"

27

செக்போஸ்ட்.


செக்போஸ்ட் என்றால் ஏதோ இந்தோ-பாக்கிஸ்தான் எல்லைச் சோதனைச் சாவடி என்று அர்த்தமல்ல. இந்த சோதனைச் சாவடிகள் அவ்வப்போது முளைக்கும் திடீரென்று காணாமல் போய்விடும்.

இவை வருவாய்த் துறை சோதனைச் சாவடிகள். நெல் அறுவடை சீசனில் நெல்லை வெளி மாவட்டங்கள் வெளி இடங்களுக்கு கொண்டுபோய் அதிக விலை வைத்து விற்பதைத் தடுக்கவும், அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய ஏதுவாகவும் ஏற்படுத்தப்படுபவை.  இதனால் விவசாயிகளுக்குப் பைசா லாபம் கிடைக்காது. நெல் வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் வேண்டுமானால் பலன் கிடைக்கும்.

இந்த செக்போஸ்ட்டுகள் ஏற்படுத்த உத்திரவானவுடன் இருக்கும் மற்ற பிரிவு குமாஸ்த்தாக்களைப் பிடித்து அனுப்பி வைத்துவிடுவர்.  இப்படி ஒரு நேரம் வருமா என்று சிலர் துண்டுபோட்டு முன்பதிவு செய்து காத்திருப்பதும் உண்டு.   அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த ருசி கண்ட பூனைகளின் அட்டகாசம் குறித்து அலுவலகத்திற்கு தகவல் வரும். அப்படிப்பட்ட சுவாரசியமான தகவல்கள்தான் இவை,

செக்போஸ்ட் போடப்போகிறார்கள் என்று சொல்லியே நெல் வியாபாரிகளை முடுக்கிவிட்டு பலன் அடைந்த அதிகாரிகள் உண்டு.

செக்போஸ்ட்டில் போய் அமர்ந்தவுடன் அங்கு வரும் வியாபாரிகள் அலுவலர்களைத் தொடர்பு கொண்டு சினேகமாகிவிடுவர்.  இன்ன நேரம் செக்போஸ்ட்டை கடக்கும் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அட்வான்ஸ் கொடுத்துச் செல்பவர்கள் உண்டு.  பணியில் உள்ள அலுவலர்களும் தமக்கு இன்ன நேரத்தில் டூட்டி என்றும் அப்போது மட்டும் வரவும் என்றும் தனக்கு பின்னர் டூட்டி பார்ப்பவன் வயிற்றில் அடிப்பதும் உண்டு.

அதைவிட ஒரு குமாஸ்த்தா அலுவலகத்திற்கு வந்து தாம் இன்னின்ன வெல்லாம் வசூல் செய்தேன் என்று பெருமை பேசுவதும் உண்டு.

அவர் செக்போஸ்ட் வழியாகச் செல்லும் நெல்லை மடக்குவதற்குப் பதிலாக கரும்பு, மணிலா, மரவள்ளி போன்ற கட்டை வண்டி லோடுகளையும் மறித்து தண்டம் வசூலித்துவிடுவார்.  யாராவது வண்டிக்காரர் தட்டிக் கேட்டால் நிலத்தில் விளைகிற எல்லாத்துக்கும் செக்போஸ்ட்டில் பணம் கொடுக்க வேண்டும் என்று கறாராக மறித்துவிடுவார்.  யாராவது தகறாறு செய்தால் உன் வண்டியில் உள்ளே நெல் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். எல்லா லோடையும் இறக்கிக் காட்டு என்று வண்டியை ஓரம் கட்டிவிடுவார்.

போதாக்குறைக்கு வண்டியில் வரும் கரும்புக் கட்டு மணிலா மரவள்ளி போன்ற பொருட்களை கொஞ்சம் பார்சல் கட்டி வீட்டுக்கு எடுத்துவந்துவிடுவார்.

