16
“எழுத்து ஒரு நிகர்வாழ்க்கை எனக்கு!”
நேர்காணல் : ஜெயமோகன்
தமிழ்ச் சூழலில் ஜெயமோகனுக்கு அறிமுகம் அவசியமில்லை. சமகாலத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த நவீனத் தமிழ் இலக்கியத்தை எடுத்துக் கொண்டாலும் தவிர்க்கவியலாத பங்களிப்பை ஆற்றி இருப்பவர். எழுத்தாளர் மட்டுமல்ல சிந்தனையாளரும் கூட. தமிழ் மின்னிதழ் தொடங்க யோசனை எழுந்ததும் முதல் இதழில் ஜெயமோகனின் விரிவான நேர்காணல் இடம் பெற வேண்டும் என்பதும் சேர்ந்தே முடிவானது.
இது ஒரு மின்காணல் (electronic interview). மின்னஞ்சலில் நான் கேள்விகளை அனுப்ப, அவர் பதிலிலளித்து, அதனடிப்படையில் புதுக் கேள்விகள் முளைத்து, அவற்றுக்கான விளக்கங்கள் என உருவான ஒன்று. பதிலளிக்கையில் முகபாவங்கள் என்ன, எங்கே யோசிக்கிறார் என்பன போன்ற விஷயங்கள் இதில் பதிவாகாது என்பது குறை தான் எனினும் சொல்ல விரும்பியதைத் திரிபடாமல் அப்படியே கொண்டு சேர்க்க பேச்சை விட எழுத்தே துல்லியமான வழி. தவிர, மின்னிதழுக்கு மின்காணல் தானே பொருத்தம்!
1. முதலில் இயல் விருதுக்கு வாழ்த்துக்கள். நீங்கள் எழுத வந்து 30 ஆண்டுகள் பூர்த்தியாகப்போகிறது. இன்று சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் உச்சபட்ச ஸ்தானம். எப்படி உணர்கிறீர்கள்? இந்த நீண்ட பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? எழுத்தில் சாதித்து விட்டதாகத் தோன்றுகிறதா?
எழுதவந்து 30 ஆண்டுகள் என்று சொல்வதைவிட அறியப்பட்டு முப்பதாண்டுக்காலம் என்று சொல்லலாம் எனத் தோன்றுகிறது. நான் எழுத ஆரம்பித்தது எழுத்துக்கள் தெரிந்த நாளில் இருந்தே தான். என் அம்மா என்னிடம் கதை எழுதிக்காட்டும்படிச் சொல்வதுண்டு. பிரசுரமானது எட்டாம் வகுப்பில் படிக்கையில். ஒருபோதும் எழுத்தாளன் அன்றி பிற அடையாளங்களை நான் ஆசைப்பட என் அம்மா விரும்பியதில்லை. நான் அவரது கனவின் உருவாக்கம்.
சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் முதலிடம் என நான் நினைக்கவில்லை. எழுத்து என்பது அப்படி கறாராக வகுக்கப்படத்தக்கது அல்ல. வெவ்வேறு எழுத்தாளர்களால் வெவ்வேறு இடங்கள் நிரப்பப்படுகின்றன. அது ஒரு கம்பளம் போல பலநூறுபேரால் நான்குதிசையிலும் பின்னி விரித்துச்செல்லப்படுகிறது. நான் என் இடத்தை நிறைக்கிறேன்
எழுத்தில் சாதித்துவிட்டதாகத் தோன்றியபின் எழுதவே முடியாது. இதை ஒப்புக்காகச் சொல்லவில்லை. உண்மையிலேயே ஐம்பதுக்கும் மேல் வயதாகும்போது உங்களுக்கும் இது தெரியும். எழுத எழுத எழுதுவதற்கான இடம் தெரிந்துகொண்டே இருக்கும். அப்படித் தெரியாமலாகும்போது நின்று விடுகிறோம். அப்போதுதான் திரும்பிப்பார்க்கிறோம்.
அதுவரை எழுத்து என்பது மொழிவழியாக மெல்லமெல்ல உருவாக்கிக்கொள்ளும் ஒரு கனவில் வாழ்ந்திருப்பதுதான். வாசகர்களுடன் சேர்ந்து நிகழும் ஒரு கூட்டுக்கனவு அது. எழுத்து உருவாகி வரும்போது நாம் நம்மை இழந்து அதற்குள் நுழையும்போது வாழ்க்கை பலமடங்கு ஒளியும் விரிவும் கொண்டதாக ஆகிறது. அந்த இன்பமே எழுதுவதற்கான உத்வேகத்தை அளிக்கிறது. மற்றபடி அதில் சாதனை என ஏதுமில்லை.
ஆனால் இளம் வயதில் இருப்பவர்களிடம் அதைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. அவர்கள் சாதனைகளையே குறிவைப்பார்கள். அவர்களே எழுதி எழுதி அதைக் கண்டுபிடிக்கவேண்டியதுதான்
2. உங்கள் இளமை வாழ்க்கை, இலக்கியத்தில் நாட்டம் வந்தது குறித்துச் சொல்லுங்கள். உங்கள் நண்பன், பெற்றோரின் தற்கொலை உங்கள் வாழ்க்கையை எப்படி பாதித்தது? எழுத அது காரணமா?
நான் எப்போதுமே எழுத்தாளனாகவே உணர்ந்திருக்கிறேன் என்று சொன்னேன். அது என் அம்மாவால் எனக்கு அளிக்கப்பட்ட இலக்கு. எழுத்தாளன் ஆகவேண்டுமென்றால் வாசிக்கவேண்டும் என அம்மா சொன்னார்கள். சுட்டுவிரல் தொட்டு வாசிக்கும் வயதிலேயே நூல்களை அறிமுகம் செய்தார்கள்.
மிக இளம்வயதிலேயே நான் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். எப்போதுமே மிகச்சிறந்த வாசகனாகவே என்னை உணர்ந்திருக்கிறேன். இளம்வயதில் எல்லாவற்றையும் வாசித்துத் தள்ளவேண்டுமென்ற வெறி இருந்தது. இன்று அது இல்லை. அப்போது புனைவுகளை வாசித்துக்கொண்டே இருந்தேன். அக்கனவு அறுபடாமல் தேவைப்பட்டது. இன்று நானே புனைவுகளை உருவாக்கிக் கொள்கிறேன். ஆகவே வரலாறு, தத்துவம் தான் நான் இன்று அதிகமாக வாசிப்பவை.
வாசிப்பே என்னை எழுத்தாளனாக உருவாக்கியது. மொழிக்குள் வந்து விழுந்தேன். எழுதத் தொடங்கினேன். நடுவே அலைச்சலில் இருந்த சிலவருடங்கள் தவிர எப்போதுமே எழுதிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். எழுத்து என்னை எப்போதும் பேணியிருக்கிறது. பட்டினி கிடக்கவிட்டதில்லை. இளவயதில் அற்புதமான பாலியல் கதைகளை எழுதியிருக்கிறேன் என நினைக்கையில் புன்னகை வருகிறது. எழுத்து ஒரு நிகர்வாழ்க்கை எனக்கு.
நண்பன் ராதாகிருஷ்ணன் தற்கொலைசெய்துகொண்டதும் சரி அம்மாவின் தற்கொலையும் சரி அடிப்படை வினாக்களை நோக்கிச் செலுத்தின. மரணம் பற்றி, வாழ்க்கையின் சாரம் பற்றி. அவை நிகழாமலிருந்திருந்தால் என் எழுத்திலும் எளிய சமூகவியல் வினாக்களும் வாழ்க்கைச் சித்திரங்களும் மட்டும் இருந்திருக்கலாம். அவ்வினாக்கள் வழியாக நான் ஆன்மீகம் நோக்கிச் சென்றேன். தத்துவத்தைக் கற்றேன். ஆழ்படிமங்களை தியானித்தேன். இன்றுள்ள அகநிலையை அடைந்தேன்
இன்று எழுதுவதற்கு எது காரணம்? பிச்சையெடுக்கும் துறவியாக திருவண்ணாமலையில் இருந்த நாட்களில் என்னுடன் ஒரு முதிய துறவி இருந்தார். பேசமாட்டார். ஒருவேளை பிச்சை எடுத்து உண்பார். தனியாகவே இருப்பார். ஒருநாள் அவர் என்னிடம் நல்ல ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினார். நான் ஒரு போதும் துறவையோ யோக மார்க்கத்தையோ தேர்ந்தெடுக்க முடியாது என்றார். ’நீ கற்பனை உள்ளவன். கற்பனை யோக மார்க்கத்திற்கு உரியது அல்ல. அது பெருகிப்பெருகி யோக அனுபவத்தையே கற்பனையில் அடையத் தொடங்கிவிடும். சென்றுவிடு’ என்றார்.
‘நான் என்ன செய்யவேண்டும்?’ என்றேன். ‘கற்பனைதான் உன் வழி. தேடுவதும் கண்டடைவதும் அதன் வழியாகவே நிகழமுடியும்’ என்றார். அதுதான் நான் இன்று எழுதிக்கொண்டிருக்க காரணம். எனக்கு இது ஒருவகை யோகம். ஞானயோகம் என இன்னும் கச்சிதமாகச் சொல்வேன்.
3. உங்கள் குரு நித்ய சைதன்ய யதி பற்றிக் கூறுங்கள். எந்த வகையில் அவர் உங்கள் ஆளுமையின் உருவாக்கத்தில், சிந்தனை முறைகளில் பங்கு வகித்தார்? (குருவும் சீடனும் நூல் முன்னுரையிலும் உங்களின் வெவ்வேறு கட்டுரைகளிலும் காணக் கிடைக்கிறது எனினும் சுருக்கமாக விவரியுங்கள்)
எப்போதுமே ஆசிரியர்களைத் தேடி அலைந்துகொண்டிருந்தவன் நான். இளமையிலேயே நல்ல ஆசிரியர்களும் எனக்கு அமைந்தார்கள். ‘குருசாகரம்’என ஓ.வி.விஜயன் ஓரு நாவல் எழுதியிருக்கிறார். குரு என்பவர் ஒரு கடல். அலைகளைத்தான் தனிமனிதர்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனக்கு இளமையில் தமிழ் கற்றுத்தந்த தமிழாசிரியர்கள், நான் பயணங்களில் கண்டடைந்த துறவிகள் அனைவருமே ஆசிரியர்களே.
நான் மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவை என் முதன்மையான ஆசிரியராகச் சொல்வேன். நவீன இலக்கியத்திற்கு என்னை அவர்தான் வழிநடத்தினார். பி.கே.பாலகிருஷ்ணன், எம்.கோவிந்தன் போன்றவர்களும் எனக்கு முக்கியமானவர்கள். சுந்தர ராமசாமி, ஞானி இருவரையும் அக்காலத்தில் சந்தித்தேன். இருவருமே எனக்கு இருவகையில் ஆசிரியராக அமைந்தவர்கள். நவீன இலக்கியத்தின் நெறிகளை சுந்தர ராமசாமியிடமிருந்தும் கோட்பாடுகளை ஞானியிடமிருந்தும் கற்றுக்கொண்டேன். பேராசிரியர் ஜேசுதாசன் செவ்வியல் நூல்களை அணுகுவதற்கு கற்பித்தவர். அவரது மாணவரான வேதசகாயகுமார், அ.கா.பெருமாள் ஆகியோரும் என் ஆசிரியர்களே.
ஆசிரியர் என்பதிலிருந்து ஒரு படி மேலானவர் குரு. ஆசிரியர் ஒரு துறையில் நமக்கு கல்வியளிப்பவர். குரு நம்மை முழுமை நோக்கி வழிநடத்துபவர். ஆசிரியர்கள் கல்வியை அளிக்கிறார்கள். குரு நம்முள் உள்ள கற்கும் அகத்தை முழுமை செய்கிறார். ஆசிரியர்கள் பாடங்களைச் சொல்லித்தருகிறார்கள். குரு படிப்பதைச் சொல்லித்தருகிறார். நித்யா எனக்கு அப்படிப்பட்டவர்
நான் தொடர்ந்து பல துறவிகளை ஞானிகளைச் சென்று சந்தித்துக்கொண்டே இருந்தவன், பெரும்பாலும் ஏமாற்றம். சிலர் எனக்குரியவர்கள் அல்ல என்று உணர்ந்தேன். எனக்குரிய குரு இலக்கியமும் தத்துவமும் இசையும் அறிந்தவராக, அறிவார்ந்தவராக, சிரிப்பவராகவே இருக்கமுடியும் என நித்யாவைச் சந்தித்த பின்னரே உணர்ந்தேன்
நித்யாவை முதன்முதலாகக் கண்ட ஐந்தாவது நிமிடத்திலேயே அவரை அடையாளம் கண்டுகொண்டேன். ஊட்டி நாராயணகுருகுலத்தில் அதிகாலையில் மலர்களை பார்த்தபடி நடைசெல்லக் கிளம்பிக்கொண்டிருந்த முதிய மனிதர் அப்போது பிறந்த குழந்தை போல புத்தம்புதியவராக இருந்தார். அந்தக் கணத்தை இப்போது கண்மூடினாலும் பார்க்க முடிகிறது.
ஆனாலும் நான் அவரைச் சோதனை செய்தேன். அவரது கல்வியை, நேர்மையை, சமநிலையை, விவேகத்தை, ஆன்மஞானத்தை. அது அவருக்கும் தெரியும், வேடிக்கையாக அவர் அதற்குத் தன்னை ஒப்புக்கொடுத்தார். ஒருகட்டத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்ற வியப்பு ஏற்பட்டது. நான் அவருக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன்
என் ஆசிரியர்கள் எனக்குக் கற்பித்தார்கள், என்னை வளர்த்தார்கள். குரு என்னை உடைத்தார். அவமதிப்பும் சிறுமையும் கொண்டு கண்ணீர் சிந்தியிருக்கிறேன். இனி இவருடன் இல்லை என பாதியில் கிளம்பிச் சென்றிருக்கிறேன். எனக்கு பேச்சை கவனிக்கத் தெரியவில்லை என அவர்தான் காட்டித்தந்தார். நினைவில் நிறுத்தத் தெரியவில்லை என்பதைக் காட்டித்தந்தார். திட்டமிட்டுச் செயல்படவும் எடுத்த காரியத்தை முடிக்கவும் அவர்தான் கற்றுதந்தார். அதைவிட முக்கியமாக சீராக, தொடர்ச்சியாக, தர்க்கபூர்வமாகச் சிந்திக்கப் பயிற்றுவித்தார். அத்துடன் புனைவுலகில் அந்த தர்க்கம் மீது ஏறி மேலே தாவிச்செல்லவும் வழிகாட்டினார்.
நித்யா எதையுமே சொல்லித்தரவில்லை என்றும் தோன்றுகிறது. அவருடன் நான் இருந்தேன். அவர் பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டும் காடுகளில் உலவிக்கொண்டும் இருந்தார். அவரிடமிருந்து அவரது சாரம் எனக்கு வந்துகொண்டிருந்தது. நான் மிகமிக ஒழுங்கற்றவன். கட்டற்றவன். முழுப்பித்தன். இன்றும் அப்படித்தான். அது என் நண்பர்களுக்கு தெரியும். ஆனால் என் கலையில் அப்படி அல்ல. அங்கே நான் பேரரசுகளை ஆளும் சக்ரவர்த்திகளுக்கு நிகரானவன். அது நித்யா கற்பித்தது.
4. உங்கள் பிரியத்துக்குரிய சுந்தர ராமசாமி பற்றிச் சொல்லுங்கள். உங்களிடையே ஆன உறவு, உங்கள் எழுத்தை அவர் எப்படி பாதித்தார் என்பது பற்றி (சுரா நினைவின் நதியில் எனத் தனி நூலிலும் வெவ்வேறு கட்டுரைகளிலும் சொல்லி இருக்கிறீர்கள் என்றாலும் இங்கே சுருக்கமாக)
சுரா பற்றி சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அவர் நான் நெருங்கிப்பழக நேர்ந்த மூத்த தலைமுறைத் தமிழ் எழுத்தாளர். தமிழ்ச் சிற்றிதழ் சார்ந்த எழுத்தின் அடையாளமாக அன்று அவர் இருந்தார். க.நா.சுவின் சிந்தனைமரபின் சமகால நீட்சியாக விளங்கினார். எண்பதுகளில் நான் அவரைச் சந்தித்தபோது அவர் வாழ்ந்த அந்த உலகம் மிக வசீகரமாக இருந்தது. மிகச்சிறிய வாசகர் வட்டம். அங்கே எந்தப்பிரதிபலனையும் எதிர்பாராமல் தன் கலைக்காகவே வாழும் சிலர். அவர்களின் கோபதாபங்கள், வம்புகள். அவர்களில் ஒருவனாக ஆக ஆசைப்பட்டேன்.
சிற்றிதழ் என்பது அளித்த பரவசத்தை இன்று ஆச்சரியத்துடன் நினைத்துக்கொள்கிறேன். வெளியே இருந்த உலகம் மிக மேலோட்டமானது என்றும், நாங்கள் அதி தீவிரர்கள் என்றும் கற்பனை செய்துகொண்டோம். குறைவாக எழுதுவது மட்டும் அல்ல எழுதாமலிருப்பதேகூட படைப்புச்செயல்பாடு என நம்பினோம். தோற்றுப்போவது போல, புறக்கணிக்கப்படுவது போல வசீகரமான இன்னொன்று இல்லை என எண்ணினோம். ஜேஜே – சிலகுறிப்புகள் இந்த மனநிலைகளின் மிகச்சரியான ஆவணம். அது தோல்வியைக் கொண்டாடுகிறது. தோல்வியடைவதில் புனிதமானதாக ஏதோ உள்ளது, அதுவே வரலாற்றில் வாழக்கூடியது என அது முன்வைக்கிறது
சுந்தர ராமசாமி அந்த சிற்றிதழ்மனநிலையின் அப்போஸ்தலர். எவருக்காகவும் இல்லாமல் தனக்காக மட்டுமே எழுதுவதில் உள்ள பேரின்பத்தை அவர் கற்றுத்தந்தார். தனித்து நிற்பதிலும் நிமிர்ந்து நிற்பதிலும் உள்ள பெருமிதத்தை காட்டித்தந்தார். மிகச்சிறிய வட்டத்திற்குள் செய்யப்பட்டாலும் அறிவார்ந்த செயல்பாடுகள் அவற்றின் தீவிரம் வழியாகவே பெரும் விளைவுகளை உருவாக்கும் என்று கற்பித்தார். அவர் உருவாக்கிய உத்வேகம் அபாரமானது. இளம் வாசகனாக, எழுத்தாளனாக அவருடன் பேசிக்கொண்டு நாகர்கோயில் நகரத்தெருக்களில் நடந்த காலங்களை நினைவுகூர்கிறேன். ஒவ்வொரு சொல்லையும் நினைவிலிருந்து எடுக்கமுடிகிறது.
ஆனால் மெல்லமெல்ல எனக்கு அவரது உலகம் சலிப்பூட்டத் தொடங்கியது. நான் என்னை ஒடுக்கிக் கொள்ள விரும்பவில்லை. என்னை வெடித்துப்பரப்ப விரும்பினேன். நினைத்ததை எல்லாம் எழுத, எழுதி எழுதி என்னைக் கண்டுபிடிக்க என் அகம் விம்மியது. சொற்களை எண்ணி எண்ணி யோசித்து எழுதும் அவரது எழுத்துமுறை எனக்குச் சரியாகப்படவில்லை. வரலாற்றை இலக்கியத்திற்கு அன்னியமாகக் கருதி அனைத்தையும் தனிமனித அனுபவத்தை மட்டுமே கொண்டுஅளக்கும் நோக்கு குறுகியதென நினைத்தேன்.
எழுத்தாளன் நிகர்வரலாற்றை உருவாக்கவேண்டும் என்றும் பண்பாட்டையே திருப்பி எழுதிவிடவேண்டும் என்றும் சமகாலச்சிந்தனையை முட்டி உடைக்கவேண்டும் என்றும் ஆசைப்பட்டேன். எழுத்து சில வரிகளுக்குமேல் கட்டற்று தன்னிச்சையாகப் பெருகவேண்டும் என்றும் கச்சிதமான மொழி அப்போதுதான் நிகழும் என்றும் கருதினேன். அவரது எண்ணிக்கோர்த்த மொழி மிகவும் பரந்து கிடப்பதாகத் தோன்றியது. அதைப் பாதிக்கும் குறைவான சொற்களால் என்னால் சொல்லிவிட முடியும், அதற்கான உத்வேகம் நிகழுமென்றால் என்று கண்டுகொண்டேன். நான் என் பித்தையும் கட்டற்ற வேகத்தையும் எழுத்தாக்க விரும்பினேன்.
சிற்றிதழ்ச்சூழலின் காலம் முடிந்துவிட்டது என உணர்ந்தேன். தகவல்தொடர்புப் புரட்சியின் காலம் வந்துவிட்டது. புதிய கருத்துக்கள் புதிய எழுத்து முறைகள். சிற்றிதழ் மனநிலைகள் அறைக்குள் உள்ளே தாழிட்டுக்கொள்ளவே உதவும். எழுத விஷயமில்லாதவர்கள் அந்தப் பாவனையுடன் சாராயம் குடித்து கலகக்காரர்களாக வாழ்ந்து கொள்ளலாம். அது பெரிய சுய ஏமாற்று, எனக்குரியதல்ல என்று தோன்றியது.
அத்துடன் எனக்கு அவரது ஐரோப்பியச் சார்பு அலுப்பூட்டியது. இந்திய மரபின் மீதான உதாசீனமும் அறியாமையும் ஏமாற்றம் அளித்தது. தத்துவம் அற்ற அவரது யதார்த்தவாதம் பொருளற்றிருப்பதாகப் பட்டது. அதை அவரிடமே விவாதித்தேன். மெல்லமெல்ல விலகிச்செல்லத் தொடங்கினேன்.
புராணத்தையும் தொன்மத்தையும் நாட்டார் மரபுகளையும் கொண்டு எழுதப்பட்ட என் கதைகள் ஒவ்வொன்றும் அவருக்கு திகைப்பளித்தன. விஷ்ணுபுரம் அவரிடமிருந்து நான் அடைந்த விலகலின் திட்டவட்டமான புள்ளியாக அமைந்தது. அதை அவரால் உள்வாங்க முடியவில்லை. அதேசமயம் அது அடைந்த பெரும் வரவேற்பு அவரைப் பதற்றமும் எரிச்சலும் அடையச்செய்தது. அவரால் தன் தன்னம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஒருகட்டத்தில் அவர் தனக்குச் சௌகரியமான நட்புச்சூழலை உருவாக்கிக்கொள்ளத் தொடங்கினார். விலகல் முழுமை அடைந்தது.
இன்று யோசித்தால் நான் சற்று பொறுப்பில்லாமல் நடந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. நான் ஒருகட்டத்தில் என் வழியைக் கண்டுகொண்டேன். நித்யாவை நெருங்கினேன். அதன்பின் நேர்ப்பேச்சில் அவர் மீதான விமர்சனங்களை குறைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவரேதான் விமர்சனங்களை ஊக்குவித்தார். அதை நான் உண்மை என நம்பினேன். உள்ளூர மனிதர்கள் நொய்மையானவர்கள் எனப் பின்னர் தெரிந்தது. அவர் இறந்து பத்தாண்டுகளுக்குப்பின். என் நடுவயதில். ஒன்றும் செய்யமுடியாது.
இப்போது யோசித்தால் புன்னகை வருகிறது. அவர் அமெரிக்கா மேல் பெரும் பக்தி கொண்டவர். அமெரிக்கா பற்றி அவர் சொன்னதெல்லாமே குழந்தைத்தனமானவை. அங்கே தேவையான சூடில் காபி கிடைக்கும், எத்தனை டிகிரி சூடு தேவை என்று சொல்லி வாங்கலாம் என்றார். சமையல் எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லிக் கேட்டுச் சாப்பிடலாம் என்றார். அங்கே காலம் தவறுதலும் பிழைகளும் அனேகமாக இல்லை என்றார்.
ஒருமுறை சொன்னார். ‘நான் அங்க மால்களிலே ஜாலியா நான் பாட்டுக்கு படுத்துண்டிருப்பேன். பிள்ளைகள் விளையாடிண்டிருக்கும். யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டா. வேடிக்கை பாக்க மாட்டா. இன்னொருத்தர் சுதந்திரத்துக்கு அந்த மாதிரி எடமிருக்கு அங்க. எப்டி வேணா இருக்கலாம். இங்க எங்க பாத்தாலும் உத்துப்பாத்து உச்சு கொட்டுவா”.
அவர் மறைந்து பல வருடம் கழித்து நான் அமெரிக்கா சென்றேன். அவர் இருந்த கலிஃபோர்னியா ஃப்ரீமாண்ட் நகரில் ஒருவர் சொன்னார். அவர் சுந்தர ராமசாமியை எப்படி அறிமுகம் செய்துகொண்டார் என்று. சுந்தர ராமசாமி மால்களில் படுத்திருப்பார். “இங்கே அப்டி யாரும் செய்ய மாட்டாங்க. ரொம்ப வேடிக்கையா இருக்கும். வெள்ளைக்காரங்க விசித்திரமா பாத்துட்டு போவாங்க. எங்கிட்ட என்னோட வெள்ளைக்கார முதலாளிதான் அவரைச் சுட்டிக்காட்டி அவர் உங்க ஊரான்னு கேட்டார். அப்படித்தான் அவரை கவனிச்சேன். ஏதாவது மெண்டல் பிராப்ளம் இருக்கும்னு நினைச்சேன். அப்பதான் அவர் ரைட்டர்னு சொன்னாங்க” சிரித்துக்கொண்டேன். பாவம் சுந்தர ராமசாமி என்று தோன்றியது அப்போதுதான்.
5. உங்கள் தாய்மொழி மலையாளம். கேரளச்சூழல் எப்போதுமே எழுத்தாளர்களைக் கொண்டாடுவதில் பேர் போனது. அப்படி இருந்தும் அதை மறுதலித்து தமிழில் எழுதத்தொடங்கியதும், தொடர்வதும் ஏன்? நீங்கள் தமிழனாக உணர்கிறீர்களா அல்லது தமிழில் எழுதநேர்ந்துவிட்ட மலையாளியாக மட்டுமா? உங்கள் மனம் எம்மொழியில் சிந்திக்கிறது? (இக்கேள்வியின் காரணம் உங்கள் மீது மலையாளி என்ற முத்திரை குத்தி, அவர்களோடு ஒப்பிட்டு தமிழர்களை மட்டம் தட்டுவதாக எழும் விமர்சனங்களினால்)
என் தாய்மொழி மலையாளம். ஆனால் என் குடும்பத்திலேயே தமிழறிஞர்கள் உண்டு. ஏனென்றால் குமரிமாவட்டம் திருவிதாங்கூர் அரசின் கீழ் இருந்தது. அதில் இருநூறாண்டுக்காலம் முன்புவரை அரசாணைகள் எல்லாமே தமிழில்தான் இருந்தன. பழைய சேரநாடு அது. தமிழ் ஆட்சிமொழியாக, செவ்வியல் மொழியாக இருந்தது. மலையாளம் பேச்சுமொழியாக. நான் பள்ளியில் கற்றது தமிழ். பதினைந்து வயதுக்குள் உரையில்லாமல் எந்தச்செய்யுளையும் வாசிக்கும் அளவுக்குத் தமிழ் கற்றவன். நவீனத் தமிழிலக்கியவாதிகளில் என் தலைமுறையில் முறையாகப் பழந்தமிழ் கற்றவர்கள் சிலரே.
என் சிந்தனை மொழி தமிழே. இதுதான் சிக்கல். மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கிறேன். எல்லாமே அனிச்சையாக தமிழில் இருந்து மொழியாக்கம் செய்து எழுதுபவை. ஆகவே என்னால் மலையாளத்திலோ பிறமொழிகளிலோ எழுதுவதன் இன்பத்தை அடைய முடிவதில்லை. என்னிடம் மலையாளத்தில் கட்டுரை கேட்டுக்கொண்டே இருப்பார்கள். எழுதவேண்டும் என நினைத்தாலே சோர்வாக இருக்கும். தமிழில் பேனா எடுத்தாலே போதும். என் மனம் நேரடியாகவே மொழியாகி எழுத்தாகிவிடும்.
நல்ல எழுத்தாளன் புகழ், அங்கீகாரம் எதற்காகவும் எழுதுவதில்லை. நான் எழுத வந்தபோது மலையாளத்தில் எழுத்தாளனுக்குக் கிடைத்த புகழும் அங்கீகாரமும் மிகப்பெரிது. தமிழில் அதற்கான வாய்ப்பே இருக்கவில்லை. ஆனால் அப்படி வாய்ப்பே இல்லை என்பதுதான் எனக்குக் கிளர்ச்சி அளித்தது. என்னை ஒரு தலைமறைவுப் போராளியாக, தற்கொலைப் படையாகக் கற்பனைசெய்து உத்வேகம் அடைந்தேன். சிற்றிதழ் மனநிலை அது.
தமிழன், மலையாளி என்பதெல்லாம் நம்மைச்சுற்றி உள்ள அரசியல்வாதிகளால் உருவாக்கப்படும் அடையாளங்கள். அவர்களின் அதிகாரத்துக்காக அந்த அடையாளங்களை அவர்கள் உருவாக்கி அதனடிப்படையில் மக்களைத் திரட்டுகிறார்கள். அத்தகைய அடையாளங்களை ஓர் எழுத்தாளன் தனக்காகச் சூடிக்கொள்வான் என்றால் அவனைப்போல உதவாக்கரை வேறில்லை. திரும்பத்திரும்ப அந்தக் கும்பல் என் வீட்டு வாசலில் நின்று ‘நீ தமிழனா மலையாளியா சொல்’ எனக் கூவிக்கொண்டிருக்கிறார்கள். ‘போய் வேலையைப் பாருடா முட்டாள். என் எழுத்தின் முற்றத்தில் கால்வைக்கவே தகுதியற்றவன் நீ. உன்னைப்போன்றவர்களை மீறித்தான் எங்கும் எப்போதும் இலக்கியம் எழுதப்படுகிறது’ என்பதே என் பதில்.
சில விஷயங்களில் என்னை மலையாளப்பண்பாட்டின் தொடர்ச்சியாக உணர்வதுண்டு. சில விஷயங்களில் தமிழ் பண்பாட்டின் கண்ணியாக. மலையாளப்பண்பாட்டையே தமிழ்ப்பண்பாட்டின் ஒரு சிறு பகுதியாகவே எண்ணிக்கொள்கிறேன். அப்படித்தான் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். கட்டுரைகளில். கொற்றவையில்.
