"

26

மணி 5:00

லேசாக இருட்டத் தொடங்கியிருந்தது, செல்போன் டவர் விட்டு விட்டுக் கிடைத்தது. சார்ஜும் இல்லை. அடச்சை, இந்த நேரத்தில் தான் பெட்ரோல் தீர்ந்து போகனுமா என‌ ஆக்டிவாவின் தலை மேல் ஒரு குட்டு குட்டி விட்டு, ”இன்னைக்கு மழ கொல்லப் போகுது பாரேன்என்ற‌ குரல் கேட்டு திரும்பினாள்.

காட்டு வேலைக்குச் சென்று திரும்பும் பெண்கள் நடையும் ஓட்டமுமாய் வானத்தைப் பார்த்தபடி பேசிச் சென்றுகொண்டிருந்தனர். இவளும் அண்ணாந்து பார்த்து, உண்மைலேயே வருமோ என்று நினைக்கையில் ஒரு சொட்டு மழை அவள் அணிந்திருந்த குளிர்க்கண்ணாடியில் பட்டுச் சிதறியது.

எங்கோ மின்னல் வெட்டி ஒளி, இடி இடிக்கும் சப்தம், ஆள் நடமாட்டம் குறைந்து போனது, இவை எல்லாமே இனம் புரியாத ஒருவித பயத்தை அவளின் உள்ளங்காலில் ஏற்றியது.

செல்போன் ‘அயிகிரி நந்தினி நந்தித மேதினி’ எனக் கூப்பிட்டதும் தான் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்து யாரென்று பார்த்தாள், திரையில் ‘எருமை’ என ஆங்கிலத்தில் ஒளிர்ந்தது.

ஹலோ”

சனியனே எவ்வளோ நேரன்டி வெயிட் பண்றேன், சீக்கிரம் வந்து தொலை, மழை வேற வந்திட்டு இருக்கு.”

ஏ லூசு வண்டில பெட்ரோல் இல்லடி. உங்க ஊருக்கு வர்ற வழியில தான் எங்கேயோ நிக்கறேன். டவர் வேற இல்ல, எல்லாம் என் நேரம், இந்தப்பயல வண்டிய எடுக்கக்கூடாதுனு சொல்லிருந்தேன். எடுத்துட்டு போயி பெட்ரோல பூராம் தீர்த்துருக்கான்.”

எங்க நிக்கியோ அங்கேயே நில்லு, அப்பாவ எதுத்தாப்ல வர சொல்லுதேன்.”

அவள் சொல்லி முடிக்கவும் செல்ஃபோன் லோ பேட்டரியில் ஷ‌ட்டவுன் ஆகவும் சரியாக இருந்தது.

பத்தொன்பது வயதிற்கே உண்டான சகல வித வளர்ச்சிகளை மறைக்க முயன்று தோற்கும் ஆடைகளோடு அவ்வப்போது காற்று சில்மிஷம் செய்துகொண்டிருந்தது, சுடிதாரைக் கூட்டி எடுத்து கால்களின் இடையில் திணித்துக்கொண்டு, துப்பட்டாவை பரதநாட்டிய ஸ்டைலில் கட்டி ஆக்டிவாவின் மேல் சாய்ந்து நின்றாள்.

யாராவது பைக்கில் வந்தால் அவர்களிடம் பெட்ரோல் கடன் கேட்கலாம். யோசிக்கும் போதே சொல்லி வைத்தாற்போல் புல்லட் சப்தம். டுப்டுப்டுப் என ஒலி தேய்ந்து இவள் அருகில் வந்து நின்றது.

சரியென மனதில் பிம்பம் தராத‌ இரண்டு இளைஞர்கள். பார்வையால் அவளை அளவிட்டபடியே

யார் வீட்டுக்கு போணும்? இங்க எதுக்கு நிக்கறிக?”

பக்கென்று மனம் கனத்தாலும் “பெட்ரோல் இல்ல! ஃபிரண்டோட அப்பா வந்துட்டு இருக்காங்க.”

தைரியம் கூட்டிச் சொன்னாள், துப்பட்டாவை சரி செய்தபடி.

சரி வாரோம்”

கொஞ்சமே கொஞ்சம் தெரிந்த கிளிவேஜைப் பார்த்தபடி பூடகமாகச் சிரித்து புல்லட்டை கிளப்பினான்.

இன்கே நின்று நேரத்தைக் கொல்வதற்கு பதிலாக வண்டியைத் தள்ளிக் கொண்டு போனால் என்ன? யோசனை சரியெனப்படவே வண்டியை தள்ளலானாள்.

தீடிரென்று உள்ளுணர்வு சொல்லிற்று. யாரோ பின்புறத்தை ரசிப்பதாக. இத்தனை குளிர்ந்த காற்றிலும் மார்புக்கூடெங்கும் வெப்பம் பரவ, வறண்ட தொண்டையை ஈராமாக்கியபடியே திரும்பிப் பார்த்தாள்.

