்டு எப்போ வீட்டுக்கு போறது கோயிலெல்லாம் இன்னொருநாள் பாத்துக்கலாம் எங்க வீட்டுக்காரர் இவரை மாதிரி பொறுமை கிடையாது கத்துவார் என்றாள் ராகவனைக் காட்டி.

ராகவன் சரி என்றார் கார் நேராக தாமபரம் வந்து கல்யாணின் ராதிகா மற்றும் குழந்தைகள் கிஷோர் ஜனனீ எல்லோரையும் சேலையூரில் அவர்கள் வீட்டுக்குச் சென்று இறக்கி விட்டுவிட்டு, வீடு திரும்பியது வாடகைக்கார் ட்ரைவர் சார் நீங்க 500 ரூபாய் கொடுத்திருக்கீங்க, அதுபோக மீதி ரூபாய் குடுத்தா போதும் என்று சொல்லி ராகவன் கொடுத்த 1460 ரூபாயை வாங்கிக்கொண்டு தலையைச் சொரிந்தார். புரிந்தது ராகவனுக்கு, தனியாக ட்ரைவருக்கு 100 ரூபாய் அளித்துவிட்டு ராஜம் வாங்கியிருந்த புடவை மூட்டையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் சென்றார்.

மின்சார வெட்டு லிப்ட் வேலை செய்யவில்லை இரண்டு மாடிகளை ஏறி வீட்டுக்குள் நுழைந்து பெருமூச்சு விட்டார் ராகவன்.
மின்சாரம் வந்து விளக்குகள் பளீரென எரிய ஆரம்பித்ததுவிர்ரென்று லிப்ட் இயங்கியது ராஜம் ஏங்க இந்தப் பட்டுப் புடவையைப் பாருங்க ஜொலிக்குது என்றாள்.

ஏங்க நம்ம அண்ணா நகர்லேயே காதி கிராமோத்பவன் இருக்கு,அங்கே போயி காசித்துண்டு வாங்கலாம் என்றாள் சரி சரி அதை நான் பாத்துக்கறேன் இப்பிடீ பொடி நடையா போயி வாங்கிட்டுவந்துடறேன் என்றார் ராகவன்.
காசிக்குப் போனால்தானே எதையாவது விடவேண்டும். அதற்காக காஞ்சிக்கு ஏன் போகவேண்டும் ராகவன் யோசித்தார் சென்னையிலேயே காசித்துண்டை விட்டுவிடுவது என்று முடிவெடுத்தார் ராகவன் எப்போதுமே புத்திசாலி

 

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

வெற்றிச் சக்கரம் Copyright © 2015 by தமிழ்த்தேனீ is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book