இவர்கள் போக வர பேருந்தில் டிக்கட் எடுக்கமாட்டார்கள். கேட்டால் செக்போஸ்ட் என்று சொல்லிவிடுவர்.  அதிலும் யாராவது கண்டக்டர் ஒத்துழைக்கவில்லை என்றால் அந்த பேருந்தை செக்போஸ்ட்டில் நிறுத்திவைத்து வண்டி முழுவதும் வெடிகுண்டு சோதனை போன்று நடத்துவர்.

ஒரு குமாஸ்தா சற்று தமாஷ் பேர்வழி.  இரவு நேரத்தில் சவுக்கு சுமை ஏற்றிக்கொண்டு வரிசையாக பத்து பதினைந்து டயர்வண்டிகள் வரும். அந்த வண்டிகளில் டிரைவர் எல்லாம் தேவையில்லை.  வண்டிக்காரர் புறப்படும் இடத்தில் வண்டியைத் தட்டி ஓட்டிவிட்டு அப்படியே சாய்ந்து குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்துவிடுவர். இருட்டில் வண்டிபாட்டுக்கு போய்ச்சேரவேண்டிய இடத்துக்குப்போய் நின்றுவிடும்.  காலையில் லோடு இறக்கியதும் மீண்டும் அதே வழியில் திரும்பிவிடும். பெயருக்கு வண்டிக்காரர்  உட்கார்ந்திருப்பார்.

நண்பர் இரண்டு மூன்று வண்டிகள் வந்த தொகுதியை செக்போஸ்ட் வாசலில் நிறுத்தி வண்டியை வந்த வழியே திருப்பிவிட்டார். இவ்வளவும் வண்டியில் படுத்துத் துங்கிக்கொண்டிருந்த டிரைவருக்குத் தெரியவில்லை. அவ்வளவு குறட்டை.  மாடுகள் சற்றும் திணறாமல் வந்தவழியே போய்விட்டது.  எங்கே போய் நின்றதோ எப்போது கண்டுபிடித்தாரோ தெரியாது.  இது எப்படி இருக்கு.

அப்போதெல்லாம் நிறைய செக்போஸ்ட்டுகள் போடுவர். எதற்கு அந்த இடத்தில் போட்டார்கள் என்றே தெரியாது.  அதில் வரும்படி இல்லாத இடத்தில் மாட்டிக் கொண்டவர் வரும்படி உள்ளவர்கள் பேரில் புகார் எழுதிப் போடுவர். இப்படியாக, பலப்பல குழப்பங்களும் வந்ததும் எல்லோருக்கும் சமமான பலன் கிடைக்க அதிகாரிகள் ஒரு வழி செய்தனர்.

அவ்வப்போது சுழற்சி முறையில் மாறுதல் செய்து உத்திரவிடுவது.  இப்படியாக ஒரு வசூல் கோஷ்டிக்கு ராமாபுரம் என்ற கிராமத்திற்கு அருகில் வருமானம் இல்லாத இடம் கிடைத்துவிட்டது. அந்த வழியாக நெல்லோ கல்லோ ஏதாவது போனால்தானே. பொட்டல் வெளியில் எவன் போவான். எதேச்சையாக அந்த செக்போஸ்ட்டில் பணியமர்த்தப்பட்ட குமாஸ்தாக்களும் ஜவான்களும் ஊனமுற்றவர்களாக அமைந்துவிட்டனர்.  அவ்வளவுதான் அவர்களுக்கு வருமானம் வராத குறையை மாற்ற வழி தெரிந்தவிட்டது.  செக்போஸ்ட் அருகில் ஊனமுற்றோர் செக்போர்ஸ்ட் என்று எழுதி வைத்துவிட்டனர்.  விழைவு, அதிகாரிகள் கவனத்திற்கு வந்து உடனே அவர்களுக்கு வேறு இடம் கிடைத்துவிட்டது.