நூறடி தொலைவில் ஐம்பது வயதை ஒட்டிய ஒருவன், ஆடைகள் நைந்து போன நிலையில் இவளையே வெறிக்கப் பார்த்து பின் தொடர்ந்துகொண்டிருந்தான். திக்கென அதிர்ந்து, குப்பென வியர்த்தாள்.

*

மணி 5:30

தாயீ, பாதைல உன் பிரண்ட காணோமே! ரெம்ப தூரம் போயி பார்த்துட்டேன். எந்த வழியா வாரேன்னு சொன்னாளா? போன் போட்டு சரியா கேளு.” பதட்டத்துடனேதான் பேசினார்.

அப்பா! ஃபோன் ஸ்விட்ச் ஆப் ஆகிருக்குப்பா” சொன்னதுதான் தாமதம், உறங்கிகொண்டிருந்த மகனை எழுப்பி விட்டு,

ஏலே ஏய் எந்தி சைக்கிள எடுத்துட்டு தெக்கால போயி தாயோட கூடப்படிச்ச பொண்ணு நிக்குதான்னு பார்த்துட்டு வா!” அவசரமாக ஆணை பிறப்பித்தார்.

எப்பா மழை சன்னமா பேயுது எப்படி போறதாம்? நான் போமாட்டேன்!”

பொட்டப்புள்ள ஒத்தைல நிக்குது. தாயி வேற அழுதுட்டு இருக்கா? மூணு மாசம் முன்ன போஸ்ட் மேன் மகளுக்கு நடந்தது யாவமிருக்கா இல்லையா?”

அப்படிலாம் அந்த புள்ளைக்கு ஒண்ணும் ஆகாதுப்பா”

ஆகக்கூடாதுன்னா சீக்கிரம் கிளம்பு உன் கூட்டாளிக ரெண்டு பேர கூட சேர்த்துக்க.”

தகப்பனும் மகனும் ஆளுக்கொரு திசையில் தேடச் சென்றனர்.

*

மணி 5:45

மாதவிடாயின் முதல் நாள் அடிவயிற்றின் மூலாதார அவஸ்தை, பார்ப்பவர்கள் மீதெல்லாம் எரிச்சலாய் வெளிப்படும். அதே நிலையைத் தற்போது உணர்ந்துகொண்டிருந்தாள், நடையின் வேகத்தைக் கூட்டியதில் மூச்சு வாங்கியது, இறுக்கமாக ஹேன்டில் பாரை பிடித்திருந்தாலும் கை நடுங்குவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கால்களின் கீழ் பூமி நழுவுவதாய்ப் பிரமை. பள்ளியில் டென்ஷ‌ன் ஆகி ஒருமுறை மயங்கி விழுந்ததை நினைத்துக்கொண்டாள். அப்படி எதுவும் ஆகிடக்கூடாதென வேண்டிக்கொண்டாள்.

சொட்டுச் சொட்டாய் ச் சொட்டிய மழை இப்போது தன் தீவிரத்தைத் துவக்கியது, ஒதுங்க அரச மரம் தேடுவதற்குள் தெப்பமாய் நனைந்து விட்டாள்.

மரத்தடியில் நிற்கவா? வேண்டாமா? என்று குழம்பியபடியே திரும்பி பார்த்தாள். ‘நல்ல வேளை கிழவன் போய்ட்டான். அவனைப் பார்த்து பயந்தோமே என தன்னைத்தானே திட்டிக்கொண்டு வண்டியை ஸ்டாண்ட் போட்டு, உடலோடு ஒட்டியிருந்த ஆடைகளைப் பிரித்து விட்டாள். கருப்பு பிராவில், மழை வெளிச்சம் போட்டது. துப்பட்டாவை வண்டியின் மேல் காயப்போட்டு, சுடிதாரின் நுனிப்பகுதியை குனிந்து பிழிந்து நிமிர்ந்தாள். ரோட்டின் எதிர்பக்கம் பற்களெல்லாம் கரையாய் சிரித்துக்கொண்டிருந்தான் கிழவன்.

தொலைவாய் புல்லட் சப்தம்.

*

மணி 6.30

ஏ பிள்ள அப்பாவ எங்க?”

இன்னும் வரலண்ணே. என்னாச்சுன்னேண்ணே?” விசும்பியபடியே கேட்டாள்.

அதுலாம் ஒண்ணுமில்ல. இந்தா வாரேன்” என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு வடக்கால் கிளம்பினான்.

எப்பா தெக்க நாலு மைல்ல ஒரு வெள்ள வண்டி கிடக்குப்பா. துப்பட்டாவும் செருப்பும் அங்கனதான் கிடக்குது.”

எனக்கென்னமோ பயமா இருக்கு. நம்ம வீட்டுக்கு வந்ததுன்னு விசாரணைல தெரிஞ்சா ஏதும் பிரச்சினை வருமாப்பா?” என்று கேட்டவனின் கன்னத்தில் பளாரென அறைந்தார்.