தமிழ், மலையாளம் என்ற இந்தப்பிரிவினை அதிகபட்சம் முந்நூறு வருட வரலாறுள்ளது. இலக்கியத்திற்கு இதெல்லாம் ஒரு காலமே அல்ல. இதையெல்லாம் அது பொருட்படுத்தவும் முடியாது. அது கையாளும் பண்பாட்டுக் குறியீடுகள், ஆழ்படிமங்கள் பல்லாயிரம் வருடத் தொன்மை கொண்டவை. இந்துவாக, இந்தியனாக, கீழைநாட்டவனாக எல்லாம் நான் என்னை உணரக்கூடும். ஆனால் இந்த அடையாளங்கள் எல்லாமே நான் எனக்கு சூட்டிக்கொள்பவை. நானே அடையாளம் காண்பவை. அவ்வடையாளங்கள் வழியாக என்னைச் சூழ்ந்திருக்கும் இந்த வாழ்க்கையுடனும் இதன் நேற்றைய வரலாற்றுடனும் தொடர்புகொள்கிறேன். பிறர் என்னை அப்படி வகுத்தால் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
இவ்வடையாளங்களுக்கு மேலாக ஏதோ ஒன்று உள்ளது. அடையாளங்களுக்கு அப்பால் திமிறிக்கொண்டு நிற்பது. அதுதான் இலக்கியத்தை உண்மையில் உருவாக்குகிறது. தமிழனாக, மலையாளியாக, இந்துவாக, இந்தியனாக எல்லாம் ஆரம்பிக்கலாம். முடிப்பது அவ்வடையாளத்தில் அல்ல.
அது நிகழ்ந்தால்தான் அது இலக்கியம்.
6. இன்றைய தேதியில் விஷ்ணுபுரம் தான் உங்களின் ஆகச்சிறந்த படைப்பு. அது தன் உயரத்திற்கேற்ப வாசகர்களைச் சென்றடைந்ததாக நினைக்கிறீர்களா? பொன்னியின் செல்வன் போல் அது விற்றிருக்க வேண்டும். ஆரம்பம் முதல் இன்று வரை அந்நாவல் எதிர்கொள்ளப்படும் விதம் பற்றிக் கூறுங்கள்.
விஷ்ணுபுரம் என் சிறந்த படைப்பு என்பது உங்கள் விமர்சனக் கருத்தாக இருக்கலாம். பின் தொடரும் நிழலின் குரல், கொற்றவை இரண்டும் வேறுவேறு வகையில் அதற்கு நிகரானவை என நினைக்கிறேன்.
பொன்னியின் செல்வன் போல விஷ்ணுபுரம் விற்றிருக்க முடியாது. எப்போதும் விற்கவும் விற்காது. பொன்னியின் செல்வன் தமிழில் கல்வியறிவு மிகக்குறைவாக இருந்த காலகட்டத்தில் ஆரம்பப்பள்ளிக் கல்வி மட்டுமே இருந்த பெண்களையும் உத்தேசித்து எழுதப்பட்டது. ஆகவே மிகமிக எளிய நடையில், நேரடியான அர்த்தம் மட்டுமே கொண்டு, குழந்தைக்கதை போல எழுதப்பட்டது. இன்று அது ஒரு குழந்தைக் கதை. ஐந்தாம் வகுப்பு மாணவர்களால் பெரிதும் வாசிக்கப்படுவது.
பொன்னியின் செல்வன் விற்ற அளவுக்கு ஏன் சிவகாமியின் சபதம் விற்கவில்லை என்று கேட்டுக் கொண்டால் அடுத்த பதில் கிடைக்கும். பொன்னியின்செல்வன் தமிழகத்தின் ஒரு பொற்காலத்தைக் கற்பனை செய்கிறது. எளிய ராஜாராணி சாகஸக்கதையாக அதை முன்வைக்கிறது. தமிழ்ப்பொற்காலக் கற்பனைகள் உருவான காலகட்டத்தைச் சேர்ந்தது அது.
விஷ்ணுபுரம் நேரடியாக வாழ்க்கையைச் சொல்லவில்லை. அது மெய்மையைத் தேடுபவர்களின் கதையை மட்டுமே சொல்கிறது. ஆகவே அந்தத் தளத்தில் ஒரு தேடல் கொண்டவர்களே அதன் வாசகர்கள். நேரடியாகவே தத்துவத்தைக் கையாள்கிறது. ஆகவே தத்துவத்தைக் கற்கும் மனநிலை கொண்டவர்களுக்குரியது அது. ஆழ்படிமங்களையும் தொன்மங்களையும் உருவகங்களையும் கையாள்கிறது. முன்பின் பின்னிச் செல்லும் கதையோட்டம் கொண்டது அது. ஆகவே கற்பனைமூலம் நாவலை விரித்தெடுக்கும் நல்ல இலக்கிய வாசகனே அதை வாசிக்கமுடியும்
அவ்வகையில் பார்த்தால் விஷ்ணுபுரம் பெற்ற வெற்றி, அடைந்திருக்கும் வாசிப்பு, வியப்பூட்டுவதே. அதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த வெற்றிக்குக் காரணம் அதன் செறிவும் தீவிரமும் தமிழின் பொதுவாசகனுக்கு அச்சமூட்டுவதாக இருந்தாலும் அது பேசும் விஷயம் தமிழ் மனதுக்கு நெருக்கமானது என்பதே. ஒவ்வொரு ஊரிலும் தலைக்குமேல் கோபுரம் எழுந்து நிற்கிறது. தெய்வங்கள் நெருக்கியடித்து நின்றிருக்கின்றன. அவற்றின் பார்வை தலைமேல் கவிந்திருக்கிறது. தமிழ் மனம் ஒவ்வொரு கணமும் மரபின் நெருக்கடியை உணர்கிறது. அதை விஷ்ணுபுரத்தில் அது அடையாளம் கண்டுகொள்கிறது.
விஷ்ணுபுரம் வெளிவந்த நாள் முதலே நல்ல வாசகர்களால் உத்வேகத்துடன் எதிர்கொள்ளப்பட்ட ஆக்கம். ஆரம்பத்தில் மேலோட்டமாக சில தகவல் பிழைகளைச் சுட்டிக்காட்டி சில எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. அவற்றில் உண்மையான எந்தப்பிழையும் சுட்டிக்காட்டப்படவில்லை. சக எழுத்தாளர்களின் சில்லறைக் காழ்ப்புகள் சில வந்தன. அத்துடன் இலக்கியம் என்றால் என்ன என்றே புரியாத அரசியல் விமர்சனங்கள் இருந்தன. பெரும்பாலும் விஷ்ணுபுரம் என்ற பெயரை மட்டுமே வைத்துச் செய்யப்பட்ட விமர்சனங்கள்.
ஆனால் வாசகர்கள் அவற்றைக் கடந்து அதில் தங்கள் தேடலைக் கண்டடைந்துகொண்டே இருந்தனர். மிகச்சிறந்த வாசிப்புகள் வந்தன. தொடர்ந்து விஷ்ணுபுரம் பற்றி கடிதங்கள் வந்துகோண்டே இருக்கின்றன. இத்தனை வருடங்களில் அது எப்போதுமே வாசகக் கவனத்தில் இருந்துகொண்டிருக்கிறது. .
அடுத்தடுத்த தலைமுறை வாசகர்கள் வர வர மிகச்சிறந்த வாசிப்புகள் நிகழ்கின்றன. சமீபத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றபோது தலித் விமர்சகரான பால்ராஜ் பல ஆண்டுகளாக விஷ்ணுபுரத்தை இடதுசாரிகள் வாசிக்காமல் செய்த விமர்சனம் வழியாகவே அறிந்துகொண்டிருந்ததாகவும் அதை வாசித்தபோதுதான் அதன் உண்மையான சாரம் தெரிந்ததாகவும் சொன்னார். “அது விஷ்ணுவே இல்ல சார். இன்னும் கூட அது அவங்களுக்குத் தெரியலை” என்றார்.
இப்போதுகூட அந்நாவலை விஷ்ணு புராணம் என்று தப்பாகச் சொல்லிப் பேசும் விமர்சகர்கள் இருக்கிறார்கள் என்றால் இப்பேச்சுகளுக்கெல்லாம் என்னதான் அர்த்தம் இருக்கமுடியும்?
தமிழ் வாசகனுக்கு இன்றுள்ள மிகப்பெரிய சவால் விஷ்ணுபுரத்தையும் கொற்றவையையும் எதிர்கொள்வதுதான். படைப்புகள் அடுத்தடுத்த தலைமுறைகளில் எளிதாகக் கடந்துசெல்லப்படும். அவையிரண்டும் அப்படிக் கடந்துசெல்லப்படாதவையாகவே இன்றும் உள்ளன என்பதை அவற்றைப்பற்றி எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான விமர்சனங்களை வாசிக்கும் எவரும் உணரமுடியும்.
7. பரவலாய் நிராகரிக்கப்பட்ட பின்தொடரும் நிழலின் குரல் நான் மிக ரசித்த ஒரு நாவல். குறிப்பாய் அதன் craft பிடித்தமானது. அதை ஒரு தோல்வியுற்ற நாவல் என நீங்கள் கருதுகிறீர்களா?
பின் தொடரும் நிழலின் குரல் தொகுப்பு வடிவம் கொண்டது. நேர்கோடற்ற கதையோட்டம். அத்துடன் அது பேசும் சிக்கல் அனைவருக்கும் உரியது அல்ல. அரசியலின் அறம் பற்றி, கருத்தியலின் வன்முறை பற்றி தனிப்பட்ட முறையில் கேள்விகள் உடையவர்களுக்கு உரிய நாவல் அது. அது உண்மையில் இடதுசாரிகளை நோக்கிப் பேசுகிறது. அவர்கள் அதைப்பற்றி வெளியே பேசமுடியாது.
பின் தொடரும் நிழலின் குரல் வெளிவந்தபோது இடதுசாரிகள் அது முன்வைக்கும் அறக்கேள்விகளால் நிம்மதி இழந்தனர். ஆகவே அதைப் புறக்கணிப்பதன்மூலம் வெல்ல முயன்றனர். நிராகரிப்புகள் எல்லாமே வாசிக்காமல் செய்யப்பட்டவை என்பதை அந்நாவலை வாசித்த ஒருவர் எளிதில் காணமுடியும். அது அனைத்துத் தரப்பு வினாக்களையும் முன்வைக்கிறது. ஆகவே அதை எளிய அரசியல் சமவாக்கியங்கள் அல்லது கோஷங்கள் கொண்டு விமர்சிக்க முடியாது. இங்குள்ள மார்க்ஸியர்களிடம் அதை விமர்சிக்கும் கருத்தியல் கருவிகள் என ஏதும் இல்லை. உண்மையில் இந்நாவல் ஸ்டாலினியத்தை நிராகரிக்கையில் மார்க்ஸிய இலட்சியவாதத்தை ஏற்கிறது என்றே கூட அவர்களால் புரிந்துகொள்ளமுடியவில்லை
பின் தொடரும் நிழலின் குரலை இடதுசாரிகள் எதிர்கொண்ட விதம் ஆச்சரியமூட்டுவது. அவர்கள் அதன் ஆசிரியனை அவதூறு செய்யத் தொடங்கினர். என் மீது இன்றிருக்கும் மத, சாதிய, பிற்போக்கு முத்திரைகளெல்லாம் இந்நாவல் காரணமாக இடதுசாரிகளால் போடப்பட்டதே. அதன் வழியாக நாவலை பரவலாகச் சென்றடைய முடியாமலாக்க அவர்களால் முடிந்தது.
ஆனால் அது முதல்பதிப்புக்கு மட்டுமே. சென்ற வருடங்களில் இரண்டு வருடங்க்ளுக்கொருமுறை அது மறுபதிப்பாக வந்துகொண்டே இருப்பதைக் காணலாம். அதை வரிவரியாக ஊன்றி வாசித்த வாசகர்களைக் காண்கிறேன். இலங்கைப் போராட்டத்தின் வீழ்ச்சியின் போது, டபிள்யூ ஆர் வரதராஜனின் தற்கொலையின் போதெல்லாம் பின்தொடரும் நிழலின் குரலைத்தேடிவந்து வாசித்தவர்கள் பலர். அது ஒரு பொழுதுபோக்கு நாவல் அல்ல. அதன் இடம் அடிப்படையான கேள்விகளுடன் தேடிவருபவர்களுக்கு உரியது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றதைச் சொன்னேன் அல்லவா? அதே நாளில் ஒரு தொழிற்சங்கவாதியைச் சந்தித்தேன். வேலையை விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு வழக்கறிஞராக தொழில்செய்யப்போவதாகச் சொன்னார். ஏன் என்றேன். “பின் தொடரும் நிழலின் குரல் கதைதான் தோழர். அச்சு அசலாக அதே மாதிரி” என்றார்.
8. ஆர்த்தர் சி. க்ளார்க், ஐஸக் அஸிமோவ் பாணியிலான விஞ்ஞானக் கதைகளையே பெரும்பாலும் தமிழ் கண்டிருக்கிறது. பிரதான உதாரணம் சுஜாதா. விசும்பு சிறுகதைத் தொகுப்பின் மூலம் நீங்கள் நம் கலாசாரத்தில் வேரூன்றிய ஓர் இந்திய மரபார்ந்த விஞ்ஞானப் புனைவை முன்வைத்தீர்கள். அது முக்கியமான பங்களிப்பு. அதைப் பற்றிச் சொல்லுங்கள். விஞ்ஞான நாவல் எழுதும் திட்டமிருக்கிறதா?
அமெரிக்க ஐரோப்பிய அறிவியல்புனைகதைகளின் அடிப்படைகள் மூன்று. ஒன்று, அவர்களுக்கிருக்கும் நவீன அறிவியல் கல்வி. இரண்டு, அவர்கள் ஆழ்மனதை ஆண்டுகொண்டிருக்கும் கிரேக்க தொன்மவியல் மூன்று, அவர்களின் நிறுவன மதமும் அதற்கு எதிரான நாத்திகவாதமும் உருவாக்கும் தத்துவக்கேள்விகள்.
இம்மூன்று அடிப்படைகளையும் கலந்துதான் அவர்களின் அறிபுனைகள் உருவாகின்றன. அங்கே நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் பெரியதாக வளர்ந்துள்ளன. அவற்றை ஒட்டி புனைகதை எழுதவும் வாசிக்கவும் ஏராளமானவர்கள் வந்துவிட்டனர். அந்த வசதி இங்கே நமக்கு இல்லை. நாம் அறிவியலை முறையாகக் கற்றவர்கள் அல்ல. அறிவியலை தகவல் கல்வியாகவே நாம் கற்கிறோம். அறிவியல் கொள்கைகளை புரிந்துகொள்வதற்கும் தொடர்ந்து சிந்திப்பதற்கும் இங்கே நமக்குப் பயிற்சியே இல்லை.
மேலைநாட்டு அறிபுனைகளில் கிரேக்கத் தொன்மங்களின் கட்டமைப்பு ஒளிந்திருப்பதைக் காணலாம். ஆர்தர் சி கிளார்க்கின் கதையை ஒட்டிய திரைப்பட்த்தில் தலைப்பே ஸ்பேஸ் ஒடிஸி என்றிருக்கிறது. யுலிஸஸ் அல்லது ஹெர்குலிஸின் சாகஸங்கள். விதவிதமான பயங்கர மிருகங்கள். பேருருவம் கொண்ட தெய்வங்கள். அவற்றின் அடிப்படையான படிம அமைப்பையே அறிபுனைகள் மறு ஆக்கம் செய்கின்றன.
அத்துடன் அங்குள்ள அறிபுனைகளின் சாராம்சமாக உள்ளவை செமிட்டிக் மதங்கள் உருவாக்கிய தத்துவ நிலைபாடுகளின் அவற்றின் மீதான கேள்விகளின் பல்வேறு வளர்ச்சி நிலைகள். உதாரணமாக இயந்திரர்கள் பற்றிய ஐசக் அசிமோவின் கதைகள் அனைத்திலுமே ஆன்மா என்பது என்ன, அறிவு மட்டும்தானா என்ற வினா உள்ளது. சுதந்திரம், அன்பு போன்ற விழுமியங்கள் முழுமையாகவே அறிவில் இருந்து வரமுடியுமா, வரமுடியாதென்றால் அவற்றின் ஊற்றுக்கண் எது என்ற கேள்வி உள்ளது.
நாம் முற்றிலும் வேறான ஒரு சூழலில் வாழ்கிறோம். நாம் கீழைமதங்களான இந்துமதம், பௌத்தம், சமணம் வழியாக அடையும் வினாக்கள் வேறு. நம் சிக்கல்களும் முற்றிலும் தனித்தவை. நம்முடைய புராண மரபும் வேறுபட்டது. ஆகவே நம் அறிபுனைகள் வேறுபட்டவையாகவே இருக்கமுடியும்.
ஆனால் இங்கே எழுதப்படும் அறிபுனைகள் மேலைநாட்டு அறிபுனைகளின் தழுவல்கள் அல்லது மறுவிளைவுகளாகவே உள்ளன. ஆகவேதான் ஒரு விண்வெளிக்கதையில் இந்தியப்பெயர்களும் உரையாடல்களும் வந்ததுமே நமக்கு அது அன்னியமாகத் தெரியத் தொடங்குகிறது.
மேலும் நாம் இங்கே அறிபுனைகளாகச் சொல்லிக்கொண்டிருக்கும் பல படைப்புகள் அறிவியலை அல்ல, தொழில்நுட்பத்தையே கருவாகக் கொண்டவை. வழக்கமான ஒரு கதையில் நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த சில விந்தைகளைக் கலந்துகொண்டு வியப்போ பிரமிப்போ பரபரப்போ உருவாக்கப்படுமென்றால் அதுவே அறிபுனைவு என நாம் நம்புகிறோம். உதாரணமாக சுஜாதா எழுதிய ஆக்கங்கள்.
அறிபுனைவு என்பது அறிவியல் கொள்கைகளையே முதன்மையாக புனைவுக்கு ஆதாரமாகக் கொள்கிறது. அறிவியலில் இருந்து படிமங்களை எடுத்துக்கொள்கிறது. அவற்றின் வழியாக அது வாழ்க்கையின் அடிப்படையான தத்துவ வினாக்களைத்தான் பரிசீலிக்கிறது. அது இங்கே நிகழ்வதில்லை.
நான் அறிபுனை எழுதியதற்குக் காரணம் ஒன்றே. நவீன அறிவியலில் எனக்கு அதிக அறிமுகம் இலலை. ஆனால் விஷ்ணுபுரத்திற்காக ஆய்வு செய்தமையால் ரசவாதம், யோகமரபு, ஆயுர்வேதம் போன்றவற்றைப் பற்றி அறிவேன். ஆகவே நான் அறிந்தவற்றில் இருந்து அறிபுனைகளை உருவாக்கினேன். அவற்றில் வாழ்க்கை சார்ந்த அடிப்படை வினாக்களையே எழுப்பிக்கொண்டேன்.
அறிபுனை நாவல் ஒன்று எழுதவேண்டுமென ஆசை உள்ளது. ஒரு முன்வரைவும் கையில் இருக்கிறது. எதிர்காலத்தில் யோகமரபு பற்றியது. மூளைக்கும் உடலுக்குமான தொடர்பு பற்றி. மூளை உடல்வழியாக உலகை உருவாக்குவது பற்றி. அடிப்படையில் அதன் வினா வேதாந்த ஞானமரபு கேட்பதுதான். இவ்வுலகென இங்குள்ள இவை எப்படி எனக்குள் உருவாகி வருகின்றன?
9. அறம் சிறுகதைத் தொகுப்பு உங்களின் முந்தைய சிறுகதைத் தொகுப்புகளிலிருந்து வேறுபட்டது. முக்கியமாய் அதன் நேரடியான கதை சொல்லல் முறை. கதைகளின் இலக்கிய ஸ்தானத்தை இந்த மாற்றம் பாதிக்கவில்லை என்ற போதும் உங்கள் எழுத்தின் அணுகுமுறையில் ஒரு முக்கிய மாற்றம். வெகுஜன / ஆரம்ப நிலை வாசகர்களையும் சென்றடைய வேண்டும் என்பதற்காக ப்ரக்ஞைப்பூர்வமாக dilute செய்தீர்களா, அல்லது அந்தக் கதைகள் அந்த எளிமையைக் கோரின எனக் கருதுகிறீர்களா?
அறம் கதைகள் பிரக்ஞைப்பூர்வமாக எழுதப்பட்டவை அல்ல. அவற்றை எழுதுவதற்கான ஒரு தேவை எனக்கிருந்தது. நானே எழுதிக் கொண்டுபிடிக்க வேண்டிய ஒன்று. நானே சொல்லியிருக்கிறேன். மானுட வாழ்க்கையில் விழுமியங்களின் இடமென்ன என்ற ஐயம் எனக்கிருந்தது. இடமே இலலையோ என்ற சோர்வு இருந்தது. ஓர் உடைவுக்கணத்தில் ஒரு கதையை எழுதினேன். அறம். அது ஒரு தொடக்கம். கதைகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.
அக்கதைகளுக்குப் பொதுவாக ஒரு சட்டகம் இருந்தது. உண்மையான மனிதர்களின் கதைகள். அம்மனிதர்களைப் பார்க்கும் இன்னொருவரின் கோணம். பொதுவாக சிறுகதைகள் ஒருசில கணங்களை மட்டும் சுட்டிக்காட்டி நின்றுவிடும். குறிப்புணர்த்தும். ஆனால் இக்கதைகளுக்கு அவை போதாது. அவை அந்த இலட்சிய மனிதரை முழுமையாகக் காட்டிவிடவேண்டியிருந்தது. அதற்கான வடிவம் அவற்றில் அமைந்தது. ஒரு புள்ளியில் நிகழ்ந்து முடிவதற்குப் பதிலாக பல தளங்களிலாக தொடர்ந்து சென்று முடியும் கதைகள் அவை.
இக்கதைகளில் கணிசமானவை உணர்ச்சிபூர்வமானவை. ஆகவே அவை வாசகர்களால் எளிதில் வாசிக்கப்படுகின்றன. ஆனால் அவை எளியவை அல்ல. நீர்த்த வடிவிலும் அவை இல்லை. அவற்றை வாசகர்கள் பலவகைகளில் வாசித்து எழுதிய கடிதங்களிலேயே அதைக் காணலாம். மயில்கழுத்து, தாயார்பாதம் போன்ற கதைகளைப்பற்றி இன்றும் கூட புதிய வினாக்கள் எழுப்பப்படுகின்றன. இன்னமும்கூட அக்கதைகள் முழுமையாக வாசிக்கப்படவில்லை. அவற்றின் பல விஷயங்கள் தொடாமலேயே கடந்து செல்லபடுகின்றன.
பொதுவாக இங்கே சிறுகதைகளுக்கு என ஒரு வடிவம், ஒரு முன்வரைவு உருவாகி இருக்கிறது. நவீனத்துவச் சிறுகதைகளின் வடிவம் அது எனலாம். எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாத உணர்ச்சியற்ற நடையில் சுருக்கமாகச் சொல்லப்படும் ஒரு கதை. சிலநிகழ்வுகள் மட்டும். அதில் பூடகமாக ஒரு விஷயம் ஒளிக்கப்பட்டு ஒரு கோடி காட்டப்பட்டிருக்கும். வாசகன் அதை ஊகித்துக் கண்டுபிடிக்கவேண்டும். இது ஆசிரியனுக்கும் எழுத்தாளனுக்குமான ஓரு விளையாட்டு. மூன்றுசீட்டு விளையாடுவதுபோல.
ஒளித்துவைத்ததை வாசகன் கண்டுபிடித்துவிட்டால் மகிழ்ச்சி அடைகிறான். அதை இலக்கிய அனுபவம் என நினைத்துக்கொள்கிறான். கொஞ்சகாலம் வாசித்துக்கொண்டிருப்பவன் எளிதில் அதைக் கண்டுபிடித்துவிடுவான். அவன் கண்டுபிடிப்பது ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது. பல கதைகளில் எளிய சமூகவியல் உண்மைகள். அவ்வப்போது சில பாலியல் மீறல்கள். அவ்வளவுதான்.
இது எனக்கு சலிப்பூட்டியது. நான் அடிப்படைக்கேள்விகளை நோக்கி வாசகனைச் செலுத்த விழைந்தேன். ஆகவேதான் அறம் கதைகள் வெளிப்படையாக அமைந்தன. அவற்றில் பூடகமாக ஏதும் ஒளிக்கப்படவில்லை. அவற்றில் அப்பட்டமாகவே இருந்தது வாழ்க்கை பற்றிய ஒரு கேள்வி. அந்தக் கேள்வியைச் சந்தித்தவர்களுக்கு அவை எளிமையான கதைகள் அல்ல. விரிந்து விரிந்து செல்லும் கதைகள். கதையின் உடலுக்குள் ஒளித்துவைக்கப்பட்ட ஒரு சிறிய விஷயத்தைத் தேடுவதையே வாசிப்பு என நினைப்பவர்களுக்கு கதை எளிமையானது. அது சொல்வது முன்னால் வந்து நிற்கிறது அல்லவா?
உதாரணமாக நூறு நாற்காலிகள். “எனக்கு வேண்டும் நூறு நாற்காலிகள்” என்பது அப்பட்டமான நேரடியான முடிவு. பூடகம் தேடும் வாசகனுக்கு அங்கே கதை முடிந்துவிடுகிறது. ஆனால் அந்த முடிச்சை வாழ்க்கையாகக் காண்பவனுக்கு அது பெரிய தொடக்கம். காப்பனின் குரு நாற்காலிகளை வெல்லும்படிச் சொல்கிறார். அம்மா நாற்காலி வேண்டாம் என்கிறார். அவன் குருவை தேர்ந்தெடுக்கிறான். ஆனால் அது சரியான முடிவுதானா? அம்மா ஏதேனும் உள்ளுணர்வில் அதைச் சொன்னாளா? அவ்வினாக்களை கேட்க ஆரம்பித்தால் முதல் வரிமுதல் கதை மீண்டும் விரியத்தொடங்கும்.
அதன் பின் எழுதிய முள் அல்லது பிழை போன்ற கதைகளில் இந்த அளவு வெளிப்படைத்தன்மை இல்லை. அவை பூடகமாக எதையும் ஒளிக்க முயலவில்லை. ஆனால் அவை முன்வைக்கும் அடிப்படையான சிக்கல் என்பது வாழ்க்கையின் அன்றாடத்தளம் சார்ந்தது அல்ல. ஆன்மீகமானது. அதற்குரிய வாசகர்களுக்கானது.
10. நல்ல வாசகனின் நினைவிலிருக்கும் நகைச்சுவை நாவல்கள் குறைவு. சட்டென யோசித்தால் சுஜாதாவின் ஆதலினாற் காதல் செய்வீர் மட்டும் தான் நினைவுக்கு வருகிறது. உங்களது நான்காவது கொலை ஒரு நகைச்சுவை நாவல் என்ற போதும் வழமையான அசட்டு நாடக பாணி நகைச்சுவை என்பதாக இல்லாமல் நுட்பமான படைப்பு (உதா: பல பிரபல துப்பறியும் கதாபத்திரங்களைப் பகடி செய்திருத்தல் போன்றவை). நான் கண்டவரை அதை யாரும் குறிப்பிட்டுச் சிலாகித்ததில்லை. உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகளும் அவ்வகையிலான நுட்பமான படைப்புகளே. எழுத்தினூடான அங்கதம் தவிர்த்து தனித்த நகைச்சுவை எழுத்து என்பது இலக்கிய அந்தஸ்தைக் குறைக்குமா?
நகைச்சுவைக் கதைகள், அங்கதக்கட்டுரைகள் எனப் பொதுவாக தமிழின் தரம் மற்றும் அளவு மிகக்குறைவு என்பதே என் எண்ணம். நான் தமிழின் உயர்தர நகைச்சுவை எனக்கருதுவது ப.சிங்காரம், அசோகமித்திரன், நாஞ்சில்நாடன் படைப்புகளைத்தான். சுஜாதாவின் சிலகதைகளில் மட்டுமே [உதாரணமாக குதிரை] சிறந்த நகைச்சுவை சாத்தியமாகியிருக்கிறது.
நகைச்சுவை எனப் பொதுவாகச் சொல்கிறோம். அதைப் பல வகையாக பிரித்துக்கொள்வதே தெளிவான புரிதலை நோக்கிக் கொண்டுசெல்லும். அங்கதம் [satire], சிரிப்பூட்டுதல் [joke], சொல்நகை [wit], எனப் பல வகைமைகள் உள்ளன. ஒவ்வொன்றின் இயல்பும் வேறுவேறு. அங்கதத்துக்கு மட்டுமே இலக்கியத்தில் இடமுண்டு. மற்றவை களிப்பூட்டும் எழுத்துமுறைகள் மட்டுமே. அங்கதம் என்பது நகைச்சுவைத்தன்மை கொண்டிருந்தாலும் உள்ளடக்கத்தில் தீவிரமானது. அது ஒரு தீவிரமான விமர்சனத்தை முன்வைக்கிறது. சமூகவிமர்சனம், தத்துவ விமர்சனம். அது ஓர் அழகியல் வெளிப்பாடு
அத்தகைய அங்கதம் இங்கே குறைவாக இருப்பதற்கான காரணம், எதை அது பகடி செய்கிறதோ அதை ஏற்கனவே அறிந்த வாசகர்கள் அதற்குத்தேவை என்பதே. உதாரணம் நாஞ்சில்நாடனின் பாம்பு என்ற சிறுகதை. தமிழில் கல்வித்துறை ஆய்வுகள் செய்யப்படும் லட்சணத்தை கொஞ்சமேனும் தெரியாத ஒருவருக்கு அதில் சிரிப்பதற்கு ஒன்றுமில்லை. தெரிந்தவர் நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டிருப்பார்.
எனக்குப்பிடித்த அங்கத எழுத்தாளர் மலையாளத்தில் வி.கே.என். கதகளி, சம்ஸ்கிருத நாடகம், சம்ஸ்கிருத காவியமரபு மலையாளப்பண்பாடு தெரியாத ஒருவருக்கு அதில் பாதிப்பகடி புரியாது. நிறையத்தெரிந்தால் பகடி படு கீழ்த்தரமாகக்கூடப்போகும் என்பது வேறுவிஷயம். கம்பராமாயணம் தெரிந்த ஒருவர் நாஞ்சில்நாடன் எழுதிய பகடிகளின் விபரீதம் தெரிந்து பகீரிட்டுப் பின் சிரிப்பார்.
தமிழின் சராசரி வாசகனுக்கு சினிமா பற்றி மட்டும்தான் தெரியும். ஆகவே அதை வைத்துச் செய்யப்படும் பகடி மட்டும்தான் புரியும். அங்கதம் என்பதே பரந்துபட்ட ரசனையும் வாசிப்பும் தகவலறிவும் கொண்ட வாசகனுக்குரியது.
