14
நியூரி பில்கே சிலான்: அற்புதக் கதைசொல்லி
லேகா இராமசுப்ரமணியன்
“மனிதருக்குண்டான இயல்பான பலவீனங்களை கொண்டே என் கதாபாத்திரங்களை உருவாக்குகிறேன். என் உருவாக்கம் சரியானது தானா என பார்க்க நான் என்னையே பரிசோதித்துக் கொள்கிறேன்.” – சிலான்
உலக சினிமா அரங்கில் பெண்களை முன்னிலைப்படுத்தி வெளிவந்துள்ள திரைப்படங்களின் எண்ணிக்கை முடிவற்றது. இத்தாலியின் பெடரிக்கோ பெலினி, மைக்கலேஞ்சலோ அந்தோனியோனி, ஸ்பெயினின் அல்மதோவர், ஸ்வீடனின் பெர்க்மன், பிரான்சின் லூயிஸ் பெனுயல் எனப் புகழ் பெற்ற இயக்குநர்களின் விருப்பத்திற்குரிய களம் பெண்களின் அகவுலகம் சார்ந்ததே. இவ்விதம் ஆண் மனச் சலனங்களை வேர் வரை ஊடுருவிச் சென்று திரைப்படம் படைத்தவர்கள் இங்கு மிகச் சிலரே. அவர்களுள் துருக்கி இயக்குனர் நியூரி பில்கே சிலான் (Nuri Bilge Ceylan) குறிப்பிடத்தகுந்தவர்.
பெண்களைப் போல ஆண்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள் இல்லை. சட்டெனப் பிரியத்தை உணரச் செய்திடவும், கோபத்தை வெளிக்காட்டிடவும் தயங்குபவர்கள். ஆண்களின் மனவெளியில் அத்தனையும் உண்டு, அதை வெளிக்கொணர அவர்கள் பிரயத்தனப்படுவதில்லை. சிலானின் கதைகள் பெரும்பாலும் இத்தகைய ஆண் உணர்வுகளைச் சார்ந்து கட்டமைக்கப்பட்டவை. ஏழை – பணக்காரன், படித்தவன் – படிக்காதவன், கலைஞன் – தொழிலாளி என பல்வேறு தரப்பட்ட மனிதர்களுக்கிடையேயான வேற்றுமைகளை பேசிச் செல்லும் படங்கள் இவருடையவை. ஆண் – பெண் உறவின் பொருட்டு நிகழும் துரோகங்களையும் விரிவாய் அலசிடத் தவறவில்லை அவர்.
உலகளாவிய திரைப்பட விருதுகளை தொடர்ச்சியாக பெற்று வரும் சிலானின் படைப்புகள் ஒன்றோடொன்று ஏதோவொரு விதத்தில் தொடர்புடையவை. தனித்து அலையும் புத்திஜீவிகள், சுமூகமான உறவற்ற தம்பதிகள், வேலையில்லா தொழிலாளிகள், ஆண் மனதை அறிய முயன்று தோற்கும் பெண்கள் என சிலான் உருவாக்கி நடமாடவிடும் கதாபாத்திரங்கள் எதார்த்தத்தில் காணக் கிடைப்பவர்கள்.
2002ஆம் ஆண்டு வெளிவந்த சிலானின் Distant நேர்எதிர் திசையில் பயணிக்கும் இரண்டு ஆண்களைப் பற்றியது. மெஹ்மத் நகரத்தில் வசிப்பவன், பணக்காரன், நடுத்தர வயதினன், படித்தவன், புகைப்படக் கலைஞன், தேர்ந்த ரசனைக்காரன், நாகரீகம் கற்றவன். யூசுப் கிராமத்து இளைஞன், படிப்பறிவற்றவன், ஏழை, வேலை தேடுபவன். இவ்விருவரும் ஒரே வீட்டில் தங்க நேரிடும் நாட்களின் குறிப்பே Distant. பாவப்பட்ட யூசுப்பை மெஹ்மத் நடத்தும் விதம் மோசமானது. அவன் கற்றறிந்த ஞானம் அந்த ஏழை இளைஞனிடம் காட்டும் வன்மத்தில் அர்த்தமற்றுப் போகிறது. புத்தக வாசிப்பும், உலக ஞானமும் நம்மை மேலும் மேலும் பக்குவபடுத்திக் கொள்ளவே. தன்னை பெரும் ரசனைக்காரனாக காட்டிக் கொள்ளும் மெஹ்முத் உண்மையில் பந்தம் என யாருமின்றி தனித்து விடப்பட்டவன். பெருவாழ்விற்குச் சுற்றியுள்ளவர்களிடம் காட்டும் குறைந்தபட்ச அன்பு போதும் என்பதை உரத்துச் சொல்லும் கதை இது.
