27

கார்குழல் பேடையாள்

கானமிசைக்க இந்திய வீணை

கானம் பாட தயார்!

ஒண்ட வந்த பேடையாலே

ஒருங்கு திரண்ட தந்திகள்

அபஸ்வரமாய் மாறலாமோ!

விருந்தும் மருந்தும்

பேடைக்கும் ஒன்றுதான்!

வான்வெளியில் சிறகடிக்க

தனக்குரிய இடத்தை

எந்நாளும் தாரைவார்க்க

அமைதிப்பூங்கா அதிபதி

தமிழ்ப்பேடை அனுமதியாள்!

வெண்டைப்பிஞ்சு விரலாள்

சாமகான வீணை தடவ

சப்தஸ்வரங்கள் இனிதாக

சப்தமின்றி பறந்திடுவாய்!

தமிழ்மகள் கானம் இனிதாக

யாரும் இருக்கும்இடத்தில்

இருந்து விட்டால்

எல்லாம் சுகமே!

பிரிவினை வேண்டும்

வரலாறு இங்கே

முடிந்து போன அத்தியாயங்கள்!

மண்மகள் விரிந்திட்டால்

பூமிதனில் ஒருசாண்கூட

யாருக்கும் சொந்தம் இல்லை!

கடல்எல்லைகள் கணக்காக

யாருக்கும் சொந்தமில்லை!

இன்னொருமுறை வெடிகுண்டுப் பாடம்

படிக்க தமிழ்ப்பேடை தயாரில்லை!

அமைதிப்பூங்காவில் தமிழ்மகள் ரோஜாக்கள்

அமைதியாக உறங்குகின்றன!

அனாதைகள் யாரும் அவர்களாய்

பிறப்பதில்லை!

உருவாக்கும் விதிகளுக்கு

யார் இங்கே பொறுப்பேற்பது!

சுயநல துதி பாடிய மக்களிடையே

கருடபுராணம் பாடி யார் அங்கே நிற்பது?

குடும்பக்கோவிலில் ஒவ்வொரு

சிலைகளும் அதி முக்கியமே!

பறந்துவிடு! உரிமையான

பங்கிருந்தால் உணர்ந்து

வெள்ளைப்புறாவாய் மாறி

அதனை வென்றுவிடு!

அர்த்தமற்ற அனர்த்தங்கள்

இனியாவது இல்லாமலிருக்க

மனதை மாற்றிப் பறந்திடுவாய்!

சிந்தாமணி மீட்டிய தமிழ்ச்சுவையில்

கின்னரங்கள் மயங்கலாம்!

கிடைக்காத பனுவல்களைத் தேடி

எடுத்துக் கொணர்ந்திடுவாய்!

தமிழ்ச்சுவையால் மட்டுமே

ஒருங்கிணைந்தோமன்றி

வேறெதாலும் அல்ல

என்றே உணர்ந்திடுவாய்!

அரிதினும் அரிதான

அப்துல்கலாமின் புகழ்பாடி

நற்புகழ் பேடை ஆசிரியனாய் உயர்ந்திடுவாய்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

சோலை வனம் - கவிதைகள் Copyright © 2015 by இரா. பாரதி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book