24
போராட்டக்கார்கள் தடைசெய்யக் கோரும் மாதொருபாகனின் அடுத்த பாகங்களான அர்த்தநாரி மற்றும் ஆலவாயன் ஆகிய இரு நாவல்களின் முன்னுரையில் பெருமாள்முருகன் ஒரு சிறு குறிப்பை எழுதிச் சேர்த்திருக்கிறார். புத்தக வெளியீட்டில் அதனை வாசிக்கவும் செய்தார்.
“அய்யா, சாமிகளே, தங்கள் சமூகத்திற்கு ஒரு விண்ணப்பம். இந்த நாவல் என்றல்ல; என் படைப்புகள், எழுத்துக்கள் எல்லாவற்றின் களமும் தமிழகத்தில் உள்ள ஊர்கள கிடையாது. ஏன் இந்த உலகத்தைப் பற்றியே நான் எழுதவில்லை. நான் எழுதுவது எல்லாம் அசுர லோகத்தைப் பற்றித்தான். என் எழுத்தில் வரும் மாந்தர்கள் எல்லாரும் அசுரர்கள். அவர்கள் எல்லாரும் அசுர சாதிப் பிரிவினர். அவர்கள் பேசுவது அசுரமொழி. இந்த லோகத்தில் வசிக்கும் யாரையாவது குறிப்பதாகவோ எந்தச் சாதியையாவது இடத்தையாவது சுட்டுவதாகவோ தோன்றினால் அது மாயை. ஆகவே தயவுசெய்து மாயையிலிருந்து மீண்டு விடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.”
மாதொருபாகன் தொடர்பாகக் கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக பெருமாள்முருகன் சந்திக்க நேர்ந்த மர்ம நபர்களின் செல்பேசி மிரட்டல்களும், நெருக்குதல்களும், மன அழுத்தமும் வருத்தம் அளிக்கக்கூடிய ஒன்று. மனித உறவுகளின் அகச்சிக்கல்களை முன்னிறுத்தும் படைப்புகளை விட, மனித உறவுகளின் வாழ்வியல் பிரச்சனைகளுக்குக் காரணமான புறச்சிக்கல்களை முன்னிருத்தும் படைப்புகளுக்கு சாதிய, மத அமைப்புகளின் பின்னணியில் இயங்கும் அமைப்புகள் எதிர்ப்புக்குரல் எழுப்புவதும் ஆர்பாட்டங்கள் செய்வதும் சமூகப் பின்புலத்தின் இழிநிலையைத் தான் காட்டுகிறது. தமுஎகச போன்ற முற்போக்கு அமைப்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெருமாள்முருகனுக்கு ஆதரவாகக் குரலெழுப்பி உடனடியாக ஆதரவு தெரிவித்தது படைப்புச் சூழலின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
கால இடைவெளியில் ஏதேனும் ஓர் இலக்கியப் படைப்பு – இலக்கியச் சூழலுக்கு வெளியிலும், வாசகச் சூழலுக்கு வெளியிலும் பரபரப்புடன் பேசப்படுவது கவனத்துடன் ஆராயப்பட வேண்டிய ஒன்று. ஒரு கடலோர கிராமத்தின் கதை (தோப்பில் முகமது மீரான்), கருக்கு (பாமா), கோவேறுக் கழுதைகள் (இமையம்), ஆழிசூழ் உலகு (ஜோ டி குரூஸ்) போன்ற நவீன படைப்புகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அந்த வரிசையில், இந்துத்துவ அமைப்புகளின் சார்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் காரணமாக மேற்கூறிய பரபரப்புப் பட்டியலில் மாதொருபாகன் என்ற நாவலும் சேர்ந்திருக்கிறது.
நாவல்கள் தான் இதுபோன்ற பரபரப்புக்குப் பெரும்பாலும் உள்ளாகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது. ஏனெனில் “நாவலானது வாழ்வின் முழுமையைக் குறியாகக் கொள்ளவேண்டும்” என்பது நாவலின் அடிப்படைகளுள் ஒன்று. தனிமனித வாழ்வின் முழுமையானது, அவனை / அவளைச் சார்த்த கலாச்சாரப் பின்னணியுடன் நெருங்கிய தொடர்புடையது. இந்திய கலாச்சாரம் பலநூறு சாதிகளையும், பலநூறு வழிபாடுகளையும் கொண்டது. எனினும் வண்டிச் சக்கரம் போல மதமும் சாதியும் அமைந்திருக்கின்றன.