துரோகம் என்கிற ஒற்றைச் சொல்லைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட சிலானின் திரைப்படம் Climates (2006). மகிழ்ச்சியற்ற காதலர்கள் இருவரின் சுற்றுலா பயணம் ஒன்றில் துவங்குகின்றது கதை. இருவருக்கும் இடையே நிலவும் மௌனம் அவர்களின் கடந்த காலத்தின் மிச்சம். வேறொரு பெண்ணுடனான உறவின் காரணமாக அவன் மீதான தீராத கோபம் அவளை விடாமல் துரத்துகிறது. அந்த கடற்கரை நகரில் இருவரும் பிரிவதெனப் பேசி விடைபெறுகின்றனர். தொடரும் வசந்த காலத்தில் அத்தனைக்கும் காரணமான அப்பெண்ணை அவன் மீண்டும் தொடர்பு கொள்கிறான். குற்ற உணர்ச்சி ஏதுமற்று தொடரும் நாட்களில் நிலவும் வெறுமை அவனை மீண்டும் காதலியை தேடிச் செல்லச் செய்கிறது. பனிக்காலத்தில் அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொள்கின்றனர். தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று பொய் சொல்லி அவளைச் சமாதானம் செய்கிறான். ஆனால் உணர்ச்சி பீரிட பெருங்குரலெடுத்து அழுதிடும் அவளின் உண்மைப் பிரியம் முன்னே அவன் தோற்றுப் போகிறான். துரோகத்தை மையப் புள்ளியாக வைத்து சிலான் வடித்திருக்கும் இக்காவியம் ஆண் – பெண் உறவின் பொருட்டு நிகழும் பகடை ஆட்டங்கள் தான் எத்தனை வகை என்பதை உணர்த்துவது. Climates திரைப்படத்தின் மூலம் தான் ஓர் அற்புதமான நடிகனும் கூட என்பதை நிருபித்து உள்ளார் சிலான். சிலானின் மனைவியும் இயக்குநருமான எப்ரூ சிலான் இப்படத்தில் நாயகி வேடமேற்றுள்ளார். துரோகத்தின் வலையில் சிக்கிக் கொண்ட காதலர்களின் நிலையை இந்த ஆதர்ச தம்பதிகள் திரையில் வெகு இயல்பாக வெளிக்கொணர்ந்துள்ளனர்.
ஒருவனின் சுயநலத் தேவைக்காய் சிதைவுறும் ஒரு குடும்பத்தின் கதை சிலானின் Three Monkeys (2008). தெளிந்த நதியாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை ஓரிரவில் முற்றிலுமாக தடம்புரண்டால் என்னாகும். பணமானது ஒரு குடும்பத்தை ஆட்டிப் படைப்பதை முடிந்தவரை எதார்த்த மொழியில் அணுகியிருக்கிறார் சிலான். பணத்தின் தேவை அல்லது அதன் மீதான ஆசை ஒருவனை செய்யாத கொலைப் பழியை ஏற்றுக் கொள்ளச் செய்கிறது, நடுத்தர குடும்பத்தலைவியை கணவனுக்குத் துரோகம் செய்யத் தூண்டுகிறது. சிலானின் பிற படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களம் இதில். சஸ்பென்ஸ் த்ரில்லரை போலத் துவங்கும் கதை மெல்ல வேகம் குறைந்து பொருளாதார சிக்கலில் தவிக்கும் ஒரு குடும்பத்தைச் சுற்றிச் சுழல்கிறது. அதில் இருந்து வெளிவர அவர்கள் தேர்ந்தெடுக்கும் விபரீத முடிவுகள் என நீள்கின்றது. துரோகத்தின் கதை இதிலும் உண்டு. அதன் தொடர்ச்சியாய் நீளும் குற்றஉணர்வும், தடுமாற்றங்களும் கூட.
