"

10

கெங்கையம்மன் கோயில் தாண்டி வலதுபக்கம் திரும்பணும்’ என்றான் குமரேசன்.

என்னது? கெங்கையம்மனா? அந்தப் பேர்லயெல்லாம்கூட ஒரு சாமி இருக்குதா?’ குழப்பத்துடன் கேட்டேன்.

அப்படியெல்லாம் பேசாதே கதிரு, ரொம்ப சக்தி வாய்ந்த தெய்வம்’ என்றபடி கன்னத்தில் போட்டுக் கொண்டான், ‘அந்தக் கோயிலுக்குள்ள போனாலே உடம்பெல்லாம் சிலிர்க்கும், நாத்திகனுக்குக்கூட கையெடுத்துக் கும்பிடத் தோணும்.’

எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை, ஒழுங்கா வழியைச் சொல்லு’ என்றேன் சலிப்போடு, ‘கங்கையம்மன் கோயில் தாண்டி லெஃப்ட் திரும்பணுமா?’ 

லெஃப்ட் இல்லை, ரைட்’ என்று காகிதத்தில் குறித்தான் குமரேசன், ‘அங்கிருந்து நூறு மீட்டர் தூரத்தில, இன்னொரு அம்மன் கோயில் வரும், அங்கே லெஃப்ட் திரும்பணும்.’

மறுபடியும் கோயிலா? போச்சு, எனக்கு சுத்தமாக் குழப்புது.’

டோண்ட் வொர்ரி, நான் தெளிவா மேப் வரைஞ்சிருக்கேன் பாரு.’

டேய், அதைப் பார்த்தப்புறம்தாண்டா இன்னும் தலை சுத்துது’ என்றேன், ‘என்னை வுட்டுடு மச்சி, நான் எங்கயாவது லாட்ஜ்ல ரூம் போடுத் தங்கிக்கறேன்.’

மறுபடியும் அதே கதையை ஆரம்பிக்காதே கதிரு, மெட்ராஸ்ல லாட்ஜ் வாடகை என்ன ஆவும் தெரியுமா?’

நாங்கள் மறுபடியும் வரைபடத்துக்குத் திரும்பினோம். எங்கே பார்த்தாலும் கோயில்கள், லெஃப்ட், ரைட் திரும்புதல்கள் என்று குழப்பமயம்.

இங்கே ஒரு புளிய மரம் வரும்’ என்றபடி சின்னதாக ஒரு பொம்மை வரைந்தான் குமரேசன், ‘அங்கிருந்து இடதுபக்கம் திரும்பினா ஒரு டீக்கடை, அதுக்குப் பக்கத்தில …’

அம்மன் கோயில், சரியா?’

ம்ஹும், பெருமாள் கோயில்.’

சுத்தம்’ என்றேன் நான், ‘அநேகமா உங்க ஏரியால மனுஷங்களைவிட சாமிங்கதான் அதிகமா இருப்பாங்கன்னு நினைக்கறேன்.’

குமரேசன் முகத்தில் அடிபட்ட பாவனை, ‘ஏண்டா கிண்டலடிக்கிறே? ஊர்முழுக்கக் கோயில் இருந்தா என்ன தப்பு? நீ உன் வேலையை முடிச்சுட்டு, டெய்லி ஒரு கோயில்ன்னு போய்ட்டு வா, கோடி புண்ணியம்.’

நான் சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டேன், ‘புண்ணியம் கிடக்கட்டும், முதல்ல உங்க வீட்டுக்கு எப்படிப் போறது? அதானே இப்ப பெரும் பிரச்னையா இருக்கு!’

பெருமாள் கோயில் பக்கத்தில ஒரு காலி நிலம் இருக்கும், ஊர்க் குப்பையெல்லாம் அங்கதான் கொட்டுவாங்க’ என்றான் குமரேசன், அந்த நிலத்திலிருந்து நூறு மீட்டர் தள்ளி, எங்க வீடு, வாசல் கேட்ல ரெண்டு சிங்கம் நிக்கறமாதிரி படம் வரைஞ்சிருக்கும்.’

சிங்கங்கள் உண்மையில் பூனைகளைப்போல்தான் தென்பட்டன. தகிக்கும் வெய்யிலில், கையில் இரண்டு பெட்டிகளுடன் அந்தக் கதவின்முன் நின்றிருந்தேன் நான்.