மதமும் சாதியும் பின்னிப்பிணைந்த நாகங்களுக்கு ஒப்பானவை; கோரத்தை சாத்தியப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தவை; நஞ்சினை சுரக்கும் திசுக்களையும், அதன் நச்சுத்தன்மையைச் சமூகத்திற்குக் கடத்தும் கூரிய பற்களையும் கொண்டவை. அதனால் தான் மதமும் சாதியும் பின்னிருந்து இயக்கக்கூடிய சக்திகளால் கலாச்சாரத்தின் எதிர்பரிமாணங்களைத் தம் படைப்புகளில் யதார்த்தமாகப் பதிவு செய்யும் படைப்பாளிகள் நேரடியாகவே மிரட்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். தொடர்ந்த நெருக்குதல்களுக்கும் ஆளாகிறார்கள். அவர்களது படைப்பினை தடை செய்யக் கோரியும், எழுத்தாளரைக் கைது செய்யக் கோரியும் சாதிய, மத அமைப்புகள் சமூகத்தின் முன் நின்று அந்தப் படைப்பாளிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள்.
கலாச்சாரமானது இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம், சூழலுக்குச் சூழல் மாறக்கூடியது. உதாரணமாக, ஐரோப்பியப் பழங்குடியினர்களில் ஒருவகையினர் பனிமலையில் கூடாரம் அடித்து வாழ்பவர்கள். அவர்கள் வழக்கப்படி வீட்டிற்கு உறவினர் வந்து அன்றைய இரவு தங்கினால், விருந்தினருக்குத் தனது மனைவியை படுக்கைக்கு அனுப்ப வேண்டும். இது அவர்களது தொன்மப்பழக்கம். நமக்கு வேண்டுமெனில் இச்செய்கை அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். இப்பழங்குடியினர்களைப் பற்றி எழுதும்போது இந்த விஷயத்தை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை தற்கால பழங்குடியினர் இந்தப் பழக்கத்தைத் துறந்து நாகரீக வாழ்வை மேற்கொள்ளலாம். வரலாற்றின் வேர் பிடித்துப் பார்க்கும் பொழுது நமக்கு அன்னியப்பட்ட அதிர்ச்சிகள் நிறையவே காத்திருக்கும். அதற்காக வரலாற்றினை இருட்டடிப்பு செய்ய முடியாதே!
வேத காலத்திலிருந்தே நியோக முறை இருக்கிறது. மகாபாரத்தில் கூட அம்பிகையும் அம்பாலிகையும் வியாசனிடமிருந்து விந்துதானம் பெற்றிருக்கிறார்கள். குந்தியும் மாந்திரியும் கூட தமது புதல்வர்களைப் பாண்டுவிற்குப் பெற்றெடுக்கவில்லை. இவையாவும், இந்துத்துவ அமைப்புகள் தேசிய நூலாக அறிவிக்கத் துடிக்கும் பகவத் கீதை இடம்பெற்றுள்ள இதிகாசமான மகாபாரதத்தில் வரக்கூடிய சாரமுள்ள தகவல்கள்.
போலவே, மாதொருபாகன் நாவலிலும் மகப்பேறற்ற தம்பதிகளின் உளவியல் சிக்கல்களை முன்வைப்பதே படைப்பின் மையக்கரு என்று எடுத்துக்கொண்டாலும், குழந்தையற்ற பெண்கள் திருச்செங்கோடு மலைக் கோவிலில் நடக்கும் திருவிழாவில் பரிட்சியமற்ற ஒருவனிடமிருந்து சடங்கின் பெயரால் விந்து தானம் பெறுவது தான் நாவலின் துணை மையக்கரு. நாவல் இதனை நுட்பமாகப் பதிவு செய்கிறது.
அதனால் தான் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி போன்ற இந்துத்துவ அமைப்புகள் பெருமாள்முருகனுக்கு நெருக்குதல் கொடுக்கிறார்கள். புத்தகப் பிரதிகளைத் தீயிட்டுக் கொளுத்தியும், எழுத்தாளரின் உருவத்தினை செருப்பால் அடித்தும் போராட்டம் செய்திருக்கிறார்கள். மாதொருபாகன் நாவலைத்தடை செய்யக்கோரியும், இந்நாவலின் அடுத்த பாகங்களான ஆலவாயன் மற்றும் அர்த்தநாரி ஆகிய நாவல்களின் முதற்பதிப்பை வெளியிடத் தடை செய்யக் கோரியும் குரலெழுப்பி ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் செய்கிறார்கள்.
நிலப்பரப்பின் நீட்சியைப் பதிவு செய்வதினூடே, எளிய மனிதர்களின் வாழ்வையும் கலாச்சாரத்தையும் பதிவு செய்வது பெருமாள்முருகனின் தனிச் சிறப்புகளில் ஒன்று. நிழல்முற்றம் தவிர்த்து, ஏறுவெயில், கங்கணம், கூள மாதாரி, மாதொருபாகன், ஆளண்டாப் பட்சி, பூக்குழி ஆகிய எல்லா நாவல்களிலும் இந்தச் சிறப்பினை நாம் காண முடியும். இப்படைப்புகள் யாவும் கிராமங்களையும், சிறு நகரத்தையும் களமாகக் கொண்டவை. பல்வேறு காலகட்டங்களில் நிகழ்பவை. விவசாயிகளும், கூலியாட்களும், அந்தந்தக் கால கட்டத்திற்கேற்ப வாழ்வினை எதிர்கொள்ளும் சிறுவியாபாரிகளுமே பாத்திரங்களாக உலவுகிறார்கள்.