1971-ல் நானும் செக் போஸ்டில் உத்தியோகம் பார்த்தேன். ஒரு மாதம்கூட இல்லை. அதற்குள் தூக்கி விட்டார்கள். காட்டுமன்னர்கோயில் வடவாற்றின் கரையில் ஒரு ரைஸ்மில் வாசலில் புளிய மரத்தின் அடியில். கொட்டகைகூட கிடையாது. ஒரு குறுக்கு கழிமட்டும் உண்டு. நாங்கள் இரண்டுபேர். ஒரு பியூன் மட்டும் உண்டு. அவர் எங்களை சட்டை பண்ணவே மாட்டார். அலுவலகத்திலேயே இருப்பார். பகலில் மில் திறந்திருக்கும்போது மட்டும் துணிமணிகளை எடுத்து குளிக்க கொள்ள முடியும். இரவில் மூடி விடுவர். பணியில் மரத்தடியில் கேட்பாரற்று கிடக்க வேண்டியதுதான். ஒரு மண்ணெண்ணெய் விளக்கு கூட கிடையாது.

அதிகாரம் மட்டும் பறக்கும். ஒரு மணி நெல் கூட வெளியே போகக்கூடாது என்று TSO கடுமையாகப் பேசுவார். அதிகாரி சிதம்பரத்தில் இருப்பார். எது ஒன்று என்றாலும் எந்த நேரத்திலும் போன் செய்யவேண்டும் என்று உத்திரவு.

ஒருநாள் லாரி ஒன்று வடவார் வரை வருவதும் நாங்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு திரும்பி விடுவதுமாக இருந்தது. நாங்கள் இருவரில் ஒருவர் காவல் காப்பதும் ஒருவர் காட்டுமன்னர்கோயில் துணை வட்டாச்சியர் அலுவலகத்துக்கு ஓடி சிதம்பரத்துக்கு போன் செய்வதுமாக இரவு முழுவதும் சரியாக இருந்தது. அந்தோ ஃபோனை ஒரு பாவியும் எடுக்க வில்லை. இதற்கு ஏன் இந்த அதிகாரிகள் பந்தாவாக அறிவுரைகள் தந்தனரோ. கடைசியில் பகலிலேயே அந்த லாரி செக் போஸ்ட் அருகில் உள்ள வடவாற்றங்கரை வழியாகப் போய்விட்டது. கடைசியில் பார்த்தால் சற்று தொலைவில் குறுங்குடி என்ற ஊரில் அமைத்திருந்த சிறு பாலத்தின் வழியாக மறு கரையில் அடுக்கிவிட்டு காலி லாரியை செக் போஸ்ட் வழியாக கொண்டுசென்று நெல்லை ஏற்றிக்கொண்டு போய்விட்டனர்.

மறுநாள் இந்த விவரத்தினை அதிகாரியிடம் சொன்னால் அதைப்பற்றி உனக்கென்ன. நீ ஒழுங்கா வேலை பார் என்று சொல்லிவிட்டார்கள். இன்னொரு நாள் இரவு மாட்டு வண்டிகளில் நெல் மூட்டைகள் வந்தன. நாங்கள் வண்டிகளை மறித்து விட்டோம். வண்டியுடன் பத்து பேராவது வந்தனர். எல்லாம் அறுவடைக்கு வந்து கூலி நெல் எடுத்து செல்வதாகவும் அனுமதிக்கும்படியும் கோரினர். நாங்களோ உத்திரவு வாங்கிவந்தால்தான் விடுவோம் என்று பிடிவாதமாக இருந்தோம். லேசான நிலவு வெளிச்சம் மட்டும்தான் துணை எங்களுக்கு. அடுத்தடுத்து இருபத்தேழு வண்டிகள் நிற்கிறது. நூறு நூற்றைம்பதுபேர் கூடிவிட்டார்கள். என் முகத்துக்கருகில் வந்து தீக்குச்சி உரசி பயமுறுத்துவதும் கண்டபடி பேசுவதும் தாங்கவில்லை. இருந்தாலும் இருவரும் பிடிவாதத்தை விடவில்லை.