இந்த வீடுதானா? அல்லது, வழி மாறிவிட்டேனா? இன்னும் எனக்குக் குழப்பம் தீரவில்லை. எது அம்மன் கோயில், எது பெருமாள் கோயில், எது ரைட், எது லெஃப்ட் என்று தலை சுற்றியது.

குமரேசன் வரைந்து தந்த மேப்பின்படி இதுதான் அவனுடைய வீடு. சிங்கப் படம் வரைந்திருக்கிறது, பூட்டியிருக்கிறது, இதுதான்.

இப்போது குமரேசனின் அப்பா, அம்மா ஊரில் இல்லை. அவன் தங்கை பிரசவத்துக்காகக் கொல்கத்தா பயணம் போயிருக்கிறார்கள். நான் அலுவலக வேலையாகச் சென்னை கிளம்புகிறேன் என்றதும் ‘வீடு சும்மாதான் பூட்டிக் கிடக்கு, அங்கே தங்கிக்கோ மச்சி’ என்றான்.

சாவியைப் பக்கத்து வீட்ல கொடுத்திருக்கோம் கதிரு’ காதுக்குள் குமரேசனின் குரல் கேட்டது. ‘நான் மாமிகிட்ட ஃபோன் பண்ணி சொல்லிடறேன், உன்னைப் பார்த்ததும் சாவி கொடுத்துடுவாங்க.’

அது எப்படிக் கொடுப்பார்கள்? நான்தான் கதிர்வேல் என்று அவர்களுக்கு என்ன ஜோசியமா தெரியும்? குமரேசனின் நண்பன் என்று சொல்லிக்கொண்டு சாவியை வாங்கிவிட்டு, வீட்டைக் கொள்ளையடித்துக்கொண்டு ஓடிவிட்டால் என்ன செய்வார்கள்?

அந்த மாமி அப்படியெல்லாம் யோசிப்பதாகத் தெரியவில்லை. என்னைப் பார்த்ததும் பல வருடம் பழகியதுபோல் புன்னகைத்து ‘வாப்பா, சௌக்கியமா?’ என்றார்.

சௌக்யம்தான் மாமி’ என்றேன் சற்றே தடுமாறி. ‘என் பேர் கதிர்வேல்.’

தெரியும் தெரியும்’ என்ற மாமி நாற்காலியை இழுத்துப் போட்டார். ’வேகாத வெய்யில்ல வந்திருக்கே, கொஞ்சம் காத்தாட உட்காரேன், மோர் கொண்டுவரேன்.’

அதெல்லாம் வேணாம் மாமி, சாவி கொடுங்க.’

உட்காருப்பா, சாவி எங்க போறது’ என்றபடி உள்ளே போய்விட்டார் மாமி.

நான் பரிதாபகரமாக விழித்தேன். வேறு வழியில்லை, உட்கார்ந்துதான் ஆகவேண்டும்.

சின்னஞ்சிறு வீடு. சுவரில் மாட்டிவைத்த மடக்கு நாற்காலிகள், அவற்றுக்குக் கீழே வரிசையாக அடுக்கித் தூசு படிந்த ’தி ஹிந்து’க்கள், மூலையில் உறையிட்டு மூடிய டிவி பெட்டி, முப்பது விநாடிகளில் கூடத்து மூலையில் விரிசல் விட்டிருப்பதுவரை எல்லாம் பார்த்தாகிவிட்டது.

மோர் தம்ளருடன் வந்த மாமியைப் பார்க்கையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நாடகங்கள் ஞாபகம் வந்தது. நிஜமாகவே இன்னும் இப்படிப்பட்ட மக்கள் அப்படியேதான் வாழ்கிறார்களா?

லேசாக உப்புக்கரித்தாலும் வெயில் நேரத்திற்கு அந்த மோர் தேவைப்பட்டது. கடகடவென்று காலி செய்துவிட்டு ‘ரொம்பத் தேங்க்ஸ் மாமி’ என்றேன்.

நீ குமரேசனோட அத்தை பையனா?’

