17
மனித குல வரலாறு முழுக்க புத்தம் புது கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டே இருந்திருக்கிறது, அதன் வாயிலாகப் படிப்படியாய் முன்னேறிக் கொண்டிருந்த மனித சமூகம் கடந்த நான்கு நூற்றாண்டுகளில் முன்னேறிய வேகத்தில் எந்தக் காலத்திலும் முன்னகர்ந்தது கிடையாது. அந்த நான்கு நூற்றாண்டு கால அசுர வளர்ச்சிக்கு காரணம் – முன்னோர்கள் சொல்லிச் சென்றார்கள் / கடவுள் சொன்னார் என்பதற்காக எதையும் நம்பாது, ஒவ்வொன்றையும் கேள்விக்குட்படுத்தி, தர்க்கித்து, பகுத்து ஆராய்ந்து பின்னர் ஏற்றுக் கொள்ள முயன்றதால் தான். இந்த நான்கு நூற்றாண்டு வளர்ச்சியையும் கடந்த 20 ஆண்டுகள் விஞ்சி நிற்கும் நிதர்சனத்திற்கு பெருவகையில் இணையத்தையும் தொலைதொடர்பு சாதனங்களின் எளிமையாக்கத்தையும், இவ்விரண்டின் பரவலாக்கத்தையும் காரணமாகச் சொல்லலாம்.
இணையம் வெகுமக்கள் பயன்பாட்டிற்கு சமூக வலைதளங்கள் வாயிலாக திறந்து விடப்பட்டது முதலாகவே சிந்தனைத் தளத்தில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்கி வருகிறது. இதில் பல்வேறு சாதக பாதகங்கள் இருக்கின்றன. எந்தத் தகவலும் நொடியில் கிடைத்துவிடும் என்பதே வாய்ப்பாகவும், ஆபத்தாகவும் இருக்கிறது. தகவல் களஞ்சியமாகவும் பொழுதுபோக்கு அம்சமாகவும் இருக்கின்றது இணையம். விட்டில் பூச்சிகள் எந்த விளக்கில் விழுகின்றன என்பதே தற்போதைய பிரதானக் கேள்வி.
பல நாடுகளில் அரசையே மாற்றிய இந்தச் சமூக வலைதள பலம் மூலம் மக்களின் எண்ணவோட்டத்தை நொடிக்கு நொடி ஒரு சிலர் அல்லது குழுவினர் மாற்றி அமைக்க முடியும் என்பது கவனம் கொள்ளத்தக்கது. ஒவ்வொரு நாடும் தன் இணைய கட்டமைப்பைப் பலப்படுத்த பெரிதும் கவனம் செலுத்துகின்றது. பொருளாதார மேம்பாட்டிற்குப் பயன் தரும் என்று இன்று இவை செய்யும் இந்தக் கட்டமைப்பு நாளை அரசியல் நிலையற்றதன்மைக்கான ஊற்றாக மாறுவதுடன், ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரும் தலைவலியாய் உருவாகப் போவதுமுண்டு. கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவம் எப்படி தன்னை அழிக்கும் பாட்டாளி வர்க்கத்தை அதுவே வளர்த்தெடுப்பதாகச் சொன்னாரோ, அதே போல் எந்த அரசும் தனக்கான அழிவை தானே உண்டாக்கும் என்பதற்கு இது மேலும் ஒரு சான்றாகலாம். இணையத்தின் மூலம் மக்களைத் திசைதிருப்பி அவர்களை மாற வைக்கும் வழி தெரிந்தவர்கள் ஆட்சியில் அமர முடியும் எனில் அவர்களை விரட்டி அடிக்கவும் அதே இணையம் கருவியாகும் என்பதையும் மறுக்க முடியாது.
துறைசார் வல்லுனர்கள், அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், அதிகாரிகள் எனப் பொது மக்களிடமிருந்து எப்போதுமே தொலைவில் இருந்தவர்களை, அவர்களுக்கு மிகச் சமீபத்தில் நிறுத்தியிருக்கிறது இணையம். உச்சாணிக் கொம்பில் இருந்தவர்களின் பிம்பங்கள் அப்பட்டமாக பொதுவெளியில் உடைபட்டு அவரவர் உண்மை முகத்தை பார்த்துணரும் சாதாரணன், தான் கட்டமைத்து வைத்திருந்த பல விதிகளைத் தானே உடைத்து வெளிவருவதையும், மூர்க்கமாக செயல்படுவதையும் தன் சுதந்திரமாக நிறுவ முயல்கிறான்.
