7
பைத்தியக் காலம்
நர்சிம்
அதை சென்னையில் இருக்கும் ஒரு பிரதான சாலை என்று சொன்னால் அபத்தமாய் இருக்கும். நெரிசலும் அழுக்கும் ட்ரை–சைக்கிளில் ஏற்றப்பட்ட சரக்குகளும், பைத்தியக்காரர்களின் ஓட்டமும் எனத் திமிறும் சாலை. எவ்வளவு கவனமாக ஓட்டினாலும் வாகனத்தில் கீறல் விழுவது உறுதி. ஒரு காலத்தில் இந்தச்சாலை அவனுக்கு வாழ்வின் அற்புதமான தரிசனங்களைக் காணக் கொடுத்திருந்தது. எல்லா அற்புதங்களும் ஏதேனும் ஒரு கட்டத்தில் அபத்தமாகத் திரிபடும் நிலை ஏற்படும். ஆனால் அவனுக்கு இன்னமும் அந்தச் சாலைக்குள் நுழைந்துவிட்டால் ஓர் இனம்புரியாத அற்புதத்தன்மை மிதக்கச் செய்யும். மிதந்து எதிரே இருந்த ‘மால்’ எனப்படும் பிரம்மாண்ட வணிக வளாகத்துள் நுழைந்தான்.
ஒன்றைப் பிரம்மாண்டமாகக் காட்டுவது அதன் உட்புற உயரம்தான். அந்தக் கட்டிடத்திற்குள் நுழைந்ததுமே அதன் உட்புற விதானத்தின் உயரம் பரவசம் கொள்ளச் செய்துவிடும். அவ்வளவு உயரமான மேற்கூரை ஒருவித ராட்ஸதத் தன்மையை உணர்த்திவிடுவதில் துவங்கும் ஆச்சர்யத்தை ஒவ்வொரு தளமும் அப்படியே தக்கவைத்துக் கொண்டு விடுகிறது என்று தோன்றியது அவனுக்கு. மன்னர்களைப் பிரம்மாண்டமாய்க் காட்டியது அவர்களின் அரியணையை விடவும் அதற்கு மேல் ஒய்யார உயரத்தில் இருந்த மேற்கூரைதானோ?, அதனால்தான் எல்லா மதக்கடவுள்களின் வசிப்பிடங்கள் கோபுரங்கள் என்ற பெயரில் உள்ளுக்குள் அவ்வளவு உயர மேற்கூரைகளோ என யோசித்தபடி அண்ணாந்து பார்த்தான்.
எஸ்கலேட்டரில் ஏறத் தயங்கி நிற்பவர்கள் பதட்டத்தை விளையாட்டு போன்ற பாவனையில் மறைத்து ஏற முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு தன்னுடைய ஆரம்பக்கால எஸ்கலேட்டரில் தடுமாறி ஏறிய அனுபவங்கள் நினைவிற்கு வர மறுத்தது. அவர்களை ஒரு நாகரீகப்பார்வையில் ஒதுக்கி மேலே ஏகினான்.
மூன்றாவது தளத்தில் இருந்து மேலே பார்த்தபோதும் மேற்கூரையின் பிரம்மாண்டம் அப்படியே இருந்தது. கீழே பார்த்தால், எல்லாம் சிறிதாக அழகாகத் தெரிந்தன. நாம் உயரம் அடைந்து நமக்கு கீழே இருக்கும் உலகத்தைப் பார்த்தால், அழகாகத் தெரியத் துவங்கிவிடுகிறது எல்லாமும் என்று நினைத்துக் கொண்டான். இன்னும் மேலே போக வேண்டும்.
மேல்தளம் ஹோவென்ற சத்தத்தோடு திறந்தது. விதவிதமான மக்கள் விதவிதமான உணவுப்பொருட்களை ஒரேவிதமாய் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்களை மெல்லக் கடந்தவன் ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு அமர்ந்தான். எப்போதும் அந்த மூலையில்தான் அமர்வான், அவளோடு. ஆனால் இப்பொழுதெல்லாம் இப்படித் தனியாகத்தான். இந்தத் தனிமை அவன் விரும்பி ஏற்ற ஒன்று. அதன் ஒவ்வொரு துளியையும் ரசித்துக் குடித்தான்.
