"

18

கல்யாணத்திற்கு முன் கடிதம் தந்தோர்

கருணை கொண்டு பார்க்கிறார்

 

பெற்றவர் முழங்கால் கட்டி விசும்பியிருப்பாளென

முகவாய் தொட்டு கண்ணீர்த் தடம் தேடுகிறார்

 

மற்றவர் மாண்டார் மீளார் எனச் சொலல் வேண்டி

அழுது புரள்வதைக் காண விழைகிறார்

 

அள்ளி முடிந்துப் பின்னலிட சோம்பல்பட

சோகமென்றே சுகப்படுகிறார் நண்பர்

 

ஆறுதலுக்காய் ஏற்றும் மெழுகுவர்த்திகள்

உருகியோட காலெங்கும் கொப்புளங்கள்

 

பட்டாணி புலாவிற்குப் பசிக்கத்தான் செய்கிறது

இஞ்சி நறுக்க விரல் கொய்து வலி உயிர் போகிறது

 

யதேச்சை நகைச்சுவைக்குச் சட்டென சிரிப்பு வருகிறது.

பிடித்தவை மட்டும்தான் இன்னும் பிடித்திருக்கிறது

 

மடியமர்ந்து காதுகடித்து சிரஞ்சீவிதான் என நான் சிணுங்க

முன்னுச்சி முத்தமிட்டு இல்ல, ஜீவிதாடி என நீ சிரிக்க

 

எவரறிவார் என்னுள் தேங்கிய நம் மும்மாதச் சிசு

உன்சவம் கண்டதிர்ந்து கலைந்தொழிந்து போனதை.

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் மின்னிதழ் - இதழ் - 1 Copyright © 2015 by தமிழ் மின்னிதழ் குழு is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.