திடீரென்று ஒரு குரல் கேட்டது எடுங்கடா வண்டியை என்று.  அவ்வளவுதான் எல்லோரும் வண்டியை கிளப்பிக்கொண்டு போய்விட்டனர். எங்களை அசைய விடாமல் ஐம்பது பேருக்கு மேல் சுற்றி நின்றுகொண்டனர். நாங்கள் போர்க்களத்தில் நிராயுத பாணியாக தோல்வியை தழுவினோம். மறுநாள் TSO விடம் சொன்னால் அவர் கண்டுகொள்ளவில்லை.

அதிலிருந்து யாராவது வந்து ஓரிரு மூட்டை எடுத்துச்செல்ல அனுமதி கேட்டால் நாங்கள் பக்கத்தில் உள்ள குறுக்கு வழியை காட்டி எடுத்து செல்லுங்கள் என்று சொல்லிவிடுவோம்.

திடீரென்று ஒருநாள் காலையில் இருவரையும் அலுவலகத்துக்கு வரச்சொன்னார்கள் செக் போஸ்டை அனாதையாக விட்டுவிட்டுப் போய் அதிகாரி முன்பாக ஆஜரானோம். அவரோ நேற்றே செக் போஸ்ட் எடுத்தாச்சு.  நீங்க வீட்டுக்கு போகலாம் என்றார்.

எதற்கு செக் போஸ்ட் போட்டார்களோ எதற்கு எடுத்தார்களோ. எடுத்தேன் கவிழ்த்தேன் திட்டங்கள் இப்படி நிறைய உண்டு.

நான் துணை வட்டாட்சியர் ஆனபோது மாமங்கலம் என்ற கிராமத்தில் செக்போஸ்ட் போட்டவுடன் பணி அமர்த்தப்பட்டேன்.  முக்கியமான இடம் என்று குறிப்பிட்டு அங்கு துணை வட்டாட்சியர் நிலை பணியிடம் வழங்கப்பட்டது.  அந்த இடத்தின் வழியாக மெயின்ரோட்டின் மூலம் யாரும் நெல்லைக் கொண்டு போக வாய்ப்பு இல்லை.  மேலும் அந்த ஆண்டு நெல் விளைச்சல் அமோகமாக இருந்து அரசாங்கமே போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது.  எதற்காக செக்போஸ்ட் கொண்டு வந்தார்கள் என்றே தெரியவில்லை.

ஒருநாள் DRO தணிக்கைக்கு வந்தார். நெல் போகிறதா என்றார்  நான் சொன்னேன். இந்த செக் போஸ்ட் பெயருக்கு போடப்பட்டுள்ளது. காட்டுமன்னர்கோயில் நெல் போவதற்கு தெற்கே மீன் சுருட்டி பாதை உள்ளது. வடக்கே சிதம்பரம் நெல் சேத்தியாதோப்பு வழியாக போகிறது. TNCSC நெல் போவதைக் கண்காணிக்க மட்டும்தான் இந்த செக் போஸ்ட் இருக்கிறது என்றேன்.  அவருக்கு சிரிப்பு வந்துவிட்டது.

ஒரு பட்டறையில் தங்கிக்கொண்டு ஒரு மாதம் வேலை பார்த்தோம். அப்புறம் ஒருநாள் ஒரு கூரை கொட்டகை கட்டிக் கொடுத்தார்கள். ஒருமாதம்கூட ஆகவில்லை. திடீரென்று எடுத்துவிட்டார்கள்.