காலம் அவனை அங்கிருந்து எழுப்பி அழைத்துச் சென்றது. அவன் ஏன் அங்கிருந்து எழுந்தான் என்ற பிரக்ஞையேதுமின்றி எழுந்து காலிப்பாட்டிலை கரடியின் பிளந்த வாய்க்குள் போட்டுவிட்டு, கீழே இறங்கினான். நடந்தான். அங்கிருந்த திரையரங்கத்தின் வாயிலில் ’நுழையலாம்’ எனும் கட்டளைக்குக் காத்திருந்தார்கள் சிலர். அவன் பார்க்கவேண்டிய படத்தின் காட்சிக்கு இன்னும் பதினைந்து நிமிடங்கள் என்பதால் இன்னும் நடந்தான். இறங்கினான்.
ஒரு கணம்தான். நாகம் கொத்த எடுத்துக்கொள்ளும் ஒரு நொடிக்கும் குறைவான கணத்தில் அக்காட்சியை அவன் கண்கள் பிரதி எடுத்துக்கொண்டன. அவள்தானா? அவள்தான். தன் கணவனுக்குக் காலணிகளைத் தேர்ந்தெடுத்துக் காட்டிக்கொண்டிருந்தாள். அவன் நிராகரிக்க நிராகரிக்க சளைக்காமல் வெவ்வேறு என அதே குதூகலம். அவளை மீண்டும் அவன் பார்த்தது அவள் வயிறு மேடிட்டு இருக்கிறதா என்பதைப் பார்க்கத்தானேயன்றி அவளின் கணவன் எப்படி இருக்கிறான் என்பதை அறிய அல்ல. ஆனாலும் பார்த்தான். ஜீன்ஸ் லேசாகக் கிழிபட்ட நவீனம், மீசை தாடி ஏதுமற்ற மழுமழுமுகத்தில் நவநாகரீகமாய் இருந்தான்.
காலம் அன்றைக்கான தன் வேலையைச் செய்திருந்தது. இவ்வளவு பெரிய நகரத்தில் ஒருவரையொருவர் காணக்கொடுக்காமலே வைத்திருக்கவும் அதற்குத்தெரியும். இத்தனை நாள் அப்படித்தானே வைத்திருந்தது.
திரையரங்கம் செல்ல வேண்டியது மறந்து, தானாக இறங்கிக் கொண்டிருந்தான், தானியங்கியில்.
இதே காலம்தான் சிலவருடங்களுக்கு முன்னர், எங்கிருந்தோ அவளை அடித்துக்கொண்டு வந்து அவன் முன் நிறுத்தியது. அதற்குப்பிறகு அவனை சதா அவள்பின் நிறுத்தியது.
அந்த நெரிசலான வீதியில் அவள் நடந்து வரும்பொழுது ஒரு பைத்தியக்காரன் ஏதோ கேவலமான அங்க சேட்டை செய்து அவளைத் துரத்த, ஓடியவளை அந்தப்பக்கமாக கடந்த இவன் காத்து அந்தப் பைத்தியத்தை அடித்து விரட்டியதில் துவங்கியது அவர்களுக்கான பரிச்சயம். அதன்பிறகு ஒவ்வொரு முறை அவளை அவன் ஏற்றிக்கொள்ள வரும்பொழுதும் அந்தப் பைத்தியம் அவனை முறைத்துவிட்டு பயந்து ஓடுவான். அவன் பெருமையாய் அவளைப் பார்த்துச் சிரித்துக் கொள்வான்.
அதிகாலை, இளமாலை, நடுஇரவு, இசை, பயணம், குழந்தை, முதியோர், யானை, ரயில், சூரியன், நிலா என எல்லாவற்றையும் ஒரு பெண்ணால் அப்படி ரசிக்க முடியுமா? எதைப்பார்த்தாலும் இப்படிக் குதூகலம் அடையுமா மனது? அவளுடைய ரசனையை ரசிப்பதே அவனுக்குப் போதுமானதாய் இருந்தது. ரயிலும் பேருந்தும் ஒரே நேர்க்கோட்டில் செல்வதைப் பார்ப்பதற்காகவே பாரிஸ் கார்னர் அருகில் அழைத்துப்போகச் சொல்லுவாள். அப்படிப் போவதை ஒரு குழந்தையைப்போல் பார்த்துக் கைதட்டிச் சிரிப்பாள்.
இப்படி, ஆரம்பத்தில் அவனுக்கு விநோதமாகப் பட்டவைகளை இப்பொழுது அவன் தனியாகச் சென்று பார்த்து அனுபத்து வருகிறான்.