அங்கதநாவல் ஒன்று எழுதவேண்டும் என்ற திட்டம் உள்ளது. நாகர்கோயில் அருகே உள்ள தழுவியமகாதேவர் ஆலயத்தைப்பற்றி. அங்கே சிவலிங்கம் வளைந்திருக்கும். பார்வதி தழுவியதனால் முலை பட்டு வளைந்தது. சாமியே வளைந்திருப்பதனால் ஊரில் பெரும்பாலும் வீட்டுக்கொரு பைத்தியக்காரர் இருப்பார் என்பது நம்பிக்கை. ஒரு தெருவில் ஐம்பது பைத்தியம் இருந்தால் எப்படி இருக்கும் தெரு? அதுதான் கரு. எழுதவேண்டும்.
11. நீங்கள் எழுதிய குழந்தைகள் நாவல் பனி மனிதன். குழந்தை இலக்கியங்களின் முக்கியத்துவம் என்ன? பனி மனிதன் அது எழுதப்பட்டதன் நோக்கத்தை அடைந்ததா?
தமிழில் குழந்தைகள் நூல்கள் எழுதுவதில் உள்ள சிக்கலே தமிழ்ப்பெற்றோர் குழந்தைகளுக்கு தமிழ் நூல்களை வாங்கிக்கொடுப்பதில்லை என்பதுதான். படிப்பு கெட்டுப்போய்விடுமாம். ஆங்கில நூல்களைத்தான் வாங்கிக்கொடுப்பார்கள். குழந்தைகளுக்குச் சொந்தமாக வாங்கவும் வசதி இல்லை.
பனிமனிதன் என் நண்பர் மனோஜ் தினமணியில் பணியாற்றிய காலத்தில் கேட்டு வாங்கிப்போட்டது. அன்று குழந்தைகள் மிக விரும்பி வாசித்தனர். அதை வாசித்து என்னை அறிந்த பலர் இன்றும் என் வாசகர்களாக உள்ளனர். ஆனால் நூலாக வந்தபின் வாசித்த குழந்தைகள் மிகமிகக்குறைவு. என் வாசகர்கள்தான் அதையும் வாங்கிப்படிக்கிறார்கள்.
குழந்தைகளுக்கான எழுத்து எளிய நடையில் தீவிரமானதாகவே இருக்கவேண்டும் என நினைக்கிறேன். குழந்தைகளுக்கு ஒரு தர்க்க புத்தி உண்டு. அதை அவ்வெழுத்து நிறைவுறச் செய்யவேண்டும். நாலைந்து சொற்களுக்கு மிகாத சொற்றொடர்களால் எழுதப்பட்டிருக்கவேண்டும். அதே சமயம் அவர்களை பெரிய காட்சியனுபவம் நோக்கிக் கொண்டு செல்லவேண்டும். பனிமனிதன் அப்படிப்பட்ட நூல்தான்.
தமிழில் வாசிக்கும் குழந்தைகளுக்குரிய நல்ல நூல்கள் மிகக்குறைவு. பெரும்பாலும் பொருத்தமற்ற மொழிபெயர்ப்புகள். குழந்தைக்கதைகள் எனப் பெரியவர்கள் நினைத்துக்கொள்ளும் பழைமையான மாயக்கதைகள். சிலநாட்களுக்கு முன் வார இதழ் சிறுவர் இணைப்பை இலவசமாக வாங்கிச்சென்று வாசிக்க அண்ணனும் தங்கையுமாக இரு குழந்தைகள் அந்தி நேரத்தில் ஒரு பார்பர் ஷாப்புக்கு வந்து தயங்கி நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். பாவமாக இருந்தது. எத்தனை பசி. அவர்களுக்கு என்ன கொடுத்துக்கொண்டிருக்கிறோம்?
12. ஜெ.சைதன்யா சிந்தனை மரபு நானறிந்த வரை முன்னோடியே இல்லாத முதல் முயற்சி. அதில் சொல்லப்பட்டவற்றுள் எவ்வளவு தூரம் கற்பனை எவ்வளவு நிஜம்? சைதன்யா வளர்ந்த பின் இப்போது அதைப் படித்தாரா? அவரது அபிப்பிராயம் என்ன?
அது ஒரு புனைவு. சைதன்யா என்ற குழந்தை சொன்னது முக்கால்வாசி. சொல்லியிருக்கக் கூடுவது கால்வாசி. சைதன்யா இன்று தஸ்தயேவ்ஸ்கியையும் காஃப்காவையும் ஒப்பிட்டுப்பேசும் இலக்கிய வாசகி. கர்ட் வான்காட் வெறும் மொழிநடையாளர் என்று நிராகரிக்கும் அறிவுஜீவி. அவள் எட்டாம் வகுப்பிலேயே சைதன்யாவின் சிந்தனை மரபை வாசித்துவிட்டாள். அந்தக் குட்டி சைதன்யாவை அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
அவளுடைய மேஜை மேல் ஒரு வயதுள்ள தன் படத்தை வைத்திருந்தாள். கல்பற்றா நாராயணன் அதைப்பார்த்து சிரித்துக்கொண்டு என்னிடம் சொன்னார் “அவளுக்கு பிறக்கப்போகும் மகள்… இப்போதே கொஞ்ச ஆரம்பித்துவிட்டாள்”
13. இலக்கிய முன்னோடிகள் வரிசை நூல்கள் முந்தைய ஆளுமைகளுக்கு நீங்கள் செய்த கறார் மதிப்பீட்டின் வழியான மரியாதை (அவற்றை வாசித்த பின் நான் அதே போல் சுஜாதா பற்றிய ஒரு நூல் விரிவாய் எழுத வேண்டும் என நெடுநாள் ஆசை). அந்த நூல் வரிசையைத் தொடரும் உத்தேசமுண்டா? ஆம் எனில் இனி அடுத்து யாரைப் பற்றிய நூல்களை எழுதப் போகிறீர்கள்?
அந்த நூல்வரிசையில் சா.கந்தசாமி, இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், வண்ணநிலவன், வண்ணதாசன் பூமணி நாஞ்சில்நாடன் வரை எழுத எண்ணமிருந்தது. அப்போதே எழுதியிருந்தால் எழுதியிருக்கலாம். தவறிவிட்டது. நாஞ்சில் பூமணி பற்றி நூலே எழுதிவிட்டேன். பிறரைப்பற்றி எழுதவேண்டும்
14. ஏற்கனவே எழுதப்பெற்ற இதிசாகாசங்களை, காப்பியங்களை மீட்டுருவாக்கம் செய்வதற்குப் பின்னான உந்துதல் என்ன? இதன் இலக்கிய அவசியம் என்ன? சமகாலத்தில் இதை வேறந்த மொழியிலும் யாராவது செய்கிறார்களா? (உதாரணமாய் இலியட்டை மீட்டுருவாக்கம் செய்வது)
திருப்பி எழுதுவது என்பது நவீனத்துவத்திற்கு பிந்தைய எழுத்துமுறைகளில் முக்கியமானது. [பின்நவீனத்துவம் என்ற சொல்லைத் தவிர்க்கிறேன், அது இங்கே பாலியல் எழுத்து என்ற அர்த்தத்தை மட்டுமே கொண்டிருக்கிறது]. நவீனத்துவ எழுத்து எழுத்தாளன் என்ற தனிமனிதனின் அந்தரங்க உலகையே பெரிதும் வெளிப்படுத்தியது. அவனே புனைவின் மையமாக இருந்தான். எழுத்தின் வழியாக அந்த எழுத்தாளனின் தனியாளுமையை நாம் சென்று சேரமுடியும், அதாவது அவன் உருவாக்கிக் காட்டும் ஆளுமையை.
நவீனத்துவம் கடந்தபின்னர் வந்த புதிய எழுத்துமுறை என்பது பலவகையிலும் நவீனத்துவ எழுத்துமுறையின் எல்லைகளைக் தாண்டிச்சென்றது. இலக்கியம் என்பது இன்னொருவகை சமான வரலாறாக மாறியது. மொத்தப்பண்பாட்டையும் வரலாற்றையும் மீண்டும் சொல்லத்தொடங்கியது. ஒட்டுமொத்த வரலாற்றின் மீதும் ஒரு முழுமையான விமர்சனத்தை முன்வைக்கத் தொடங்கியது.
கிரேக்கத் தொன்மங்களையும், செமிட்டிக் தொன்மங்களையும் பலவகைகளில் திரும்பச் சொல்லும் முயற்சிகள் மேலை இலக்கியத்தின் தொடக்கம் முதலே வலுவாக உள்ளன. சாதாரணமாகத் தேடினாலே ஆயிரக்கணக்கான நூல்களை நீங்கள் காணமுடியும். எனக்குத் தனிப்பட்ட முறையில் பிடித்தமான நூல்களில் நிகாஸ் கஸன்ஸகீஸின் லாஸ்ட் டெம்டேஷன் ஆப் கிறிஸ்ட், எமிலி ஜோலாவின் பரபாஸ் ஆகியவை முக்கியமானவை. சமீபமாக இந்தியத் தொன்மங்களை வைத்து எழுதப்பட்ட ராபர்ட்டோ கலாஸோவின் கா ஒரு சுமாரான நூல்.
இந்த மறு ஆக்கங்கள் முழுமையடைந்த பின் அடுத்த அலையாக எழுபவை தான் இன்று அங்கே வந்துகொண்டிருக்கும் தொன்மங்களின் மறுஆக்கங்களின் மறுஆக்கம் என்று சொல்லப்படும் நூல்கள். தொன்மங்களை எடுத்துக்கொண்டு அவற்றின் உருவாக்கம் வரைச் செல்லக்கூடியவை. தொன்மங்களையும் அவற்றின்மீதான பண்பாட்டு எதிர்வினைகளையும் ஒன்றாகச் சேர்க்கும் நாவல்கள். அதாவது தொன்மங்களைக் ‘கையாளக்கூடிய’ நாவல்கள். ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிஸஸ் போல. ராபர்ட்டோ பொலானோவின் 2666 போல. அல்லது லோசாவின் ஸ்டோரிடெல்லர் போல. அவை தொன்மங்களை ஒருவகையில் அம்மானக் கலைஞன் பந்துகளைத் தூக்கிப்போட்டுப் பிடிப்பதுபோல விளையாடுகின்றன.
இந்தியச்சூழலில் நாம் நம் தொன்மங்களுக்கான நவீன வாசிப்பையே ஆரம்பிக்கவில்லை. அவை நிகழ்ந்து விவாதிக்கப்பட்ட பின்னர்தான் அடுத்தகட்டமே இங்கு சாத்தியம். கொற்றவை, வெண்முரசு போன்றவை அந்த நவீன மறுவாசிப்புக்கான முயற்சிகள். இந்தியாவின் ஒட்டுமொத்தப் பண்பாட்டின் பின்புலத்தில், இன்றைய பண்பாட்டுச்சூழலின் பின்புலத்தில் அவற்றைக் கொண்டு வந்து வைத்துப் பேசுகின்றன. விஷ்ணுபுரமும் அத்தகைய முயற்சிதான்.
இந்தப் பிரம்மாண்டமான மறுஆக்கம் நிகழ்ந்தபின் புதிய வடிவம் கொண்டு வந்து நிற்கும் தொன்மங்களைக் கொண்டுதான் இங்கே ஒருவர் 2666 போன்ற தொன்மக்குறியீடுகளால் ஆன நூலை எழுதமுடியும். அதை போல நாமும் எழுதுவதைச் சொல்லவில்லை. அதற்கு நிகரான இங்கே மட்டுமே உருவாகும் ஓர் எழுத்து முறையைச் சொன்னேன். எனக்கே அப்படி எழுதும் ஆசை உண்டு.
கொற்றவை உட்பட இந்தவகை நூல்கள் முழுமையான கவனத்துடன் வாசிக்கப்படவில்லை. ஏனென்றால் இங்கே எழுதுபவர்களுக்கு தன் சொந்தவாழ்க்கையையும் கொஞ்சம் பகல்கனவையும் கொஞ்சம் சமகால அரசியலையும் கலந்து ‘சிறிய’ எழுத்துக்களை உருவாக்குவதில் மட்டுமே ஆர்வமிருக்கிறது. புனைவுகளின் பல அடுக்குகளை தொட்டு எடுக்கும் வாசிப்புகளே இங்கில்லை. முற்போக்கா பிற்போக்கா என்ற வகையான மோட்டாவான ஓர் அரசியல் வாசிப்பு, எளிய அரசியல்சரிகளை மட்டும் கண்டடைவது. இதெல்லாம்தான் இங்கே நிகழ்கிறது. அத்தகைய வாசிப்புதான் இவற்றை ‘மரபைத் திரும்ப எழுதுவது மட்டுமே, இதெல்லாம் பிஜேபி அரசியல் தோழர்’ எனக் கடந்துசெல்லும்.
சரி, உங்களுக்காக ஒன்றைச் சொல்கிறேன். கொற்றவை நாவலில் ஆறுபக்கத்துக்கு கிளிட்டோரிஸைப் பற்றி பேசப்பட்டிருக்கிறது என்பது தெரியுமா? கண்ணகியும் மணிமேகலையும் பேசப்படும் ஒருநாவலில் அந்தச் சித்தரிப்பு எப்படி உள்ளே வருகிறது? அது உருவாக்கும் தலைகீழாக்கம் என்ன? மொத்த மரபையே அது இன்னொன்றாக ஆக்கிவிடுகிறது அல்லவா? அதற்கான இடத்தை உருவாக்கவே இந்த மறுபுனைவுகள். அந்நாவலில் தமிழகத்தின் பெரும்பாலும் அனைத்து தொன்மங்களும் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளன. எல்லா தொன்மங்களுக்கும் இரண்டு வெவ்வேறு வடிவங்கள் அருகருகே வருகின்றன.
அந்நாவல் வந்து ஒன்பது வருடங்களாகின்றன. இன்றுவரை எவரேனும் அதைப்பற்றி பேசியிருக்கிறார்களா? ஏனென்றால் அதை நம்மூர் மோட்டா வாசகர்கள், சின்ன எழுத்தாளர்கள் புரிந்துகொள்ள முடியாது. அதற்கான நுண்ணுணர்வு கொண்ட வாசகர்கள், அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் வருவார்கள். அதுவரை அந்நாவல் காத்திருக்கும்.
வெண்முரசைப்பற்றியும் அதையே சொல்வேன். அதன் ஒரு பக்கத்தை பொதுவாசகன் வாசித்துச்செல்வான். இன்னொருபக்கம் அது ஒரு முழுமையான தலைகீழாக்கத்தை செய்துகொண்டே செல்கிறது. நீலம் போன்ற ஒருநாவலின் தளம் நம் மரபை அறிந்து அதைத் தலைகீழாக கவிழ்த்து வாசிக்கும் ஒருவனுக்கே முழுமையாகக் கிடைக்கும். அது உருவாக்கும் பாலியல் உட்குறிப்புகளைக் கடப்பதற்கே ஒரு தனி வாசிப்புமுறை தேவை.
என் வரையில் இது ஒரு பெரிய தொடக்கம் என நினைக்கிறேன். ஒரு பிரம்மாண்டமான விதைத் தொகுதி.
15. வெண்முரசு அடுத்த பத்தாண்டுகளுக்கு உங்களது பெரும்பாலான நேரத்தை எடுத்துக் கொள்ளப் போகிறது. வெண்முரசு, சினிமா, கட்டுரைகள் மற்றும் இன்ன பிற இணையச் செயல்பாடுகள் தவிர்த்து நீங்கள் புனைவில் ஈடுபடவியலாமல் போகலாம். பத்திரிக்கையாளர் ஞாநி கூட இதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். வெண்முரசு வியர்த்தமான முயற்சி என்ற அவரது பார்வையைத் தாண்டி அதில் உண்மை இருப்பதாகவே படுகிறது. உங்கள் இலக்கிய வாழ்வில் முக்கியமான அமையக்கூடிய அடுத்த பத்து ஆண்டுகளை வெண்முரசுக்கெனவே எழுதி வைத்ததை நீங்கள் எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்? உங்கள் திட்டப்படி வெண்முரசு எழுதி முடித்தால் விஷ்ணுபுரம் உள்ளிட்ட உங்கள் பிற ஆக்கங்கள் பின்னுக்குக் தள்ளப்பட்டு அதுவே உங்கள் பிரதான இலக்கிய முகமாகும். அதை விரும்புகிறீர்களா?
இந்த விவாதங்கள் எல்லாமே வெண்முரசு என்ன வகையான எழுத்து என அறியாமல் வாசிக்காமல் அது மகாபாரதத்தை திருப்பி எழுதுவது என்ற ஒற்றை வரியின் அடிப்படையில் சொல்லப்படுபவை மட்டுமே. அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது?
இதன் இதுவரையிலான பக்கங்களில் வந்துள்ள சமகால அரசியல், சமகால உணர்வுநிலைகள் மிகப் பரந்துபட்டவை. ஓர் உதாரணம், பாஞ்சாலியின் பலகணவர் முறைபற்றிய பகுதிகள். அதன் பண்பாடுப்புலம். அவளுடைய பாலியல்சார்ந்த ஆழ்மன ஓட்டங்கள். அவற்றுடன் தொடர்புள்ள தொன்மங்கள் என அது செல்லுமிடம் சமகால அக ஆழமே. பாஞ்சாலி ஒரு நவீனப்பெண். அவளை ஆராய்வது ஒரு சமகால நோக்கு. ஆனால் அதை மேலோட்டமாக இங்கிருந்து விலக்கி தொன்மத்தில் கொண்டு வைத்தால் மட்டுமே முழுமையாக ஆராய முடியும்.
இதன் அளவைப்பற்றி எல்லாம் பேசுகிறார்கள். இந்த எழுத்துமுறை என்பது இன்றைய, நாளைய சாத்தியம் என அவர்கள் அறிவதில்லை. பாருங்கள் ஒட்டுமொத்த சிலப்பதிகாரமும் நீட்டி அடித்தால் ஒரு குறுநாவல் அளவுக்கே வரும். ஏடுகளில் எழுதப்பட்ட பெரும்பாலான நூல்கள் மிகமிகச்சிறியவை. அச்சு ஊடகம் வந்ததும் நூல்கள் பத்துமடங்கு பெரியதாயின. பொன்னியின் செல்வன் அக்காலத்தில் மிகப்பெரிய திகைப்பை அளித்த நாவல்
இன்று மின்னணு ஊடகக் காலம். வெண்முரசு அச்சிலும் வெளியாகிறது. ஆனால் அது அச்சு ஊடகத்திற்குரியது அல்ல. அது சில ஆண்டுகளுக்குப்பின் அச்சிலேயே வராது போகலாம். ஆனால் மின்னணு வடிவில், இணையத்தில் இருக்கும். இணையத்தில் அது ஒரு டேட்டாபேஸ். ஒரு பெரிய கதைத்தொகுதி. ஒரு தொன்மக்குவியல். ஒரு தொன்மவிளையாட்டுக்களம். அதில் நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எங்கிருந்து வேண்டுமென்றாலும் நுழையலாம். எந்தப்பகுதியை வேண்டுமென்றாலும் வாசிக்கலாம்.
இது காகிதம் அகன்றபின் நீடிக்கப்போகும் எழுத்து. இப்போதே 70 சதவீத வாசகர்கள் செல்பேசியில் வாசிக்கிறார்கள். செல்பேசி வாசிப்பு இல்லாவிட்டால் வெண்முரசு இல்லை என்பதே உண்மை.
யோசித்துப்பாருஙக்ள் இன்றைக்கு ஒரு சாதாரண மனிதன் வாசிப்பது சென்ற காலத்தை விட 10 மடங்கு அதிகம். ஃபேஸ்புக் வாசிப்புதான். ஆனாலும் அது வாசிப்புதானே. சென்றகாலத்தில் ஒருவாரத்தின் குமுதம், விகடன் உள்ளிட்ட அத்தனை இதழ்களையும் நாளிதழ்களையும் சேர்த்தால் வரும் அளவுக்கு இவன் ஒரே நாளில் வாசிக்கிறான். வாசிக்கும் ஊடகத்தின் வசதிதான் காரணம். எங்கும் எப்போதும் வாசிக்கலாம். இப்படி வாசிப்பு பெருகியிருக்கும் இந்தக் காலகட்டத்திற்குரியது இவ்வெழுத்து.
வெண்முரசு அது ஒரு சம்பிரதாயமான நாவல் அல்ல. அதை நூற்றுக்கும் மேல் சிறிய நாவல்களாக ஆக்கலாம். ஆயிரக்கணக்கான சிறுகதைகளாக ஆக்கலாம். அதை நீங்கள் பிறர் எழுதிக்கொண்டிருக்கும் நாவல்களுடன் ஒப்பிடக்கூடாது. அதில் இனிமேல் மேலும் மேலும் படங்கள் சேர்க்கலாம். அனிமேஷன் சேர்க்கலாம். விரைவிலேயே ஆடியோ சேர்க்கவிருக்கிறோம்.
முழுக்கமுழுக்க அது ஒரு ‘ஹைப்பர் டெக்ஸ்ட்’ எழுத்து. இப்போதே இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளிணைப்புகள் உருவாகி விட்டன. சிலவருடங்கள் கழித்து அதன் குறுக்கு நெடுக்காக மேலும் மேலும் இணைப்புகள் அளிக்கமுடியும். அதைமட்டும் தொகுத்து வாசகன் அவனுக்கான ஒரு நாவலைக் குறுக்காகத் தொகுத்துக்கொள்வான். விதுரனை மட்டும் தொகுத்து ஒரு நாவலாக்கிக்கொள்ளலாம். அந்தவேலையும் நடக்கிறது. ஒருவர் எழுதும் நாவல் அல்ல இது. இதில் இப்போதே பல நிபுணர்கள் பணியாற்றுகிறார்கள். எதிர்காலத்தில் இன்னும் பெருகும்.
நீங்கள் இன்றுவரை அறியாத ஒரு பெரிய இலக்கியவகை இது. நாவல் என்ற வார்த்தை இதற்கு மிகச் சிறியது. இதை வேண்டுமென்றால் ஒரு ஹைப்பர்லிங்க் புனைவு என்று சொல்லுங்கள்.
16. கடந்த பத்தாண்டுகளாகவே அசோகவனம் என்ற பிரம்மாண்ட நாவலைத் திட்டமிட்டிருந்தீர்கள். அது எதைப் பற்றியது? அப்பணி எந்த நிலையில் இருக்கிறது? வெண்முரசு காரணமாக அது தாமதமாகிறதா? அது எப்போது வெளியாகும்?
ஒரு மூன்றுமாதம் அமர்ந்தால் முடித்துவிடமுடியும் நிலையில்தான் அசோகவனம் உள்ளது. 2016ல் அசோகவனமும் வெளியாகும் என நினைக்கிறேன். வெண்முரசு அதன் தாமதத்திற்குக் காரணம் அல்ல. விரிவான ஆராய்ச்சி தேவைப்பட்டது. கேரள வரலாறு. நாயக்கர் கால வரலாறு.
17. ஆரம்ப காலத்தில் (80களின் இறுதி?) வேறு பெயரில் பல ஜனரஞ்சகக் கதைகளை எழுதியதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதே திசையில் தொடர்ந்திருந்தால் சுஜாதா மட்டுமே உங்களுக்குப் போட்டியாளராக இருந்திருப்பார் எனச் சொல்லி இருந்தீர்கள். அது பற்றிச் சொல்லுங்கள். அவற்றைத் தொகுத்து வெளியிடும் எண்ணம் உண்டா?
இல்லை. பல கதைகள் கிடைக்கவில்லை. அதற்காக நேரம் செலவிடுவது வீண்வேலை என்று தோன்றுகிறது
18. மொழியின் உச்ச வெளிப்பாடு கவிதை. எந்த ஒரு மொழியிலும் கவிஞனே எழுத்தாளனுக்கு மேல் உயர்ந்தவனாய்க் கொண்டாடப்படுகிறான். (இரவு நாவலில் வரும் கவிதைகள் தவிர்த்து) நீங்கள் ஏன் கவிதை ஏதும் எழுதுவதில்லை?
மொழியின் உச்சவெளிப்பாடு கவிதை அல்ல, காவியம்தான். இன்றைய கவிதை ஒரு முழுமையனுபவத்தை அளிப்பதில்லை. அது ஒரு துளியில் வாழ்க்கையை நோக்கி அமைகிறது. ஆகவே அது குறைபாடு கொண்டது. நவீனக் கவிதையின் இந்தத் துளித்தன்மை அதன் பலம். அதன் பலவீனமும் அதுவே. வரலாற்றை, பண்பாட்டை, மானுட அகத்தை நோக்கி எழுதும் எழுத்தாளனுக்கு அது ஆழ்ந்த போதாமையுணர்வை அளிக்கும்.
இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான நாவல்கள் பெரும்பாலும் கவித்துவத்தால் ஆனவையே. பாஸ்டர்நாக் சொன்னார் இருபதாம் நூற்றாண்டில் கவிஞன் எழுதவேண்டியது நாவலையே என்று. கவிஞரான அவர் டாக்டர் ஷிவாகோ எழுதி அதனூடாகவே அறியப்படுகிறார். நான் கவிதைகள் எழுதினால் அது ஒரு நாவலின் பகுதியாகவே இருக்கும். என் வரையில் கொற்றவை, நீலம் இரண்டும் தமிழின் எந்த கவிஞரின் மொத்தக் கவிதைத் தொகுதிகளைவிடவும் கவிதைகளைக் கொண்டவை.
19. இதுவரையிலான உங்கள் எழுத்துக்களில் மாஸ்டர்பீஸ் நாவல், சிறுகதை, நூல் என எவற்றைக் கருதுகிறீர்கள்? அதில் ஒவ்வொன்றை பற்றியும் கொஞ்சம் பேசுங்கள்.
விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், கொற்றவை என நான் ஒன்றில் இருந்து ஒன்றுக்குத் தாவுகிறேன். ஒவ்வொன்றும் இன்னொன்றை நிறைப்பவை. என் வரையில் முழுமையாக்கும்போது வெண்முரசுதான் என் பெரும்படைப்பாக இருக்கும். அதைக் கடந்துசெல்ல எழுதிமுடித்ததுமே முயல்வேன்.
20. ஓர் எளிய வெகுஜன வாசகன் உங்களை எங்கிருந்து வாசிக்கத் தொடங்கலாம்? என்னைக் கேட்பவர்களுக்கு ஆரம்பத்திலேயே விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், ஏழாம் உலகம் எனத் தொடங்கினால் ஒருவேளை மிரளக்கூடும் என்ற அடைப்படையில் வாசிக்க இணக்கமாய் இருப்பவை என்ற அடிப்படையில் சிபாரிசு செய்வது விசும்பு, அறம், உலோகம். நீங்கள் வரிசைப்படுத்துங்களேன்.
அறம் கதைகள். அவை அவன் கண்டு அறிந்த ஒரு மானுடமேன்மையை திரும்பச் சொல்கின்றன. வாழ்விலே ஒருமுறை, சங்க சித்திரங்கள் போன்ற நூல்களும் சிறந்த தொடக்கங்கள் என்பதைக் கண்டிருக்கிறேன்
21. இடையில் சொல் புதிது என்ற சிற்றிதழைத் தொடங்கி சில காலம் நடத்தினீர்கள். அந்த அனுபவத்தைச் சொல்லுங்கள். இலக்கிய உலகிற்கு சொல் புதிது இதழ் செய்த பங்களிப்புகள் பற்றி? ஏன் அவ்விதழ் தொடர்ந்து வெளியாகவில்லை? சிற்றிதழ்களின் நிலையாமை தெரிந்தது தான். ஆனால் அது தவிர்த்து வேறு காரணங்கள் உண்டா?
சொல்புதிதை என் நண்பர் எம்.கோபாலகிருஷ்ணனுடன் இணைந்து தொடங்கி சிலகாலம் நடத்தினேன். பின்னர் அவர் விலகினார். கடைசியில் நண்பர் சதக்கத்துல்லா ஹசநீயின் ஆசிரியத்துவத்தில் நடத்தினேன். அது பதிவுசெய்யப்படாத இதழ். போட்டி சிற்றிதழாளர் குழுவினர் எவரோ அவர் இஸ்லாமிய தீவிரவாதி எனப் புகார் செய்துவிட்டார்கள். அவரைக் கூட்டி வைத்து கொஞ்சநாள் விசாரித்தபின் விட்டுவிட்டார்க்ள். பதிவுசெய்ய முயன்றோம். நான் அரசூழியன், என் விலாசத்தை கொடுக்கமுடியாது. அவருக்குச் சொந்த வீடு இல்லை. அவ்வாறு நீண்டு நீண்டு சென்று அப்படியே நின்றுவிட்டது
சொல்புதிது பலவகையில் பலதரத்தில் வெளிவந்த சிற்றிதழ். சிற்றிதழ்களில் அதிகமான பக்கங்கள் கொண்டதாக இருந்தது. என்சைக்ளோபீடியா அளவில் 120 பக்க அளவு கூட வந்துள்ளது. இலக்கியத்துடன் வரலாறு, பண்பாடு சார்ந்த ஆழமான விரிவான கட்டுரைகளைப் போட்டதுதான் சொல்புதிது இதழின் சாதனை என்று சொல்லலாம். முக்கியமான நேர்காணல்களை எடுத்தோம். அவை இலக்கிய உரையாடல்கள் என்ற நூலில் உள்ளன. ஒவ்வொரு இதழிலும் புத்தகப்பகுதி என்ற ஒன்று உண்டு. அதில் ஒரே தலைப்பின் கீழ் பலவகையான விஷயங்களைத் தொகுத்து அளித்தோம். மும்மாத இதழான சொல்புதிதை வாசித்து முடிக்க மூன்றுமாதமாகும் என்பார்கள் அன்று. அறிவியல் புனைகதைகள், முக்கியமான மொழியாக்கக் கதைகள் வெளிவந்தன.
சொல்புதிதுதான் தமிழில் எழுத்தாளர்களை அட்டையில் பெரிய வண்ணப்படமாக போட்டு வந்த இதழ். அப்படி வெளியிடக்கூடாது என்ற எதிர்ப்புகள் வந்தன. சுந்தர ராமசாமியே கூப்பிட்டுச் சொன்னார். ஆனால் பின்னர் அதுவே ஒரு வழக்கமாக ஆகியது. வெங்கட் சாமிநாதனை அட்டையில் போட்டு வெளிவந்த இதழ் தான் சொல்புதிதின் முக்கியமான இதழ். தட்டச்சில் 700 பக்கம் அளவுள்ள விஷயங்கள் அதில் இருந்தன. அ.முத்துலிங்கம் உட்பட ஆறு கதைகள். தேவதேவனின் கவிதைகள். மிகவிரிவான எட்டு கட்டுரைகள்.
இப்போது சிந்தித்தால் நிறைவளிக்கும் இதழ் என்றே தோன்றுகிறது. ஆனால் கடும் உழைப்பு. ஒற்றை ஆள் வேலை. வெண்முரசு எழுதுவதெல்லாம் அந்த உழைப்புடன் ஒப்பிட்டால் குறைவுதான்.
22. சொல் புதிது இதழில் மனுஷ்ய புத்திரனை நொண்டி நாய் என விளித்து நாச்சார் மட விவகாரம் என்ற கட்டுரை வெளியானதாகக் கேள்விப்பட்டதுண்டு. உண்மையில் அதை எழுதியது யார்? இதழின் ஆசிரியராக நீங்கள் அதைத் தவிர்த்திருக்க வேண்டும் தானே? உண்மையில் நடந்தது என்ன?