போச்சு. அடுத்த பிரச்னை ஆரம்பம். யாரோ ஒரு நண்பன் வருகிறான் என்று சொன்னால் மாமி ஏதாவது நினைத்துக்கொள்வார்கள் என்பதற்காக என்னைத் தன்னுடைய உறவுக்காரனாக அறிமுகம் செய்திருக்கிறான் குமரேசன். இப்போது இந்த அத்தை பையன் விவகாரத்தைச் சமாளித்தாகவேண்டும்.

என்னாச்சுப்பா?’

ஒண்ணுமில்லை மாமி, ஏதோ யோசனை’ என்று சமாளித்தேன். ‘சாவி கொடுக்கறீங்களா?’

மாமி அப்போதும் அசரவில்லை. ‘நீ குமரேசனுக்கு அத்தை பையன்தானே?’

ஆமாம் மாமி’ என்றேன். ‘ஒண்ணுவிட்ட அத்தை பையன்’ என்று பாதுகாப்பாக ஒரு கோடு போட்டுவைத்தேன்.

உங்க சொந்த ஊர் எது?’

மதுரை.’

இத்தனை வருஷத்தில குமரேசன் வீட்ல யாரும் மதுரைப்பக்கம் போனமாதிரியே தெரியலையே! உங்க ரெண்டு வீட்டுக்கும் எதுனா பிரச்னையா?’

எனக்குத் திக்கென்றது. பார்த்த ஐந்தாவது நிமிடம் டிவி சீரியல்போல் எங்களுக்குள் சண்டை மூட்டிவிடும் இந்த மாமியை என்ன செய்வது?

அன்று இரவு குமரேசனைத் தொலைபேசியில் அழைத்தேன். ‘என்னடா இந்த மாமி இப்படி தடால்ன்னு குண்டுமேல குண்டா வீசறாங்க?’

குமரேசன் புரிந்ததுபோல் சிரித்தான். ‘கொஞ்சம் வளவளான்னு பேசுவாங்க, மத்தபடி எதையும் மனசில வெச்சுக்கமாட்டாங்க, மாமி தங்கம்’ என்றான். ‘என்ன ஹெல்ப் வேணும்னாலும் அவங்களைக் கேட்கலாம்.’

கேட்கவேண்டிய அவசியமே நேரவில்லை. மறுநாள் காலை எட்டரை மணிக்குப் பாதி ஷேவிங்கில் இருந்தவனைப் பயமுறுத்தி அழைப்பு மணி ஒலித்தது. அவசரமாக வேலையை முடித்துக்கொண்டு வாசல் கதவைத் திறந்தால் கையில் பாத்திரத்துடன் மாமி.

என்ன மாமி?’ என்றேன் திகிலுடன்.

டிஃபனுக்குச் சப்பாத்தி பண்ணினேன். நீயும் ரெண்டு சாப்பிடுவியேன்னு கொண்டுவந்தேன்.’

ரெண்டு இல்லை. ஏழு சப்பாத்தி. கூடவே வெள்ளைவெளேர் தேங்காய் சட்னி, உருளைக்கிழங்கு மசாலா.

தினமும் இதுபோல் ருசியாக வீட்டுச் சாப்பாடு கிடைத்தால் நன்றாகதான் இருக்கும். ஆனால் அதற்காக, முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம் இப்படி உதவி பெறுவது நன்றாகவா இருக்கிறது?

மாமி ஏனோ என்னை அன்னியனாக நினைக்கவே இல்லை. குமரேசனின் உறவினன், எனக்கும் அப்படிதான் என்பதுபோல் நடந்துகொண்டார். நான் எங்கே போகவேண்டும் என்று விசாரித்துக்கொண்டு ரயில் வழி குறித்துத் தந்தார், எந்த நேரத்தில் எந்த ரயிலில் கூட்டம் இருக்கும், எங்கே டிக்கெட் எடுக்கவேண்டும், முதல் வகுப்பு டிக்கெட்டுக்கும் இரண்டாம் வகுப்புக்கும் எவ்வளவு ரூபாய் வித்தியாசம், ஆட்டோவில் போனால் என்ன செலவாகும் என்று எல்லாத் தகவல்களும் தானாக வந்து கொட்டின.

ராத்திரிச் சாப்பாட்டுக்கு வந்துடுவியோல்லியோ?’