குறிப்பாய் இரவை அவள் எதிர்கொள்ளும் விதம் அவனுக்கு வாழ்க்கையின் வசீகரத்தைப் புரிய வைத்தது. அதற்கு முன்னர் எத்தனையே இரவுகள் வேலை முடிந்து வீட்டிற்குப் போவான். அதில், இவ்வளவு தாமதமாகப் போகிறோமே என்ற அலுப்பும் சுயகழிவிரக்கமும் மட்டுமே இருக்கும்.
ஒருநாள் அவளிடமிருந்து வந்து குறுஞ்செய்தியின் பொருட்டு, அவள் அலுவலகத்தில் இருந்து விடுதியில் விடவேண்டும் என்பதற்காகக் காத்திருந்தான். அவன் கண்களிலிருந்த தூக்கம், சோம்பல் அத்தனையையும் அவளிடமிருந்து வந்த ‘ஹே’ எனும் உற்சாகக் குரல் போக்கிவிட்டிருந்தது. அந்த நேரத்தில் உதவிக்காக அழைத்தமைக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டே காருக்குள் அமர்ந்தவளின் குரலில் அந்த இரவிலும் அவ்வளவு உற்சாகம், சுகந்தம். பாட்டை சத்தமாய் வைத்துக்கொண்டே அன்றைய நாளின் தாமத்திற்கான காரணத்தைச் சொல்லி, அதற்கு நன்றியும் சொன்னவளை ஆச்சர்யமாகப் பார்த்தான். இரவின் வீதிகளில் அப்படி அவனோடு பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காகத்தான் அந்த நன்றி என்று அவள் சொன்ன நொடியில் அவன் கண்கள் விரியத் தொடங்கி இருந்தன.
புதிய பார்வையும் கோணமும் அவன் கண்களுக்குப் பழக ஆரம்பித்த நொடி அது.
அவள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கத் தயங்கியவள், மெல்ல அவன் மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்தாள். அது முதல் தொடுகை என்று அவன் உணர்ந்து கொண்டிருக்கும் பொழுதே சற்றும் தயங்காமல், அந்த இரண்டு மணி இரவை இன்னும் கொண்டாட வேண்டும் என்று சற்றும் தயக்கம் இல்லாமல் அவனிடம் சொல்லி, அவன் கையைப் பிடித்து ஸ்டியரிங்கில் வைத்து “போ” என்பது போல் சைகை செய்துவிட்டு மகாராணி போல இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கையைக்கட்டிக்கொண்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள். இரவின் மஞ்சள் ஒளி வெளிச்சத்தில் அவளின் அந்தச் சிரிப்பு ஒரு புகைப்படம் போல் அவன் கண்களுக்குள் உறைந்துபோனது.
அவள் போகச்சொன்ன இடம் பாரீஸ் கார்னர். அழுக்கும் நெரிசலும் சிறுவியாபரமுமாய் வெறுக்கவைக்கும் இடத்தை அந்த இரவில் அவள் அவனுக்குப் புதிதாய் அறிமுகப்படுத்தினாள். பழைய கட்டிடங்களின் பிரம்மாண்ட அழகை அந்த இரவு முதல்முறை அவனுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது. அவளின் குதூகல வர்ணனைக்காக மீண்டும் மீண்டும் அந்த வெற்றுச்சாலையை சுற்றி வந்தான். ‘அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்’ என்ற பாடலை ஹம் செய்துகொண்டே இந்த இடம்தானே அது என்றவளிடம் தலையசைத்துச் சிரிப்பதைத் தவிர அவனுக்கு வேறொன்றும் தோன்றவில்லை.
அவனை இரவின் ரசிகன் ஆக்கியிருந்தாள். மின்விளக்குகளின் வரிசையை எந்தக்கோணத்தில் பார்த்தால் பறவையின் சிறகுகள் போல் இருக்கும் என்பதில் ஆரம்பித்து இருள்நிறத் தார்ச்சாலையின் வளைந்து நீளும் அழகோடு பேசுவது வரை அவனுக்குப் பழகிக்கொடுத்தாள். அவன் தோளில் அவள் இயல்பாய் சாயும் பொழுதுகளுக்காக அவளை வெகுதூரம் கூட்டிச் சென்றான், ஒவ்வொரு முறையும்.
ஒருமுறை கோயில்களின் தொன்மம் குறித்துப் பேசிக்கொண்டே அக்கோயிலை அடைந்திருந்தார்கள். இறங்கியதும் உள்ளே ஓட்டமாக ஓடியவள் அங்கிருந்த மாட்டுச்சிலையின் காதில் ஏதோ சொன்னாள்.
