"

15

அந்நியோன்யமாய் வாழ்றதுக்கு உதாரணமா எங்களைத்தான் சொல்வாங்க.

அந்நியோன்யம் அப்படீன்னா சண்டை போடாமல் போலி முகத்தோட வாழ்றதுன்னு நினைச்சீங்களா?

நானும் பூரணமும் போடாத சண்டையா! பிள்ளைகள எங்க படிப்பிக்கிறது என்றதில இருந்து தோட்டத்துல எந்த மரம் இருக்கணும் இருக்கக்கூடாதுங்கிற வரைக்கும் சண்டை பிடிச்சிருக்கோம். என்ன அவளோட சண்டை எல்லாம் கீச்சுக்கிளி போல அமத்தலாயிருக்கும். நான் தான் நாய் போல ஊழையிட்டு கத்துவேன்.

நூல் சேலை தவிர எதையும் அவள் உடுத்த விட்டதில்ல. வேற ஆடை உடுத்த அவளுக்கு விருப்பமானு கூட எனக்குத்தெரியாது. ஆனா எனக்கு என்ன, எங்கே, எப்படி வேணுங்கிறதெல்லாம் அவளுக்கு அத்துப்படி.

அதிர்ந்து பேச மாட்டாள், நடக்க மாட்டாள். அவளுக்கும் சேர்த்து என் சத்தம் தான் வீட்டில கேக்கும். பள்ளிக்கூடத்துல எப்படி நீ படிப்பிக்கிற என்று எத்தனையோ தடவை பரிகாசம் பண்ணியிருக்கேன்.

ஆனா பிள்ளையளுக்கு எந்த டீச்சரை அதிகம் பிடிக்கும் எண்டு கேட்டா பூரணம் டீச்சர் தான் என்று இவ பக்கம் கைகாட்டுவாங்க. நானும் தான் டீச்சராயிருக்கேன். எட்டி நின்று பவ்வியமாய் குட்மார்னிங் சொல்ற பிள்ளைகள், பூரணத்தின் சேலைத்தலைப்பை பிடித்தபடி பள்ளிக்கூடமெங்கும் அலையுறதை நானே எத்தனை தடவை கண்ணால பார்த்திருக்கேன்.

சிக்கனம் பற்றி சொல்லிக்கொடுத்தா, சேவை பற்றி சொல்லிக்கொடுத்தா, மற்றவங்களோட கதைக்கிறது எப்படி, பழகுறது எப்படி, யாருக்கு உதவி செய்ய வேணும், யாரை வீட்டுக்குள்ள சேர்க்க வேணும் எண்டு சொல்லிக் கொடுத்தா. சின்னப்பிள்ளைகள எப்படி தூக்குறது என்டது முதல் அவங்களுக்கு எப்படி பாலூட்டுறது என்கிறது வரைக்கும் செய்து காட்டினாள்.

ஊருக்குள்ள நாலு வீடு கட்டி, பிள்ளையளப் படிப்பிச்சி, ஆளாக்கி மாஸ்டர் தலை நிமிந்துட்டார்ன்னு சொன்னாங்கன்னா, அதன் காரணம் நானா? இல்ல, பூரணம் இல்லாட்டி என் வாழ்க்க பூரணமாயிருக்குமா?

அவளோட அழகுக்காக இல்ல, குணத்துக்காக தான் அவள கல்யாணம் கட்டினனான். அந்தக் காலத்திலயே ஊர எதிர்த்துக் காதல் கல்யாணம் பண்ணிக்கிற அளவு தைரியமும், திடமும் இருந்த அவளுக்கு, கோபப்படத் தெரியாதுண்டா யாராவது நம்புவாங்களா?

காதல் எண்டு சொல்லி கண்ட கண்ட இடத்தில அசிங்கம் பண்ணதில்ல. எங்கட பிள்ளையளுக்கே தெரியாமல் ஒவ்வொரு நாளும் எங்களோட அந்தரங்க வாழ்க்கை அப்படி அழகா போகும்.