மாதொருபாகன் 2010-ம் ஆண்டு வெளியான, சைவ கலாச்சார வழிபாட்டுடன் தொடர்புடைய ஆவணப் புனைவு. இந்நாவலின் ஆங்கில மொழியாக்கம் கடந்த ஆண்டு வெளியாகி, மிக விரைவில் இரண்டாம் பதிப்பும் கண்டு வாசக கவனத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்புதினத்தில் வரும் மையப் பாத்திரங்களான காளியும் பொன்னாவும் குழந்தையில்லாத் தம்பதிகள். இவர்களது ஆழ்மனச் சிக்கல்களையும், அதற்கான தீர்வினை நோக்கியும் வாய்மொழி வரலாற்றினை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பிரதிபலிக்கும் படைப்பாக சர்ச்சைக்குள்ளான இந்நாவல் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் நடப்பதாகக் கதையும் பின்னப்பட்டுள்ளது. காளியும் பொன்னாவும் ஒருவரையொருவர் அளவு கடந்து நேசிக்கிறார்கள். தான் உயிருக்குயிராக விரும்பும் மனைவியைக் குழந்தைச் செல்வம் பெறுவதற்காக வேண்டி இன்னொருவனிடம் உடலுறவு கொள்ள அனுப்புவதைக் காளியின் மனம் ஏற்க மறுக்கிறது. இத்தனைக்கும் காம வேட்கையில் முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டு தனது பதின்பருவங்களில் சாமியாகச் சென்றவன் தான் காளி. குழந்தை இல்லாததைக் காரணம் காட்டித் தன்னிடமிருந்து காளியைப் பிரித்து விடுவார்களோ என்று உள்ளுக்குள் குமுறுகிறாள் பொன்னா. வெளிபடுத்த முடியாத எண்ணங்களால் அவர்களது உறவில் மர்ம விரிசல் ஏற்படுகிறது. இதனைப் பயன்படுத்தி பொன்னாவை 14-ம் நாள் தேர்த்திருவிழாவிற்கு அனுப்பிவிடுகிறார்கள்.
திருச்செங்கோடு மலையில் அர்த்தனாரியாக சிவபெருமான் அருள்பாலிக்கிறார். அர்த்தனாரியாக சிவபெருமான் அருள்பாலிக்கும் ஒரே தெய்வத் திருத்தலமும் இதுதான் என்பது கோவிலின் தனிச் சிறப்புகளுள் ஒன்று. இந்த மலைக்கோவிலில் நடக்கும் 14 நாள் தேர்த் திருவிழாவானது பல்வேறு கலாச்சாரக் கூறுகளை உள்ளடக்கி இருந்தாலும், 14-ஆம் நாளின் இரவுச் சடங்கு கல்யாணமாகியும் குழந்தையில்லாத பெண்களுக்கான விழா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒருநாள் மட்டும் குடும்பத்தார் அவளைத் தனித்து விட்டு விடுகிறார்கள். இரவுநேரத் திருவிழாவில் சுற்றித் திரியும் அவள், தனக்குப் பிடித்த ஒருவனைத் தேர்வு செய்து அன்றைய தினம் மட்டும் உடலுறவில் ஈடுபடலாம். திருவிழாவிற்கு வரும் ஆண்கள் எல்லோரும் முகத்தில் சந்தனம் பூசிக்கொண்டு வரவேண்டும். அப்படி வருபவர்களை சாமியாகக் கருதி, அவனிடமிருந்து விந்து தானம் பெற்று குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். அப்படிப் பிறக்கும் குழந்தைகளை “சாமி புள்ள” என்று சொல்லி வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.