அதைப்பார்த்துச் சிரித்தவன், நந்தியின் காதில்தான் சொல்வார்கள். இது கோமாதா என்றான். இரண்டு சிலைகளும் ஒருபோலத்தானே இருக்கிறது என்பதுபோல் பார்த்தவளிடம், நந்தியின் வலது கால் தரையில் ஊன்றி எழுவதற்கு ஏதுவாக இருக்கும், கோமாதாவின் கால் நன்கு உள்நோக்கி மடங்கி இருக்கும் என்றும் விவரித்தான். ஆச்சர்யமாகி, நந்தி மற்றும் கோமாதா சிலைகளை ஆய்ந்து உறுதி செய்துகொண்டவள் தோள்களைக் குலுக்கி, சிறுவித்தியாசம்தானே அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம் என்றதும் சிரித்துவிட்டான்.
அவர்களின் எல்லாச் சந்திப்புகளின்போதும் அவன் மீசையை அவ்வளவு சிலாகிப்பாள். அவனுக்கு கர்வமும் வெட்கமும் கலந்து வெளிப்பட அதைப்பார்த்துச் சிரித்துக்கொண்டே அவன் மீசையைப் பிடித்து இழுப்பாள். வெட்கிச் சிவக்கும் கன்னம். இருவருக்கும்.
எதிர்பாராத சந்திப்பை நட்பாக மாற்றியவளும் அவளே. அந்த நட்பை, மெல்ல அடுத்தக் கட்டம் நோக்கி முன்னேறச் செய்தவளும் அவளே. அப்படித்தான் ஒருநாள், அவன் அலுவல் நிமித்தம் தஞ்சாவூர் செல்லவேண்டியிருப்பதாகவும், தான் வெளியில் இருந்ததால் அவளைவிட்டு உடனே அவன் ரயிலில் செல்வதற்கு முன்பதிவை செய்யுமாறும் பணித்தான். சரியென்றவளிடம் இருந்து சற்றைக்கெல்லாம் ஒரு குறுஞ்செய்தி வந்தது. லூசாப்பா, காரில் குதூகளமாய்ச் செல்லாமல் ரயிலில் போகிறேன் என்கிறாயே என்ற அந்தச்செய்திக்கு உடனடியாக, அவ்வளவுதூரம் தனியாகச் செல்வதைவிடவும் மோசாமான முடிவு வேறொன்றும் இருக்காது என்ற அவனின் பதிலுக்கு வந்த அவளின் பதில் நல்ல ஆங்கிலத்தில் இப்படியாக இருந்தது, “யார் சொன்னது நீ தனித்து விடப்பட்டவன் என்று? நான் இருக்கிறேன்”.
அவ்வளவுதான். அவன் “அத்தனைக்கும் ஆசைப்படும்” ஒரு சந்நியாசியைப்போல சம்மதித்து இருவரும் தஞ்சை நோக்கிக் கிளம்பினார்கள். சிறுபிள்ளையின் குதூகலம் அவள் முகத்திலும் தெரிவையின் தெளிவு உடலிலும் குடிகொண்டிருந்ததாக நினைத்துக்கொண்டான். அவனின் அனாயசமான ஓட்டும்திறனை வியந்தோதியவள், அவன் இடது தோள்பட்டையில் சாய்ந்துகொண்டே, ஒரு மன்னன் தன் குதிரையின் மீது வைத்திருக்கும் ப்ரேமையையும் கட்டுப்பாட்டையும் போல் அவன் கார் ஓட்டும் லாவகம் இருப்பதாகச் சொன்னதும், அவனிடம் நளினமும் வேகமும் சேர்ந்துகொண்டது. அவளின் பிடிப்பும் இறுகியது.
தஞ்சையில், அவன் அலுவலக வேலை முடியும்வரை தான் தஞ்சை கோயிலில் இருப்பதாகச் சொன்னவள், கோயிலின் முகப்புத் தெரிந்ததும் அவளின் பெரிய கண்களை அகல விரித்து ஆச்சர்யம் தாங்கி, அவளின் வழக்கமான ‘வாவ்வ்’களோடு, அவனை விட்டு விலகி இறங்கி கிட்டத்தட்ட கோயில் நோக்கி ஓடத்துவங்கினாள். இவளின் இந்த ரசிக்கும் ஹார்மோன்கள் எங்கு எப்படி உற்பத்தியாகின்றன என யோசித்துச் சிரித்துக்கொண்டவன், ஓடும் அவளின் பின்னழகை நின்று ரசித்துவிட்டுக் கிளம்பினான்.
