"

19

இதயத்துடிப்பு நன்றாக இருக்கிறதாம், டாக்டர் சொன்னதாய்ச் சொன்னாள். மேலும் வளர்ச்சி சீராக இருக்க டாக்டர் சொல்படி நிறைய மருந்து, மாத்திரைகளெல்லாம் வாங்கி வந்திருக்கிறாளாம். எல்லாவற்றையும் டாக்டரின் பரிந்துரைப்படி தவறாமல் சாப்பிடுவாள் என்றும், அப்போதுதான் நான் நல்லபடியாக அவளுக்குக் கிட்டுவேன் என்றும், எனைக் காணப்போகும், எனைக் கைகளில் ஏந்திக்கொள்ளப்போகும் அந்த நாளுக்காகத் தான் காத்திருக்கிறாள் எனவும், அந்த நாளே தன் வாழ்வின் பொக்கிஷமான நாள் எனவும் தன் குளிர்ந்த கரங்களால் ஒரு மெல்லிய இளஞ்சூட்டை வயிற்றினூடே பரப்பி வாஞ்சையுடன் சொன்னாள் உம்மா.

எனக்கும் அப்படித்தான் இருந்தது. நாள் முழுக்க என்னைப்பற்றியே சிந்தித்து, பேசி, உரையாடி, சிரித்து, மகிழும், அவள் முகத்தை இப்போதே பார்த்து, அவள் கைகளில் தவழ்ந்து, முலையில் முட்டி இறுகிக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஃபரீதா என்பதுதான் உம்மாவின் பெயராம் மார்க்கத்தில் அப்பெயருக்கு இணையற்றவள் என்று பொருளாம், ஆம் உண்மைதான் அது, யாருக்கும் இணையற்றவள்தான் உம்மா.

சூல் கொண்ட நாள் முதல் என்னோடு செல்லம் கொஞ்சி உரையாடிக்கொண்டே இருக்கிறாள், அவளுக்கு என்னிடம் சொல்வதற்கு இல்லையென்று எதுவுமே இல்லை, எப்போதும் ஏதேனுமொன்றைப் பகிர்ந்தபடி என்னை உயிர்த்திருக்க வைத்திருக்கிறாள். என் ஒவ்வொரு துடிப்பிற்கும் அவளிடம் அக்கறை நிறைந்த, ரசவாதம் கொண்ட நீண்டதொரு உரையாடல் எதிர்வினையாகும். அது கேட்க கொள்ளை விருப்பம் எனக்கு.

இப்படித்தான் உம்மா எனக்குப் பெயர் வைத்த கதையை, ஓராயிரம் முறையேனும் சொல்லியிருப்பாள். இருந்தும் அது கேட்கத் திகட்டியதே இல்லை. வயிற்றில் நான் உருவானதை அறிந்த நாள் ஒன்றில், அவள் உறங்கும்போது வந்த கனவின் கதை அது. மென்சிவப்பாய் வானம் சூழ்ந்திருந்த ஒரு வனத்தின் நடுவே ஓடும் ஒரு நதியின் மறுகரையில் ஒர் ஒளியைக் கண்டாளாம் உம்மா. அந்த ஒளி கை நீட்டி அவளை அழைக்க, நதியை நடந்தே கடந்து அருகில் சென்று பார்த்தாளாம், அந்த ஒளியை அடைந்தபின் தான் அவளுக்கு தெரிந்ததாம் அது ஒரு நட்சத்திரம் என்று. அந்த நட்சத்திரம் கைகளை உயர்த்தி உம்மா என்றழைத்த நொடி அவள் அந்த நட்சத்திரத்தை ஏந்திக்கொண்டு மகிழ்ச்சியாக சிரித்தாளாம்.

