31
இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதில் இருந்தே வருத்தமாக இருந்தது. ஏனென்றால் அவர் எப்போதும் இயங்கிக் கொண்டே துடிப்பான இளைஞர் போல் ஓய்வின்றி இருந்தவர். எப்படியும் மீண்டு(ம்) வந்துவிடுவார் என்று நம்பியிருந்தேன். ஆனால் அது பொய்யாகிவிடும் என்று நினைக்கவில்லை. உத்தம வில்லன் வெளியாகும் வரையேனும் இருப்பார் என்று நினைத்தேன்.
Eventually death gave him retirement! நண்பர், உறவினர் மத்தியில் கேபியின் தீவிர ரசிகனாக அறியப்படுபவன் நான். Orkut காலத்தில் பல கேபி படங்களுக்கு Community Owner-ஆக இருந்தேன். ஒத்த ரசனை நண்பர்களும் கிடைத்தனர். பலர் என்னை அழைத்து என் வீட்டில் துக்கம் நிகழ்ந்தது போல் வருத்தம் தெரிவித்தனர்.
கேபி எனக்கு முதலில் அறிமுகமானது சின்னத்திரை மூலம்தான். அப்போது பதின்வயது கூட தொடங்கி இருக்கவில்லை. இப்போது போல் மெகா சீரியல்கள் இல்லாத காலத்தில் ‘பாலச்சந்தரின் சின்னத்திரை‘ என்று 1995ல் சன் டிவியில் வாரந்தோறும் திங்கள் இரவு 7.30க்கு ஒளிபரப்பப்பட்டது. அம்மா கேபி ரசிகை என்பதால் அவருடன் சேர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். நடுத்தர வர்க்க மக்கள் வாழ்வை அசலாய்ப் பதிவு செய்திருந்தார். நம் வீட்டில் நடக்கும் சம்பவங்களைப் போலவே இருந்ததில் ஈர்க்கப்பட்டேன். கையளவு மனசு, காதல் பகடை, ப்ரேமி, ஜன்னல் என ஒவ்வொரு தொடரையும் வாரந்தோறும் குடும்பத்துடன் பார்ப்போம். ரகுவம்சம் தினம் இரவு (125 பகுதிகள்) ஒளிபரப்பானது. தமிழின் முதல் மெகா சீரியல் அதுவே.
அப்போது சன் மூவீஸ் என்றொரு சேனல் இருந்தது. பின்னாளில் அதுவே கே டிவியானது. கேபியின் படங்கள் அதில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. அதில்தான் அவரது பல படங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. எட்டாவது வகுப்பின் அரையாண்டு விடுப்பு முடிந்து பள்ளி சென்ற போது மாணவர்களுடன் தோழமையாகப் பழகும் ஆசிரியர் எல்லோரிடமும் விடுமுறையில் பார்த்த படங்களைப் பற்றிக் கேட்டார். என்னைக் கேட்டபோது ‘எதிர் நீச்சல்’ என்று நான் சொன்னதும் ‘அது பழைய நாகேஷ் படமாச்சே?’ என்றார். நான் ‘அதே பழைய பாலசந்தர் படம் தான் சார்’ என்று சொன்னதும் சற்று அசந்துதான் போனார். ‘பாலசந்தர் படம் எல்லாம் இந்த வயசுல பாக்குறியா? பெரியவங்களுக்கே அது புரிஞ்சுக்கறது கஷ்டம்!’ என்று சொன்னபோது சக மாணவர்கள் முன் ஒருவித பெருமிதம் ஏற்பட்டது. மேலும் கொஞ்சம் intellectual என்று என்னைக் காட்டிக் கொள்ளவும் சற்று தனித்து தெரிய விரும்புபவன் என்பதாலும் தொடர்ந்து கேபியின் படங்களைப் பார்த்தேன். ஒவ்வொரு படமும் என்னை வசீகரித்து மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அதிலிருந்து புதிதாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்வேன்.
அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் உள்ள ஷாக் வேல்யூ, உறவுச் சிக்கல்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. என்னைப் புரட்டிப் போட்ட படம் என்றால் அது அவள் ஒரு தொடர்கதை. சிறு வயதில் அதன் வசனங்கள் புரியவில்லை. அம்மாவிடம் கேட்டால் ‘பெரியவனானா புரிஞ்சுக்குவ‘ என்பார். அவள் ஒரு தொடர்கதை படத்தை அரங்கில் பார்த்துவிட்டு அதன் தாக்கத்தில் தான் சைக்கிளில் வந்ததை மறந்து வீட்டுக்கு நடந்தே சென்றதாகப்பின்னாளில் இயக்குனர் வஸந்த் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.
அரங்கேற்றம் படம் வீட்டில் பார்த்த போது என் அம்மா தானே அதைத் திருமணத்திற்குப் பிறகுதான் பார்த்ததாகவும் அதற்கு முன் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும் சொன்னார். ‘இந்தப் படமெல்லாம் சின்ன பசங்க பாக்க கூடாது‘ என்று அவர் அம்மா போல் எனக்கும் சொல்லாததற்கு அவருக்கு நன்றி. அவரது நூறாவது படைப்பு என்று விளம்பரத்துடன் வந்த பார்த்தாலே பரவசம் படத்தை அம்மாவுடன் பார்த்து வருந்தி அவரைத் திட்டி ஒரு கடிதம் எழுதி இதுவரை அனுப்பாமலே வைத்திருக்கிறேன்.