வேலையில் மனம் லயிக்கவில்லையென்ற உணர்ந்த நொடியில் சட்டென முடித்துக்கொண்டு சடுதியில் கோயிலை அடைந்துவிட்டிருந்தான். கோயிலுள் நுழையும்போதே அதன் பிரம்மாண்டமும் அமானுஷ்யமும் அவனை ஆட்கொள்ளத்துவங்கியதாக உணர்ந்தான். அவ்வளவு பெரிய நந்தியை நிமிர்ந்து பார்த்தவன், தன்னை ராஜராஜனாகவே பாவித்துக்கொண்டான். எங்கிருந்தோ ஓடிவந்தவள் அவன் பின்னாலிருந்து கட்டிக்கொண்டே, அந்த சிலை குறித்த தன் ரசிப்பை அடுக்கத்துவங்கினாள்.
உயர்ந்த கோபுரத்தை பார்த்த பரவசத்தில் இருந்தவனின் தோள்களில் தொங்கியவளின் முகத்தைப் பார்த்தவன் திடுக்கிட்டான். அவள் அழுதிருந்தது போல் தெரிய பதறியவனைப் பார்த்துச் சிரித்தாள்.
கோயிலின் நீண்ட வளாகத்தில் நெடும்மெளனத்தோடு நடந்தார்கள். அவ்வளவு சிலைகள். அத்தனை நேர்த்தியான வரிசை. எங்கு பார்த்தாலும் பிரம்மாண்டம் என மிதப்பில் இருந்தவனை நோக்கி மெல்லச் சொன்னாள், அவனைப்போலவே அவளும் காதலா காமமா நட்பாயென்ற குழப்பம் தாண்டி நேசிப்பின் உன்னதம் உணர்ந்ததாயும் ஆனாலும் தன் தந்தையிடம் இருந்த வந்த தொலைபேசி அழைப்பும் அவள் திருமணம் குறித்த தகவலும் என பேசிக்கொண்டே சென்றவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான் அவன்.
தந்தையா, ரசிக்கும் வாழ்க்கையா என்ற போராட்டமனநிலை அவளை எங்கு அழவைத்துவிடுமோ என்று பார்த்துக்கொண்டிருந்தவனை நோக்கி அழும் குரலில் என்ன செய்வது என்பதாகக் கேட்டாள். பிரகாரத்தைச் சுற்றி மீண்டும் அந்த நந்தியின் முன்னர் நின்று கொண்டிருந்தார்கள் அவனும் அவளும்.
இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு அந்த நந்தியை நிமிர்ந்து பார்த்தவன் அவனையும் அறியாமல், அவள் ரசனையென்பது நதியின் நளினம் போன்றது என்றும் ஓடும் திசைகளில் இருக்கும் அற்புதங்களை ரசித்துக்கடக்கும் வல்லமை அந்த நதியைப் போலவே அவளுக்கும் இருக்கிறது என்றும், அதனால் தந்தை சொல் கேட்பதே சாலச்சிறந்தது என்றும் தெளியவைத்தான். ஒரு நொடி திகைத்தவள், தன் வாழ்வின் ஆகச்சிறந்த ஆசையாக அவள் நினைத்துக்கொண்டிருந்தது, நிறைமாத கர்பிணியாக அவனோடு வணிகவாளகத்திற்குள் வலம் வரவேண்டும் என்பதாக இருந்தது என்றும் ஆனாலும் அப்பாவை தவிக்க விடுவது தவறு என்றும் உணர்ந்து சொன்னவள் அவன் தோளில் சரிந்து கொண்டாள்.
லேசாகச் சாய்ந்தவன் அவள் தலையின் மீது தன் தலையைப் பொருத்திக்கொண்டு அந்த உயர்ந்த கோபுரத்தைப் பார்த்தான். இரு தலைகளும் ஒட்டி நிற்கும் அவர்களின் நிழல் அவர்கள்முன் ரம்மியமாய் படர்ந்தது. படர்ந்ததை அவள்தான் சிறு கேவலுடன் அவனுக்கு சைகையில் சுட்டினாள். அதைப் புகைப்படமாக எடுத்துக்கொண்டான். ஆகச்சிறந்த ’நிழற்’படம் அது.