செக்போஸ்ட் போட்ட மறுநாள் ஒரு முதிர்ந்த பையன் சட்டை பட்டன் எல்லாம் திறந்திருக்க முன்பக்கம் சற்று குனிந்த வண்ணம் “சிக்கு போ……ஸ்ட்” என்று கத்திக்கொண்டே, சட்டை இரண்டுபக்கமும் இறக்கை போல் பறக்க  வந்து எங்கள் அண்மையில் தரையில் உட்கார்ந்துகொண்டான். சாப்பாட்டு நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் இப்படி கத்திக்கொண்டு வந்து உட்கர்ந்து கொள்வது அந்த படிப்பை பாதியில் விட்ட மாணவனுக்கு வாடிக்கை.

செக்போஸ்ட் போட்டவுடன் இரண்டு மூன்றுபேர் அருகில் வந்து உட்கார்ந்துகொண்டு நம்மிடம் கதை பேசிக் கொண்டிருப்பர்.  இவர்களுக்கு வேலை ஒன்றும் இல்லையோ என்று எனக்கு  சந்தேகமாக இருக்கும்.  இப்படி பரிச்சயம் செய்து கொண்டு அங்கு பணிபுரிபவார்களுக்கு உதவிகள் செய்து கொடுத்து அவர்களுக்குக் கிடைக்கும் மாமூலில் பங்கும் பெற்றுக் கொள்வர் என்பது பின்னர்தான் ஒரு தலையாரிமூலம் தெரியவந்தது.  இல்லாத வியாபரத்தில் பங்குக்காக உட்கார்ந்திருக்கும் நபர்களை என்ன சொல்வது.

ஆனால் அங்கு ஒரு காட்சி அரங்கேரும். தினமும் காலையில் ஒரு போலீஸ் வேன் வரும். எதிரில் ஒரு டீக்கடையில் வந்து டீ சாப்பிட்டுவிட்டு அந்தக் கடைக்காரரிடம் துப்பு வாங்கிக்கொண்டு சாராய வேட்டைக்கு செல்வர். வரும்போது சில சமயம் சிறிய அலுமினியப் பானைகள் கொண்டுவருவதைப் பார்த்திருக்கிறேன்.  நானும் அது டீக்கடைதான் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.  ஒருநாள் என் தலையாரி சொன்னார்.  “உலகத்திலேயே சமத்துவம் இங்குதான்யா இருக்கு” என்று.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நான் ஏற்கனவே அதே பகுதியில் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்தபோது என்னிடம் வேலை பார்த்த வயதான தலையாரி.  அவர் சொன்னார்.  “தகப்பன் இன்னும் விபரம் தெரியாமதான்யா இருக்கீங்க.  எதுத்தாப்பல இருக்குறது டீக்கடை மட்டும் இல்லீங்க அங்க சாராயமும் கெடைக்குங்கய்யா. நீங்க வேணா கவனிச்சு பாருங்க தோட்டப்பக்கமா சிலர் போவாங்க முன் வாசல்ல சிலர் போவாங்க.  வெளியிலே எல்லா பயலும் வெட்டிக்குவாங்க. சாரயம் குடிக்க மட்டும் முன்னால ஒருத்தன் போவான் பின்வாசல்ல ஒருத்தன் போவான்.  இவன் குடிச்ச எச்சி கிளாஸ்ல அவன் குடிப்பான் அவன் குடிச்ச எச்சி கிளாஸ்ல இவன் குடிப்பான்.  அப்பல்லாம் சாதில்லாம் தெரியாதுங்க.  அதான்யா இங்கதான் சமத்துவம் இருக்குனு சொல்றேன். இது மாதிரி எங்கயாச்சும் பாத்திருக்கிங்ளா அய்யா” என்றார். எனக்கு பொட்டில் அறைந்தமாதிரி இருந்தது.

நான் அதுநாள் வரை ஏதோ வாகனம் நிறுத்தி வைக்க அந்தப் பக்கம் போகிறார்கள் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்.