கேபியின் மிகப் பெரிய பலம் அவரது பாத்திரப்படைப்பு. குறிப்பாக அவரது பெண் கதாபாத்திரங்களான கவிதா, லலிதா, பைரவி, கண்ணம்மா, சிந்து, நந்தினி சிஸ்டர், சஹானா என எத்தனை! திரையில் தோன்றாத பாத்திரங்களைக் கூட மனதை விட்டு நீங்காத வண்ணம் உருவாக்கியவர் – ‘இருமல் தாத்தா‘, ‘அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள்‘, திருமதி.அர்தனாரி. அஃறிணை கதாபாதிரங்களுக்கும் உயிர் கொடுத்தவர்– ‘அச்சமில்லை அச்சமில்லை‘ அருவி, ‘அழகன்‘ தொலைபேசி என்று டைட்டில் கார்டில் பெயர் கொடுத்தவர். ஜேகேபி, உதயமூர்த்தி, அழகப்பன் போன்ற ஆண் கதாபாத்திரங்களை விட பிரசாத், ராமநாதன், பிரகாஷ் (கல்கி பிரகாஷ்ராஜ்) போன்ற எதிர்மறை கதாபாத்திரங்களை அதிகம் ரசிப்பேன்.
முதன்முதலில் இயக்குநருக்காக பார்க்கப்பட்ட படங்கள் என்று அவரது படங்கள் பாராட்டப்பட்டாலும் அதிக நாடகத்தன்மை கொண்டவை என்று விமர்சிக்கவும் பட்டன. ஆனால் அவற்றை நிராகரிக்க முடியாது. எழுத்துக்கு ஜெயகாந்தன் போல திரைக்கு பாலசந்தர். தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு பாத்திரப்படைப்பு, காட்சியமைப்பு, வசனம், பாடல் என ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதித்தார்.
படம் பார்க்கையில் ஒவ்வொரு வசனத்தையும் மனப்பாடமாய் சொல்லிக் கொண்டே பார்ப்பேன் (‘இது மாதிரி பாடத்த ஒழுங்கா மனப்பாடம் பண்ணிருக்கலாம்‘ என்று அப்பா சொல்வார்). படத்தைப் போலவே இசையும் சிறப்பானதாக இருக்கும். எம்எஸ்வி, வி. குமார், இளையராஜா, ஏஆர் ரஹ்மான், மரகதமணி, லக்ஷ்மிகாந்த் பியாரேலால், தேவா என்று எந்த இசையமைப்பாளரிடம் பணிபுரிந்தாலும் அவரது Best-ஐ வாங்கிவிடுவார். கர்நாடக இசை அறிந்தவர். அபூர்வ ராகங்கள், சிந்து பைரவி, உன்னால் முடியும் தம்பி போன்ற படங்களில் கர்நாடக இசைப் பின்னணியில் சமூக கருத்துகளைச் சொன்னார். எனக்கு கர்நாடக இசை மீது நாட்டம் ஏற்பட்டதற்கு அவர் படங்களும் முக்கிய காரணம். ‘சஹானா’ ராகம் அவருக்கு மிகப் பிரியமானது. அவர் படங்கள் மூலம் எனக்கும் பிடித்த ராகமானது. பெண் குழந்தை பிறந்தால் சஹானா என்றுதான் பெயர் வைக்க வேண்டும் என்று கல்லூரியில் படிக்கும் போதே எண்ணிக் கொண்டேன்.
பாடல்களைக் காட்சிப்படுத்தும் விதத்திலும் சிறப்பு. ஒரு நாள் யாரோ, அடுத்தாத்து அம்புஜதப் பாத்தேளா, தெய்வம் தந்த வீடு, கடவுள் அமைத்து வைத்த மேடை, ஜூனியர், சிப்பி இருக்குது முத்தும் இருக்குது, என்ன சத்தம் இந்த நேரம், இதழில் கதை எழுதும் நேரமிது, சங்கீத ஸ்வரங்கள் என்று ஒவ்வொரு பாடலும் பார்ப்பதற்கும் சுகம். பாடல்களைப் போல் பாடல்வரிகளும் மிகச் சிறப்பாய் கதையுடன் இழைந்த வண்ணம் இருக்கும். பாரதியையும் அவரது வரிகளையும் எப்படியாவது கொண்டு வந்து விடுவார்.
அவரது படங்கள் பார்த்து எனக்கும் படம் இயக்கம் கனவு உருவானது. அவரை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும் என்றும் அவருடன் உதவி இயக்குனராக பணி புரிய வேண்டும் என்றும் மிகுந்த ஆசை இருந்தது, அது நிறைவேறாமலே போய் விட்டது. ஆனால் தோழி ஒருவர் கேபியின் மேனேஜர் மூலம் தொடர்பு கொண்டு கேபியை என் பிறந்த நாளன்று என்னிடம் பேச வைத்தார். என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் அது. முதலில் அவர் மேனேஜர் என்னிடம் பேசி கேபி பேசுவார் என்று சொன்னபோது நான் என் நண்பர்கள்தான் யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்து விட்டேன். சில நொடிகளில் அவர் குரலைக் கேட்டதும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்போது இருந்த மனநிலையில் அதைப் பதிவு செய்ய வேண்டும் என்றுகூட தோன்றவில்லை. என் ஆகச்சிறந்த பிறந்தநாள் வாழ்த்து அது!
அவரிடம் பலர் நேரடியாகப் பணிபுரிந்திருந்தாலும் அவரை துரோணராக பாவித்த, பாவிக்கின்ற பல ஏகலைவர்களும் உள்ளனர். அவர் இடத்தை இனி ஒருவர் அடைவது கடினம். இறந்தாலும் இன்னும் பல இயக்குனர்களை inspire செய்து கொண்டே இருப்பார். ஒரு ரசிகனாக அவருக்கு என் மனப்பூர்வ அஞ்சலி.
***