நான் இருபத்தைந்தாண்டுக்காலமாக சிற்றிதழ் இலக்கியச் சூழலில் இருக்கிறேன். ஒருகுறிப்பிட்ட வகையான ஆட்களை கவனித்துக்கொண்டே இருக்கிறேன். எதையுமே வாசிக்க மாட்டார்கள். ஓர் இருபது பக்கம் அச்சடித்த எழுத்தை வாசிக்கச் சோம்பல்படுவார்கள். ஆனால் இலக்கியம் சார்ந்த எல்லா வம்புகளையும் தெரிந்து வைத்திருப்பார்க்ள். இதிலேயே இருப்பார்கள். காலப்போக்கில் ஒரு குட்டி இலக்கியவாதி என்ற அந்தஸ்து வந்துவிடும். அதற்கு வேண்டுமென்றால் ஓர் இருபது கவிதைகள் எழுதி குட்டிப் புத்தகமாக போட்டுக்கொள்வார்கள். இப்போது இவர்களெல்லாம் ஃபேஸ்புக்கில் இருக்கிறார்கள் என்று அறிகிறேன்.
இவர்களால் பேசிப்பேசி வாழவைக்கப்படும் வம்பு இது. சொல்புதிது எப்போதுமே மனுஷ்யபுத்திரனைப் போற்றிய சிற்றிதழ். அதில் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை கேட்டு வாங்கி பல பக்கங்களுக்குப் படங்களுடன் போட்டோம். அவர் சொல்புதிதில் நிறைய எழுதினார். நான் காலச்சுவடு இதழுடன் குறிப்பாக கண்ணனுடன் முரண்பட்டு வெளியே வந்த காலம். அப்போதும் மனுஷயபுத்திரன் சொல்புதிதில் எழுதினார்.
எனக்கு மனுஷ்யபுத்திரனுடன் எப்போதுமே நல்லுறவுதான். அவர் என்னைப்பற்றி மிகக் கடுமையாக எழுதியதுண்டு. ஆனால் ஒருபோதும் நான் கடுமையாக எழுதியதில்லை. கடுமையான மனவருத்தம் உருவானபோதுகூட அவரைப்பற்றி இனிமேல் பேசமாட்டேன் என்பதுதான் என் எதிர்வினை. ஏனென்றால் அவர் என் கவிஞர். அந்த இடத்தில்தான் இத்தனை ஆண்டுகளாக இருக்கிறார். அவர் தன் சிறிய ஊரில் ஒரு சிற்றறையில் தனிமையில் வாழ்ந்த இளமைக்காலம் முதல் தொடங்கிய உறவு அது. அவர் வீட்டுக்கு நான் சென்றிருக்கிறேன். அவரது கவிதைகளில் என்னை மீண்டும் மீண்டும் கண்டுகொண்டிருக்கிறேன். அது அவருக்கும் தெரியும்.
சதக்கத்துல்லா ஹசநீ அவர்கள் ஆசிரியராக இருந்த நாட்களில் சொல்புதிதில் வெளிவந்த பகடிக்கதை நாச்சார் மடத்து விவகாரங்கள். அது ஒரு பொதுவான பகடி. அதை எம்.வேதசகாயகுமார் எழுதினார். இன்று நீங்கள் வாசித்தால் அதில் எங்கே சுந்தர ராமசாமி சொல்லப்பட்டிருக்கிறார் அல்லது குறிப்புணர்த்தப்பட்டிருக்கிறார் என்றே தெரியாது. சதக்கத்துல்லா ஹஸநீ அதை வாஜ்பாய் அரசை பகடி செய்த கதை என்றே புரிந்துகொண்டார்.
அக்கதை பிரசுரமானபோது நான் ஊரில் இல்லை, குஜராத் அருகே இருந்த டாமனில் சோமசுந்தரம் என்ற நண்பரின் விருந்தினராகச் சென்றவன் அஜந்தா செல்லும் வழியில் அஜிதன் நச்சு உணவு காரணமாக பலநாள் ஆஸ்பத்திரியில் இருக்க நேரிட்டதனால் தாமதமாகத் திரும்பி வந்தேன்.
நான் வரும்போதே காலச்சுவடு அதை எனக்கெதிரான பெரிய ஒரு பிரச்சாரமாக ஆக்கியிருந்தது. எழுத்தாளர்களிடம் கையெழுத்து திரட்டி கண்டனத்தைப் பிரசுரித்தது. அக்கதையை தான் எழுதினேன் என வேதசகாயகுமார் அச்சிலேயே திட்டவட்டமாகச் சொல்லியும்கூட அதை நான் எழுதினேன் என்று அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.
அக்கதையில் நாய் வளர்க்கிறார் ஒரு பேராசிரியர். அதில் ஒரு நாய் நொண்டி. அது மனுஷ்யபுத்திரனைக் குறிக்கிறது எனறார்கள். அதை எப்படி அவர்கள் மனுஷ்யபுத்திரனை மீறி செய்தார்கள் என பின்னர் காலச்சுவடில் இருந்து வெளியே தள்ளப்பட்டபின் அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்.
நான் எப்போதுமே சொல்லவேண்டியதை வெளிப்படையாகச் சொல்லி விளைவுகளை எதிர்கொள்பவன், மறைமுகமாகப் பேசுவது என் வழக்கம் அல்ல. ஒளிந்துகொள்வதும் இல்லை. ஆகவே காலச்சுவடின் அந்த தந்திரத்தால் சீண்டப்பட்டு சுந்தர ராமசாமி மீதான என் குற்றச்சாட்டுகளை நேரடியாகவே எழுதி அச்சிட்டு வெளியிட்டேன். இதுதான் நிகழ்ந்தது.
பல ஆண்டுக்காலம் காலச்சுவடு தொடர்ந்து என் மேல் அவதூறுக்கட்டுரைகள் பிரசுரித்தது. புனைவுகளை தரமாக எழுதிக்கொண்டிருக்கும் வரை எந்த ஊடகமும் எழுத்தாளனை ஒன்றும் செய்துவிடமுடியாது என்பது என் நம்பிக்கை. அதையும் சோதித்துப்பார்ப்போமே என்று நினைத்தேன். அக்கட்டுரைகள் எனக்கு நல்ல வாசகர்களைப் பெற்றுத்தந்தன என்பதுதான் நடந்தது.
23. சுந்தர ராமசாமி, நீங்கள் போன்ற இலக்கிய எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகமானது 1990களின் இறுதியில் குமுதம் வெளியிட்ட தீபாவளி இலக்கிய இணைப்பு மலர்களின் வழியாகத் தான். அது இல்லாது போயிருந்தால் நான் ஒருவேளை சுஜாதாவோடே நின்றிருக்கக்கூடும். இலக்கியத்தரமாக எழுதினாலும் ஜெயகாந்தன் ஆனந்த விகடன் வழி வெகுஜனத்தைச் சென்றடைந்தார். எஸ்.ரா. இன்னொரு உதாரணம். சங்கச் சித்திரங்கள் தொடருக்குப்பின் நீங்கள் ஏன் பிரபல இதழ்களில் எழுதவில்லை? (தி இந்துவில் எழுதும் கட்டுரைகள் தவிர்த்து). அறம் தொகுப்பில் உள்ள கதைகள் வெகுஜன இதழ்களில் வெளியாகி இருந்தால் இன்னமும் பன்மடங்கு அதிகம் பேரை சென்றடைந்திருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. வெஜன இதழின் சட்டகத்துள் நின்று இயங்குவது படைப்பாளியின் சுதந்திரத்தைப் பாதிக்கும் என நினைக்கிறீர்களா?
வெகுஜன இதழ்கள் அவற்றுக்கான வரைமுறை கொண்டவை. பக்க வரையறை மட்டும் அல்ல உள்ளடக்க வரையறையும்கூட. அவற்றுடன் சமரசம் செய்துகொண்டு எழுதவேண்டும். அங்கே முக்கியமான படைப்புகளை எழுதமுடியாது. எழுதும் படைப்புகளுக்கு ஒரு பதாகையை அங்கே நட்டு வைக்கலாம், அவ்வளவுதான்.
சங்கச் சித்திரங்கள் எனக்கு ஒரு வாசகப்பரப்பை உருவாக்கி அளித்தது. ஆனால் ஆனந்தவிகடனுடன் எனக்கு ஆரம்பம் முதலே ஒத்துப்போகவில்லை. மறைந்த பாலசுப்ரமணியனுடன் குறுகிய கடிதப் போக்குவரத்தே இருந்தது. அவரது ‘எஜமானத் தோரணை’யை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் பணக்காரராக பிறந்தவர். முதலாளி. ஏதோ ஒருவகையில் அனைவரிடமும் கட்டளையிட்டுப் பழகியவர். நான் எங்கும் கட்டளைகளை வாங்கிக்கொள்பவனாக இருந்ததில்லை. இருபத்தைந்தாண்டுக்கால அரசூழியர் வாழ்க்கையில்கூட. அது ஆணவமாகக் கூட இருக்கலாம். அப்படிப் பழகிவிட்டேன்.
என் சுதந்திரப்போக்கால் நான் பெரிய ஊடகங்களிடம் நெருங்கவில்லை. சிற்றிதழ்களிலும் ஓம்சக்தி போன்ற இதழ்களிலும்தான் என் படைப்புகள் வெளிவந்தன. என் நண்பர்கள் எவரேனும் பெரிய ஊடகத்தில் இருந்து அவர்கள் கேட்கும்போது மட்டுமே நான் அவற்றில் எழுதியிருக்கிறேன். ஓம்சக்தி இதழின் ப.சிதம்பரநாதன் என் பலகதைகளைக் கேட்டு பிரசுரித்தவர்.
ஓரளவுக்கு மேல் நாம் வாசகர்களிடம் செல்லக்கூடாது என நினைக்கிறேன். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றை நான் தவிர்க்க இதுவே காரணம். நான் எழுதுவது புதியவாசகர்களுக்குத் தெரியவேண்டும். அதற்கு சில செய்திகள், பேட்டிகள் போன்றவையே போதும். அதன் பின் அவன் என்னைத் தேடி வர வேண்டும். நான் ஒரு மர்மமாக, சவாலாக அவனுக்குத் தெரியவேண்டும். என்னை முட்டித்திறந்து அவன் உள்ளே வரவேண்டும். என் நல்ல வாசகர்கள் பலர் என்னுடன் மோதியவர்கள். அதில் ஓர் அறிவார்ந்த அழகு உள்ளது.
அந்த வாசகனுக்காக நான் சமைத்துப்பரிமாறும் எளிய உணவையே அவன் உண்டுகொண்டிருக்கக் கூடாது. அது என் பெரிய எழுத்துக்கள் மீதான அவனுடைய வசீகரத்தை இல்லாமலாக்கிவிடும். ஜெயகாந்தன் மேல் இல்லாத வசீகரம் என் மீது இன்றும் இளம் வாசகனுக்கு உள்ளது. காரணம் அவன் முன் என் எழுத்து ஒரு சவாலாக நின்றுகொண்டிருக்கிறது.
24. உங்களைப் பற்றி தொடர்ச்சியாய் வைக்கப்படும் முதன்மைக் குற்றச்சாட்டு நீங்கள் இந்துத்துவ சித்தாந்தத்திற்கு ஆதாரவானவர் என்பது. நான் உங்களைக் கடந்த 15 ஆண்டுகளாக வாசிக்கிறேன். பெரும்பாலும் எனக்கு அப்படித் தோன்றியதில்லை. இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள் போன்ற விஷயங்களை எழுதியவர் என்பதற்காக ஒருவர் உங்களை அப்படி விளித்தால் அதை விட முட்டாள்தனம் வேறில்லை. Self restrospective செய்து சொல்லுங்கள். நீங்கள் ஓர் இந்துத்துவவாதியா? இல்லை எனில் இந்தப் பிழையான லேபிள் உங்களுக்கு சங்கடம் ஊட்டுகிறதா?
நான் எழுதவந்த காலகட்டத்தில் ஒரு கட்டுரையில் உபநிடத மேற்கோள் ஒன்றை அளித்திருந்தேன். என் ஆசான் ஞானி அதை வெட்டிவிட்டு நிகழ் சிற்றிதழில் வெளியிட்டார். நான் அவரிடம் அதைப்பற்றி கேட்டேன். அது மதச் சிந்தனை, நவீன இலக்கியத்தில் அதற்கு இடமில்லை என்றார். அதே இதழில் நான்கு வெவ்வேறு மேலைநாட்டு அறிஞர்களைப்பற்றிய மேற்கோள்கள் இருந்தன. அவர்கள் நேரடியாகவே மதச் சிந்தனையாளர்கள்தான். அதைப்பற்றி கேட்டபோது அது வேறு விஷயம் என்றார் ஞானி.
அந்த மனநிலை எனக்கு வியப்பளித்தது. அதைக் கடந்தேயாகவேண்டும் என முடிவெடுத்தேன். நமக்கு இங்கே மூவாயிரம் வருடத் தொன்மையுள்ள ஒரு மரபு உள்ளது. கலைகள், தத்துவம், இலக்கியம், தொன்மங்கள் என. அவை எல்லாம் மதமாகத்தான் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தூக்கி வீசிவிட்டு நாம் என்னதான் சுயமாக எழுதிவிடமுடியும் என நினைத்தேன்.
நான் என் எழுத்தை முழுக்க முழுக்க இந்தியத்தன்மை கொண்டதாக அமையவேண்டும் என எண்ணுகிறேன். இங்குள்ள மரபிலிருந்து எழுவது. இதை விமர்சிப்பது, கடந்துசெல்வது. இதில் இருந்து துண்டித்துக்கொண்டு அரைகுறையாகத் தெரிந்த மேலைநாட்டு எழுத்துக்களை நகல்செய்து எழுதும் முறையை அபத்தம் என்று மட்டுமே என்னால் சொல்லமுடிகிறது.
இதுவே விஷ்ணுபுரம் போன்ற நாவலின் பின்னணி. விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்தபோது எந்த இலக்கியத்தையும் புரிந்துகொள்ளமுடியாத அ.மார்க்ஸ் போன்ற மோட்டா விமர்சகர்கள் அதன் தலைப்பை மட்டும் வைத்து அது ஓர் இந்துத்துவப்பிரதி என்று பேசினார்கள். நம்மூரில் படிக்காமலேயே பேசும் கும்பல் அதிகம். ஒரு வாகான கருத்து கிடைத்தால் அதைத் தன் கருத்தாகச் சொல்லிவிடுவார்கள். அப்படியே அது ஒரு கருத்தாக ஆகியது.
பின் தொடரும் நிழலின் குரல் அடுத்த வருடமே வந்தது. அது இடதுசாரிகளை கடுமையாக விமர்சனம் செய்வது. மார்க்ஸியத்தை அதன் ஆன்மீகசாரத்தின் அடிப்படையில் தத்துவத்தின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வது. அவ்விமர்சனத்தை எதிர்கொள்ளமுடியாதவர்கள் ‘அந்தாள் இந்துத்துவா… பாருங்க தோழர், விஷ்ணுவப்பத்தி எழுதியிருக்கார்’ என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள்.
சமீபத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றிருந்தேன். அம்பேத்கர் பண்பாட்டுப் பாசறையைச் சேர்ந்த பால்ராஜ் சொன்னார். ‘இப்பதான் விஷ்ணுபுரம் வாசிச்சேன். எத வச்சு அதை இந்துத்துவப் பிரதின்னு சொன்னாங்கன்னே தெரியல்லை”. நான் “விஷ்ணுவ வச்சு” என்றேன். “அது விஷ்னுவே இல்லியே. தலித்துக்களோட மூப்பன் தானே?”. நான் புன்னகை செய்தேன்.
இதுதான் இங்கே நிகழ்கிறது. இந்த மொண்ணைத்தனத்துடன் மோதுவதில்லை. நல்ல வாசகன் வருவான் என காத்திருக்கிறேன்.
நான் நூற்றுக்கணக்கான முறை சொல்லியிருக்கிறேன். என் இணையதளத்திலேயே குறைந்தது நூறு தடவை இது எழுதப்பட்டுள்ளது. இந்துஞானமரபும் பண்பாடும் வேறு, இந்துத்துவ அரசியல் வேறு. இந்த வேறுபாட்டை விளங்கிக்கொள்ளாமல் இந்திய யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாது. இடதுசாரிகள் இன்று ஒருவகை குறுங்குழுவாக கண்மூடித்தனமான மூர்க்கத்துடன் உள்ளனர். இந்த வேறுபாடை அறியாமலிருப்பது அவர்களைத் தோற்கடித்துக்கொண்டே இருக்கிறது.
இந்துத்துவ அரசியல் அடிப்படையில் ஐரோப்பியத்தன்மை கொண்டது. ஐரோப்பாவில் பதினைந்தாம் நூற்றாண்டு முதல் நவீனத்தேசியங்கள் உருவாகி வந்தன. கத்தோலிக்கத் திருச்சபையின் முற்றாதிக்கத்துக்கு எதிராகவே அவற்றை உருவாக்க வேண்டியிருந்தது. ஆகவே வட்டாரப் பண்பாட்டுக்கூறுகளின் அடிப்படையில் மக்களைத் தொகுத்து வலுவான அடையாளங்களை உருவாக்கி தேசியங்களை எழுப்பினர். அந்த வலுவான தேசியங்கள் உறுதியான மையம் கொண்ட அதிகாரமாக ஆக முடியும் என்றும் கண்டார்கள்.
ஆகவே இனம், மொழி, மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான தேசிய உருவகங்கள் பிறந்தன. நாசிசமும் பாசிசமும் அதன் உச்சகட்ட எதிர்விளைவுகள். ஆனால் ஐரோப்பாவின் எல்லா தேசியங்களும் அப்படிப்பட்ட பண்பாட்டு அடிப்படை கொண்ட தேசியங்களே. இனம் மொழி ஆகியவை அடித்தளமாக அமைந்தன. பின்னர் மெல்ல மெல்ல அவர்கள் நவீன ஜனநாயகத்திற்கு வந்தனர். நவீன ஜனநாயகம் ஒற்றை அடையாளத்தை, மையத்தை முன்வைப்பது அல்ல. அது தொகுப்புத்தன்மை கொண்டது. அனைவரையும் உள்ளடக்க முனைவது.
ஐரோப்பாவில் இருந்துதான் நமக்கும் நவீனத் தேசியம் என்ற கருத்துக்கள் வந்தன. மாஜினி கரிபால்டி போன்ற பெயர்கள் இங்கே புகழ்பெற்றன. பாரதியே கூட மாஜினி கூறுவதாக கவிதை எழுதியிருக்கிறார். அதேபாணியில் சிவாஜி தன் படைகளுக்குக் கூறுவது என்ற கவிதையை எழுதினார்.
ஐரோப்பாவின் இரண்டு வகை தேசியங்களும் இங்கே வந்தன. ஏற்கனவே இங்கே இந்துமத மறுமலர்ச்சி தொடங்கிவிட்டிருந்தது. அந்த எழுச்சியில் இருந்து ஒரு நவீன ஜனநாயக தேசியம் நோக்கி காங்கிரஸ் சென்றது. காந்தி அதை வழிநடத்தினார். அதற்கு மாற்றாக இந்து மறுமலர்ச்சியில் இருந்து பண்பாட்டு அடையாளங்களை எடுத்துக் கொண்டு மதம்சார்ந்த ஒரு பண்பாட்டுத்தேசியத்தை நோக்கிச் சென்றவர்களே இந்துத்துவர்கள் எனப்படுகிறார்கள். இந்த இரண்டு அரசியலும்தான் இந்திய அளவில் இங்கு உள்ளன.
இந்த இந்துத்துவ அரசியலுக்கும் இங்குள்ள கோடிக்கணக்கான மக்களின் பாரம்பரியத்திற்கும் நேரடித் தொடர்பு ஏதும் இல்லை. இம்மக்களின் பல்லாயிரமாண்டுக்கால நம்பிக்கைகள், ஆசாரங்கள், குறியீடுகள், தொன்மங்கள் ஆகியவை இந்துமதமாக இன்று திரண்டுள்ளன. அவற்றிலிருந்தே அவர்கள் தங்கள் கலையிலக்கியங்களை உருவாக்கிக்கொள்ள முடியும். தங்கள் அறங்களை அமைக்க முடியும். அவற்றை நம்பியே அவர்கள் கனவுகாண முடியும்.
இந்துத்துவ அரசியலை எதிர்க்கிறோம் என்ற பேரில் இங்குள்ள இடதுசாரிகள் இந்துமரபுடன் மோதிக்கொண்டிருக்கிறார்கள். இந்துத்துவ அரசியலும் இந்துமரபும் ஒன்று என வாதிடும்போது நூறாண்டு கால வரலாறுள்ள இந்துத்துவ அரசியலை மூவாயிரமாண்டுக்கால வரலாறுள்ள இந்துமதத்துடன் பிணைக்கிறார்கள். இந்த வேறுபாட்டை நான் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கிறேன். இந்த மூடர்களிடமிருப்பது ஆணவமா அறியாமையா என்றே எனக்குப்புரியவில்லை.
இந்தியா என்ற இந்த நிலப்பரப்பு பல்லாயிரமாண்டுக்காலமாக மக்கள்திரள் இடம்பெயர்ந்து கலந்து உருவானது. இங்குள்ள பெரும்பாலான நிலப்பரப்புகளில் பலவகை இன, மொழி, மத மக்கள் வாழ்கிறார்கள். ஆகவே இந்தியா என இன்றுள்ள இந்த அரசியலமைப்பு மட்டுமே இங்கே உண்மையான வளர்ச்சியை அளிக்க முடியும். இந்த அமைப்பு சிதறுமென்றால் வட்டார அளவில் பெரும்பான்மைவாதமே மேலெழும். மானுடவரலாற்றின் மாபெரும் அகதிப்பெருக்கே எஞ்சும். மிகச்சிறிய போடோ, நாகா பிரிவினைவாதக் குழுக்கள் கூட சக பழங்குடிகளைக் கொன்றுகுவிப்பதை நாம் கண்கூடாகவே காண்கிறோம்.
இந்தத் தேசியமானது இந்தியத் தேசியநாயகர்களால் உருவாக்கப்பட்டது. காந்தியும் அம்பேத்கரும் நேருவும் அதன் தலைவர்கள். இது நவீன ஜனநாயக இந்தியத் தேசியம். தொகுப்புத்தன்மை கொண்டது. அனைவரையும் உள்ளடக்கியது. இதைச் சிதைக்க எண்ணுபவர்கள் அனைவருமே சாதியமோ மொழிவாதமோ இனவாதமோ பேசும் குறுங்குழுக்கள். ஃபாசிஸ்டுகள் என்பதைக் காணலாம்.
இந்தியதேசியம் என்பதே இந்துதேசியம் என்று ஒரு பிரச்சாரத்தை இங்குள்ள மதவெறியர்கள், அவர்களை இயக்கும் அன்னியசக்திகள் முன்னெடுக்கின்றன. அவற்றை நம்பும் முற்போக்கினர் இந்தியாவின் நவீன ஜனநாயக தேசியத்தையே சிதைக்க எண்ணுகிறார்கள்.
நான் இந்து ஞானமரபில் பற்றுள்ளவன். இந்தியாவின் நவீன ஜனநாயக தேசியத்தில் நம்பிக்கை கொண்டவன். இந்துத்துவ அரசியல் இந்தியாவின் ஞானமரபின் அனைத்தையும் உள்ளடக்கும் பண்பை, விவாதங்களை அனுமதிக்கும் இயல்பை, கிளைவிட்டுப்பிரியும் செழுமையை அழித்து அதை ஒற்றைப்படையாக ஆக்கமுயல்கிறது என நினைக்கிறேன். ஆகவே அதை எப்போதும் எதிர்த்தே வருகிறேன். இதை நீங்கள் சென்ற பத்தாண்டுக்காலத்தில் மதமாற்றத் தடைச்சட்டம், எம்.எஃப் ஹுசெய்ன் முதல் இன்று மாதொருபாகன் சர்ச்சை வரை நான் எழுதிய கட்டுரைகளில் காணலாம்.
நான் இந்தியா நவீன ஜனநாயக தேசமாக ஒன்றாக இருக்கவேண்டுமென விரும்புகிறேன். அதன் மேல் தாக்குதல் தொடுக்கும் பிரிவினைவாத அமைப்புகளின் கீழ்மை மிக்க ஃபாசிசப்போக்குகளை தொடர்ந்து அம்பலப்படுத்துபவன். ஆனால் நான் இதை இந்துத்துவர்கள் ஓர் இந்து தேசியமாக எண்ணுவதை ஏற்கமாட்டேன். இது இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் உரிய நவீன நாடு என்றே எண்ணுகிறேன். என் தேசிய உருவகம் நேருவால் முன்வைக்கப்பட்டதே. எப்படியும் ஓர் ஐம்பது கட்டுரைகளில் இதை எழுதியிருக்கிறேன்.
இங்கே இந்துமதம், இந்தியா மீது தொடர்ந்து தாக்குதலை முன்வைத்துவரும் கூலி அறிவுஜீவிப்படை ஒன்று உண்டு. இவர்கள் பெரும்பாலும் இங்கு சுதந்திரமாகச் செயல்பட்டுவரும் மதமாற்ற, மதவெறி அமைப்புகளிடம் நிதி பெற்று செயல்படுபவர்கள். பல்வேறு ஏகாதிபத்திய நிதியமைப்புகளின் கையாட்கள். இவர்களை நான் அம்பலப்படுத்தி விமர்சிக்கும்போது தங்களை காத்துக்கொள்ள என்னை இந்துத்துவத்தைப் பேசுவதாகச் சொல்லி முத்திரை குத்துகிறார்கள்.
ஒரு பத்துப்பக்கம் தொடர்ந்து வாசிக்கும் அறிவுத்திறன் இல்லாத பெருங்கும்பல் இந்தக்கூலிப்படையினரின் ஒற்றை வரிகள் வழியாக என்னை அறிந்து திரும்பித்திரும்பிச் சொல்லிக்கொண்டிருக்கிறது.
நான் நாராயணகுருவை, நித்யசைதன்ய யதியைத்தான் ஆன்மீக தளத்தில் முன்வைத்து வருகிறேன். எந்த வகையிலும் அவர்கள் இந்துத்துவத்தை அல்லது இந்துப் பழமைவாதத்தை ஏற்றவர்கள் அல்ல. சொல்லப்போனால் இடதுசாரிகளுக்கே நெருக்கமானவர்கள். காந்தியையும் நேருவையும் அம்பேத்கரையுமே முன் வைத்து வருகிறேன். வேறெந்த அரசியலாளரையும் அல்ல.
மீண்டும் மீண்டும் இதைச் சொல்லி வருகிறேன். இந்துமெய்ஞான மரபின் மேல் மதிப்புள்ள ஓர் இந்து நான். இந்திய நவீன தேசியம் மீது பற்றுள்ள ஓர் இந்தியன் நான்.
25. எழுத்து தவிர்த்து ஓர் எழுத்தாளனின் சமூகக் கடமை என எதைக் கருதுகிறீர்கள்? மேற்கில் எழுத்தாளர்கள் உள்ளிட்ட கலைஞர்கள் போராளிகளாகவும் இருந்துள்ளனர். ஓர் எழுத்தானை மதிப்பிடுகையில் அதுவும் கணக்கில் கொள்ளப்பட வேண்டுமா? சார்பற்ற கருத்துக்களைப் பதிவு செய்வதையும், உண்மையான வரலாற்றை எழுதுவதையும் தாண்டி அவன் நேரடிக் களப்பணி ஆற்ற வேண்டியது அவசியமா? உங்கள் பங்களிப்பு இதில் எவ்வகை எனக் கருதுகிறீர்கள்?
களப்பணி ஆற்றுவதும் ஆற்றாமலிருப்பதும் அந்தந்த எழுத்தாளனின் இயல்பை சார்ந்தவை. இளமையில் நான் தொழிற்சங்கம் மற்றும் சூழியல் செயல்பாடுகளில் நேரடியாக களப்பணியாற்றியவன். நான் எழுதியவற்றில் சூழியல் துண்டுப்பிரசுரங்கள் அதிகம் உண்டு
ஆனால் காலப்போக்கில் ஒன்று தெரிந்தது. களப்பணிக்கு ஓர் ஒற்றைப்படையான வேகம் தேவை. அதுதான் நம்பிக்கையை அளிக்கிறது. சூழியல் போராளிகளை எடுத்துக்கொண்டால் சூழியல் பிரச்சினையை சரிசெய்தால் உலகம் சரியாகிவிடும் என்பார்கள். அந்த நம்பிக்கை இல்லாமல் அவர்கள் செயல்படுவது இயலாதது.
ஆனால் அந்த ஒற்றைப்படை வேகம் இலக்கியத்திற்கு எதிரானது. இலக்கியம் எப்போதும் அனைத்து பக்கங்களையும் பார்ப்பதாகவே இருக்கவேண்டும். ஆகவே எந்தவகையான தீவிரச் செயல்பாடும் இலக்கியத்தை வலுவிழக்கச்செய்யும் என்றே நினைக்கிறேன்.
தமிழின் புகழ்பெற்ற இதழாளர்கள் எழுதும் கட்டுரைகளையும் என் கட்டுரைகளையும் ஒப்பிட்டால் இதைக் காணலாம். அவர்கள் எப்போதும் ஒற்றைப்படையான குரல்கள்தான். அக்குரல்களுக்கு ஒரு மதிப்பு உண்டுதான். ஆனால் நான் எல்லா பக்கங்களையும் பார்க்கவே எப்போதும் முயல்கிறேன்.
மேலும் மொழி என்பது ஒரு விசித்திரமான ஊடகம். எல்லாக் கலையும் அப்படித்தான் என்றாலும் மொழி இன்னும் சிக்கலானது. அது அன்றாடச்செயல்பாடு முதல் ஆழ்மனக் கனவு வரை பல அடுக்குகள் கொண்டது. அதிலேயே இருந்து அதிலேயே வாழ்ந்தாலொழிய அதில் உண்மையில் எதையும் சாதிக்கமுடியாது.
26. எழுத்துக்கும் எழுத்தாளனுக்கும் இடையே தூரம் இருக்கலாமா? உதா: முதலாளித்துவத்தை எதிர்த்து எழுதும் ஒருவர் ஒரு முதலாளித்துவ நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கலாம். உங்கள் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையே கொள்கை அடிப்படையில் ஒற்றுமை இருக்கிறதா?
எழுத்தாளனுக்கும் எழுத்துக்கும் இடையே தூரம் இருக்கக்கூடாது என்பதே என் எண்ணம். என் வாழ்க்கைக்கும் என் எழுத்துக்கும் முரண்பாடு இருந்தால் எவரும் அதைச் சுட்டலாம். என் வாழ்க்கையில் ரகசியங்கள் என ஏதும் இல்லை. நான் எதை எழுதுகிறேனோ அதுவே நான்.