இப்படியாகப்பட்ட நாளில் ஒருநாள் ஒரு போலீஸ் ஜீப் வந்தது.  சேக்போஸ்ட் வாசலில் நிறுத்தி ஒரு ஏட்டையாவை இறக்கிவிட்டு எங்கள் செக்போஸ்ட்டில் அவரை தங்க அனுமதிக்கும்படி தெரிவித்து சென்றுவிட்டனர்.  அவரும் அங்கேயே இருந்தார்.  ஏதோ பிரச்சினை காரணமாக அங்கங்கே போலீஸ் பந்தோபஸ்து ஏற்பாடு ஆகியிருந்தது.  கடலுருக்கு சம்பளம் வாங்கச் சென்றவரை வண்டியில் ஏற்றிக் கொண்டுவந்து இறக்கிவிட்டனர். அவர் சாப்பிட்டாரா மாற்று உடை வைத்திருக்கிறாரா என்றெல்லாம் யாருக்கும் கவலையில்லை.

அவரும் தேமே என்று அன்று இரவைக் கழித்தார். மறுநாள் அவரை, தொடர்ந்து அங்கேயே இருக்கும்படி உத்திரவாகியது.  அவரும் அதே துணியுடன் இருந்தார்.  எதிர் டீக்கடையில் சாப்பிட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.  எந்த சம்பவமும் எங்கும் நடக்கவில்லை. அவர் வீட்டுக்குப் போகலாம் என்று நினைக்கையில் வேறு ஒரு பிரச்சினை என்று தகவல் வந்து அவர் மீண்டும் அங்கே இருக்க வேண்டியதாகிவிட்டது. மறுநாள் அவர் காலையில் எங்களிடம் கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு எதிரில் இருந்த ஒரு போர் செட்டில் போய் குளித்துவிட்டு துணிகளை உலர்த்திக்கொண்டிருந்தார்.  அந்த நேரம் பார்த்துதானா அதிகாரி வரவேண்டும்.  அவர் டூட்டியில் இல்லை என்று அதிகாரிக்கு கோபம் தலைக்கேற ஆரம்பித்துவிட்டது.  நான் சொன்னேன் அவர் மூன்று நாளாக இங்கேதான் உட்கார்ந்திருந்தார்.  வியர்வை நாற்றம் தாளவில்லை என்று அதோ எதிரில் குளித்து யூனிபார்மை உலர்த்திக்கொண்டிருக்கிறார் பாருங்கள் என்றதும்தான் சற்று குளிர்ச்சியானார் அதிகாரி.  அதற்குள் காயாத உடைகளை அவசரம் அவசரமாக அணிந்துகொண்டு ஓடிவந்து சல்யூட் அடித்தார் காவலர்.

அதிகாரியும் போய்விட்டார்.  முன்தினம் நாங்கள் கூட அருகில் உள்ள அவரது வீட்டுக்கு போய் வாருங்கள் என்று ஆலோசனை சொன்னோம்.  அவர் மறுத்து கடமையில் கண்ணாயிருந்தார்.  இந்நிலையில் ஷேவ் செய்யாமல் பார்த்தால் அதிகாரி கோபிப்பார் என்று எதிரில் ஒரு பிளேடு வாங்கிவந்து அவ்வளவு நாசூக்காக வெறும் பிளேடினால் சவரம் செய்துகொண்டார் அவர்.  அப்போதுதான் நான் நினைத்தேன் இப்படியெல்லாம் கைகட்டி வாய்பொத்தி வேலை பார்ப்பதைவிட ஒரு தொழிலைக் கற்றுக்கொண்டு குறைந்த வருமானமானாலும் சுதந்திரமாக இருக்கலாமோ என்று.