இப்படியாகத் தான் அந்த கனவு வந்ததாம் உம்மாவிற்கு, இந்தக் கனவுக்கு பின்னர் தான், அல்லாஹ் தனக்குத் தந்த நட்சத்திரம் நான் என்று சொன்னாள். அதற்குப் பிறகே எனக்கு நளீரா எனப் பெயர் வைத்தாளாம், நளீரா என்றால் ஒளிரக்கூடியவள் என்று பொருளாம், இதுவே எனக்குப் பெயர் கிடைத்த கதை, இந்தக் கதையை வழக்கமான அவளின் கைகள் வருடித்தரும் இளஞ்சூட்டில் சொல்லி முடிப்பதை கேட்கக் கேட்க மெய் சிலிர்க்கும் எனக்கு. அப்போதைய என் துள்ளலைத் தொடர்ந்து அவளுக்கும்.

நான் பிறந்து, கொஞ்சம் வளர்ந்த பின் அவள் கைகளைப் பிடித்துச் சுற்றி வரும் போதும், ஓடிப்பிடித்து விளையாடும் போதும், என்னிடம் சொல்ல ஒரு கவிதை தயாரித்து வைத்திருந்தாள். “யார் சொன்னது? / நட்சத்திரங்கள் சுற்றி வருவதில்லையென்று / சுற்றிச்சுற்றி வருகிறாளே நளீரா!”

பூமி, நிலா, மற்றும் இன்னும் சில கோள்களைப்போல சூரியனும் நட்சத்திரங்களும், எதையும் சுற்றி வராது மகளே, அது எப்போதும் ஒரே இடத்தில் மட்டும்தான் மின்னிக்கொண்டிருக்கும், அந்தக் கோடான கோடி நட்சத்திரங்களை பொறாமை கொள்ளச்செய்ய நீ இந்த உலகத்தையே சுற்றி வர வேண்டும், சீக்கிரம் வந்துவிடு நளீரா என்பாள். எனக்கு நட்சத்திரங்களை விட உம்மாவைக் காணத்தான் ஆசையாக இருக்கும்.

இதேபோல எனக்காக அவள் கையால் நெய்த இருபதாவது ஸ்வெட்டரின் கதையும் அந்தப் பெயர் கதையை போலவே கொள்ளை சுவாரஸ்யமானது, வெறும் நான்கு மதியப்பொழுதுகளிலேயே அதைப் பின்னி முடித்து விட்டாளாம், அதன் நிறம் என் நிறத்தைப் போலவே வெளிர்சிவப்பு நிறமாக இருக்குமாம். அந்த ஸ்வெட்டரின் இடதுபக்கம் ஒரு ரோஜாவின் படத்தை வரைந்து இருக்கிறாளாம், அவள் சொல்வாள்.

ரோஜா என்பது ஒரு பூ நளீரா. அது ஒரு நல்ல வாசனையும், அழகான நிறமும், மெல்லிய இதழ்களையும் கொண்டது. கிட்டத்தட்ட உன்னைப்போலவே, இல்லையில்லை உனக்கும் சற்று குறைவான அழகுதான் இருக்கும் அதற்கு. இந்த ரோஜா ஸ்வெட்டர் உனக்கு மிக பிடிக்கும் நளீரா என்பாள்.

அதை அணிந்து நான் சிரிப்பதாய் அடிக்கடி கனவு காண்கிறாளாம், நேரில் நான் அதையணிந்து சிரிக்கும் போது புகைப்படம் எடுத்து, அந்தப் புகைப்படத்தில் “ஒரு நந்தவனம் வீட்டுக்குள் வளர்கிறது” எனக் கவிதை எழுதி ஹாலில் மாட்டிவைப்பாளாம், என்னவெல்லாம் பேராசை காட்டுகிறாள் என் உம்மா! யார்க்கும் இணையே இல்லாத என் செல்ல உம்மா. தினம் ஒரு சேதி சொல்வாள், தினம் தினம் ஆசை கூட்டுவாள்.