எழுத்தாளன் வாழ்வதற்காக சமரசம் செய்துகொள்ளக்கூடும். ஒத்துப்போகக்கூடும். ஆனால் அதையும் எழுத்தாக முன்வைக்கலாம். மறைத்தால் அவன் பொய் சொல்கிறான். ஒரு பொய் எல்லாவற்றையும் பொய்யாக ஆக்கிவிடும்.
முதலாளித்துவ ஊடகத்தில் வேலைபார்த்துக்கொண்டு முதலாளித்துவத்தை எதிர்க்கலாம். ஆம், நான் இங்கே வேலைபார்க்கிறேன் என அவன் சொல்லும் பட்சத்தில் அது ஒரு தரப்புதான்.
முன்பு இங்கே இடதுசாரி தீவிரவாத இயக்கங்களில் அரசு உயரதிகாரிகள் பணியாற்றினர். மக்கள் தொடர்புத்துறை உயரதிகாரி ஒருவர், திமுகவுக்கு மிக நெருக்கமான ஜால்ராக்காரர், ஒரு நக்சலைட் கட்சியைத் தலைமைவகித்து, பத்திரிகையும் நடத்தினார் என்றால் நம்ப மாட்டீர்கள். மாளிகை மாதிரி வீடு கட்டி கப்பல் மாதிரி காரில் வாழ்ந்தார் அவர். அவரை நம்பிய பல இளைஞர்கள் மனநோயாளிகள் ஆனார்கள்.
இந்தவகையான இரட்டைவேடங்கள் படைப்பூக்கத்தையே போலியாக ஆக்கிவிடும். ஒருபோதும் எழுத்து இதிலிருந்து எழமுடியாது. சரி, உங்களை மறைத்துக்கொண்டு ஒரு போலி வடிவில் நீங்கள் எழுதினால் என்ன ஆகும்? கொஞ்சம் கொஞ்சமாக அவ்வடிவை நீங்கள் கட்டி எழுப்பி நிறுவ ஆரம்பிப்பீர்கள். அது எழுத்தை போலியாக ஆக்கும்.
எழுத்தாளனின் சோதனைச்சாலை அவன் மனம் தான். அவன் வாழ்க்கைதான். அதைத்தான் அவன் வாசகர் முன் வைக்கிறான். என் எழுத்துக்கள் என் அகம்தான்.
27. கடவுள் நம்பிக்கை தொடர்பான நிலைப்பாடே ஒருவரின் எல்லாச் சிந்தனைகட்கும் மைய அச்சு என்பது என் புரிதல். நீங்கள் ஆத்திகரா நாத்திகரா? நான் வாசித்த வரை உங்கள் எழுத்துக்களில் ஆன்மீகத் தேடல், இந்து மதக் கோட்பாடுகளின் தத்துவ தரிசனம் இருக்கிறதே ஒழிய நீங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர் என்பதற்கான தடயங்கள் தட்டுப்படவில்லை. ஓர் எழுத்தாளராக உங்கள் ஆன்மீக நிலைப்பாடு எவ்வாறு உங்களைப் பாதிக்கிறது அல்லது வழிநடத்துகிறது?
ஆத்திகரா நாத்திகரா என ஒருமுறை ஜெயகாந்தனிடம் கேட்டேன். “இது எத்தனை பழைய கேள்வி? நான் நாத்திகன் ஆனால் இந்து. நான் இறைநம்பிக்கை அற்றவன் ஆனால் ஆன்மீகவாதி” என்றார். அதுவே ஏறத்தாழ என் பதில்.
நாத்திகம், ஆத்திகம் என்ற வாதம் செமிட்டிக் மதங்களின் முழுமுதல் இறைவன் என்ற கருதுகோளில் இருந்து வருவது. அதாவது படைத்துக் காத்து அழிக்கும் இறைவன் ஒருவன் உள்ளான் என நம்புகிறவன் ஆத்திகன். மறுப்பவன் நாத்திகன்.
இந்து, பௌத்த, சமண மதங்களுக்கு இந்தக்கேள்வியே பொருந்தாது [எளிமையாக வாசிக்க கார் சகனின் காட்ண்டாக்ட் நாவலிலேயே இந்த விவாதம் வரும்]. இங்கே தெய்வ உருவகங்கள் மூன்று. எளிய அன்றாட தெய்வங்கள், அதாவது சிறுதெய்வங்கள் ஒரு தளம். படைத்துக்காத்து அழிக்கும் பெருந்தெய்வங்கள் இரண்டாவது தளம். மூன்றாவது தளம் ஒன்று உண்டு. அது பிரபஞ்ச தத்துவம் ஒன்றை ஏற்றுக்கொள்வது. பௌத்தர்களின் தர்மம் போல. சமணார்களின் பவசக்கரம் போல. வேதாந்திகளின் பிரம்மம் போல. அது ஒரு கருத்து, ஒரு தத்துவ உருவகம் மட்டும்தான்.
இப்பிரபஞ்சம் இப்படி இயங்கலாம் என்ற ஓர் உருவகம் அது. அதில் நம்பிக்கை கொண்டவன் கடவுள் நம்பிக்கை கொண்டவன் அல்ல. அவனுக்கு பக்தி இல்லை. சடங்குகள் தேவை இல்லை. ஆகவே ஒருகோணத்தில் அவன் நாத்திகன். ஆனால் இங்கே நிகழ்வன அனைத்தும் வெறும் தற்செயல் என அவன் நினைக்கவில்லை. இவற்றை வெறும் அன்றாட நோக்கால் அணுகவில்லை. ஒரு மொத்த தர்க்கத்தை நோக்கிச் செல்ல முயல்கிறான். ஒரு சாராம்சமான உண்மையை அடைய நினைக்கிறான். ஆகவே அவன் ஆன்மீகவாதி.
நாராயணகுரு வேதாந்தத்துக்கும் பௌத்தத்துக்கும் நடுவே ஒரு தரிசனத்தை முன்வைத்தார். அவரது குருமரபில் வந்த நித்ய சைதன்ய யதியின் மாணவன் நான். அதுவே என் ஆன்மீகம். அது இறைநம்பிக்கை அல்ல. ஆகவே நான் நாத்திகனே. நாத்திகன் என்றால் மற்றவர்களைப்போல சும்மா ஃபேஸ்புக்கில் சொல்வது அல்ல. எல்லா வகையிலும். சொல் செயல் அனைத்திலும். அதேசமயம் நான் வேதாந்தி, இந்து.
28. நீங்கள் ஏன் மது அருந்துவதில்லை? உடல் நலன் கருதியா அல்லது ஒழுக்கக் கேடாகக் கருதுகிறீர்களா? அசைவ உணவுப் பழக்கம் பற்றிய உங்கள் கருத்தென்ன? (ஓர் எழுத்தாளனின் நேர்காணலில் இது ஏன் முக்கியத்துவம் பெறுகிறது எனில் பொதுவாய் எல்லாப் படைப்பாளிகளுமே குடிக்கிறார்கள், போதை உச்சபட்ச படைப்பூக்கத்தையும் கற்பனை ஆற்றலையும் வழங்குவதாகச் சொல்பவர்கள் கூட உண்டு. இதில் நீங்கள் விதிவிலக்காக இருக்கிறீர்கள். அதனாலேயே கேட்கிறேன்.)
நான் கல்லூரியில் சேர்ந்த முதல்நாள் என் அப்பா என்னை அழைத்துப்போய் மூன்று அறிவுரைகளை மாமரத்தைப் பார்த்தபடி சொன்னார். குடிக்காதே, குடித்தால் தெருவில் கிடப்பாய். ஒருபெண்ணுக்குமேல் உறவு தேவை இல்லை, அவர்கள் உன்னை ஆட்டிப்படைப்பார்கள். தொழில் ஏதும் செய்யாதே, உன்னால் முடியாது.
என்னை மிக நன்றாக அறிந்த ஒருவர் சொன்னது. மேலும் அவர் உடனே செத்தும் போய்விட்டார். ஆகவே அதை மீறமுடியவில்லை. அவர் சொன்னது மிகச்சரி எனப் பின்னர் உணர்ந்தேன். நான் குடித்திருந்தால் பெருங்குடிகாரனாகி அழிந்திருப்பேன். என் இயல்பு அது.
நான் விதிவிலக்கு அல்ல. குடிக்கும் படைப்பூக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை. தமிழின் மிக உச்சகட்ட படைப்பாளிகள் எவரும் குடித்தவர்கள் அல்ல. புதுமைப்பித்தன், ஜானகிராமன், அசோகமித்திரன். தொட்டாலே கை அதிருமோ என அஞ்சவைக்கும் உச்சகட்ட படைப்புமனநிலையில் எப்போதும் இருக்கும் என் ஆதர்சம் ஒருவர் உண்டு, குடிப்பதில்லை அவர். இளையராஜா.
குடிப்பவர்கள் இருவகை. வெறும் குடிகாரர்கள். குடியின் குற்றவுணர்ச்சியை மறக்க கவிஞர், கலைஞர் என்றெல்லாம் பாவ்லா செய்பவர்கள். எண்ணிக்கையில் இவர்களே 90 சதவீதம்.
படைப்பு மனநிலையின் உச்சநிலையில் இருந்து இறங்கியதும் அந்த தட்டை வாழ்க்கையைத் தாளமுடியாமல் குடிக்கத் தொடங்கி பெருங்குடிகாரர்கள் ஆனவர்கள் உண்டு. அது ஒரு தவறான முடிவின் விளைவு. அவர்கள் குடிப்பதனால் எழுதுவதில்லை. எழுதாதபோது எழுத முடியாதபோது குடிக்கிறார்கள். அவர்கள் மிகச்சிலர்.
என் ஆசானாகிய மலையாள எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணன் அத்தகையவர். என்னிடம் மீளமீளச் சொன்னார், குடிக்காதே என. மூளையைக் கொதிக்கவிடு, குடியை ஊற்றி அணைக்காதே என. நான் கேட்டேன். வெடித்துவிடும்போலிருக்கிறதே மாஷே என்று. எங்காவது ஓடு. பயணம் போ. எவரையாவது திட்டு. எங்காவது சென்று அடி வாங்கு. ஆனால் மூளையைக் கொதிக்கவிடு. அதைக்கவனித்துக்கொண்டிரு.
போதை என்பது ஒரு மனமயக்க நிலை. மந்த நிலை. அதில் எந்த படைப்பூக்கமும் இல்லை. படைப்பூக்கம் என்பது பலமடங்கு கூர்மையான அகவிழிப்பு நிலை. வெண்முரசு போன்ற ஒரு நாவல்தொடரின் பல்லாயிரம் பக்கங்களை முழுமையாக நினைவில் வைத்திருந்து எழுதும் நிலை மனமயக்கத்தில் வருவது அல்ல. அது மூளை முழுமையாகச் செயல்படும் ஓர் உச்சநிலை. இறங்கி வந்தால் அது இருக்காது. ஒன்றுமே நினைவில் இருக்காது. நாலைந்து நாள் எழுதாவிட்டால் எழுதவே முடியாதோ என பயம் வந்துவிடும். எழுதி அச்சில் வந்த நூலைக் கண்டாலே பீதியாக இருக்கும், எப்படி எழுதினோம் என.
ஆனால் இதுவும் ஒரு போதை என்று சொல்லலாம்தான். மூளையின் ஒரு சில சாத்தியங்கள் முழுமையாக விழிக்க பல இடங்கள் அணைந்து போகின்றன. ஓரளவு மேனியா அல்லது அப்ஸெஷன் என்று சொல்லத்தக்க மனப்பிறழ்வு நிலை. நாம் கையாளக்கூடிய ஒரு கிறுக்கு நிலை.
உண்மையில் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கிறுக்கு நிலையை உருவாக்கிக்கொள்ளத் தடையாகக் குடி அமையும். அதற்குத்தேவையானது தனிமை. தன்னைத்தானே அவதானித்துக்கொண்டிருக்கும் ஒரு நிலை. அதாவது மனச்சோர்வு நோயாளி அளவுக்கு பயங்ரமான தனிமை. கூட்டம் சேர்ந்து குடித்துக் கூத்தாடுவதுபோல அதற்கு எதிரானது ஏதுமில்லை.
எழுத்தாளனின் கடமை வெளியே கவனிப்பது. கூடவே தன்னையும் கவனிப்பது. மிகச்சிறந்த பார்வையாளனே எழுத்தாளனாக முடியும். எப்போதும் அவன் மூளை விழித்து கூர்ந்திருகக்வேண்டும். சாதாரண சமயங்களில் உள்ளே சென்று தேங்குவதே படைப்பின் வேகத்தில் வெளிவருகிறது. மூளையை மழுங்கடிப்பவை இரண்டு. ஒன்று போதை. இன்னொன்று வழக்கமான ‘ரொட்டீன்’ வாழ்க்கை.
29. சகல விஷயங்களுக்கும் உங்களிடம் கருத்து உண்டு என்று சிலர் கேலியாய் குறிப்பிடுவதுண்டு. ஆனால் மிகச்சில விதிவிலக்குகள் தவிர்த்து ஒரு விஷயத்தில் உங்கள் அறிவு அல்லது அனுபவம் கணிசமான அளவு இருந்தால் தான் கருத்து சொல்கிறீர்கள் என்பதே என் புரிதல். எழுத்தாளன் எல்லா விஷயங்களுக்கும் எதிர்வினையாற்ற வேண்டுமா? ஒரு விஷயத்துக்கு கருத்து சொல்லாத போது கள்ள மௌனம் என ஜோடிக்கப்படுகிறது; கருத்துச் சொன்னால் துறைசார் பாண்டித்யம் இல்லாமல் சொல்லப்படும் கருத்து என விமர்சனம் எழுகிறது. உங்கள் நிலைப்பாடு என்ன? ஒரு விஷயத்துக்கு எதிர்வினையாற்ற வேண்டுமா, வேண்டும் எனில் எப்போது என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?
பலமுறை சொல்லியிருக்கிறேன். சகல விஷயங்களுக்கும் நான் கருத்து சொல்வதில்லை. எனது துறை என நான் நினைப்பது இலக்கியம், இந்தியத் தத்துவம், தமிழக வரலாறு. இம்மூன்றிலும் மட்டுமே நிபுணனாகக் கருத்துச் சொல்கிறேன். இவற்றுடன் தொடர்புள்ள அரசியல், பண்பாட்டு விஷயங்களிலும் கருத்துச் சொல்கிறேன். இத்துறைகளில் எவருக்கும் குறையாத வாசிப்பும், அவதானிப்பும் எனக்கு உண்டு. விஷயம் தெரிந்த எவரும் என் கருத்துக்களைப் புறக்கணிக்கமுடியாது.
தொழில்நுட்பம், அறிவியல், சினிமா, இசை, பொருளியல் என எதிலும் கருத்து சொல்வதில்லை. சிலசமயம் இத்துறைகளில் ஓர் எளிய வாசகனாக பிறரது கட்டுரைகளை வழிமொழிந்திருப்பேன் அவ்வளவுதான். உங்களுடைய ஓர் அறிவியல்கட்டுரையைக்கூட அப்படித்தான் வழிமொழிந்தேன்.
கருத்துத் தெரிவிப்பதற்கு சில விதிகளை வைத்திருக்கிறேன். ஒரு பிரச்சினை போதிய அளவு பேசப்பட்டு அடங்கிய பின்னரே கருத்து தெரிவிப்பேன். அப்பிரச்சினையில் பிறர் சொல்லாத ஏதேனும் விஷயத்தை எழுத்தாளனாக நன் சொல்வதற்கிருந்தால் கருத்து தெரிவிப்பேன். அப்போது நான் ஏதும் தீவிரமாக எழுதாமலிருந்தால்தான் கருத்து தெரிவிப்பேன்.
30. ஒவ்வொரு முக்கிய ஆளுமையின் மறைவின் போதும் நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகள் முக்கியமானவை (எல்லா வயதான எழுத்தாளர்களுக்குமான அஞ்சலிக் குறிப்புகளும் ஏற்கனவே ஜெயமோகனின் ட்ராஃப்டில் தயாராய் இருக்கும் என இது பற்றி ஒரு கருப்பு நகைச்சுவையும் உண்டு). அவ்வளவாய் நான் அறியாத சிலர் பற்றி நீங்கள் எழுதும் அஞ்சலிக் குறிப்புகளைக் கொண்டே அவரது இடம் என்ன என்பது பற்றிய உடனடி மதிப்பீட்டிற்கு வந்தடைந்திருக்கிறேன். பொதுவாய் மறைந்து விட்டார் என்பதற்காக ஒருவரைப் பற்றி விதந்தோதுவதே நம் வழக்கம். நீங்கள் உணர்ச்சிவசப்படாது உண்மையை எழுதுகிறீர்கள். இது எப்படி சாத்தியமாகிறது? இதனால் அவப்பெயரை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறதா? அஞ்சலிக் குறிப்புகளை எல்லாம் நூலாய்த் தொகுத்து வெளியிடுவீர்களா?
இன்று இணையத்தில் எதையுமே நக்கலாக்கி தங்களுக்கென எளிய அடையாளம் தேடுபவர்களுக்கு இதைச் சொல்லி புரியவைக்க முடியாது. இணையத்தில் எழுதுவதென்பது அடிப்படையில் தமிழின் மொண்ணைத்தனத்தை நேருக்குநேர் சந்திப்பது.
எண்பதுகளில் கலையிலக்கியத் தளங்களில் ஆளுமைகள் மறைந்தால் ஒரு சிறிய செய்திகூட நாளிதழ்களில் வெளிவராது. பல எழுத்தாளர்கள் மறைந்து பலமாதம் கழித்து சிற்றிதழ்களில் வரும் குறிப்புகள் வழியாகவே நண்பர்கள் அச்செய்தியை அறிவார்கள்.
நான் எழுத வந்தபோது இடைநிலை இதழ்கள் வெளிவரத் தொட்ங்கின. தினமணியில் இராம சம்பந்தம் ஆசிரியரானார். அவர் அஞ்சலிக்கட்டுரைகள் எழுத இடமளித்தார். சுபமங்களா வந்தது. இந்தியா டுடே வந்தது. அவர்கள் அளித்த இடத்தைப் பயன்படுத்திக்கொண்டு இலக்கியவாதிகளைப்பற்றி அஞ்சலிகளை எழுத ஆளில்லை. ஏனென்றால் சிற்றிதழாளர்கள் ஒரு குறிப்பு எழுத ஒருவாரமாகும்.
இராம சம்பந்தம் என்னிடம் எழுதும்படி சொன்னார். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன். செய்திகேட்ட ஒரு மணிநேரத்தில் எழுதி தினமணி நிருபரிடம் கொடுத்து டெலிபிரிண்டரில் அனுப்பி செய்தியுடன் அஞ்சலிக் கட்டுரை வெளியிட்டேன். எழுத்தாளர்களும் அஞ்சலிக்கட்டுரைக்குத் தகுதியானவர்களே என தமிழ்ச் செய்தி ஊடகங்கள் அதன்பின்னரே உணர்ந்தன.
இணையம் ஓரு வாய்ப்பு. பல அஞ்சலிக்கட்டுரைகளை நான் அன்றி பிறர் எழுதியிருக்க மாட்டார்கள். உதாரணம் ஐராவதம் சுவாமிநாதன். ஒரு பண்பாட்டுச் செயல்பாட்டாளர் ஓர் அஞ்சலிக் குறிப்புகூட இல்லாமல் மறைவது என்பது ஒரு பெரிய அவமதிப்பு.
ஏனென்றால் எழுத்தாளனின் மரணம் ஒரு முக்கியமான நிகழ்வு. அவனுடைய பணி முழுமை அடைகிறது. அவன் அதுவரை எழுதியவை அனைத்தும் அவன் இறந்ததுமே ஒன்றாகச் சேர்ந்து ஒற்றை ‘டெக்ஸ்ட்’ ஆக மாறிவிடுகின்றன. அவனைப்பற்றி எழுதப்படுபவை வெறும் இரங்கல்கள் அல்ல. அவை ஓர் எழுத்தாளனின் முழுமையை சமூகம் உணரும் கணங்கள். அஞ்சலி கட்டுரைகள் இல்லாமல் மறையும் எழுத்தாளன் அச்சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவன். இழிவு செய்யப்பட்டவன்.
முக்கியமான படைப்பாளிகளுக்கு, சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்களுக்கு, அதுதான் நிகழ்ந்துகொண்டிருந்தது. அது மேலும் நிகழலாகாது என்பதே என் எண்ணம். ஆகவே தான் அஞ்சலிக்கட்டுரைகளை எழுதுகிறேன். இன்று என் இணையதளம் தமிழின் மிக அதிகமான பேர் வாசிக்கும் ஓர் ஊடகம். அதில் வரும் அஞ்சலி வழியாகவே பலர் இறப்புச்செய்தியையே அறிகிறார்கள்.
என் அஞ்சலிக்குறிப்பு அவ்வாசிரியனைப்பற்றிய ஒரு மதிப்பீட்டுக்கு வழிகாட்டுவதைக் காணலாம். அதையொட்டி அல்லது வெட்டி தான் அதன்பின் அவன் அஞ்சலிக்கட்டுரைகள் வருகின்றன. சமீபத்தில் எஸ்.பொன்னுத்துரை பற்றிய குறிப்பை உதாரணமாகச் சொல்வேன். இல்லையேல் ‘பாவம் நல்ல மனுஷர் போய்ட்டார்’ என்ற வகை கட்டுரைகளே இங்கே வந்துவிழும்.
அஞ்சலிக்கட்டுரை எழுதுவதில் எனக்கு சில விதிகள் உண்டு. எனக்கு நேரடியாகத் தெரிந்தவர்கள், அல்லது நான் தனிப்பட்ட முறையில் பெருமதிப்பு கொண்டிருப்பவர்கள் பற்றியே அஞ்சலிக் கட்டுரைகளை எழுதுவேன். அவர்களைப்பற்றி ஒரு பேச்சு தொடங்கவேண்டும் என விரும்புவேன். ஒரு மரணம் பற்றி ஏற்கனவே நிறைய அஞ்சலிகள் வந்துவிட்டால் என் கணக்கில் ஒன்றைச் சேர்க்கவிரும்பமாட்டேன்.
உதாரணமாக மறைந்த கே.பாலசந்தர் எனக்கு நன்றாக அறிமுகமானவர். பலமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் அவருடன் ஒரே அறையில் தங்கி இரவெல்லாம் பேசியிருக்கிறேன். எனக்கு அவர் நடித்துக் காட்டியிருக்கிறார். அவ்வப்போது தொலைபேசியில் பேசுவார். ஆனால் எங்கும் அஞ்சலிக்கட்டுரைகளாக குவிகையில் மேலும் ஒன்றை நானும் எழுத விரும்பவில்லை. தேய்வழக்குகளை ஏன் எழுதவேண்டும் என்றுதான்.
சுந்தர ராமசாமி க.நா.சு. பற்றி எழுதிய க.நா.சு. நட்பும் மதிப்பும் என்ற அஞ்சலிக்கட்டுரை எனக்கு அக்காலத்தில் ஒரு பெரிய திறப்பு. அதில் க.நா.சு.வின் நினைவுகளை விரிவாக எழுதி கூடவே கறாரான மதிப்பீட்டையும் விமர்சனத்தையும் முன்வைத்திருந்தார். நான் அதைப்பற்றி அவரிடம் கேட்டேன். அது மரியாதைதானா என்று.
சுந்தர ராமசாமி சொன்னார் ‘ஓர் எழுத்தாளன் இறப்பது என்பது பிற இறப்புகள் போல அல்ல. அது ஒரு தொடக்கம். அவனை நாம் தொகுத்துக்கொள்ளவும் மதிப்பிடவும் ஆரம்பிக்கிறோம். அவனைப்பற்றிய ஒரு விவாதமாக அந்த அஞ்சலி நிகழவேண்டும். அப்போதுதான் அவன் பிறந்தெழ முடியும். வெறும் சம்பிரதாயமான சொற்களால் அந்த மறுபிறப்பு தடுக்கப்படும். அது அவனுக்குச் செய்யப்படும் அநீதி’.
என் கொள்கையும் அதுவே. கறாரான உண்மையான மதிப்பீட்டை முன்வைத்தே என் அஞ்சலியை எழுதுகிறேன். எனக்கும் அப்படி எழுதப்பட்டால் போதும்.
31. உங்கள் விமர்சன அளவுகோலில் படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்வையும் உளவியல் ரீதியாய்க் கணக்கில் கொள்கிறீர்கள். உதாரணமாய் கமலா தாஸின் புறத் தோற்றம், மனுஷ்ய புத்திரனின் உடற் குறைபாடு. அது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் எழுத்துக்களை மதிப்பீடு செய்ய உங்கள் தனி வாழ்க்கையை எடுத்துக் கொள்வதை ஏற்கிறீர்களா?
இலக்கியம், தத்துவம் போன்றவை உயர் அறிவுத்துறைகள். அங்கே நடுத்தரவர்க்க மனநிலைகள் உருவாக்கும் சம்பிரதாயங்கள், இடக்கரடக்கல்களுக்கு இடமில்லை. ஆனால் இங்கே இந்த இலக்கிய மதிப்பீடுகள் பரவலாகச் சென்றடையாத காரணத்தால் ‘அப்பாவி’ வாசகர்கள் அந்த மனநிலையிலேயே எப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் விமர்சனங்களை எல்லாம் திட்டுவது என்றே எடுத்துக்கொள்வார்கள். ‘செத்துப்போனவங்களை குறை சொல்லக்கூடாது’ ‘பொம்புளைங்கள மதிக்கணும் சார், அவங்கல்லாம் பாவம்’ என்பது போன்ற அசட்டு சம்பிரதாயங்களை சொல்வார்கள்.
எலியட் சொல்கிறார் ஓர் எழுத்தாளன் முதலில் அவனைத்தான் வாசகன் முன் வைக்கிறான் என. அவன் அந்தரங்கத்தை வைக்கிறான். சடலம் என்கிறார், அதை நம்மிடம் அறுத்து ஆராயச் சொல்கிறான் ஆசிரியன் என்கிறார். தன் வாழ்க்கையை அவன் நமக்கு சான்றுகளாக அளிக்கிறான். ஆகவேதான் உலகம் முழுக்க எழுத்தாளர்களின் ஆளுமையும் தனிவாழ்க்கையும் ஆராயப்படுகிறது.
மேலைநாடுகளில் எழுத்தாளனின் அத்தனை அந்தரங்கங்களும் விரிவாக ஆராய்ந்து நூல்களாக வந்திருப்பதை நீங்கள் காணலாம், அந்தரங்கம் புனிதமானது என நம்புபவர்கள் அவர்கள். ஆனால் பொதுவாழ்க்கையில் வந்த ஒருவன், தன்னை முன்வைக்கும் எழுத்தாளன் அப்படி ஓர் அந்தரங்கத்துக்குச் சொந்தம் கொண்டாடமுடியாது.
எழுத்தாளன் சொல்வதெல்லாம் அவனுடைய சொந்த மனப்பதிவுகளை, அகவெளிப்பாடுகளை. அவன் ஆய்வுண்மையைச் சொல்வதில்லை. புறவய உண்மையைச் சொல்வதில்லை. அந்தரங்க உண்மையைச் சொல்கிறான். அவனிடம் அவன் சொல்லும் ஒரு கருத்துக்குப் புறவய ஆதாரமிருக்கிறதா என நாம் கேட்பதில்லை. அது ஆத்மார்த்தமாகச் சொல்லப்படுகிறதா என்றுதான் கேட்கிறோம்.
ஆகவே அது எந்த அளவு உண்மையானது என்று அறிய வேண்டுமென்றால் அந்த எழுத்தாளனை நாம் அறிந்தாகவேண்டும். இதை அவன் மறுக்க முடியாது. எழுத்தைப்பார், எழுத்தாளனைப்பாராதே என்ற வரிக்கு உலக இலக்கியத்தில் எங்கும் இடம் இல்லை அப்படி ஓர் எழுத்தாளன் கூட விடப்பட்டதில்லை. ஷேக்ஸ்பியரின் காதலிகளை நாம் இப்போது ஆராய்ந்துகொண்டிருக்கிறோம் சில்வியா பிளாத் என்ன டிரக் எடுத்துக்கொண்டார் என்று நமக்குத் தெரியும். டெட் ஹுயூக்ஸின் காதலிகளைத் தெரியும்.
நாம் ஒரு கவிதையை ஆராய்வது எதற்காக? அதன் அனைத்துத் தளங்களையும் அறிவதற்காக. அதில் அந்த படைப்பாளியின் அந்தரங்கமும் முக்கியமாக இருந்தால் அதை அறிவதில் எந்தப்பிழையும் இல்லை. உலகம் முழுக்க அப்படித்தான். அன்னா கரீனினாவை ஆராய தல்ஸ்தோயின் மனைவிக்கும் அவருக்குமான உறவு முக்கியமான பின்புலமாக இருக்கிறது அல்லவா? யோசித்துப்பாருங்கள், எவ்வளவு எழுதப்பட்டிருக்கிறது!
கமலாதாஸ் அவரே தன்னுடைய தோற்றம் மீதான தாழ்வுமனப்பான்மையை, அதுவே தன்னை எழுத்துக்குக் கொண்டுவந்தது என்பதை எழுதியிருக்கிறார். ‘என் கதை’ என்னும் சுயசரிதையில் அவரே அவரது பாலுறவுகளை விரிவாக எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்களை ஆராயும் விமர்சகன் அதை குறிப்பிட்டால் ‘அய்யய்யோ கமலாதஸின் அந்தரங்கத்தை அலசுவதா?” எனப் பெண்ணுரிமையாளர் கொந்தளிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? இங்கே பெண்ணியர்கள் வெறும் பேதைகள். அவர்களின் மதிப்பீடுகள் சமையற்கட்டு நம்பிக்கை சார்ந்தவை. சும்மா வந்து மேடைகளில் பாவ்லா காட்டுகிறார்கள். அறிவார்ந்த நிமிர்வும் திமிரும் இல்லாமல் இருந்தால் இவர்களெல்லாம் என்ன இலக்கியவாதிகள்?
மனுஷ்யபுத்திரன் கவிதைகளின் தொடக்கம் அவரது உடல்குறைபாடு பற்றிய தன்னிரக்கக் கவிதைகள். அதிலிருந்து திட்டமிட்டு வெளியே வந்ததை அவரே எழுதியிருக்கிறார். அவரது உள்ளம் பல்வேறுவகையில் புறந்தள்ளப்பட்டவர்களை நோக்கிச் செல்ல அவர் உடல்குறைபாட்டால் ஒதுக்கப்பட்டவராக இருந்த அனுபவம்தான் காரணமா என ஆராய்வதில் என்ன பிழை? அவை அப்படைப்புகளை ஆராய சில புதிய வாயில்களைத் திறக்கின்றன. அவ்வளவுதான்.