தமிழ்ப் பழங்குடியினரின் இனக்குழு வாழ்வு தாய்வழிக் கலாச்சாரத்தை ஆதாரமாகக் கொண்டதென மானுடவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆதி தமிழ்ப்பெண் தனக்குப் பிடித்த ஆண்களை சேர்த்துக் கொண்டு வாழ்ந்திருக்கிறாள். பிடித்தவர்களுடன் உறவு பாராட்டியிருக்கிறாள் என்றும் கூறுகிறார்கள். விவசாயத்தை வாழ்வின் ஆதாரமாகக் கொண்ட சமூக வாழ்வு, குடும்ப கட்டமைப்பிற்கும், அதன் நீட்சியாக தந்தை வழிக் கலாச்சாரம் உருவாகவும் வித்திட்டிருக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதன் பின்னணியில் இயற்கை சார்ந்த சிறுதெய்வ வழிபாடும், அதன் பின்னர் பெருந்தெய்வ வழிபாடும் தோற்றம் கொண்டது என்றும் பதிவு செய்திருக்கிறார்கள். இன்றும் கூட சில பழங்குடியினரிடம் இந்த முறை உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆய்வாளர்கள் முன்னிறுத்தும் இந்தத் தொன்மைப் பின்னணியின் உதவி கொண்டுதான் சர்ச்சைக்குள்ளான மாதொருபாகன் நாவலை நாம் கவனத்தில் கொள்ள் வேண்டும்.
நாவலின் முழு பக்கங்களையும் படிக்காமல், குறிப்பிட்ட சில பக்கங்களை மட்டுமே படிப்பது தவறான புரிதலுக்கு இட்டுச் செல்லும். அதற்கான வேலையைத் தான் சில அமைப்புகள் செய்துகொண்டு இருக்கின்றன. அதற்கான ஆதாயங்களும் காரணங்களும் அந்தந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு இருக்கலாம். எனினும் படைப்பாளிகளை இது போன்ற செயல்கள் தான் முடக்குகின்றன. பெருமாள்முருகன் முகநூலில் எழுதியிருந்த நினைத்தகவல் அதற்கொரு உதாரணம்:
“ஒருமுறை வாரணாசியில் அப்போதைய வைஸ்ராய் பங்கேற்ற நிகழ்ச்சியில் மகாத்மா காந்தியடிகள் பேசினார். வைஸ்ராய் வருகைக்காகப் பொதுமக்களுக்கு இடையூறு நேரும் வகையில் செய்திருந்த ஏற்பாடுகளைக் கடுமையாகக் கண்டித்து அவர் பேசினார். ‘பொதுமக்களின் ஒருநாள் வாழ்க்கையைவிட வைஸ்ராயின் உயிர் ஒன்றும் பெரிதல்ல’ என்னும் கருத்துப்பட அவர் பேச்சு அமைந்தது. காந்தியடிகளிடம் இருந்து நான் இந்தச் செய்தியை எடுத்துக்கொள்கிறேன். திருச்செங்கோடு பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைவிட என் புத்தகம் ஒன்றும் பெரிதல்ல என்று கருதுகிறேன். நாவலில் திருச்செங்கோடு என்னும் ஊர்ப்பெயரையும் அதன் அடையாளங்களையும் பயன்படுத்தி எழுதியதைத் தங்கள் வாசிப்பின் வழி தவறு என உணரும் திருச்செங்கோடு பொதுமக்களிடம் அதற்காக மிகுந்த வருத்தம் தெரிவிக்கிறேன்.
அடுத்து வெளியாகும் பதிப்பில் ஊர்ப்பெயரையும் அடையாளங்களையும் நீக்கித் திருச்செங்கோடு என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லாமல் பதிப்பிக்க உள்ளேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.”
படைப்பாளிக்கும் படைப்பிற்கும் இதுபோன்ற சம்பவங்கள் துர்விதிகள். கால இடைவெளிகள் துர்விதிகளை பிரசிவித்துக்கொண்டே இருக்கின்றன. இதனை மீறியே படைப்பாளிகள் பயணிக்க வேண்டி இருக்கிறது.
*
அழுத்தங்களைத் தொடர்ந்து பெருமாள்முருகன் இனி எழுதப் போவதில்லை என அறிவித்திருக்கிறார்:
எழுத்தாளன் பெருமாள்முருகன் செத்துவிட்டான். அவன் கடவுளல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.
பெருமாள்முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள். ‘மாதொருபாகன்’ நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:
1. பெருமாள்முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.
2. பெருமாள்முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.
3. பெருமாள்முருகன் முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.
4. இனி எந்த இலக்கிய நிகழ்வுக்குப் பெருமாள்முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.
5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.
அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி.
(மிரட்டல்கள்வழி படைப்பாளியின் சுதந்திரத்தை நசுக்கும் முயற்சிகள் அரசியல் சாசனத்துக்கெதிரானவை. இதில் ஈடுபட்ட அமைப்புகளுக்கும், ஆதரிக்கும் தனிநபர்களுக்கும் ‘தமிழ்’ இதழ் கண்டனத்தைப் பதிகிறது. சமகால தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவரான பெருமாள்முருகன் தன் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் எழுதவேண்டும். அதற்கு வேண்டிய மனோபலமும், ஆதரவும் அவருக்குக் கிட்டட்டும். – ஆசிரியர்)
***