உனக்குத் தெரியுமா நளீரா? நீ வரப்போகும் ஊர் ஓர் ஒப்பற்ற மனிதர் பிறந்த ஊர், இந்தத் தேசத்தில் மிக முக்கியமான ஊர், நீ வந்துபார் உனக்கு இங்கு எல்லோரையும் பிடிக்கும், உன்னையும் எல்லோருக்கும் பிடிக்கும், நீ விளையாட நான், வாப்பா தவிர பக்கத்து வீட்டில் உன்னைப் போலவே குட்டியாக மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள், அங்கித், அமித், அனந்த் என்பது அவர்களது பெயர். மிக அழகாக இருக்கும் அவர்கள் ஒருவருக்கொருவர் அமைதியாக விளையாடுவதைப்பார்க்க, உன்னைப்பார்த்தால் அவர்களுக்கும் மிக பிடிக்கும், எப்போதும் நீ எப்போது வருவாய் என்று விசாரித்து கொண்டே இருக்கிறார்கள். தினமும் அவர்களோடு நீ விளையாடலாம், சீக்கிரம் வந்துவிடு மகளே என அத்தனை செல்லமாக அழைப்பாள்.

எப்படியெல்லாமோ கண்ணும் கருத்துமாக மகிழ்வூட்டிய, இந்த உலகில் யாருக்கும் இணையில்லாத என் உம்மா எனும் தேவதை இப்போது வெடித்து அழுது கொண்டிருக்கிறாள், இதே நாளில் சற்று நேரத்திற்கு முன்பெல்லாம் வழமை மாறிய ஒரு நடுக்குறும் தடவலில், அதிகாரங்கள் எல்லாம் வேடிக்கைப்பார்த்தபடி இருக்க, அவர்கள் கைகளில் வாக்களார் பட்டியல் எல்லாம் வைத்துக் கொண்டு, நம்மை, நம்மவர்களை வீடுவீடாக வெறிபிடித்து தேடிக்கொண்டு வருகிறார்களாம் நளீரா, எனக்கு மிகவும் கலக்கமாக இருக்கிறது என்றபடி மிக வேகமாக ஓர் இருதயத்தின் துடிப்பைப் பகிர்ந்தாள்.

சில மணித்தியாலத்திற்குப் பிறகு இதோ இப்போது கதறிக்கொண்டு இருக்கிறாள், கதறிலினூடேயும் அவள் கை என் மீதுதான் அழுத்தியபடி இருந்தது, யாரிடமோ உரக்கக் கெஞ்சி அழுதபடி “விட்டுவிடுங்கள், தயவு செய்து விட்டுவிடுங்கள் அய்யா. நாங்கள் சாதரணர்கள், சத்தியமாக நாங்கள் எந்தக் கரசேவகர்களையும் எரிக்கவில்லை. நிறைமாதத்தில் இருக்கும் உங்கள் சகோதரியாய் எண்ணிக்கொண்டு எங்களை விட்டு விடுங்கள், அய்யா விட்டுவிடுங்கள்” எனப் பெருஓலம் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தது.

எனைச்சுற்றி இருந்த தசை, நீர், எலும்பு, நரம்பு, இரத்தம், குடல் என அனைத்திலும் பெருவலி பரவ முரட்டுக்கரம் ஒன்று என் கால்களை பிடித்து, உயிர்நோக வெளியே இழுத்துப்போட்டது. சிறு துடிப்பிற்குக் கூட எதிரொலிக்கும் உம்மாவின் குரல், இப்போது கேட்கவே இல்லை, பலமாக மூச்சு திண‌றியது, கடைசியாக என்னுள் பதிந்த உம்மாவின் குரல் சொல்லிய வார்த்தை மட்டும் நினைவுக்கு வந்து எந்த கரசேவகர்களையும் நான் எரிக்க வில்லையென எனக்குத்தெரிந்த பாஷையில் பீறிட்டு அழுது சொல்லி முடித்தேன், முற்றிலுமாக மூச்சடைத்துப்போனது, திறக்காமலே இன்னும் இறுக மூடிக்கொண்டன‌ விழிகள்.

கடைசி ஓசையாக செவிகளில் விழுந்தது – “தூக்கி வீசு அந்தப் பிண்டத்தை, இதயம் நின்றுவிட்டது”.

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் மின்னிதழ் - இதழ் - 1 Copyright © 2015 by தமிழ் மின்னிதழ் குழு is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.