மெய்யுலகில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை, பழகிவந்த நாகரிகங்களை, முகம் பார்த்து நேருக்கு நேராக பேசமுடியா வார்த்தைகளை சமூக வலைதளங்கள் வாயிலாக மெய்நிகர் உலகில் உடைத்தெறிவதே கட்டற்ற சுதந்திரம் என்று நம்பப்படுகிறது. தனி மனித அளவில் இணையம் அவர்களை பல்வேறு சேதிகளை தெரிந்து கொள்ள உதவிய போதிலும், பெரும்பான்மை மக்களிடையே தரவுகளைத் தேடும் பழக்கமே இல்லாமல் முதலில் வாசிப்பதே உண்மை என நம்பும் மனநிலையை வளர்த்தெடுக்கிறது. வலிமையான எழுத்து இருந்தால் எந்தச் சாத்தானும் கடவுளாவது எளிது, தனி மனிதனின் ஆழ்மன இயல்புகளான தயக்கம், வக்கிரம், குரூரம், பொறாமை என பொது வெளியில் முன்னிறுத்த முடியாதிருந்த உணர்வுகள் இப்போது சமூக வலைதளங்கள் வாயிலாக, அது வழங்கும் முகமூடி வாயிலாகப் பரவலாக வெளிப்படுகிறது. இயல்பிலேயே அமைதியாக இருப்பவர்கள் கலகக்காரர்களாய் அடையாளம் கொள்ளப்படுவதும், கோமாளிகள் போராளிகளாய்ப் புரிந்து கொள்ளப்படுவதும் நிகழ்வது இதனால் தான்.
எப்படிக் கையாள்வது என்பதற்கான பயிற்சியும், முதிர்ச்சியும் மக்கள் அடையும் முன்னமே பாகாசுரமாக வளர்ந்து நிற்கிறது இணையம். நேரத்தை, வாசிப்பை, புரிதலை, தர்க்கத்தை, பகுத்தறிவை, பிறரை மதிக்கும் நாகரிகத்தைக் கேள்விக்குள்ளாக்கி, வசைபாடுவதையும், குழு மனப்பான்மையையும், சுயபரிசோதனையற்ற தன்மையையும், முன்முடிவுகளை நம்பிச்செயல்படும் போக்கையும், அவசரகதியில் வினையாற்றுவதையும் ஊக்குவிக்கிறது. படிப்பது குறைந்து வரும் அதே நேரம், எழுதுவது அதிகரித்து வருவது முரண் நகை.
சுயம் என்று தாம் நம்புவதை நிலைநாட்டிக் கொள்ளவும், தமக்குச்சரி என எண்ணுவதை முன்னிறுத்தவும் சமூக வலைதளங்களைப் பொறுத்தமட்டில் மக்கள் எப்பேர்ப்பட்ட எல்லைக்கும் செல்லத் தயங்குவதில்லை எல்லாவற்றையும் குற்றம் சுமத்துவது, கேள்விக்குட்படுத்துவது, விடை காணும் முன்பே விலகிவிடுவது, மேலோட்டமாய் எதையும் அணுகுவது, உணர்ச்சியின் வயப்பட்டு முடிவுக்கு வருவது, தமது கருத்துக்கு எதிர்வாதம் செய்பவர்களின் வாதத்திற்கு பதில் அளிக்க முயலாமல் அவர்களின் தனி வாழ்வை நோக்கி விரல் நீட்டுவது என மெய்நிகர் போர்க்களமாய் மாறிவிட்ட இணையம் தான் அடுத்த தலைமுறையின் ஒரே வழிகாட்டியாய் இருக்கப்போகிறது என்பதை சமூகவியலாளர்கள் கவனத்தோடு அணுக வேண்டும்.
இணைய நூற்றாண்டு நாம் யாரும் எண்ணியே இருந்திராத காட்சிகளை நம் முன் அவிழ்க்கப் போகிறது. உண்மையான புதுயுகம் அப்போதுதான் பிறக்கும், அந்த யுகத்தில் உடைப்பதெற்கென்று எவ்விதியும் இராது.
***