ம்ம்ம். வயசு போனா காதல் போயிடுமெண்டு எந்த விசரன் சொன்னவன்? அறுபது வயசுக்குப் பிறகுதான் காதல் எண்டா என்னண்டு எனக்கு தெரியவந்துச்சு.

சின்ன முத்தங்களால எப்படி ஒருத்தனை சிலிர்க்க வைக்க முடியும் என்றத செய்து காட்டினாள் பூரணம்.

சாய்மணைக்கதிரையில சாஞ்சிருக்கிறப்போ தலைகோதிச் போகும் அந்த ஒரு நிமிஷம் போதும், தாம்பத்தியத்தின் சுகம் சொல்ல.

நகம் வெட்டுறேனெண்டு காலடில இருந்து கால்விரல்களுக்கு சொடுக்கெடுத்து, கைகளால முத்தம் வைக்கிற சுகம் இன்னும் மனசுக்குள்ள நிழலாடுது.

போகன்வில்லா முள்ளுக்குத்துனப்போ என்னை விட அதிக வலியை அனுபவிச்சவள் அவள்.

ஒற்றை மீன்துண்டை எனக்காக ஒளிச்சு வைச்சு தட்டுல போடுறதும், அதில ஒரு பாதிய நான் அவளுக்கெண்டு எடுத்து வைக்கிறதும்.

தோட்டத்துல பறிச்ச ரோசாப்பூவ யாருக்கும் தெரியாமல் சாமிப்படத்துக்கு மேல வைச்சிட்டுப்போக, குளிச்சிட்டு வந்து சாவதானமா எடுத்து அவ தன் தலையில வைச்சி என்னைப்பார்த்து கண்சிமிட்டிப் போறதும்.

வெளிய போயிட்டு வர நேரம் பிந்தினா வாசலுக்குப் பக்கத்துல கதிரைய போட்டுட்டு பேத்திக்கு தலைபாக்குற சாக்கில என்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறதும்.

என் சாய்மணைக்கதிரையில யாரையும் இருக்க விடாமல் காவல் பண்ணுறதும், யாருக்கும் தெரியாமல் சாய்ந்து அழுறதுக்கு எனக்கு தோள் குடுக்குறதுக்கும்.

இதெல்லாம் இந்தக்காலப்பிள்ளையளுக்குத் தெரியுமா!

ஆச்சு, நெஞ்சு வலிக்குதெண்டு சொல்லி, ‘எண்டு ஒரு சின்ன சத்தத்தோட ஆவி அடங்கிப்போன முகம் தான் காலையிலயும், ராத்திரியிலயும் என்ட கண்ணுக்குள்ள நிக்குது. எமன்கூட அவளுக்கு நோகாமல் தான் அவளக் கூட்டிட்டுப் போய்ட்டான் போல.

ஆனா எதுக்கும்மா என்ன விட்டுட்டு நீ முதல்ல போன?

பிள்ளையள் கண்ணுக்குள்ள வைச்சி பாக்கிறாங்க தான், பேரப்பிள்ளையள் தாத்தா தாத்தான்னு என்னையும் அவங்கட விளையாட்டுக்குள்ள இழுக்கிறாங்க தான். மருமக்களும் பழுதில்ல. பொங்கல் தீபாவளிக்கு மரியாதை செய்யுறதில இருந்து மருந்து வாங்கித்தாறது வரைக்கும் பாத்துப்பாத்து செய்யுறாங்க.

ஆனா என்ன செய்து என்ன?

அவளோட ஸ்பரிசம் இல்லாமல், வாசம் தெரியாமல், சின்னதாய் பேசும் சத்தம் கேக்காமல் பதுமைபோல் நடக்கிற பாதச்சுவடு பார்க்காமல் இருக்கிற ஒவ்வொரு நாளும் எனக்கு நரகமாயிருக்குது.

நீ நட்டு வச்ச மாமரத்தையும், தென்ன மரத்தையும் தடவித்தடவி, உன்னோட தழுவல மீட்டிப்பார்க்கிறேன்.