எழுத்தாளனை மேலே இருந்து இரக்கத்துடன் பார்ப்பவர்கள்தான் அய்யோ உடல்குறைபாட்டை நோக்குவதா என்றெல்லாம் பரிதாபப்படுகிறார்கள். அவன் சமகாலத்தின் ஒரு ‘சாம்பிள்’. எந்த ஈவிரக்கமற்ற சோதனைக்கும் தாக்குபிடிப்பான் என்றே நான் நம்புகிறேன்.
32. ஆரம்பத்தில் கம்யூனிஸ்டாக இருந்தீர்கள். பின் இந்துத்துவ ஆதரவளார் என்று சொல்லி உங்கள் மீது வலதுசாரி முத்திரை விழுந்தது. கடந்த சில ஆண்டுகளாக ஊழலெதிர்ப்புக்கட்சியாக தம்மை முன்வைக்கும் ஆம் ஆத்மியை ஆதரித்தீர்கள் (அவர்கள் ஓர் எல்லை வரை வலதுசாரிகளே). இன்று கட்சிகளை விடுத்து கோட்பாட்டுரீதியாக உங்கள் அரசியல் நிலைப்பாடு என்ன?
கோட்பாடு என்ன என்று சொல்லத் தெரியவில்லை. நான் அரசியலில் ஒரு ஜனநாயக மிதவாதப்போக்கை விரும்புகிறேன். லிபரல் டெமாக்கிராட் என்று சொல்லலாமா?
பொதுவாக எல்லாவகையான தீவிரக்குரல்களையும் சந்தேகப்படுகிறேன். அவை சமநிலை இல்லாத மனிதர்களால் முன்வைக்கப்படுபவை. பெரும்பாலும் எதிரிகளைக் கட்டமைத்து வெறுப்பைக் கக்குபவை. அவர்களை கூர்ந்து நோக்கினால் தெரியும், அவர்கள் பேசும் தீவிரமான அரசியல் என்பது அந்தரங்கமான வெறுப்புகளின் வடிகால் மட்டுமே. இதெல்லாம் முன்னால் கொஞ்சம் புகைமூட்டமாக இருந்தது. இப்போது ஃபேஸ்புக் வந்தபின் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.
தீவிரப்போக்குகள் பெரும்பாலும் எதிர்மறை விளைவுகளையே உருவாக்குகின்றன. மக்களின் கூட்டான அகம் திரண்ட ஓர் ஆற்றலாக ஆகி செயல்பட வாய்ப்பளிக்கும் நிதானமான அரசியலையே நான் ஏற்கிறேன். எல்லாக் குரல்களும் எழவேண்டும். எல்லாச் சமூக விசைகளும் முட்டி மோதி சமநிலையை அடையவேண்டும். வலதுசாரி என்று உறுதியாக என்னைச் சொல்லமாட்டேன். சில இடதுசாரிக் கொள்கைகளும் பிடிக்கும். இன்று நான் மிக விரும்பும் அரசியல் தலைவர் அச்சுதானந்தன்தான்.
சமகால அரசியலில் எழுத்தாளன் ஈடுபடக்கூடாது என நினைக்கிறேன். அது பெரும்பாலும் சார்புநிலை கொண்டவர்களின் வெட்டிப்பேச்சுகளால் ஆனது. அதில் மாட்டிக்கொண்டால் சொற்கள்தான் விரயமாகும். ஆகவேதான் மொத்தப் பாராளுமன்ற அரசியலிலும் ஒரு வார்த்தை கூட எழுதவில்லை.
அரசியலை மனச்சிக்கல்கள் தீர்மானிக்கக் கூடாது. உணர்வெழுச்சிகள் தீர்மானிக்கக் கூடாது. ஆகவே உணர்ச்சிக்கொந்தளிப்பான அரசியல் பேச்சை நான் ஒருவகை வாந்தியாகவே பார்க்கிறேன். எவர் பேசினாலும். இதனால் இந்துத்துவ வாந்தி எடுப்பவர்களும் என்னை திட்டுகிறார்கள். முற்போக்கு திராவிட வாந்தி எடுப்பவர்களும் திட்டுகிறார்கள். மின்னஞ்சலைத் திறந்து எல்லாத் தரப்பினரின் வசைகளும் மாறி மாறி வாசிக்கையும் சிரித்துக்கொள்வேன்.
33. தமிழ் வாசகப் பரப்பு என்பது ஆரம்பம் முதலே சோகையாகத்தான் இருக்கிறது. இங்கே எழுத்தாளன் எழுதி மட்டும் ஜீவிக்க முடியாது. அடுத்து எழுத்தாளனுக்கு மரியாதையும் இல்லை. சாதாரணர்கள் மத்தியில் மட்டுமின்றி பேரசிரியர்களிடமே இது தான் இடம். பத்துக் கோடி தமிழர்களில் அதிகபட்சம் பத்தாயிரம் பேர் தான் உங்களை வாசித்திருக்கக்கூடும். இச்சூழலில் எது உங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்கிறது? வரலாறு உங்களை நினைவிற்கொள்ளும் என்பது தான் உந்துதலா?
எழுத்தை கொஞ்சமேனும் அறிந்தவர்களுக்குத் தெரியும் உண்மையிலேயே எழுதுவதில் உள்ள பெரும் கனவே எழுதவைக்கிறது என. மிச்சமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. நான் எழுதவந்தபோது 500 வாசகர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை இருந்ததில்லை. 200 பிரதிகள் அச்சிடும் சிற்றிதழ்களில்தான் எழுதினேன். இதேயளவு தீவிரத்துடன். எனக்கு இன்றிருக்கும் இந்த எண்ணிக்கையே பெரியது.
எழுதுவது என்னை நான் கண்டுபிடிக்க. என் ஆழ்மனதை மொழியால் மீட்டி எழுப்ப. கனவு ஒன்றில் சமாந்தரமாக வாழ்ந்துகொண்டிருக்க. சமான இதயமுள்ள நண்பர்களுடன் அதைப்பகிர்ந்துகொள்ள. அதற்காக மட்டும்தான். எனக்கு உண்மையிலேயே ஐம்பது வாசகர்கள் போதும். அதற்குமேல் ஆசைப்படுவது புத்தகம் விற்று பதிப்பகம் நஷ்டமில்லாமல் தப்பவேண்டும் என்பதற்காக மட்டுமே.
34. இங்கே வாசிப்பு என்பது லௌகீக எதிர்பார்ப்பு சார்ந்ததாகவே உள்ளது. அதனால் என்ன பயன் என்பது தான் முதல் கேள்வி. சமையல், கணிப்பொறி, ஜோதிடம், கலவி, ரைம்ஸ் நூல்கள் அதிகம் விற்க இந்த மனநிலை தான் காரணம். மாறாய் இந்திய ஆங்கில இலக்கியம் ஒப்பீட்டளவில் ஓரளவேனும் மேம்பட்ட நிலையில் இருக்கிறது. இங்கும் அதுபோல் நிகழ என்ன செய்யலாம்?
வாசிப்பு என்பது ஒரு கலாச்சாரச் செயல்பாடு. கலாச்சார ரீதியான மாற்றம் வழியாகவே வாசிப்பு பெருகும். வணிக நட்வடிக்கை வழியாக அல்ல. கேரளத்திலும் வங்கத்திலும் கர்நாடகத்திலும் விரிவான வாசிப்பு இருக்கிறது என்றால் நாராயணகுரு போன்றவர்களின் சமூகமறுமலர்ச்சி இயக்கங்களும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி இயக்கங்களும்தான் காரணம்.
இங்கே இடதுசாரி இயக்கம் முளையிலேயே குறுகிவிட்டது. திராவிட இயக்கம் நாடகம், சினிமா, மேடைப்பேச்சு என வளந்தது. அது அறிவார்ந்த இயக்கம் அல்ல, பரப்பியல் [பாப்புலிஸ்ட்] இயக்கம். அது உண்மையான கலாச்சார மாற்றத்தை உண்டுபண்ண முடியாது. ஏற்கனவே இருக்கும் கலாச்சார இயக்கங்களின் கொள்கைகளை எடுத்து எளிய கோஷங்களாக்கி அரசியல் நடத்தும். திராவிட இயக்கம் அதற்கு முன்பிருந்த தமிழியக்கத்தில் இருந்து சிலகோஷங்களைக் கையிலெடுத்து மேடைமேடையாக முழங்கியது. அதன் சாதனைகளை இன்று தன்னுடையது என்கிறது.
தமிழில் நிகழ்ந்த கடைசிப் பெரிய அறிவியக்கம் தமிழ் மறுமலர்ச்சி இயக்கம். அதன் மூன்று முகங்களான தமிழ் பதிப்பியக்கம், தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம். அதன் அலை இன்றும் நீடிக்கிறது. இன்றும் கூட தமிழகத்தில் உள்ள மிக அதிகமான இலக்கிய அமைப்புகள் தமிழ் மறுமலர்ச்சிக்காலத்தில் உருவானவைதான். இன்றும் அவை ஏதோ வகையில் செயல்படுகின்றன. உதாரணமாக கம்பன் கழகங்கள், வள்ளுவர் மன்றங்கள். நவீன இலக்கியத்திற்கு அப்படி ஒர் அறிவியக்கம் இங்கே நிகழவில்லை. அதன் குறைபாடு இங்குள்ளது.
அத்துடன் நவீனக் கல்வி நவீனச் சிந்தனைகளுக்கும் இலக்கியத்திற்கும் எதிரானதாக, தொழில்நுட்பப் பயிற்சி என்ற அளவில் மட்டுமே இங்குள்ளது. மொழிக் கல்வி தேங்கியிருக்கிறது. ஒட்டுமொத்தமாகவே கல்வித்துறை அறிவார்ந்த தன்மையை இழந்து ஊழலால் சீரழிந்துள்ளது. ஆகவே இங்கே வாசிப்பியக்கம் ஆரம்பிக்கவே இல்லை.
சமூக அளவில் பெரிய வாசிப்பியக்கம் ஆரம்பிக்கவேண்டும் என்றால் நவீனத் தொழில்நுட்பம் மூலமோ அல்லது வேறு அரசியல் எழுச்சிகள் மூலமோ ஒரு பண்பாட்டு இயக்கம் நிகழவேண்டும். அதுவரை இங்கே அது ஒரு மிகச்சிறிய வட்டத்திற்குள்தான் இருக்கும்.
35. இணைய தளத்தில் எழுதத் தொடங்கியது உங்கள் எழுத்தை எந்த வகையில் மாற்றி இருக்கிறது? இதை விரும்புகிறீர்களா? பிரசுர சம்மந்தமான பதற்றத்தை இணையதளம் அகற்றியுள்ளதல்லவா?
இணையதளத்தில் வருவதற்கு முன்னரே நான் தொடர்ந்து எழுதிவந்தவன் சொல்லப்போனால் சொந்தமாக சிற்றிதழ் நடத்தினேன். அது நின்றதுமே இணையம் வந்துவிட்டது. இணையம் வந்த ஆரம்பகாலத்திலேயே நான் மருதம் என்ற இணைய இதழை ஆரம்பித்துவிட்டேன். தமிழின் மிக ஆரம்பகால இணைய இதழ்களில் ஒன்று அது. அதன் பிரதிகள் அழிந்துவிட்டன.
நான் எந்த பிரசுர அமைப்பையும் சார்ந்து எப்போதும் செயல்பட்டதில்லை. ஆனால் பிரசுரம் சார்ந்த பதற்றமும் எனக்கு இருந்ததில்லை. என் நூல்களில் விஷ்ணுபுரம் மட்டுமே பிரசுரத்திற்குச் சற்று சிக்கலை அளித்தது. அன்று அவ்வளவு பெரிய புத்தகங்கள் எளிதில் வருவதில்லை. என் வாசகர்களிடமே முன்பணம் திரட்டி அதை வெளியிட்டேன். 1997ல். விஷ்ணுபுரத்தின் வெற்றிக்குப்பின் எப்போதும் பிரசுரம் ஒரு சிக்கலாக இருந்ததில்லை. எல்லா வருடமும் என் நூல்கள் வெளிவந்து கவனத்தைப் பெற்றன.
இணையம் எனக்கே உரிய ஓர் எளிய ஊடகமாக ஆகியது. இணையம் இல்லாமலிருந்தால் எனக்கு இத்தனை பெரிய வாசகர் பரப்பு உருவாகியிருக்காது. அவர்களை இணைத்து ஓர் அமைப்பாகச் செயல்பட முடிந்திருக்காது. நான் எழுதும் அனைத்து எழுத்துக்களும் ஒன்றாகத் தொகுத்திருக்க முடியாது.
36. எல்லோர் மனதிலும் இருக்கும் ஓர் ஆச்சரியக் கேள்வி. எப்படி இவ்வளவு எழுதிக் குவிக்கிறீர்கள்? அதுவும் தொடர்ச்சியாகவும் தரம் குன்றாமலும்? சுந்தர ராமசாமியின் பாணிக்கு நேர் எதிரானது இது. அதிகமாய் எழுதுவது தரத்தைப் பாதிக்கும் என்ற நெடுங்கால நம்பிக்கையை உடைத்திருக்கிறீர்கள்.
இங்கே ஏதேனும் எழுதுபவர்களில் பெரும்பாலானவர்களுக்குத்தெரியும் அவர்கள் தங்கள் வாழ்க்கையின் பெரும்பாலான நேரம் மிக எளிய அன்றாட மனநிலையில் லௌகீக வாழ்க்கையின் கடமைகளை செய்து லௌகீக கேளிக்கைகளில் மூழ்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு படைப்புமனநிலை மிக அபூர்வமாகவே வாய்க்கிறது. உலகியலில் இருந்து அங்கே செல்ல பலவகையான சிக்கல்கள் இருக்கின்றன. ‘தொடங்கிட்டா போரும் எழுதிருவேன்’ என்று சொல்லிக் கொண்டிருப்பவர்களை வருடக்கணக்காக பார்க்கிறேன்.
எழுத்தின் தரம் என்பது எழுதும் மனநிலையின் தீவிரத்தை மட்டுமே சார்ந்தது. படைப்புமனநிலையைத் தக்கவைத்துக்கொள்வது தான் முக்கியம். நான் படைப்புமனநிலையில் எப்போதுமே இருந்து கொண்டிருப்பவன். அதை ஒரு யோகமாகப் பயில்பவன். அதை அறிவியல் பூர்வமாக அறிந்து செயல்படுத்துபவன். எனக்கு எழுத்து தற்செயல் அல்ல.
எனக்கு சுந்தர ராமசாமியை நன்றாகத் தெரியும். அடிப்படையில் அவர் ஒரு சுகவாசி. பேசிக்கொண்டிருப்பதை விரும்புபவர். உரையாடல் நிபுணரும் கூட. எழுதுவதை முடிந்தவரை ஒத்திப்போடுவார். ஒரு கதை தோணுது என ஒருவருடம் சொல்லியிருக்கிறார். ஓரிரு பத்திகளை எழுதி விட்டுவிடுவார். ஒவ்வொருநாளும் நூறுவரி எழுதுவார். யோசித்து யோசித்து மாற்றி மாற்றி எழுதுவார்.
அத்துடன் அவர் எழுதுவதும் இல்லை. அவர் சொல்ல ஓர் உதவியாளார் தட்டச்சு செய்வார். அவர் சொல் சொல்லாகவே சொல்வார். சொற்றொடராகக் கூட அல்ல. ஆகவே சொற்றொடரின் ஒழுக்கு அவரில் இருக்காது. ஆகவே எழுதியபின் சத்தமாக வாசித்து திருத்தங்கள் போட ஆரம்பிப்பார். அது எழுதும் முறையே அல்ல. எழுத்து அப்படி பிரக்ஞைபூர்வமாகச் செய்வது அல்ல.
சொல்லப்போனால் அவர் கடைசிக்காலத்தில் பேசிப் பதிவுசெய்து பிரசுரித்த நினைவோடை நூல்கள் சரளமானவையாக, நுட்பமானவையாக இருப்பதைக் காணலாம். குறிப்பாக பி.ஆர்.மகாதேவன் எழுதியவை. அப்போது நிறையவும் எழுதினார். அதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம், எழுதும்போது எழுதுவதாக உணர்ந்தால் அது எழுத்தே அல்ல.
அத்துடன் அவர் வணிகத்தில் தீவிரமாக இருந்தார். அதற்கான பயணங்களில் இருந்தார். ஆகவேதான் குறைவாக எழுதினார். அன்றைய சிற்றிதழ்சூழலில் அவ்வளவு எழுதினாலே போதும்.
சமீபத்தில் விஷ்ணுபுரம் விழாவில் ஓர் இளம் நண்பர் கேட்டார். சார் கசடதபற என்கிறீர்களே அது எத்தனை பக்கம்? அந்தக்கேள்வி துணுக்குறச் செய்தது. மொத்த கசடதபற இதழ்களையும் ஒன்றாகச் சேர்த்தால் கூட ஒருமாதம் www.jeyamohan.in தளத்தைவிட சின்னதாகவே இருக்கும். சொல்புதிதின் ஓர் இதழ் அளவுக்குச் சற்று மேலே இருக்கும். அதில் பெரும்பகுதி சாதாரணமான குறிப்புகளாகவும் இருக்கும்.
தமிழ்ச் சிற்றிதழ் இயக்கம் என்பது ஓர் உண்மையான அறிவியக்கம் அல்ல. அது கலைமகள், மணிக் கொடியில் தொடங்கி உடனே முடிந்துவிட்டது. டி.எஸ்.சொக்கலிங்கத்தின் மணிக்கொடி சிற்றிதழ் அல்ல, அக்காலத்திற்கு ஒரு பெரிய இதழ்தான். க.நா.சு.வும் செல்லப்பாவும் தொடங்கியதுதான் சிற்றிதழ் மரபு.
சிற்றிதழ் இயக்கம் என்பது நவீன இலக்கிய மரபு அறுபடாமல் பார்த்துக்கொண்ட ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே. சுந்தர ராமசாமி அது போதும் என அமைந்துவிட்டவர். ஆகவேதான் குறைவாக எழுதுவது, அபூர்வமாக எழுதுவது, எழுதாமலேயே இருப்பது எல்லாம் உயர்வான இலக்கியச்செயல்பாடுகள் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொண்டார். அதைச் சொல்லிக்கொண்டே இருந்தார்.
உலகமெங்கும் முக்கியமான படைப்பாளிகளில் கணிசமானவர்கள் எழுதிக்கொண்டே இருந்தவர்கள்தான். என் ஆதர்சம் டால்ஸ்டாய் போன்றவர்கள். கலைக்களஞ்சியங்களையே உருவாக்கிய சிவராம காரந்த் போன்றவர்கள். பாரதி, புதுமைப்பித்தன் போன்றவர்கள் எழுதிய கால அளவை வைத்துப்பார்த்தால் எழுதிக்குவித்தவர்கள் அவர்கள்.
ஏற்கனவே சொன்னதுபோல அச்சு ஊடகத்தைக் கடந்துவிட்டோம். ஓலையில் இருந்து அச்சு வந்தபோது எழுத்து பெருகியது போல அச்சிலிருந்து மின்னணு ஊடகம் வந்தபோதும் எழுத்து மேலும் பெருகுகிறது. அச்சு ஊடகத்தைப் பார்த்து ஓலையில் எழுதிய கவிராயர்கள் திகைத்திருப்பார்கள். அதைப்போல இன்று காகித எழுத்தாளர்கள் திகைக்கிறார்கள்.
இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும். கடந்தகாலத்தில் மேலைநாட்டு எழுத்தாளர்களே நிறைய எழுதினார்கள். அவர்களுக்கு அதற்கான வாழ்க்கைவாய்ப்புகள் இருந்தன. தமிழ் எழுத்தாளர்கள் வறுமையில் அடிபட்டு, வேலைசெய்து களைத்து எஞ்சிய நேரத்தில் எழுதியவர்கள். இப்போது இங்கும் அவ்வாய்ப்பு வந்துள்ளது.
37. சமூக வலைதளங்களின் வழி இன்று நிறையப்பேர் தமிழ் எழுதவும் வாசிக்கவும் தொடங்கி இருக்கிறார்கள். 12ம் வகுப்புக்குப் பின் தமிழ் வெறும் பேச்சு மொழியாக மட்டுமே மாறிப்போய் விடும் சூழலில் ஓர் எல்லை வரை இது முக்கியமான மாற்றமே. ஆனால் தமிழ் எழுத்து மற்றும் வாசிப்புச் சூழலில் இது ஏதேனும் வரவேற்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறதா? குறிப்பாய் உங்கள் வாசகப் பரப்பில் எண்ணிக்கையிலும் தரத்திலும் இதனால் ஏதேனும் மாற்றம் இருக்கிறதா?
முந்தைய வினாக்களில் இதற்கான பதிலைச் சொல்லியிருக்கிறேன். ஒரு முன்னகர்வும் ஒரு பின்னடைவும் இன்று உள்ளது. மின்னணு ஊடகமும் இணையமும் இணைந்து எழுத்து–வாசிப்பை பலமடங்கு பெருக்கிவிட்டன. விளைவாகவே நூல்களும் அதிகளவில் விற்கப்படுகின்றன.
ஆனால் பள்ளிகளில் தமிழ்க்கல்வி இல்லாமலாகி வருவதனால் தமிழ் வாசிப்பு பின்னடைவு கொள்கிறது. புதியதலைமுறையில் தேர்ந்த மாணவர்கள் தமிழில் வாசிக்கும் வழக்கமோ பயிற்சியோ அற்றவர்களாக உள்ளனர். ஆகவே ஒட்டுமொத்தமாக தற்காலிகமான ஒரு வளர்ச்சி உள்ளது. இன்று எனக்குள்ள வாசகர்கள் தமிழில் எந்தத் தீவிரமான எழுத்தாளருக்கும் எப்போதும் இருந்ததில்லை. ஆனால் இந்த வாசகர் வட்டம் அடுத்த தலைமுறையில் நீடிக்குமா, தமிழ் வாசிப்பு இருக்குமா என்பதெல்லாம் குழப்பமாகவே இருக்கிறது. இப்படியே போனால் நீடிக்காது. தமிழ் வெறும் பேச்சுமொழியாகச் சுருங்கிவிடும். வெறுமே தமிழ்வாழ்க என்று கூச்சலிட்டுப் பயனும் இல்லை. ஆனால் வேறேதும் ஓர் அலை கிளம்பும் என்று ஒரு நம்பிக்கையும் இருக்கிறது.
38. ஆண்டுதோறும் இலக்கியவாதிகளை அடையாளங்கண்டு விருது வழங்குதல், ஊட்டியில் நடக்கும் இலக்கிய முகாம் – இவை தவிர விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தின் செயல்பாடுகள் என்ன? நீங்கள் ஆரம்பத்தில் உத்தேசித்திருந்தபடி அது செயல்படுகிறதா? (அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொள்வது ஏதேனும் ஒருவகையில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கும், அல்லது குறைந்தபட்சம் கருத்துச் சாய்வையேனும் ஏற்படுத்தும் எனக் கருதுவதால் நான் அதில் இணையவில்லை).
இலக்கியம் தனிமனிதர்கள் வழியாக சமூக நிகழ்வாக வளர முடியாது. ஆகவே அதற்கு ஓர் இயக்கம் தேவை என்று க.நா.சு கருதினார். ‘இலக்கியத்திற்கு ஓர் இயக்கம்’ என்ற அவரது நூல் புகழ்பெற்றது. [சாகித்ய அக்காதமி விருது அதற்குத்தான் கிடைத்தது] சிறிய அளவிலேனும் வெவ்வேறு இலக்கிய இயக்கங்கள் ஆரம்பிக்கபப்டவேண்டும் என்றார் அவர். அதற்கு பல தளங்களில் ஏராளமாக எழுதப்படவேண்டும் என வாதிட்டார். அவரே துப்பறியும் நாவல் வகையில் கூட எழுதிப்பார்த்தார்.
[அவர் இலக்கியத்தை இயக்கமாக ஆக்கக்கூடாது, தனிமனிதர்களே செயல்பட வேண்டும், கொஞ்சமாக எழுதவேண்டும் என்றெல்லாம் சொன்னவர் என்று சிலர் இன்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.]
இலக்கிய இயக்கங்கள் தமிழில் எப்போதுமே இருந்துள்ளன. தீவிரமான படைப்பாளிகள் அதை நடத்தினார்கள் டி.கே.சி நடத்திய வட்டத்தொட்டி திரிலோக சீதாராம் நடத்திய அமரர் மன்றம் போன்றவை தமிழியக்கத்துக்கான இலக்கிய இயக்கங்கள் நா.வானமாமாலையின் ஆராய்ச்சி போன்றவை நாட்டுபுறவியல், தமிழாய்வு ஆகியவற்றுக்கான அமைப்புகள்.
க.நா.சு., சி சு செல்லப்பா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்றவர்கள் அவரவர் அளவில் இலக்கிய இயக்கங்களை நிகழ்த்தியவர்கள். அவர்கள் பல ஆண்டுகாலம் தொடர்ந்து சந்திப்புகளை ஒருங்கிணைத்து இருக்கிறார்கள். கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். நண்பர் குழுக்களை வழிநடத்தி இதைச்செய்தனர். க.நா.சு.வின் இலக்கியவட்டம், எம்வி.வெங்கட்ராம் காவேரிக்கரையில் நடத்திய தேனீக்கள், சுந்தர ராமசாமியின் காகங்கள், தஞ்சை பிரகாஷ் நடத்திய கதைசொல்லிகள் போன்றவை உதாரணம்.
இன்று இணையமும் பிற ஊடகங்களும் அளிக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி இன்னும் விரிவான அளவில் இலக்கிய இயக்கங்களை முன்னெடுக்கிறோம். விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அப்படிப்பட்ட ஓர் அமைப்பு. சமானமான எண்ணம் கொண்ட நண்பர்களின் கூட்டு இது. இன்று குழுமங்களில் உரையாட முடிகிறது. அதை அவ்வப்போது தனிப்பட்ட சந்திப்புகளாக ஆக்கிக்கொள்கிறோம்.
இது ஒரு குறிப்பிட்ட கொள்கை, அழகியல் நம்பிக்கை கொண்டவர்களுக்கானது அல்ல. எதையாவது செய்யலாமே என்று தோன்றுபவர்களின் கூட்டம் என்று சொல்லலாம். தனியாக எதையும் செய்யமுடியாது. சமமான மனநிலை கொண்டவர்களுடன் இணைந்தே செய்யமுடியும். அதற்கு நட்புதான் அடிப்படையாக இருக்கமுடியும். ஆகவே இவ்வமைப்பு.
இது இலக்கியச்சந்திப்புகளை நடத்துகிறது. கூட்டங்களை நடத்துகிறது. மற்றபடி கருத்தியல்செயல்பாடு என ஏதும் இல்லை. நாங்கள் உத்தேசித்ததும் இதுவே. ஆரம்பத்தில் உத்தேசித்தது சுந்தர ராமசாமியின் காகங்கள் போல ஒரு சின்ன சந்திப்பு முயற்சி. இத்தனை பெரிதாகும், இவ்வளவு தீவிரமாக ஆகும் என நினைக்கவில்லை. இதற்கான ஒரு தேவை இருந்திருக்கிறது.
நேற்றும் இதைப்போன்ற சிறிய அளவிலான பல இயக்கங்கள்தான் இலக்கியத்தை முன்னெடுத்துவந்தன. இலக்கியச் சிந்தனை, இலக்கிய வீதி போன்ற பல அமைப்புகள் இருந்தன. இன்றும் கோவையில் களம் போன்ற அமைப்புகள உள்ளன.
ஆனால் க.நா.சு. கனவு கண்டது இன்னும் பெரிய ஓர் எழுச்சி. கிட்டத்தட்ட ஊருக்கு ஓர் இயக்கம். அவறை இணைக்கும் ஓர் ஒட்டுமொத்த இயக்கம். இதைப்போல பலவகையான இயக்கங்கள் பல தளங்களில் நடந்து மேலும் மேலும் அதிகமான வாசகர்கள் உள்ளே வரவேண்டும். இது மண்ணில் நீரூற்றிக்கோண்டே இருப்பதுதான். விதைகள் இருந்தால் முளைத்துவரும்.
கலாச்சாரச்செயல்பாடுகளின் விளைவுகள் மெல்லமெல்லத்தான் தெரியவரும். ஆகவே எதிர்பார்க்கலாம்.
39. உங்கள் சினிமா பங்களிப்பு திருப்திகரமாக இருக்கிறதா? இடைநிலைப் படங்கள் மட்டும் எனக் குறுக்கிக் கொள்ளக் காரணம் என்ன? திரைக்கதையிலும் உங்கள் பணி உள்ளதா? ஆலோசகராகவும் இருக்கிறீர்களா? (உதா: காவியத் தலைவன் போன்ற சரித்திரப் படங்களில் பயன்பட்டிருக்கக்கூடும்). தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு சரியான மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கிறதா?
சினிமாவில் மதிப்பு மரியாதை பணம் எதுவும் குறைவில்லை. சொல்லப்போனால் நான் பெருமதிப்புடன் இருப்பதே சினிமாவுக்குள்தான். [அவமதிப்புகளை உணர்வது கல்லூரிகளில்]. சினிமாக்காரர்களுக்கு இலக்கியவாதிகள் மேல், அதிலும் தீவிரமாகச் செயல்படும் இலக்கியவாதிகள்மேல் பெரும் மதிப்பும் ஈடுபாடும் உள்ளது. அதை நீங்களே பார்க்கலாம். நான் நிகழ்த்தும் விழாக்களில் சினிமா நட்சத்திரங்கள் இலவசமாக வந்து பங்கெடுக்கிறார்கள். இந்த இயக்கம் முக்கியமானது, நாம் ஏதாவது செய்யவேண்டும் என்றே அவர்கள் எண்ணுகிறார்கள். அது என் மேல் உள்ள மதிப்பினால்தான்.
ஆனால் இன்னமும்கூட சினிமாவில் எழுத்தாளனின் இடமென்ன என்பது வகுக்கப்படவில்லை. ஆகவே எழுத்தாளனை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்று தெளிவாக இல்லை. எழுத்தாளன் என்பவன் இன்றும் ஓர் ஆலோசகனாக, விவாதித்து முடிவெடுக்கப்பட்ட விஷயத்தை மொழிவடிவில் எழுதி அளிப்பவனாக மட்டுமே இங்கே இருக்கிறான். அவ்வெழுத்துவடிவில் இருந்து வெகுவாக விலகியே சினிமா உருவாகி வருகிறது.
இது எவருடைய பிழையும் அல்ல. வணிக சினிமா என்பது பல்வேறு எதிர்வினைகள் மூலம் திரண்டுவரும் ஒரு கலை. அப்படித்தான் அது உருவாகி வந்திருக்கிறது. அதை மாற்றுவது எளிய விஷயமும் அல்ல. சினிமாவுக்குள் எழுத்தாளன் மற்றும் இயக்குநர் என ஒரு பெரிய நட்புக்கூட்டு ஒன்று நிகழ்ந்து அது வெற்றிகரமாக ஆனால்தான் ஏதாவது நிகழும். எம்டிவாசுதேவன் நாயர் + ஹரிஹரன் போல. லோகிததாஸ் + சிபி மலையில் போல. அது ஒரு தற்செயல்தான்.