2011ம் ஆண்டு வெளிவந்த Once up on a time in Anatolia சிலானின் மாஸ்டர் பீஸ் என அறியப்படுகிறது. அனேக பாராட்டுகளோடு தீவிர விவாதங்களை முன்னெடுத்த திரைப்படம். கொன்று புதைத்த பிணத்தை அடையாளம் காட்ட குற்றவாளியோடு பயணிக்கும் மருத்துவர், வக்கீல், போலீஸ் அதிகாரி மூவரின் ஓரிரவு பயணமே கதை. அவர்களுக்குள் நிகழும் நீண்ட உரையாடல்கள் தத்துவம், திருமண வாழ்க்கை, அலுவல், உலக நெறிமுறைகள் என பலவற்றையும் பேசிக் கொள்கின்றனர். அவர்களின் பேச்சின் வழியே ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசியமும் நமக்கு புலப்படுகின்றது. வன்மமும், குரூரமும, இரக்கமும் கொண்டு அலைபாயும் ஆண் மன சலனங்களை மிக நுட்பமாய் இத்திரைப்படம் விவரிக்கின்றது. இரவில் விளக்கு வெளிச்சத்தில் அழகிய பெண் முகத்தை கண்டதும் வெடித்து அழுதிடும் கொலைக் குற்றவாளி, அவள் உருவில் கடவுளைக் கண்டவனைப் போல நடந்த உண்மையை போலீசிடம் விளக்கிடும் காட்சி ஒன்று போதும் சிலானின் மேதமையை விளக்க. கலங்கிய நதியைப் போல அத்தனை அழுக்குகளையும் தாங்கிச் செல்கிறது வாழ்க்கை என்பதை இத்திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது.
சென்ற ஆண்டு வெளிவந்து பலதரப்பட்ட விமர்சனங்களை சந்திந்த சிலானின் Winter Sleep அவர் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ள படமே. புகழ் பெற்ற எழுத்தாளன் – திரைக்கலைஞன் – ஊரில் மதிப்புமிக்க நபர் – பெரும் பணக்காரர் எனப் பல முகங்கள் கொண்ட முதியவர் ஐதீன் தன்னைக் குறித்துத் தானே உருவாக்கிக் கொள்ளும் பிம்பம், அதைக் கட்டிக்காக்க சிரித்த முகத்தோடு விவாதங்களில் ஈடுபட்டு தோற்கும் பொழுதுகள், இருள் சூழ்ந்த அவரது தனிமை பொழுதுகள் என இத்திரைப்படம் வாழ்வில் தோல்வியுற்ற ஒருவனின் இறுதி நாட்களின் சில பக்கங்களைப் புரட்டிச் செல்கின்றது. அவரது தங்கை, மனைவி துவங்கி அனைவருக்கும் ஐதீனை வெறுக்க ஒரு காரணம் இருக்கிறது. படித்த படிப்பும், எழுதும் எழுத்தும் அர்த்தம் பெறுவது நம்மை சுற்றியுள்ளவர்களின் நன்மதிப்பை பெற்றால் தான் என்பதை அவர் புரிந்து கொள்ள ஓர் ஆயுள் தேவைப்படுகிறது. மனிதர்களுக்கு ஏற்ப, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப முகமூடியை மாற்றிக் கொள்ளும் ஐதீனின் நாடகம் சோர்வுற்று முடிவுறுகிறது.
