8
01
இலை நரம்புகளில் விரவிக்கிடந்த
கிளைக்குழைவில் தேங்கிய
கனி நுனி தளும்பிய
மலர்க்குழி மல்கி நிறைந்த
மரம் பின்னிய கொடியிடைக் கிடந்த
வேரடி மண் நெகிழ்த்திய
எல்லா நீரும்
அதன் கனிந்த ஈரப்பதமும்
மழை முடிந்த மறுநாளில்
காற்றிலேகி விடுகின்றன
பாழுங்கண் கொண்டு துளைத்து
இரக்கமற்றுக் கீழிறங்கி
மறையேலெனச் சொல்லி
வெந்நா கொண்டு உறிஞ்சும் சூரியன்
அதிலும் தப்பி
வறளும் தருணம் நோக்கிக் காத்திருக்கும்
நுனி சுருண்ட இலைகளுக்குள்
தப்பிப் பதுங்கிய சிறுதுளி நீர்
சிற்றலை நெளிய மௌனப் பெருமூச்செறிந்தபடி.
*
02
ஒளிர்கிற வெளிச்சத்தில் மிளிர்ந்து
இருளிலொழிகிறது நிழல்
விரிதலையாய் வளிக்கிசைந்து சுழன்றாடி
உனக்கென் கவலை
உனக்கென் கவலையென
ஓங்கிச் சிதற ஒலியலை பதிகிறது
வாழ்தலின் பலி கொண்டலையும்
அற்பச் சிம்மாசனத்தின்
மூலையில் சுருளுற்றுக்கிடக்கும்
இருண்ட நான்
நீயறியாததொன்றில்லை
உயிரின் ரேகையெங்கும்
நுண் வேர்களாய் வலி பரவ
துன்முகம் சூழ
வீழ் பாதையினுள்ளாக
துள்ளத்துடித்தடங்கி
மெல்லச் சரிகிறது சுயம்
வெம்மண்ணின் புதைகுழிக்குள்.
*
03
பின்னிரவிற்ப் படரும் கூதற் காற்றின் வசீகரத்தில்
அலையென எழும்பிப் பரவெளி பாரிக்கும்
மென்னுறுமலுடன் உன் விழிப்பு
வேப்பம்பிசின் வாசனையென
வசீகரித்துச் சப்தமற்ற காலடிகளோடு
உள்ளுக்குள் நடமாடும்
ஞாபகங்கத்தின் பழுப்பு வர்ணங்கள்
நொறுங்கிய கண்ணாடி குவியலுக்குள்
துண்டுக்கொன்றாய் என
கணக்கற்றுக் கொட்டிக் கிடக்கின்றது முகம்
விரல்களின் குருத்திலிருந்து
திரையில் சொட்டிக் கொண்டிருக்கிறது
வேரிழந்த எழுத்துகள்
பறந்தலையும் நினைவுகளை
ஒவ்வொன்றாய்ப் பிடித்ததன்
சிறகுகளைப் பிய்த்துக் கொண்டிருக்கிறாய்.
***