40. சினிமா வசனங்களில் சுஜாதா அளவு வெற்றிகரமாய் நீங்களோ எஸ்ராவோ இல்லை என்பதே பரவலான கருத்து. ஓரளவு அது உண்மையும் கூட. சுஜாதா வெகுஜன எழுத்தாளராய் இருந்தது அவர் சினிமாவிலும் அதே பாணியில் கைதட்டல் வசனங்களை எழுத சுலபமாக இருந்தது எனலாமா?
சினிமா கதை வசனங்களில் மிக வெற்றிகரமானவர் ஆரூர்தாஸ் மட்டுமே. அக்காலத்தில் அவரைப்போல பலர் அடுத்தடுத்த படிகளில் இருந்தனர். பாலமுருகன், வியட்நாம்வீடு சுந்தரம்,
சுஜாதாவின் ஆரம்பகால திரை எழுத்துக்கள் எல்லாமே மிகப்பெரிய தோல்விகள். குமுதம் ‘சுஜாதாவை விட்டுவிடுங்கள்’ என்று ஒரு பெரிய கட்டுரையையே எண்பதுகளில் வெளியிட்டு தொடர் விவாதம் நடந்திருக்கிறது.
சுஜாதா முழுமையாகக் கதை – திரைக்கதை எழுதி வென்ற ஒரு படம் பெயர் சொல்லுங்கள். சரி, அவர் எழுதி ஓர் அறிமுக இயக்குநர் அல்லது இளம் இயக்குநர் எடுத்த வெற்றிகரமான படத்தின் பெயரைச் சொல்லுங்கள். சரி, அவர் எழுதிய ஒரு நடுவாந்தரப் படத்தை குறிப்பிடுங்கள். இன்றும் சொல்லும்படி இருக்கும் ஒரு திரைக்கதையைக் குறிப்பிடுங்கள். சுஜாதாவின் சினிமா என தமிழில் ஏதேனும் உண்டா, சொல்லுங்கள்.
சுஜாதாவின் வெற்றிகள் எல்லாமே ஷங்கர், மணிரத்னம் ஆகியோருடன் அவர்களின் வெற்றிப்படங்களில் அவர் இணைந்து இருந்ததனால் வந்தவை. அவர்களின் படங்கள் ஆரம்பம் முதல் கடைசிவரை அவர்களின் படங்கள் மட்டுமே. அவற்றுக்கு ஓர் ஆலோசகராக, எழுதித்தருபவராக மட்டுமே அவரது பங்களிப்பு இருந்தது. மணிரத்னத்தின் ஆரம்பகாலப் படங்களின் வெற்றியிலும் பிற்காலப்படங்களின் தோல்வியிலும் சுஜாதா இருந்தார். அவை மணிரத்னத்தின் வெற்றி தோல்விகளே. மணி ரத்னம் சினிமாவின் அனைத்து பகுதிகளிலும் முழுமையாகவே கட்டுப்பாடுள்ள இயக்குநர்.
சுஜாதாவின் வெகுஜன எழுத்தில் இருந்த வெற்றிக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமே இருக்கவில்லை. அவர் எழுதியபடங்களின் பட்டியலை எடுத்துப்பார்த்தாலே தெரியும். எனக்காவது நான்கடவுள், அங்காடித்தெரு என சில படங்கள் இருக்கின்றன. காலம் கடந்தபின்னரும் அவை பேசப்படுகின்றன. விருதுகள் பெற்றிருக்கின்றன. நான் கடவுள் ஓரளவு என் படம் எனச் சொல்ல முடியும். நான் ஒரு நவீனத் திரைக்கதையை அனைத்து நுட்பங்களுடனும் முழுமையாகவே எழுத முடியும் என்று காட்ட ஒழிமுறி போன்ற ஒரு படமாவது உள்ளது. சுஜாதாவிற்கு அதுவும் எஞ்சவில்லை. என்னிடம் அவரே ‘என்னோடது ஸ்க்ரீன்பிளே இல்ல, ஃபோர்பிளே’ என்று சொல்லியிருக்கிறார்.
41. இலக்கியத்தில் தீவிரமாய் விமர்சனம் செய்யுமளவு நீங்கள் சினிமா, இசை இரண்டையும் தொடுவதில்லையே. அப்படியே சொல்லும் ஓரிரு விமர்சனங்களும் மிக மேலோட்டமானவையாகவே இருக்கின்றன, அவையும் எதிர்மறையாய் இருப்பதில்லை. அந்தத் துறையில் பங்களிப்பதால் சங்கடம் கூடாது என்பதாலா? அல்லது அதற்கான அவசியமோ பயிற்சியோ இல்லை எனக் கருதுகிறீர்களா?
சினிமா, இசை என இரண்டையும் நான் முழுமையாக அறிந்தவன் அல்ல. சினிமாவில் என் மகனும் மகளும் பார்த்திருக்கும் மாஸ்டர்பீஸ்களை நான் பார்த்ததில்லை. இசையில் என் நண்பர் சுகாவோ ஷாஜியோ அறிந்த எதுவும் எனக்குத்தெரியாது. என் எல்லைகளைச் சொல்லிவிட்டு சில கருத்துக்களைச் சொல்வேன். இசை அல்லது சினிமாவை நான் மதிப்பிடுவதில்லை. அவற்றின் பண்பாட்டு, வரலாற்றுப் பின்புலம் பற்றி மட்டுமே சொல்வேன். என் ‘ஏரியாவை’ விட்டு வெளியே போய் சொல்லி விடக்கூடாது என்ற கவனம்தான்.
என் எல்லைக்கு வெளியே செல்கிறேனோ என்று தோன்றும் எந்தக் கட்டுரையையும் சம்பந்தப்பட்ட துறையின் நிபுணர் ஒருவருக்கு அனுப்பி வாசிக்கவைத்து அதன்பின்னரே பிரசுரிக்கிறேன்.
42. எழுத்தின் பாணி மற்றும் உள்ளடக்கத்தில் நீங்கள் தமிழில் யாருடைய நீட்சி எனக் கருதுகிறீர்கள்? போலவே இப்போது உங்கள் வாரிசு என யாரைச் சொல்லலாம்?
நான் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், சுஜாதா ஆகியோரின் பாதிப்புடன் எழுதவந்தவன். அழகியல் கோட்பாட்டுத் தளத்தில் என் முன்னோடி என்றால் மலையாள எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணன். அரசியலில் எம்.கோவிந்தன்.
ஆனால் விரைவிலேயே அவர்களில் இருந்து வெளியே சென்றேன். அது என் நடையை உருவாக்கியது. இன்றைய என் எழுத்து எவருடைய நீட்சியுமல்ல. அது தனித்த ஒரு புனைவுலகம்.
இப்போது எழுதுபவர்களில் எவரிடம் என் பாதிப்பு உள்ளது என அவர்கள்தான் சொல்லவேண்டும். நான் சொல்வது முறையல்ல.
43. சமகாலத் தமிழ் இலக்கியம் எப்படி இருக்கிறது? இந்திய அளவில் அதன் இடம் என்ன? தமிழ் எழுத்தாளர் எவரேனும் நொபேல் பரிசு தகுதி கொண்டிருக்கிறார்களா?
தமிழ் நவீன இலக்கியம் குறைவாக எழுதப்பட்டு அதைவிடக் குறைவாகவே வாசிக்கப்படுவது. ஆனால் எப்போதுமே அது உலக அளவில் எழுதப்பட்டுவந்த நவீன இலக்கியத்திற்கு நிகரானதாகவே இருந்து வந்துள்ளது. புதுமைப்பித்தன் அவர் காலத்தில் உலக அளவில் எந்த மொழியில் எழுதிய பெரும் படைப்பாளிகளுக்கும் நிகரானவர். இன்று எழுதுபவர்களில் அசோகமித்திரன், கி.ராஜநாராயணன் போன்றவர்கள் நோபல் பரிசுக்குத் தகுதியானவர்கள்தான்.
சமகாலத்தில் நோபல் பரிசுபெற்றுவரும், பரிந்துரைக்கப்படும் எந்தப்படைப்பாளியின் படைப்புலகுக்கும் நிகரானது என் படைப்புலகம். நோபல் பரிசு பெற்ற பலரை விடவும் தீவிரமானது விரிவானது. உதாரணமாக, 1997ல் என் பெயர் சிவப்பு நாவலும் விஷ்ணுபுரம் நாவலும் ஒரே சமயம் வெளிவந்தன. இரண்டுமே தமிழில் உள்ளன. ஒப்பிட்டுப்பாருங்கள். ஓரான்பாமுக் அவரது நாவலுக்காக நோபல் பரிசு பெற்றார்.
எந்த ஒரு முதன்மையான புனைவெழுத்தாளனையும்போல என் புனைவுலகும் தனித்தன்மை கொண்டது. ஆகவே என் ஆக்கங்களில் ஒன்றை உதிரியாக மொழியாக்கம் செய்தாலும் அதனால் பயனிருக்காது. ஆங்கிலத்தில் வாசிப்பவர்கள் ஏற்கனவே வாசிக்கும் படைப்புகளில் ஒன்று அல்ல அது. இந்தப் புனைவுலகை இதன் நுட்பங்களுடன் மொழியாக்கம் செய்து தொடர்ந்து அறிமுகம் செய்து விவாதித்து, கொண்டுசென்று சேர்க்கவேண்டும். அவ்வகை கவனிப்புகள் இந்திய எழுத்தாளர் எவருக்கும் கிடைப்பதில்லை. தமிழில் சாத்தியமே இல்லை.
இந்திய அளவிலும் சரி உலக அளவிலும் சரி தமிழிலக்கியத்திற்கு பெரிய மதிப்பு ஏதும் இன்று இல்லை. முதல் காரணம் மொழியாக்கங்கள். இங்குள்ள எளிய சமூக ஆவண நாவல்கள் மட்டுமே மொழியாக்கம் செய்யப்படுகின்றன. அவற்றை இலக்கிய வாசகர் எவரும் கலைப்பெறுமதி உள்ளவை என நினைக்க முடியாது. இங்குள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகள், மதமாற்ற அமைப்புகள், நிதியளிக்கும் அமைப்புகள் இங்குள்ள வாழ்க்கை பற்றி உருவாக்கும் ஓர் எதிர்மறை நோக்கை மேலும் பிரச்சாரம் செய்வதற்கான புனைவுசார்ந்த ஆதாரங்களாகவே அவை மொழியாக்கம் செய்யப்பட்டு முன்வைக்கப்படுகின்றன. அது ஒரு பெரிய அரசியல் வலை.
அபூர்வமாக நல்ல ஆக்கங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் மோசமான மொழியாக்கங்கள். பாடப்புத்தக நடை கொண்டவை. தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு சமகால புனைவுமொழியில் நல்ல மொழியாக்கங்கள் வரவேண்டும். அவை நல்ல பதிப்பகங்களால் வெளியிடப்படவும் வேண்டும்.
அத்துடன் பரவலாக அவை சென்றடையவும் வேண்டும். இலக்கியத்தைக் கொண்டுசேர்ப்பதற்கு தேசிய ஊடகங்களிலும் உலக அளவிலான ஊடகங்களிலும் அவற்றைப்பற்றி எழுதிக்கொண்டே இருக்கும் இலக்கிய ஆர்வலர் [கனாய்ஸியர்கள்] தேவை. அப்படி இங்கே எவரும் இல்லை. கன்னடத்திற்கு ஏ.கே.ராமானுஜம் போல, வங்காளத்திற்கு காயத்ரி ஸ்பிவாக், மீனாட்சி முகர்ஜி போல, மலையாளத்திற்கு சச்சிதானந்தன்போல.
அதாவது நல்ல அறிவுத்திறனும் கலையுணர்வும் மொழிநடையும் கொண்டவர்கள் ஆங்கிலத்தில் நல்ல படைப்புகளை முன்னிறுத்தி எழுதவேண்டும். அது இங்கே நிகழ்வதில்லை. இங்கு கொஞ்சம் ஆங்கிலம் எழுதத்தெரிந்தால் அவர் தன்னையே இலக்கியமேதை என நினைத்துக்கொண்டுவிடுகிறார். ஆங்கிலமறிந்த இளைய தலைமுறைக்கு தமிழிலக்கியத்தை அறியும் ரசனை இல்லை. அப்படி எழுதப்பட்டிருந்தால் அசோகமித்திரனோ கி.ராஜநாராயணனோ தேசிய அளவில் அறியப்பட்டிருப்பார்கள்.
ஆகவே தமிழுக்கு நோபல் கிடைக்க வாய்ப்பு இந்தத்தலைமுறையில் இல்லை. இந்திய எழுத்தாளர்களுக்கேகூட நோபல் கிடைக்க வாய்ப்பில்லை. இந்திய ஆங்கில எழுத்துக்களையே இங்குள்ள ஆங்கில ஊடகங்கள், பல்கலைகள் முன்வைக்கின்றன. அவற்றைப்பற்றியே எழுதிக்குவிக்கப்படுகிறது. அவர்களில் எவரேனும் நோபல் வெல்லலாம்.
ஆனால் என்ன பிரச்சினை என்றால் அவர்கள் பல்வேறு சக்திகளால் நோபல் வரை கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கே தரமில்லை என்பதனால் நிராகரிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் சர்வதேசப்புகழ்பெற்ற ஒரு பிரிட்டிஷ் எழுத்தாளர் எனக்கு எழுதிய கடிதத்தில் இந்திய ஆங்கில எழுத்துக்களின் போலித்தனம் பற்றிப் புலம்பி எழுதியிருந்தார். ஆனால் இந்திய எழுத்துக்களை ஆங்கிலத்தில் வாசித்தால் அவருக்கு மொழியின் முதிர்ச்சியின்மை காரணமாக வாசிப்பனுபவம் கிடைக்கவில்லை. பெரும்பாலும் புரியவும் இல்லை. இதுதான் இன்றுள்ள நிலை.
44. இன்று எழுதும் இளைய எழுத்தாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார்?
நம்பிக்கையூட்டுபவர்கள், கவனத்திற்குரியவர்கள் என எப்போதும் சில பெயர்களை சொல்வது என் வழக்கம். அது ஒரு தொடர்ச்சியை உருவாக்க அவசியம் இது ஒரு பெரிய பத்திரிகை என்றால் சொல்லியிருப்பேன். ஆனால் இங்கே அடுத்த தலைமுறையின் படைப்பாளிகளில் எவர் உண்மையிலேயே முக்கியமானவர்கள் எனக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.
கறாராக நீங்கள் சொல்லுங்கள். அடுத்த தலைமுறையில் இருந்து அப்படி உத்வேகமூட்டக்கூடிய, புதிய திறப்பாக அமையக்கூடிய ஏதாவது வந்திருக்கிறதா?
இது ஏன் என்று பார்க்கிறேன். எனக்கு பொதுவாகச் சில விஷயங்கள் தோன்றுகின்றன. ஒன்று, புது எழுத்தாளர்கள் வாசிக்கிறார்களா என்றே சந்தேகமாக இருக்கிறது. பலர் புத்தகங்களை ஒற்றைவரியில் குறிப்பிட்டுச் செல்கிறார்கள். அந்த புத்தகங்களை வாசித்திருக்கிறார்கள் என்ற தடையமே அவர்களின் மொழியிலும் நடையிலும் இல்லை. கடுமையான அரசியல், கோட்பாட்டு நூல்களை குறிப்பிடுகிறார்கள். ஆனால் இங்கே பேசப்படுவனவற்றில் ஒரு கருத்து சற்று சிக்கலாக இருந்தால்கூட புரிந்துகொள்வதில்லை. அதன் மிக எளிமையான வடிவத்தையே எடுத்துக்கொண்டு மேலே விவாதிக்க ஆரம்பிக்கிறார்கள்.
அதேபோல சமகால எழுத்து அல்லது முன்னோடிகளின் எழுத்து பற்றி எழுதினால் மிக எளிமையான அரசியல்கருத்துக்களை தோண்டி எடுத்துவைத்துப் பேசுகிறார்களே ஒழிய வாழ்க்கை நுட்பங்கள் சார்ந்தோ கலையமைதி சார்ந்தோ ஒன்றுமே சொல்வதற்கில்லாமல் மொத்தையாக எழுதுகிறார்கள். நிராகரிக்க முனைந்து உட்காரும்போதுகூட மிக எளிய அரசியல்சரிநிலைகளைச் சொல்லித்தான் ஒரு படைப்பை அவர்களால் நிராககரிக்க முடிகிறது. சமீபத்தில் இப்படி எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து வாசித்தபோது வந்த சலிப்பு கொஞ்சமல்ல.
பலசமயம் இவர்களின் அரசியல், இலக்கியக் கட்டுரைகளை வாசித்தால் பரிதாபமாக இருக்கிறது. இவர்கள் இனிமேல் ஒரு நூலைப்பற்றிச் சொன்னால் அதைப்பற்றி ஒரு குறிப்பிடும்படியான கட்டுரையை எழுதாவிட்டால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்றே எடுத்துக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். சமகாலப் புனைவுகளை பற்றி ஆழ்ந்த கட்டுரை ஒன்றை எழுதாதவன் உலக இலக்கியம் அல்லது உலக சினிமா பற்றிச் சொல்வது அவனுடைய சொந்த எழுத்து அல்ல என்றே கொள்ளப்படவேண்டும்.
நல்ல நாவலாசிரியன் நல்ல கட்டுரையாளனாகவே ஆரம்பிக்கிறான் என்று இ.எம்.ஃபாஸ்டர் சொல்கிறார். சிக்கலான, பலமுனைகொண்ட ஒன்றை கட்டுரையாகச் சொல்லமுடியும் என்றால் மட்டுமே நாவலை எழுதமுடியும். நம் அடுத்த தலைமுறையில் அப்படி எழுதப்பட்ட ஒரே ஒரு கட்டுரையைச் சுட்டிக் காட்டுங்கள். ஒரு கட்டுரைக்கு எதிர்வினை எழுதினால் அதில் சில ஒற்றைவரிகளை பிடுங்கி அதை திரித்து வம்புக்கட்டுரைதான் எழுதமுடிகிறது இவர்களால். இதுதான் கனமான புனைவை உருவாக்க முடியாத குறுகலை உருவாக்குகிறது. இது நிராகரிப்பு அல்ல, விமர்சனம். ஒருவகையில் எதிர்பார்ப்பும்கூட
இன்று வரும் நாவல்களை வாசித்ததுமே தூக்கிப்போடுகிறேன். ஆங்காங்கே சில விஷயங்கள் நன்றாக இருப்பதாகத் தோன்றும், அவ்வளவுதான். இப்போது எழுதுபவர்களில் கணிசமானவர்களுக்கு இங்கோ உலகமொழிகளிலோ எழுதப்பட்ட தீவிரமான இலக்கியம் பற்றிய வாசிப்போ அக்கறையோ இல்லை என்று தோன்றுகிறது. அவ்விலக்கிய மரபின் நீட்சியாக அவர்கள் தங்களை உருவகித்துக்கொள்வதில்லை. பரவலாக வாசிக்கப்படும் பல்ப் ஃபிக்ஷனின் நீட்சியாகத் தம்மை உருவகித்துக்கொண்டு எழுதுகிறார்கள்.
ஆகவே எந்த ஆழ்ந்த அவதானிப்பும் இல்லாத மேலோட்டமான பாலுணர்வு எழுத்துத்தன்மையே அதிகமாக காணக்கிடைக்கிறது. அது பரவலாகக்கொண்டு சேர்த்துவிடும்என நினைக்கிறார்கள். அவைகூட அனுபவமோ அவதானிப்போ அல்ல. வெறும் பகற்கனவுகள். என்னைப்போல ஐம்பதைக் கடந்த ஒருவனால் அந்தப் பகற்கனவுலகை ஒரு சிரிப்புடன் மட்டுமே பார்க்கமுடிகிறது. இந்த வகை எழுத்துக்களை பார்க்கையில் சின்னப்பையன்கள் ரகசியமாக அமர்ந்து தன்புணர்ச்சி செய்வதைப் பார்ப்பது போல உணர்கிறேன். சரிதான் சின்னப்பையன்கள், செய்துவிட்டுபோகட்டும் என்று சிரிப்புடன் கடந்து செல்லத்தான் தோன்றுகிறது
நான் ஒருவரை மனம் கவர்ந்தவர் என்று சொல்லவேண்டுமென்றால் அவர் நான் எழுதாத எழுதமுடியாது என எண்ணக்கூடிய ஓர் இடத்தை அடைந்தவராக இருக்கவேண்டும் இல்லையா? அப்படி அரிதாகவே காண்கிறேன். விதிவிலக்கு சமகாலக் கவிஞர்களில் சிலர். இசை முக்கியமானவர். அவர் எழுதும் எல்லாமே அவருடைய தனித்தன்மையுடன் ஆழத்துடன் இருக்கின்றன.
45. சாகித்ய அகாதமி போன்ற விருதுகளில் தொடர்ந்து நீங்கள் ஒதுக்கப்படுவதாகத் தெரிகிறது. சுந்தர ராமசாமி போன்றவர்களுக்கே கிடைக்காத விருது தான் எனினும் சமீப ஆண்டுகளாகத் தகுதி கொண்டவர்கள் (நாஞ்சில் நாடன், சு.வெங்கடேசன், ஜோ டி குரூஸ், பூமணி) பெறுவதும் நிகழ்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? வெள்ளை யானை கூட முக்கியமான ஒரு வரலாற்று நாவல் தான். சாகித்ய அகாதமி விருது வாங்கும் நிலையை எல்லாம் தாண்டி விட்டதாக என நினைக்கிறீர்களா?
சாகித்ய அக்காதமியை ஆரம்பம் முதல் விமர்சித்து வருபவன் நான். 1992ல் சாகித்ய அக்காதமியின் டெல்லி மேடை ஒன்றில் இந்தி திணிக்கப்பட்டதற்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றினென். பின்னர் கோவி மணிசேகரனுக்கு விருதளிக்கப்பட்டதற்கு எதிராக எதிர்வினை ஆற்றினேன். அதன்பின் அதன் எந்தப்பட்டியலிலும் நான் இல்லை. அதன் நிதிக்கொடைகளை நான் பெற்றுக்கொண்டதில்லை. அதன் நிகழ்ச்சிகளில் பங்குகொண்டதில்லை. அதன் பரிசுப்பரிந்துரைகளில் முதல் பட்டியலிலேயே நான் இருப்பதில்லை. அதை அறிந்துதான் நான் விமர்சித்தேன். விமர்சிக்கிறேன்
ஆம், இன்றைய நிலையில் சாகித்ய அக்காதமி எனக்கு மிகச்சிறிய விருதுதான். அதை என் வாசகர்கள் எவரும் அறிவார்கள். ‘உங்களுக்கு சாகித்ய அக்காதமி கிடைக்கணும் சார்’ என ஒருவர் என்னை வாழ்த்தினால் அவர் என் எழுத்துக்களின் வாசகர் அல்ல, என் எழுத்துக்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்றே புரிந்துகொள்வேன். அவர் ஏற்கனவே வாசித்து ஒன்றும் பிடிகிடைக்காதவர் என்றால் அவரை முழுமையாக ஒதுக்கிவிடுவேன். அது என்னை அவமதிப்பதுதான்.
46. ஒரு படைப்பாளி தனக்குப் பிடித்த வேற்று மொழிப் படைப்பிற்குத் தரும் ஆகச் சிறந்த மரியாதை அதைத் தன் மொழியில் மொழிபெயர்த்தல். சுந்தர ராமசாமியின் படைப்புகளின் ஒன்றாகவே அவர் மொழி பெயர்த்த தகழியின் நாவல்களைப் பார்க்கிறேன். நீங்களும் ஒருகாலத்தில் தொடர்ச்சியாய் மலையாளக் கவிதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டீர்கள். இப்போது மொழிபெயர்ப்பில் ஆர்வம் இல்லையா? அல்லது அவ்வளவாய் வேற்று மொழிப் படைப்புகளை வாசிப்பதில்லையா?
முக்கியமான விஷயம் நான் புனைவுகளை வாசிப்பது குறைந்துவிட்டது. ஒருநாளில் ஐந்துமணி நேரம் வாசிக்கிறேன். ஆனால் பெரும்பாலும் இந்தியத் தத்துவம், இந்தியவரலாறு, தொன்மங்கள் போன்றவை பற்றி. புனைவுகள் என்றால் என்னை உடைத்து ஆட்கொள்ளும் படைப்புகளாக இருக்கவேண்டும்.
ஆகவே மொழியாக்கம் செய்ய நேரமில்லை .ஆனால் மொழியாக்கம் செய்யவைப்பதுண்டு. தமிழில் பல நூல்கள் நான் தேர்ந்தெடுத்துக் கொடுத்து செம்மை செய்து வெளியானவை. கடைசியாக கல்பற்றா நாராயணனின் சுமித்ரா.
47. சில பெண் படைப்பாளிகள் தகுதி மீறி அங்கீகாரம் பெறுகிறார்கள் என்ற உங்கள் கருத்து சமீபத்தில் சர்ச்சைக்குள்ளாயிற்று. அம்பை உட்பட ஒரு பெண் படைப்பாளி கூட உங்கள் கருத்தில் இருக்கும் உண்மையை உணர்ந்து ஆதரித்ததாய்த் தெரியவில்லை. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? நேர்மையான சுயபரிசீலனை என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டதா? அல்லது தோற்கக்கூடாது என்ற வீம்பா?
அதில் கோபம் கொள்ள ஏதுமில்லை. இயல்பான எதிர்வினைதான் அது. எதிர் விமர்சனம் கோபத்தையே முதலில் கொண்டுவரும். குழுவாகச் சேர்ந்து கொள்வதும் கன்னாபின்னாவென்று எதிர்த்தாக்குதல் செய்வதும் எல்லாம் அந்த கோபத்தின் விளைவு. ஆனால் கோபம் தணிந்ததும் சிலராவது எண்ணிப் பார்ப்பார்கள். அத்துடன் அத்தகைய கடும் விமர்சனம் வாச்கர்களை சிந்திக்க வைக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்புகளைக் கூட்டுகிறது. அது ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும். உண்மையான விமர்சனங்கள் வீணாவதில்லை.
1990ல் தமிழ் நாவல்களைப்பற்றி நான் ஒரு கடும் விமர்சனத்தை முன்வைத்தேன். அவை நாவல்களாக இல்லை, தொடர்கதைகளோ குறுநாவல்களோதான் என. நாவலுக்கு ஒரு தரிசனம் அல்லது எதிர் தரிசனமும் அதனடிப்படையிலான ஒட்டுமொத்த வடிவமும் தேவை என. எதிர்விமர்சனங்களாக வந்தவை கசப்புகள் மட்டுமே. ஆனால் அதன்பின்னரே தமிழில் நாவலின் முழுமையை நோக்கிய முயற்சிகள் தொடங்கின. ஆழிசூழ் உலகோ, காவல்கோட்டமோ, மணல்கடிகையோ அந்த விவாதம் இல்லாவிட்டால் வந்திருக்காது.
தன்னம்பிக்கை இல்லாத படைப்பாளி விமர்சனத்தால் புண்படுகிறார். தன்னம்பிக்கை உள்ளவர் சீண்டப்படுகிறார். அப்படி எவரேனும் எழுந்து வருவார்கள்.
48. சுந்தர ராமசாமி போல் இறுதி வரை எழுத வேண்டும் என விரும்புகிறீர்களா? அல்லது ஜெயகாந்தன் போல் ரிட்டயர்ட் ஆவீர்களா? இரண்டில் எந்த பதில் என்றாலும் ஏன்? பெரிய அளவிலான எதிர்கால எழுத்துத் திட்டங்கள் என்ன?
எழுதி எழுதி ‘தீர்ந்துவிடவேண்டும்’ என நினைக்கிறேன். தீர்ந்துவிட்டால் எழுதமாட்டேன். பயணம் செய்வேன். அப்படி நிகழ்ந்தால் இங்கிருந்து சென்று முற்றிலும் புதிய ஒரு நிலத்தில் முற்றிலும் புதிய ஒரு வாழ்க்கையைத் தொடங்கவேண்டும் என நினைக்கிறேன் இந்த மொழி மற்றும் பண்பாட்டுச் சூழலில் இருந்து முழுமையாகவே வெளியே சென்றுவிடவேண்டும்.
49. A private life question. அருண்மொழி நங்கை அவர்களைக் காதலித்துத் திருமணம் செய்த கதையைச் சொல்லுங்கள். உங்கள் பிம்பம் அறிவார்ந்த, கறாரான ஆளுமை என்பது தான். இப்படிப்பட்டவர் காதல் முகத்தை அறியும் முகமாகவே இக்கேள்வி.
என் நண்பர்களுக்குத் தெரியும், அறிவார்ந்த கறாரான ஆளுமை அல்ல நான் என. அது என் எதிர்வினைகள் வழியாக உருவானது. அதாவது அது சூழலின் விளைவு. நான் எப்போதுமே மிகமிக விளையாட்டான, கொஞ்சம் அசட்டுத்தனமான ஆள். சிரிக்காத எந்த நட்பு உரையாடலையும் விரும்பாதவன். தொழிற்சங்க அரசியலில் ‘கொஞ்சமாச்சும் சீரியஸா இருங்க தோழர்’ என்ற கெஞ்சலைத்தான் கேட்டுக்கொண்டே இருந்தேன். அருண்மொழி மட்டும் அல்ல அஜிதனும் சைதன்யாவும் கூட ‘ஒரு ரைட்டரா லட்சணமா இருந்தா என்ன?’ என்று கண்டிக்கும் இடத்தில்தான் இருக்கிறேன்.
அருண்மொழி என் வாசகியாக அறிமுகமானாள். 1990ல் ரப்பர் வெளிவந்தபோது. அவளை மதுரை வேளாண் கல்லூரியில் சந்தித்தேன். துடிப்பான இலக்கிய வாசகி. பெரிய கண்கள். ஜானகிராமனின் ஒரு கதாநாயகியைத்தான் மணம் செய்துகொள்ளவேண்டும் என நினைத்திருந்த நாட்கள் அவை. அவள் பேசிக்கொண்டே நடந்தபோது சட்டென்று இயல்பாகத் துள்ளி தன் கையில் இருந்த புத்தகத்தால் தாழ்வாக நின்ற கொன்றைப்பூமரக் கிளை ஒன்றை தட்டினாள் பொன்னிறப்பூக்கள் உதிர்ந்து அவள் தலையில் விழுந்தன. அந்தக்கணம் அவள்மேல் காதல் கொண்டேன்.