ஐயோ, எனக்காக சிரமப்படாதீங்க மாமி’ என்றேன் அவசரமாக. ‘நான் ஆஃபீஸ்லயே சாப்டுட்டு வந்துடுவேன்.’

ஒரு சிரமமும் இல்லைப்பா’ என்றார் அவர், ‘வெளிய கண்ட இடத்தில சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்காதே.’

இல்லை மாமி, ஆஃபீஸ் கேன்டீன்தான்’ என்று சொல்லி அவரைச் சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. விட்டால் மதியச் சாப்பாட்டையும் பொட்டலம் கட்டிக் கையில் கொடுத்துவிடுவார்போல.

ஜாக்கிரதைப்பா’ தெருவில் இறங்கி நடக்கும்வரை காதில் அவர் குரல் கேட்டுக்கொண்டிருந்தது.

அன்று மாலை, வேண்டுமென்றே பணியிடத்தில் வேலையைத் தாமதப்படுத்தி எட்டரை மணிவரை உட்கார்ந்திருந்தேன். அதன்பிறகு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு ஆட்டோ பிடித்துத் திரும்புவதற்குப் பத்து மணி தாண்டிவிட்டது.

செல்ஃபோன் திரை வெளிச்சத்தில் கதவில் சாவித் துவாரத்தைத் தேடிக்கொண்டிருந்தபோது எதிர் வீட்டுக் கதவு திறந்தது, ‘சாப்டியாப்பா?’

எதிர்பாராத அதிர்ச்சியில் என் கையிலிருந்த சாவி தவறிக் கீழே விழுந்துவிட்டது. ‘ஆச்சு மாமி’ என்றேன் தடுமாறி.

பாவம், வேலை ரொம்ப ஜாஸ்திபோல’ என்றார் அவர். ‘எல்லாக் கதவையும் ஜாக்கிரதையாப் பூட்டிக்கோப்பா. இங்கே திருட்டு பயம் ஜாஸ்தி.’

பகல் நேர வெயில் தணிந்திருந்த நேரம் அது. ஆனாலும் எனக்கு நன்றாக வியர்த்திருந்தது. இத்தனை கவனத்தை, அக்கறையைத் தாங்கிக்கொள்ளமுடியவில்லை.

பெருநகர அபார்ட்மென்ட் சூழலில் பிறக்கிற எவரும் அந்தத் தளம் தாண்டி வளர்வது சாத்தியமே இல்லை. எதிர் வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதுகூட தெரியாதபடி கதவை மூடி வைத்து வளர்க்கப்பட்ட தலைமுறை என்னுடையது.

இதனால், யாரேனும் நம்மீது அக்கறை காட்டினாலே அது நேர்மையான உணர்வாக இருக்கக்கூடும் என்று நம்பமுடிவதில்லை. அதில் அவர்களுக்கு என்ன ஆதாயம் இருக்கக்கூடும் என்று யோசிக்கிற குறுக்குபுத்திதான் முதலில் எழுகிறது.

இரவுமுழுவதும் தூக்கம் வரவில்லை. மாமியின் அதீத அக்கறைக்கு என்ன காரணம்? ஏதேதோ சாத்தியங்களை யோசித்துப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். உதாரணம் மாமிக்குத் திருமண வயதில் பெண் இருக்கிறது, என்னை மாப்பிள்ளையாக்கிக்கொள்ளப் பார்க்கிறார். இது போல் இன்னும் நிறைய‌.

இவற்றில் ஏதேனும் ஒன்றுதான் அவருடைய அக்கறையின் உண்மையான காரணமாக இருக்கவேண்டும் என்று நிச்சயமாகத் தோன்றியது. ஆனால் கடைசிவரை அது எது என்று புரியவில்லை.

அன்றுமட்டுமில்லை, அடுத்த ஒரு வாரமும் இதே கதைதான். மாமி என்மீது அக்கறையைக் கொட்டுவதும் நான் அதற்குக் காரணம் யோசித்துப் பிடிபடாமல் நெளிவதும் குழம்புவதும் தொடர்ந்துகொண்டிருந்தது.