மகள் சமைச்ச மீன்குழம்பில உன்னோட ருசி தெரியுதா எண்டு தேடிப்பாக்குறேன்

மடிச்சி வைச்ச வெள்ளை வேட்டில உன்ட கைரேகை இருக்கா எண்டு தொட்டுப்பாக்கிறேன். கனவுல கூட நீ கட்டித்தழுவுறதாய் கண்டு கரும் இருட்டைக் கட்டிப்பிடிக்க எத்தனிக்கிறன்.

இத்தனை ஆளுமை உனக்கிருக்கெண்டு தெரியாமல் போச்சே.

உன்னை இன்னும் கொஞ்சம் சந்தோசமாய் வைச்சிருக்கலாமோண்டு நினைச்சி நினைச்சி நான் ஏங்கி அழுறது உனக்கு கேக்குதா?

மூச்சு முட்டுது. சாவு கெதியில வராதா எண்டு தான் தினமும் கண்மூடித் தூங்கிப்போறன்.

பயமாயிருக்கு பூரணம். நீ இருக்கும் வரைக்கும் பூரணமாய் இருந்த உன்ட புருஷன் இன்டைக்கு வெத்து மனுஷன்.

ஆயிரம் பேரிருந்தாலும் நீ இல்லாத நான் அனாதை தான்.

உன்ட சாவுக்கு கூட நான் அழல்ல எண்டு எல்லாரும் சொல்றாங்க. நான் செத்தா அழக்கூடாதெண்டு சத்தியம் வாங்கிட்டு செத்துப்போய்ட்டாய். கண்ணீர் வடிக்கலன்றது தான் எல்லாருக்கும் தெரியுது ரத்தக்கண்ணீர் நரம்பெல்லாம் சுத்தி சுழண்டோடுறது உனக்கு மட்டுந்தானே தெரியும்.

எத்தனை இழப்புகள் வந்தாலும் தாங்கியிருந்தேன் நீ இருந்ததால, உன்ட இழப்பை தாங்குற ஜீவ சக்தி தேய்ந்து போச்சி.

இந்திரியங்களைக்கூட அடக்கிக்கொண்டு எந்திரமாய் வாழ்ந்துட்டு இருக்கேன் பூரணம். எனக்கு வாய்விட்டழுற வேதனையைக்கூட தரக்கூடாதெண்டு வாக்கு வாங்கிட்டு பறந்து போன உன்னை விட நான் சிறுமைப்பட்டவன் தான்.

இழத்தல் எப்பவும் வேதனை தான். என்ன விதவைகளின் வேதனை தபுதாரன்களுக்கும் இருக்குதெண்டு உலகத்துக்கு தெரியுறதில்ல.

சாவை எதிர்பார்த்துக் காத்திருக்கிற இந்த முதிய முரடனுக்கும் மனசிருக்கு உன்மேல இன்னும் தளும்பிக்கொண்டிருக்கும் காதலும் இருக்கு பூரணம்.

தொங்கிக்கொண்டிருக்கிற உன் சேலையில வேர்வை வாசம் அடிக்குதா எண்டு மணந்து பார்க்கிறேன்.

வாலிப முறுக்குண்டு சொல்வாங்க. வயசானவங்களுக்கும் காமம் காதலாய் வருமெண்டு யாருக்கும் தெரியுமா?

நீ இல்லாத இரவுகள், நீ தொடாத அங்கங்கள், நீ தழுவாத தோள்கள் எல்லாம் நீ வேணும் வேணும் எண்டு தினவெடுத்துத் திணறுது.

ஒவ்வொரு ராத்திரியும் உன்னை பாயில தேடி கைகளால் துழாவுறேன்.

உன்ட சீலை தான் எனக்கு போர்வை. அந்த வாசம் போகக்கூடாதெண்டு தோய்க்காமல் ஒளிச்சி வைக்கிறேன்.

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் மின்னிதழ் - இதழ் - 1 Copyright © 2015 by தமிழ் மின்னிதழ் குழு is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.