தஞ்சையை விட்டு வெளியேறி, சென்னை வந்ததும், அந்த கோயிலின் பிரம்மாண்டம் அகன்றதும்தான் அவனுக்கு இழப்பின் வலி புரிபட ஆரம்பித்தது. எப்படி அவ்வளவு எளிதாக ஒத்துக்கொண்டான் என்று எவ்வளவு யோசித்தும் அவனால் அந்த அபத்தமான முடிவை உணரவேமுடியவில்லை.
அவளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்ததும் மீசை, நிறம் என அவனோடு ஒப்பிட்டு ஒவ்வொருவரையும் நிராகரிக்கத் துவங்கினாள். அவள் தந்தையின் அன்பிற்கு முன்னர் எதுவுமே பெரிது கிடையாது அவளுக்கு என்பதால், தந்தை கொடுத்த சுதந்திரத்தின் கைமாறாய், தந்தை சொல் மணமகனோடு திருமணம் என்பதையும் குதூகலமாய்த்தான் சொன்னாள்.
அவனோடுதான் திருமணத்திற்குத் தேவையான ஆடையணிகலன்களை வாங்கினாள், குதூகலத்தோடே இருந்தாள். அவனுக்கு மட்டும் ஏதோ ஒன்று கனமாகவே இருந்தது. வழக்கமான பாணியில் கார் ஓட்டமுடியாமல் திணறினான். இரண்டுமுறை சக சாலையோட்டிகளிடம் வசவுகள் வாங்கினான்.
எப்பொழுதும்போல் அவள் இறங்கும் இடம் வந்தது. எப்பொழுதும்போல் சட்டென இறங்கிவிடாமல் இருக்கையில் சாய்ந்து சற்று நேரம் அமர்ந்திருந்தாள். திடீரெனத் திரும்பி, அவன் கன்னத்தில் பளாரென அறைந்தாள். அவன் மார்பில் புதைந்தழுதாள். அழுது முடித்ததும் நிமிர்ந்தவள் அவன் சட்டையிலேயே முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டாள். தீபம் போல் தீர்க்கமாய் இருந்தது அப்பொழுது அவள் முகம்.
அவளுக்கும் காலத்திற்கும் மட்டும் தெரியும். அது ஏதோ ஒன்றின் இறுதி என்று.
அதன்பிறகு காலம் அவனை இன்றுதான் அவள் முன் நிறுத்தியது. அதுவும் ஒருதலைப்பட்சமாக இவனை மட்டும் பார்க்க வைத்து. ஒருவேளை அவளும் பார்த்திருக்கக்கூடும், ஏனெனில் அவள் சல்லடை போட்டு தேர்ந்தெடுத்து வாங்கிக்கொடுத்த சட்டையைத் தான் அன்றும் அணிந்திருந்தான். அவள் கண்களுக்கு அது பட்டிருக்கும் என்றும் நினைத்துக்கொண்டே அந்த வளாகத்தில் இருந்து வெளிப்பட்டான்.
அவன் போல் மீசை அவள் கணவனுக்கு இல்லையென்றாலும், சிறிய விசயம்தானே, அட்ஜஸ்ட் செய்துகொள்வாள். சுரீரென்று வெயில் கண்ணாடியைத் தாண்டித் தாக்கியது.
எதிர்சாலையில் அந்தப் பைத்தியம் அவனைப் பார்த்துக்கொண்டே இருந்தான். ஏதோ நினைத்தவன் காரை ஓரமாய் நிறுத்தி பைத்தியத்தை நோக்கி நடந்தான். வழக்கம்போல் பயந்து ஓட எத்தனித்த பைத்தியக்காரன் அவன் கண்களைப் பார்த்து மெல்ல நின்றான். சைகையால் சாப்பிட்டாயா என்று கேட்டவனைப் பார்த்த பைத்தியத்தின் வெடித்த உதடுகள் அனிச்சையாய் வெம்பித் துடித்தன. தெருமுனையில் இருந்த ’பாய்’ கடையில் பிரியாணி பொட்டலம் வாங்கியவன் அந்தப் பைத்தியத்திடம் கொடுத்து உண்ணச் சொன்னான்.
எப்பொழுதும்போல் தன் மொபைல் கான்டாக்ட் லிஸ்ட்டிற்குச் சென்று KANNAMMA என்று பதிந்த எண்களை விரலால் தடவிக்கொடுத்தான்.
ஒரு பைத்தியக்காரன் ருசித்துத் தின்பதை, அருகில் நின்று பார்த்துக்கொண்டிருக்கிறானே என்று சாலையைக் கடக்கும் எல்லோரும் விநோதமாய்ப் பார்த்துக்கொண்டே கடந்தார்கள். காலமும்.
***