இப்போது கால்நூற்றாண்டு ஆகப்போகிறது. அந்தக்காதல் அதே வேகத்துடன் இன்றும் நீடிக்கிறது. என் வாழ்க்கையில் ஒரே பெண் தான். ஒரே காதல்தான். என்னால் எப்போதுமே பெண்களை விரும்பி நெருங்க முடிந்ததில்லை. பெண்களை தவிர்த்தேன். என் அறிவார்ந்த ஆணவம்தான் காரணம். பெண்கள் எனக்கு சலிப்பூட்டினார்கள். அழகிய பெண்கள் சூழ்ந்த கேரள அலுவலகத்தில் அவர்களை புறக்கணித்தே செயல்பட்டேன். எந்தப்பெண்ணிடம் பேசினாலும் மூன்றே நிமிடத்தில் சலிப்பு. இன்று என் மகனும் அதைத்தான் சொல்கிறான். நான் சலிப்படையாத பெண், ரசனையும் அறிவார்ந்த கூர்மையும் கொண்ட பெண் அருண்மொழி. அவளை காதலித்து மணம் செய்துகொண்டது ஒரு நல்லூழ்தான்.
பெண்களை வெறும் உடலாக மட்டுமே எண்ணி ஆர்வம் கொள்ளும் சிலர் அன்றி பிற அறிவார்ந்த ஆண்களுக்கு நம் பெண்கள் மிகமிக சலிப்பூட்டுபவர்கள் என்பதே என் எண்ணம். நீங்கள் இலக்கியவாசகர் என்றால், யோசிப்பவர் என்றால், மொத்த வாழ்நாளிலும் சுவாரசியமான நாலைந்து இந்தியப் பெண்களைக்கூட சந்திக்கப்போவதில்லை.
ஒருபக்கம் மழலையும் பேதமையுமாக தங்களை ஆக்கிக் கொள்ளூம் பெண்கள். இதை ஆண்கள் விரும்புகிறார்கள். இன்னொரு பக்கம் அறிவுத்திறனோ நுண்ணுணர்வோ இல்லாமல் வெறுமே ஒருவகை பாவனையையும் தோரணையையும் மட்டும் கொண்ட பெண்ணியப் பெண்கள். பொய்யான மிடுக்குகள். மிகையான வேகங்கள். எரிந்து கொண்டே இருப்பதுபோன்ற நடிப்புகள். Repulsing என்றுதான் சொல்லவேண்டும்.
தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் பலரை நேரில் தெரியும். சுத்தமாக நகைச்சுவை உணர்வே இல்லாதவர்கள். சிரிக்காத ஒரு தமிழ் எழுத்தாளர் என்றால் எனக்குத்தெரிந்து சிலர் மட்டும்தான். சிரிக்காத ஒருவரிடம் பேசிக்கொண்டிருப்பது எனக்கு பெரிய வதை. பெண்கள் பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறார்கள். விதிவிலக்கு சிலரே. முக்கியமாக லீனா மணிமேகலை. அந்த ஒரு காரணத்துக்காகவே அவர் எனக்குப்பிடித்த பெண்கவிஞர்.
இதைச் சொன்னால் என்னை மேல்ஷாவனிஸ்ட் பிக் என்றால் சரிதான். [சைதன்யாவிடம் ஒரு பேராசிரியர் சமீபத்திய பெண் எழுத்து பற்றிய விவாதம் பற்றி கேட்டாராம். அவள் Yes Madame, he is a male chauvinist pig, but unfortunately we intelligent women love these male chauvinist pigs only என்று சொன்னதாகச் சொன்னாள். கேட்க ஜாலியாக இருந்தது.]
எனக்கு அருண்மொழி மேல் காதல் ஏன் என்றால் அவள் எனக்கான அறிவுத்தோழியாக இருப்பதனால்தான். அவளுடன் சேர்ந்து சிரிக்க முடியும் என்பதனால்தான். திருமணமான ஆரம்ப நாட்களில் ஒருமுறை என் நண்பரான ஓர் ஓவியர் காதலியுடன் வீட்டுக்கு வந்தார். ‘ஸ்நேகிதனே ஸ்நேகிதனே செவிகொடு ஸ்நேகிதனே’ பாட்டு ஓடிக்கொண்டிருந்தது.
அருண்மொழி அவர் காதலியிடம் சொன்னாள். ‘இந்தமாதிரி பாட்டெல்லாம் அவர் கேக்கக்கூடாது செவிய அறுத்து குடுத்திடுவார்”. அவர் இம்பிரஷனிஸ்ட் ஓவியர். வான்காவை கேள்விப்பட்டிராத அந்தப்பெண் விழித்துக்கோண்டிருந்தாள். நானும் அவரும் சிரித்தோம்.
நான் பெண்களில் இருந்து அருண்மொழியை வேறுபடுத்தி அறிவது இந்த அம்சத்தால்தான். இந்த அறிவார்ந்த தோழமைதான் காதலுக்கே அடித்தளமாக இருக்கிறது.
திருமணமாகி இத்தனை வருடங்களில் ஒருவகையான மேலாதிக்கம் அவளுக்கு என் மேல் வந்தது. மனைவி தாயாக ஆகும் இடம் என்று அதைச் சொல்லலாம். அதுவும் காதல்தான்.
50. அருண்மொழி நங்கை உங்கள் எழுத்து வாழ்க்கைக்கு எவ்வாறு உறுதுணையாய் இருக்கிறார்? இன்னமும் உங்கள் எழுத்துக்களின் முதல் வாசகியாக நீடிக்கிறாரா? உங்கள் பிரபல்யம் மற்றும் செல்வாக்கு தாண்டி உண்மையில் உங்கள் விஸ்தாரத்தைச் சரியாய் உள்வாங்கி இருக்கிறாரா? அவரும் எழுத்தாளர். வீட்டைக் கவனித்துக் கொள்ள அவர் தன் எழுத்தார்வத்தைக் கைவிட்டாரா?
அருண்மொழிதான் இன்றும் என் எழுத்துக்களின் முதல் வாசகி. என் எழுத்துக்களை மட்டும் அல்ல சமகால எழுத்துக்கள் அனைத்தையும் வாசிப்பாள். அசோகமித்திரன், சு.வேணுகோபால் மீது பெரும் ஈடுபாடு உண்டு.
என் அரசியல் கருத்துக்களை அவள் பெரிதாக எண்ணுவதில்லை. அரசியலே வெறும் சில்லறை விவகாரம் எனப் பெரும்பாலான பெண்களைப்போல அவளும் நினைக்கிறாள். என் பிராபல்யம், செல்வாக்கு என ஏதும் அவளுக்கு தெரியவில்லை. கண்டித்து ஒழுங்கா வளர்க்கவேண்டிய ஆள் என்ற எண்ணம்தான் இருக்கிறது என நினைக்கிறேன். அருண்மொழி என் தனிவாழ்க்கையில் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்பவள். என் நிதி விவகாரம் முதல் நண்பர்களுடனான உறவுகளைச் சீராக அமைப்பது வரை.
சமீபத்தில் சென்னை விஷ்ணுபுரம் விழாவுக்கு மனுஷ்யபுத்திரனை அழைத்திருந்தேன். பொதுவான மெயில் ஆக இருந்தாலும் அழைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என அவர் எழுதியிருந்தார். மன்னிப்புக் கோரி நான் ஒரு நட்பு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். ’எதுக்கும் நேர்ல போய் ஒருமுறை கூப்பிட்டிரு, அவர் உன் கவிஞர்’ என்றாள். உறவுகள் உடையாமல் கொண்டுசெல்வதில் தான் அவளுடைய மிகப்பெரிய பங்களிப்பு.
அருண்மொழி ஓரளவு எழுதிக்கொண்டிருந்தாள். ஏதோ ஓர் இடத்தில் எழுதவேண்டியதில்லை என்று தோன்றியிருக்கலாம். தொடர்ந்து எழுதும்படி அவளை தூண்டியிருக்கிறேன். வற்புறுத்தியும் இருக்கிறேன். ஒருமுறை கேட்டபோது நான் ரசிக்கும் படைப்புகளின் தரத்துக்கு என்னால் எழுத முடியாது என்றாள் “எழுதினா உன் அளவுக்கு தரமா நான் எழுதணும். இல்லேன்னா என் ஈகோ ஒத்துக்காது” என்றாள். . சரிதான்.
51. எழுத்தாளன் என்பதைத் தாண்டி தனி வாழ்வில் உங்களை எப்படி மதிப்பிடுவீர்கள்? சமீபத்தில் திருமதி சுஜாதா அவர்கள் தன் கணவர் குடும்பத்தைச் சரியாய் கவனிக்கவில்லை என்ற ஆதங்கத்தை ஓர் இதழில் பகிர்ந்திருந்தார். ஒரு கணவனாக, தந்தையாக உங்கள் செயல்பாடுகள் எப்படி?
அதை நான் செத்துப்போன பிறகு என் மனைவியும் பிள்ளைகளும் சொல்லவேண்டும். கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது. இவ்வளவு பெரிய அதிகாரத்தை நாம் எப்படி எளிதாகக் கொடுத்துவிடுகிறோம்.
ஆனால் என் வரையில் அவர்களுடன் மிக இனிய நட்பார்ந்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறேன். சுஜாதா சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர். அவர் ஒரு விலகலை குடும்ப உறுப்பினருடன் வைத்திருந்தது அக்கால வழக்கம். எனக்கும் அருண்மொழிக்கும் பிள்ளைகளுக்கும் அந்த விலக்கம் இல்லை. நான் அவர்களின் வாழ்க்கையில் தலையிடுவதில்லை. எதையும் கட்டாயப்படுத்துவது இல்லை. படிப்பு உட்பட. எப்போதும் அவர்களுடன் மிக நல்ல உரையாடலில் இருக்கிறேன். எங்கள் வீட்டில் இதுநாள் வரை சண்டைகள் மோதல்கள் என ஏதும் நிகழ்ந்ததில்லை.
என் மனதுக்கு மிகநெருக்கமான அறிவார்ந்த துணைவர்களாகவே மூவரும் இருக்கிறார்கள். ஒவ்வொருநாளும் வெண்முரசு பற்றி மூவரிடமும் விரிவாக உரையாடுகிறேன். பதின்பருவத்துப் பிள்ளைகள் நையாண்டி நிறைந்தவர்கள். அவ்வுலகில் சென்று அதில் விளையாடுவது ஓர் அற்புதம்.
கொஞ்சநாள் முன்னால் சுசீந்திரத்தில் மதம் சார்ந்த எதிர்ப்பு என் எழுத்துக்கு வந்தது. என்னை மல்லாக்கப் போட்டு காளி என் நெஞ்சில் மிதித்து சூலாயுதத்தைக் குத்துவது போல ஒரு பெரிய பேனர் நகரில் வைத்திருந்தனர். சைதன்யா சொன்னாள், “சே, அந்த காளியப் பாத்தா அம்மா மாதிரியே இருக்கு”.
குடும்பத்தில் இலகுவாக இருக்கக் கற்றுக்கொண்டாலே போதும் வீடும் உறவுகளும் இனிதாக ஆகிவிடும் என்றே நினைக்கிறேன்.
அதோடு இன்னொன்றும் சொல்லவேண்டும். சுஜாதா குடும்பத்தைக் கவனிக்கவில்லை என்பதெல்லாம் பெரிய பொய். அவரை அறிந்த அனைவருக்கும் அது தெரியும். அவர் ஒரு குடும்பத்தலைவனாக தன் கடமையை முழுமையாகச் செய்தவர். மனைவி பிள்ளைகளுக்கான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர். நானே அவரது குடும்பப் பொறுப்பை நக்கலடித்திருக்கிறேன்.
இந்தியக் குடும்பச்சூழலின் வன்முறை பற்றி நாம் யோசிப்பதே இல்லை. இங்கே மனைவி கணவனை முழுமையாக தனக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று எண்ணுகிறாள். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தங்களுக்காக வளர்க்கிறார்கள். அது தங்கள் உரிமை என்றே உண்மையில் நம்புகிறார்கள். அவர்களின் அறிவார்ந்த சுதந்திரம் ஆன்மீகமான மலர்வு எதையும் அனுமதிப்பதில்லை. அவர்கள் அதை நோக்கிச் சென்றால் தங்கள் உரிமைகள் மீறப்படுவதாகவே எண்ணுகிறார்கள்.
நம் சூழலில் கணவன் ஒரு புத்தகம் படிப்பதை ஒப்புக்கொள்ளாத பெண்கள் உண்டு. என்னிடம் பல வாசகர்கள் சொல்வதுண்டு. தான் புத்தகம் படித்தால் தன் மனைவி உடனே சாப்பிட மறுத்துவிடுகிறாள் என்று என்னிடம் புலம்பியவர்கள் உண்டு. ஆகவே இங்கே ஒருவர் அன்றாட லௌகீகங்களில் இருந்து கொஞ்சம் விலகி கலையிலக்கியங்களில் ஈடுபட்டால், சேவைகளைச் செய்தால், ஏன் தனக்கென ஒரு பொழுதுப்போக்கை வைத்திருந்தால்கூட குடும்பத்தினரால் குற்றம்சாட்டப்படுவார். வெறுக்கப்படுவார். அநீதி இழைக்கப்பட்டதாக குடும்பமே புலம்பும். நான் இதைக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.
அத்துடன் இன்னொன்று. நமது பெண்கள் பெரும்பாலும் வென்றுசெல்லும் முனைப்பு இல்லாதவர்கள். அப்படி முனைப்பு இருந்தால்கூட வாழ்க்கையில் சாதிப்பதென்பது எல்லாருக்கும் உரியதல்ல. ஆண்களிலேயே பெரும்பாலானவர்கள் சாதிப்பதில்லை. அவர்கள் சமூகச்சூழலை குறை சொல்வார்கள். பெண்கள் கணவனைக் குறை சொல்வார்கள்.
சுஜாதா கொஞ்சம் மரபான மனிதர்தான். அதை நானே எழுதியிருக்கிறேன். அவரது ரசிகர்கள் என்னை அதற்காக திட்டினார்கள். ஆனால் அவரது அகவுலகை அவரது மனைவியால் புரிந்துகொள்ளமுடியாது. ஆகவே அதை அவர் அந்தரங்கமாக வைத்திருக்கலாம். அதற்காகத்தான் அந்த அம்மையார் அவரைக் குறைசொல்கிறார்.
52. நேர்காணல்கள் என்றால் என் மனதில் மூன்று முதன்மையாய் நினைவுக்கு வரும்: 1) சுபமங்களா நேர்காணல்கள் 2) காலச்சுவடு நேர்காணல்கள் 3) நீங்களும் சூத்ரதாரியும் இணைந்து எடுத்த இலக்கிய உரையாடல்கள். ‘தமிழ்’ மின்னிதழில் நேர்காணல்கள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என நான் தூண்டப்படக் காரணமே அவை தாம். நீங்கள் எடுத்ததில் உங்களுக்கு மிகத் திருப்திகரமாய் அமைந்த நேர்காணல் எது? போலவே நீங்கள் கொடுத்ததில் சிறந்த நேர்காணல்களைக் குறிப்பிட முடியுமா?
பொதுவாக இங்கே நேர்காணல்கள் ஒருவகை வம்புப் பேச்சுக்கள்தான். சமீபத்தில் அசோகமித்திரனை பேட்டி எடுத்த ஒரு கும்பல் ‘கணையாழியிலே நீங்கள் பொட்டலம் மடிச்சதுக்குமேலே என்ன செஞ்சிருக்கீங்க?’ என்று வரலாற்றுக்கேள்வியை கேட்டது. கணையாழி வழியாக ஓர் எழுத்துமுறையையே உருவாக்கிய முன்னோடி மேதையிடம் இப்படி ஒரு கேள்வி!
நான் exclusive வகையிலான பேட்டிகள் தமிழில் வரவேண்டும் என விரும்பினேன். விரிவான உரையாடல். அந்த ஆசிரியரை அணுக்கமாக அறிந்து எடுக்கப்படும் பேட்டிகள். பழைய encounter, esquire, partisan review இதழ்களில் வந்தவை போன்ற பேட்டிகள் கோமலிடம் அதைப்பற்றி சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்படிப்பட்ட பேட்டிகள் சுபமங்களாவின் அடையாளங்களாக ஆயின. அவற்றில் எனக்கும் பங்கிருந்தது.
பின்னர் காலச்சுவடு தொடங்கியபோது அப்படிப்பட்ட பேட்டிகளை மேலும் நீளமாக எடுக்கலாமெனச் சொல்லி அதற்காக முயன்றோம். கே.சச்சிதானந்தன், டி.ஆர்.நாகராஜ் நித்ய சைதன்ய யதி மூவருடைய பேட்டிகளும் அன்று தமிழில் வந்த முக்கியமான பேட்டிகள் மூன்றுமே முக்கியமானனவை.
பின்னர் சொல்புதிதுக்கு பேட்டிகள் எடுத்தோம். ஆனால் எல்லா பேட்டிகளும் நல்ல பேட்டிகள் அல்ல. பேட்டிகளில் பேட்டி கொடுப்பவர்கள் கொஞ்சம் இலகுவாக இருக்கவேண்டும் பேட்டிக்கு அவர்கள் ஒப்புக்கொடுக்கவேண்டும்
சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் போன்றவர்கள் பேட்டிகளில் பயங்கரமாக எதிர்விசை கொடுப்பவர்கள். தப்பாக எதையும் சொல்லிவிடக்கூடாது என்பதனாலேயே ஒன்றையும் சொல்லாமல் தவிர்ப்பார்கள். இலக்கியவாதி ராஜந்தந்திரப் பேட்டி கொடுப்பதைப்போல அபத்தம் வேறில்லை.
சுஜாதாவை ஒரு பேட்டி எடுத்தேன். கவனமான ஒற்றைவரி பதில்கள். வீட்டுக்கு வந்தபின் அவருக்கு ‘இது ஒன்றும் சென்சஸ் கணக்கு ஃபாரம் இல்லை, இலக்கியப் பேட்டி. கிழித்துவீசி விட்டேன்’ என ஒரு கடிதம் போட்டேன். ‘நல்ல விஷயம். நானே சொல்லவேண்டுமென்று நினைத்தேன்’ என்று எழுதினார்.
அவரது ‘கறுப்பு சிவப்பு வெளுப்பு’ நாவலுக்கு நாடார்ப் பேரவை அளித்த எதிர்ப்பு அவரை மிகவும் அச்சுறுத்தியிருந்தது. இளமையில் பிராமணனாக அவர் தன்னை உணர்ந்ததில்லை. இவர்கள் அதை அவர் உணர்ந்து குன்ற வைத்தார்கள். இருபதாண்டுகாலம் கழித்துக்கூட அதைப்பற்றி பேசினால் கைகள் நடுங்கும் அவருக்கு.
53. எழுத்தாளன் என்ற எல்லையைத் தாண்டி தமிழின் முதன்மைச் சிந்தனையாளர்களுள் ஒருவர் நீங்கள். உங்களை ஏற்கலாம் மறுக்கலாம். ஆனால் பொருட்படுத்தாமல் கடந்து போக முடியாது. சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்ற ஓரிருவர் தவிர மற்ற எந்த தமிழ் எழுத்தாளரும் இப்படி சிந்தனைத் தளத்தில் பிரம்மாண்டம் கொண்டதில்லை. குறிப்பாய் சமகாலத்தில் மிகக்குறைவு. இருப்பவர்களும் ஓர் அரசியல் சார்புடன் தம்மைக் குறுக்கிக் கொள்பவர்களாகவே இருக்கிறார்கள். படைப்பாளி ஜெயமோகன் ஏன் சிந்தனையாளராகவும் இருக்கிறார்?
புனைவுக்கு வெளியே வந்து சிந்தனைகளை முன்வைக்கும் எழுத்தாளர்கள் உண்டு. வைக்காத எழுத்தாளர்களும் உண்டு. இது பெரும்பாலும் சூழல் மற்றும் அவ்வெழுத்தாளனின் ஆளுமை சார்ந்தது.
எனக்கு இலக்கியமளவுக்கே தத்துவம் மீது ஈடுபாடுண்டு. சிலகாலம் தத்துவத்தையே முதன்மையாகக் கருதியும் இருக்கிறேன். இது என் ஆளுமையின் ஒரு பகுதி. புனைவிலக்கியம் தத்துவத்தை தவிர்த்து இயங்கினால் அது ஆழமாக இருக்காது என நினைக்கிறேன். தத்துவத்தைத் தூக்கிக்கொண்டு அது பறக்கவேண்டும். என் ஆதர்ச எழுத்தாளர்கள் எல்லாருமே தத்துவவாதிகளாகவும் இருந்தவர்கள்தான்.
நான் ஆசிரியர்களாகக் கருதும் சுந்தர ராமசாமியும் ஆற்றூர் ரவிவர்மாவும் பி.கேபாலகிருஷ்ணனும் ஒருவரிடமிருந்து உத்வேகம் பெற்றவர்கள். கேரளச் சுதந்திரச் சிந்தனையாளரான எம்.கோவிந்தன். ஜே.ஜே – சிலகுறிப்புகளில் அவரை எம்.கே.கோவிந்தன் என்ற பேரில் சுந்தர ராமசாமி சித்தரிக்கிறார். ஜே.ஜே யின் மூலமான சி.ஜெ.தாமஸின் நண்பர்.
கோவிந்தன் சிந்தனையாளர். ‘படைப்பாளியின் சிந்தனை’ என்ற விஷயத்தைப்பற்றி பேசியவர் என அவரைச் சொல்லலாம். படைப்பாளியின் சிந்தனையின் அடிப்படைகளாக அவர் சொன்னவை ஐந்து:
1. அச்சிந்தனைகள் அந்தப்படைப்பாளியின் அந்தரங்கமான அவதானிப்பு மூலமும் படைப்பியக்கம் மூலமும் கண்டடைந்தவையாக இருக்கவேண்டும் 2. அவை தர்க்கபூர்வமாக இருக்கவேண்டுமென்றில்லை. அவற்றை அவன் முன்வைக்கும் மொழியின் உண்மையான எழுச்சியே அவற்றை நிறுவப் போதுமானது 3. அவை வெறும் சிந்தனையாக இல்லாமல் அழகியல்நோக்குடனும் கலந்திருக்கும். 4. அவை அவ்வெழுத்தாளனின் புனைவுலகுடன் பிணைந்து ஒரு முழுமையான கருத்துலகை உருவாக்கவேண்டும் 5. பிற அனைத்து சிந்தனையாளர்களும் சொல்லாத ஒன்றைச் சொல்ல அவனால் முடியும். அவன் பங்களிப்பு அதுவே.
பி.கே.பாலகிருஷ்ணன், சுந்தர ராமசாமி ஆகியோர் கோவிந்தன் சொன்ன முறைமையில் சிந்தனைகளை முன்வைத்தவர்கள். அவை பிற அரசியல் சிந்தனையாளர்கள், இலக்கியச் சிந்தனையாளர்கள், தத்துவச் சிந்தனையாளார்கள், சமூகச் சிந்தனையாளர்கள் சொன்னவற்றில் விடுபட்டுப்போகும் ஒன்றை எப்போதுமே சுட்டிக்காட்டின. நான் கோவிந்தனுடன் நேரடியாகவே தொடர்பு கொண்டிருந்தேன். சுந்தர ராமசாமி, பி.கே.பாலகிருஷ்ணன் இருவரையும் அணுகியறிந்திருந்தேன்.
பிற சிந்தனையாளர்களின் கருவி புறவயமான தர்க்கம். புறவயமான தகவல்களைத் திரட்டி தர்க்கபூர்வமாக முன்வைப்பது அவர்களின் வழி. ஆகவே அவர்கள் எழுத்தாளர்களை முறைமை இல்லாமல் பேசுபவர்கள் என எப்போதும் சொல்வார்கள். ஆனால் எழுத்தாளன் அவர்கள் அறியாத ஓர் ஆய்வுக்கருவியைக் கொண்டவன், ஆழ்மனதை. அவன் சொல்வதை அவர் சொல்லமுடியாது என்றார் கோவிந்தன்.
அதேபோல அரசியல்வாதிகள். அவர்களுக்கு ஒரு தரப்பு உண்டு. ஒரு நிலைபாடு உண்டு. அதை மூர்க்கமாக வாதிட்டு முன்வைப்பார்கள். பிற அனைவரையும் எதிரிகளாகக் காண்பார்கள். எழுத்தாளன் அவர்களின் தரப்புகள் நடுவே மங்கலான பகுதிகளில் உள்ள உண்மைகளைக் கண்டு சொல்லமுடியும். அதுவே அவன் பங்களிப்பு.
படைப்பாளிக்கு வெளிஅரசியல் சார்பு தேவையில்லை, படைப்பாளிக்கு என்றே ஓர் அரசியல் இருக்க முடியும் என்று கோவிந்தன் சொன்னார். அந்த அரசியல் அவனுடைய மனசாட்சியின் அரசியல். ஆழ்மனதின் அரசியல். அதற்கும் சூழலில் ஒரு பெரிய இடமுண்டு என்றார்.
எழுத்தாளனின் சிந்தனை என்பது இவ்வகையில் தனித்தன்மை கொண்டது. அது முறைமைகளை விட கூறுமுறையை பெரிதாக நினைப்பது, தர்க்கத்தை விட உள்ளுணர்வை நம்புவது. அது அந்த எழுத்தாளனின் புனைவுலகுடன் இணைந்து முழுமை பெறுவது. உலகமெங்கும் எழுத்தாளர்களின் சிந்தனைகளின் இயல்பு இதுவே.
தமிழில் எழுத்தாளர்களின் சிந்தனைகள் பெரிய அளவில் முன்வைக்க இடமிருந்ததில்லை. அரசியல் அமைப்புகளை ஒட்டிப்பேசும் எழுத்தாளர்களே இங்கே அதிகம் பேசியிருக்கிறார்கள். நான் எந்தத் தரப்பையும் சாராது நின்று பேசமுயல்கிறேன். மரபிலிருந்து நவீனத்தை அடையும் ஓரு அசலான பாதையை அடைய, நமக்கே உரிய அழகியலை உருவாக்க, நம் அறவியலை வகுத்துக்கொள்ல முயல்கிறேன். அதுவே என் சிந்தனையின் இலக்கு.
54. எல்லா நேர்காணல்களிலும் இடம்பெறும் ஒரு க்ளீஷே கேள்வி. புதிதாய் எழுதுபவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன? (உங்கள் எழுத்துக்கள் தான் இக்கேள்விக்கான சிறந்த பதிலாக அமைய முடியும். ஆனாலும் explicit-ஆக உங்கள் கருத்தைப் பதிவு செய்யும் முகமாகவே இதைக் கேட்கிறேன்.)
பொதுவாகச்சொல்ல விரும்பவில்லை. இப்போதுள்ள போக்குகளை வாசித்ததனால் சொல்லும் சிலவிதிகள்:
1. வாசியுங்கள். வாசித்தவற்றைப் பற்றிய விமர்சனங்களை தெளிவாக விரிவாக பதிவுசெய்யுங்கள். பிறர் எழுதிய படைப்புகளைப் பற்றி பேசும்போது வேறெவரும் சுட்டாத நுட்பங்களை நீங்கள் சுட்டமுடிந்தால் மட்டுமே நீங்கள் உண்மையான எழுத்தாளர்.
2. இலக்கியம் என்பது வாழ்க்கை பற்றிய அவதானிப்புகளாலும் மொழியைக் கையாளும் விதத்தாலும் மட்டுமே இலக்கியமாகிறது. வாழ்க்கையைச் சொல்லுங்கள். அதன் நுட்பங்களை. அதன் மீதான உங்கள் சொந்த அவதானிப்புகளை. உங்கள் மனதை ஆதாரமாக்கி வாழ்க்கையை விவரியுங்கள். இலக்கியம் எப்படி எப்படி வளர்ந்தாலும் கடைசியில் மானுட மனதைச் சிறப்பாகச் சொல்வதே இலக்கியம் என்ற விதியே எஞ்சி நிற்கிறது.
3 மொழியை அளைந்துகொண்டே இருங்கள். மொழியில் உங்களுக்கென ஓர் அடையாளம் வரும் வரை நீங்கள் எழுத்தாளரே அல்ல. எளிய மொழி வாசகர்களுக்கு பிடிக்கும். ஏற்கனவே இருக்கும் மொழிநடையில் எழுதினால் அதிகம்பேர் வாசிப்பார்கள். ஆனால் நீங்கள் எழுத்தாளர் ஆகமாட்டீர்கள். மொழியே ஆழ்மனம். அதில் சிக்குவதே உங்களுடைய எழுத்து. அதைத் தியானியுங்கள்.
4 சிறிய அரசியலைப் புனைவுலகில் நுழைய விடாதீர்கள். அரசியல் எல்லாம் இலக்கியத்தின் முன் மிகமிகத் தற்காலிகமானவை. மிலன் குந்தேராவின் The Book of Laughter and Forgetting-ஐ சமீபத்தில் மகளுக்கு பரிந்துரைத்தேன். டால்ஸ்டாய் அவளுக்குப் புதிய சமகால எழுத்தாளராகத் தெரியும்போது குந்தேரா பழையவராக தெரிந்தார். ஏனென்றால் அவர் பேசிய அரசியலே காலாவதியாகிவிட்டது. அரசியல் புனைவுகளில் இருக்கும் என்றால் அது மானுட அரசியலாக, தத்துவத்தையும் ஆன்மீகத்தையும் தொட்டு விரியும் அரசியலாக இருக்கவேண்டும்.
5. வடிவச்சோதனைகளில் பிரக்ஞைபூர்வமாக ஈடுப்டாதீர்கள். எந்தப் புதிய வடிவமும் பத்துவருடம் புதியதாக இருக்காது. சொல்லவரும் விஷயத்துக்கான வடிவமாகவே அது இருக்கட்டும்.
பத்திரிக்கை அனுபவமே இல்லாத ஒரு புதியவன் தொடங்கும் ஓர் இதழ், அதிலும் இணையத்தில் இருப்பவர்கள் மட்டும் வாசிக்கக்கூடிய மித வீச்சுடைய மின்னிதழ் என்கிற பாரபட்சம் பாராது எந்தவொரு கேள்வியையும் விலக்காது, நேரம், உழைப்பு, சிந்தனையைச் செலவிட்டு இவ்வளவு விரிவான, ஆழமான ஒரு நேர்காணலை அளித்தமைக்கு ஜெயமோகனுக்கு மிக நன்றி. ஜெயமோகன் என்ற பேராளுமையின் பன்முகத்தன்மையை மனச்சாய்வுகளின்றி கணிசமாய் இந்நேர்காணல் பதிவு செய்துள்ளது என நம்புகிறேன்.
ஜெயமோகன் நல்ல ஆரோக்கியத்துடன், மனம்நிறை மகிழ்ச்சியுடன், குன்றாத சுயதிருப்தியுடன் நீண்ட ஆயுள் வாழ்ந்து, விஷ்ணுபுரம், பின்தொடரும் நிழலின் குரல், கொற்றவை, வெண்முரசு போல் அவரது மனதிற்குகந்த இன்னும் பல இலக்கிய உச்சங்களைத் தொட வேண்டும் என ‘தமிழ்’ இதழ் வாழ்த்துகிறது.
***