ஒருவேளை, கோயில்கள் அதிகமுள்ள பகுதிகளில் வாழ்கிற எல்லோரும் இப்படிக் காரணமில்லாமல் அடுத்தவர்கள்மீது அன்பு செலுத்தும்படி மாறிவிடுவார்களோ? எனக்குப் பயமாயிருந்தது.

அந்த வார இறுதியில், மாமிக்கு நன்றி சொல்லி சாவியைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பெங்களூர் திரும்பினேன். ரயிலில் ஏறி உட்கார்ந்தபிறகுதான் தோன்றியது, அவருக்கு ஒரு கிலோ இனிப்போ, காரமோ வாங்கிக் கொடுத்துவிட்டு வந்திருக்கலாம்.

அது எதற்கு? நான் தங்கியது குமரேசன் வீட்டில். இனிப்பு, காரம் வாங்கிக் கொடுப்பதென்றால் அவனுக்கோ அவனுடைய அப்பா, அம்மாவுக்கோதானே வாங்கித்தரவேண்டும்?

இப்படி யோசிக்கையில் ஒருபக்கம் குற்றவுணர்ச்சியாகவும் இன்னொருபக்கம் நிம்மதியாகவும் இருந்தது. நல்லவேளை, கோயில் சூழ்ந்த வீட்டில் எல்லோர்மீதும் நம்பமுடியாத தீவிரத்துடன் அக்கறை காட்டுகிற மாமியின் அருகே வாழ்ந்தும் நான் மாறிவிடவில்லை. அதே பழைய சுயநலவாதியாகவே இருக்கிறேன்!

குமரேசன் பைக்கைத் தூக்கிக்கொண்டு ரயில் நிலையத்துக்கே வந்திருந்தான். நான் பிளாட்ஃபாரத்தில் இறங்கியதும் ‘எப்படிடா எங்க ஊரு?’ என்றான்.

ஓகே’ என்றேன். அதற்குமேல் அவனிடம் பேசத்தோன்றவில்லை.

சில வாரங்களில், அடுத்தடுத்த வேலைகளின் பரபரப்பில் மாமி முகம்கூட மறந்துபோய்விட்டது. ஆனால் அந்தக் குழப்பம்மட்டும் தீரவில்லை. அவருடைய அந்த அக்கறை எனக்கான விசேஷமா? அல்லது, எல்லோருக்குமானதா? ஏன்? அவரது அக்கறைக்கு நான் கற்பித்துக்கொண்ட காரணங்களில் எது நிஜம்? அல்லது, அவை தாண்டியும் இன்னொரு காரணம் இருக்கிறதா? அதை நிச்சயமாகத் தெரிந்துகொள்ளும்வரையாவது அந்தச் சென்னைப் பயணம் நீடித்திருக்கலாம்.

அதற்கும் ஒரு வாய்ப்பு வந்தது. மூன்று மாதம் கழித்து ’ஒரு புதுக் கஸ்டமர் கழுத்தறுக்கறான், மெட்ராஸ்க்கு ஒரு நடை நேர்ல போய்ப் பார்த்துட்டு வந்துடேன்’ என்றார்கள் ஆஃபீசில்.

இந்தமுறையும் ‘எங்க வீட்ல தங்கிக்கோ கதிரு’ என்றான் குமரேசன். ‘எங்க அப்பா, அம்மா இன்னும் கொல்கத்தாலேர்ந்து திரும்பி வரலை. வீடு காலியாதான் இருக்கு.’

இல்லைப்பா, வேணாம்’ நான் எங்கோ பார்த்தபடி சொன்னேன். ‘ஆஃபீஸ் பக்கத்திலயே ஒரு ஹோட்டல்ல ரூம் போடச் சொல்லிட்டேன்.’

குமரேசன் முகம் சட்டென்று சுருங்கிவிட்டது. ‘ஏண்டா? என்னாச்சு? எங்க வீட்ல எதுனா ப்ராப்ளமா? போனவாரம்கூட மாமி உன்னைப்பத்தி ஃபோன்ல விசாரிச்சாங்க கதிரு, மறுபடி உன்னைப் பார்த்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க.’

அதுதான் காரணம் என்று அவனிடம் எப்படிச் சொல்வது?

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் மின்னிதழ் - இதழ் - 1 Copyright © 2015 by தமிழ் மின்னிதழ் குழு is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.