நிலப்பிரபுத்துவக் காலத்தை போல இன்றும் பணக்காரர்களின் பிடியில் சிக்கியிருக்கும் அடித்தட்டு மக்களின் குரலாய் ஒரு குடும்பத்தின் கதையும் இதிலுண்டு. குளிர்காலமும், மழைக்காலமும், பனிக்காலமும் மைதீனின் மனமாற்றங்களோடு சேர்ந்து பயணிக்கின்றன. ஒரு விதத்தில் ஐதீன் கதாபாத்திரம் Distant திரைப்படத்தில் வரும் மெஹ்மூத்தை ஞாபகப்படுத்துவது. உலக ஞானத்தை மீறிய ஒன்று பிறரின் அன்பைப் பெறுவது என்பதை நினைவூட்டும் கதாபாத்திரங்கள்.
சிலான் மிகச் சிறந்த புகைப்பட கலைஞர். அவரது இணையதளத்தில் கொட்டிக் கிடக்கும் புகைப்படங்கள் சொல்லும் அவர் திறனை. மிகச் சிறந்த புகைப்படக்காரன் இயக்குநரானால் உண்டாகும் மாயாஜாலம் என்னவென்பதற்கு சிலானின் திரைப்படங்களே சாட்சி. துருக்கி தேசத்து நகரங்களும், கிராமங்களும், நதிகளும், மலை வெளிகளும் இவர் கேமராவின் மந்திரத்தால் பிரம்மாண்ட அழகு பெற்று விரிகின்றன. அதிலும் குறிப்பாக அனடோலியா பகுதி மீதான சிலானின் காதல். Distant, Winter Sleep உள்ளிட்ட இவரின் பல படங்கள் அப்பகுதியில் படமாகப்பட்டுள்ளன. கனவுகளுக்கு உயிர் கொடுத்ததை போன்ற கேமரா கோணங்கள் துருக்கி தேசத்தின் மீதான காதலை கூட்டுவது.
பருவ மாற்றங்களை தம் கதையோடும், கதாபாத்திரங்களின் மனநிலையோடும் இணைப்பதில் சிலானுக்கு நிகரில்லை. உதாரணமாக Distant திரைப்படம் பனிக்காலத்தில் துவங்கி வசந்த காலத்தில் முடிகிறது. பனியுருகிக் கரைவதைப்போல மெஹ்மத்தைச் சுற்றி இருந்தவர்கள் அவனை விட்டு விலகிப் போகின்றனர். போலவே Climates திரைப்படத்தில் வேனிற்காலத்தில் பிணக்கு கொண்டு விலகும் காதலர்கள் மீண்டும் பனிகாலத்தில் சந்தித்துக் கொள்கின்றனர். இம்முறை உணர்ச்சிகள் அற்று உருகி ஓடத் தயாரான மனநிலையில் இருக்கிறார்கள். Winter Sleep திரைப்படத்தில் பனிக்காலமும், குளிர்காலமும் இரு கதாபாத்திரங்கள் எனலாம்.
சிலானின் படைப்புகள் எதார்த்தத்தை மீறிய ஆச்சர்யங்கள். தனிமை, துரோகங்கள், ஏமாற்றம் என மனவெளியில் நிகழும் சின்னத் தடுமாற்றத்தைக் கூடக் கச்சிதமாகக் காட்சிப்படுத்தி ஆச்சர்யபடுத்தும் பெருங்கலைஞன். சிலானின் கதையுலகம் பெரும்பாலும் உறவுகளுக்கிடையேயான மனப் போராட்டங்களை குறித்தவை, இருப்பினும் அதை மிகை உணர்ச்சியில்லாமல் எதார்த்தத்தின் வழி விவரிக்கிறார். மெஹ்மதை போல, யூசப்பை போல, ஐரீனைப் போல சிலான் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வழியேயும் நமக்குப் பெற்றுக் கொள்ள எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன. தன் படைப்புகளின் வழி பார்வையாளனை மிகுந்த சிந்தனைக்கு உட்படுத்தி, சில தெளிவுகளை முன்வைக்கும் வகையில் சிலான் – நம் காலத்தின் கலைஞன் என்பதில் சந்தேகமேயில்லை.
***