நம்ம வீட்லயும் பொண்ணு இருக்கு. அதுவும் உனக்கு தங்கச்சிதான்”

“…”

வண்டி எந்த பக்கமா கிடந்துச்சு?”

என்னதுப்பா?”

முன்னாடி பைதா எங்கிட்டு பார்க்க கிடந்த்துச்சுல?”

வடக்க பார்த்து”

இந்தப் பக்கம் ஆரும் வரல அப்ப தெக்கூர் பக்கம்தான் போயிருக்கனும். நான் முன்ன போறேன் நீ நம்மாட்கள கூட்டியா!”

தாயோளி, இன்னைக்கு எவன்னு கண்டுபிடிச்சு அவன் சங்க அறுக்கறேன்.”

*

மணி 6.00

மூளையின் அத்துணை பாகங்களும் ஒரு கணம் ஸ்தம்பித்து மீண்டது. ஓடுவதைத் தவிர வேறு வழி இல்லை, வந்த வழியிலேயே உயிரை கையில் பிடித்தபடி ஓடினாள்.

கிழவனும் பின்னாடியே ஓடி வந்தான். அவளின் ஓட்டத்துக்கு ஈடுகொடுத்து இந்த வயதில் இப்படி ஓடவைத்தது வெறியாகத்தான் இருக்கவேண்டும். எந்த மனிதனையும், எந்த வயதிலும், எந்த இடத்திலும், எந்தக் கீழ்மையும் செய்ய வைத்திடும் வெறி.

அப்போது தான் கவனித்தாள், புல்லட்டின் சப்தம் மெல்ல மெல்ல மறைந்து விட்டிருப்பதை.

தெக்கூரின் எல்லையை தொடும் போது மழை ஓரளவு நின்றிருந்தது. பெட்டிகடைகளில் தம் அடித்துக் கொண்டிருந்தவர்கள் இவள் வரும் கோலத்தை பார்த்து என்ன ஏதென்று விசாரிக்க தொடங்கினர். கோலம் போட வந்த பெண்கள் தண்ணீர் கொடுத்து ஆசுவசாப்டுத்தினர். கிழவனும் பின்னாலேயே வந்து விட்டான்.

மேலும் கேட்கவும் சொல்ல தொடங்கினாள். எல்லாரும் கெக்கே பிக்கே என சிரித்து “இந்தப்பைத்தியத்தைப் பார்த்தா பயந்தே” எனச் சொல்ல‌, இவளுக்கு கோபம் ஏறியது. இவ்வளவு நேரம் பட்ட அவஸ்தை ஒரு பைத்தியத்தாலா. அவமானமும் கோபமும் ஒருசேர எழ கிழவனின் கன்னத்தில் பளாரென அறைந்தாள்.

கூட்டத்தில் இருந்த ஒருவன் “இந்தப் பெருசுக்கு இதே வேலையா போச்சு. வயசு பிள்ளைக பின்னாடியே திரியறது. இப்படியே விட்டா சரிபடாது நாலு சாத்து சாத்துனாதான் ஒழுங்கா இருக்கும்” என்று சொல்ல,

இன்னும் சில ஜோடிக் கைகள் சேர்ந்து கிழவனை அடிக்கத்தொடங்கியது.

*

மணி 7.00

, தாயி இந்தாருக்கால்ல. யப்பாடி இப்பதான் நிம்மதில. என்னல வழி மாறிட்டியா? உன்னைய தேடி பெரிய கலோபரமே ஆகிட்டு.”

ஒண்ணுமில்லப்பா இந்த பைத்தியதாலதான் இவ்வளோ பிரச்சினையும்” எரிச்சல் கலந்தே சொன்னாள்.

கைகாட்டிய இடத்தில் கிழவன் சுருண்டு கிடந்தான், மேலெல்லாம் ரத்த சிராய்ப்பு, உதடு பிய்ந்திருந்தது, மேலாடை கிழிந்து நூலாய் தொங்கிக்கொண்டிருந்தது., மேலே பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான்.

உற்று பார்த்து கதறினார்.

ஐயோ போஸ்ட்மேன்”

என்ன ஆச்சு?”

இவர ஏன்டா அடிச்சிங்க?”

அந்த பொண்ணுக்கிட்டயே கேளுங்க”

கேட்க எத்தனித்தவரை கைப்பிடித்து இழுத்து மூன்று மாதங்களுக்கு பின் முதல்முறையாக பேசினான்.

இந்த மகள நான் காப்பாத்திட்டேன்

சொல்லிவிட்டு சிரித்து சிரித்து குதித்து குதித்து ஓடிக்கொண்டிருந்தார் அந்த பைத்தியக்கார கிழவர்.

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் மின்னிதழ் - இதழ் - 1 Copyright © 2015 by தமிழ் மின்னிதழ் குழு is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.