செக்போஸ்ட் போட்டு நான் பணியேற்று பத்து நாள் கூட இருக்காது. பக்கத்து கிராமத்திற்குத் தகவல் பரவிவிட்டது. முன்னாள் வருவாய் ஆய்வாளர்தான் நம் ஊரில் செக்போஸ்ட்டில் வேலை பார்க்கிறார் என்று.  அங்கிருந்து ஒருவர் வந்தார்.  அவரைப் பார்த்த ஞாபகம்.  அதற்கு மேல் தெரியவில்லை.  ஆனால் வந்தவர் என்னை கட்டிக் கொள்ளும் நோக்கில் வேகமாக முகமெல்லாம் பல்லாக உடலெல்லாம் புல்லரிக்க மனமெல்லாம் மகிழ்ச்சியாக நேராக கொட்டகைக்குள் நுழைந்தார்.  அவரது உயரத்திற்கு அவரது வழுக்கை மண்டையில் மூங்கில் கழி இடித்து ரத்தம் வந்துவிட்டது.  எனக்கு அதிர்ச்சி. அவரோ சற்றும் சட்டை செய்யாமல் என்னை அணுகி குசலம் விசாரித்தார்.  சற்று நேரம் கழிந்துதான் தெரிந்தது.  அவர் நான் ஆர்.ஐ-ஆக இருந்தபோது என்னிடம் ஒரு வாரிசு சான்றுக்காக வந்து என்னுடைய நடவடிக்கையில் மயங்கி என்னை அவ்வளவு தூரம் நேசித்திருக்கிறார் என்று.  நானும் அவரை நினைவில் வைத்திருந்தாலும் அவர் அளவிற்கு நான் தகுதியானவன் அல்ல.

அந்த நினைவுகளை இன்றும்கூட அசைபோட்டால் மனம் கசிந்துவிடும்.  நான் ஆர்.ஐ.-யாக இருந்தபோது அந்த கிராமத்திலிருந்து கபிரியேல் என்ற அந்தப் பெரியவர் தமது தம்பி இறந்துவிட்டதற்காக அவரது மனைவியையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.  அப்போது மின் அழுத்தம் மிகமிகக் குறைவாக இருந்ததால் திருடன் வீட்டு தீவட்டி மாதிரி விளக்கு எரிந்துகொண்டிருந்தது.  அவர் நேராக கடைக்குச் சென்று 200 வாட்ஸ் பல்பும் 110 ஓல்ட்டில் எரியும் இரண்டு பல்புகளும் வாங்கிவந்து மாட்டிவிட்டார். நம்ம வீட்டில் யாரடா பல்பு மாட்டுகிறான் என்று துணுக்குற்று விசாரித்தால் அந்தப் பெரியவரின் கைங்காரியம்.  லஞ்சத்தை பல்பாக கொடுத்ததாக நினைத்து அவரை சற்று கடிந்துகொண்டேன்.  அதன் பின்னர்தான் தெரிந்தது அவர் என் ஓ.ஏ.விடம் மன்றாடி அனுமதி வாங்கி மாட்டிவிட்டது.  அதற்கப்புறம் அவர் வரும் நேரம் எல்லாம் என்னை பார்த்து விசாரிக்கும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது.  நானும் கிராமத்திற்குப் போனால் அவரைப் பற்றி விசாரிப்பேன்.  சுமார் இருபது ஆண்டு இடைவெளியில் அவர் என்னை நினைவில் வைத்து தம்மைச் சேர்ந்தவராக எண்ணி என்னைப் பார்க்க வந்ததே பெரிய விஷயம்.  அதில் அவர் உணர்ச்சி வயப்பட்டு மண்டையை உடைத்துக் கொண்டதை என்னென்பது.  அன்பு என்பது கடையில் வாங்கும் பொருளல்ல. உணர்வுகளால் பின்னப்பட்டது.  சில ஆண்டுகள் கழித்து அவர் இறந்தபோது எனக்கு தகவல் தெரிவித்த அந்தக் குடும்பத்தின் உணர்வுகளை என்னென்பது.

தொடர்புடைய இன்னொரு தகவல் தெரியுமா. அன்று அவர் வாங்கிக்கொடுத்த  200 வாட்ஸ் பல்பு முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்தும் நல்ல நிலையில் இருக்கிறது.  அதுவும் எங்கள் வீட்டுக் கொலுவின்பொது அதைப் பயன்படுத்துகிறோம்