"

20

பொதுவாக இந்திய சினிமா தவிர்த்து நாம் அதிகமாகப் பார்ப்பது ஹாலிவுட் சினிமா என்பதால், ஒரு திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்கிற நம் வரையறை இதன் அடிப்படையில் தான் அமைகிறது. ஆங்கிலப் படங்களை தவிர்த்து வேற்று மொழிப் படங்களைப் பார்க்க ஆரம்பித்தால் இந்த கோட்பாடுகள் உடைய ஆரம்பிக்கும். உலக சினிமா என்பது எவ்வளவு பரந்தது என்பதைப் புரிந்துகொள்ள அது உதவும்.

ஆனால் ஆங்கிலப் படங்களை அவ்வளவு எளிதில் ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட முடியாது. காரணம், உலக அளவில் சிறந்த இயக்குனர்களைப் பட்டியலிட்டால் அதில் சிலர் ஆங்கிலப் படங்களைக் கொடுத்தவர்கள். அதில் முக்கியமானவர் மற்றும் முதன்மையானவர் ஸ்டான்லி க்யூப்ரிக்.

ஸ்டான்லி க்யூப்ரிக்கின் படைப்புகள் வெகு சுலபமாக நம்மைக் கவர்ந்து உள்ளிழுத்து விடுக்கூடியவை. இதற்கு பல காரணங்கள் உண்டு. மிக முக்கியமான காரணமாக நான் கருதுவது இவருடைய படங்களின் கதைக்களனில் உள்ள எளிமை. அதாவது படத்தின் போக்கில் நாமும் நகர எந்தவித விஷய ஞானமோ வரலாற்று அறிவோ தேவையில்லை, பொதுவாகவே படங்களை மிக எளிமையாக ஒரு ஊரில் ஒரு பண்ணையார் இருந்தார்’ என்கிற கிராமக் கதை பாணியில் ஆரம்பித்து நகர்த்திச் செல்வார். மெதுவாக நம்மைக் கதைக்குள் அழைத்துச் ல்லும் விதமாய் அமைந்திருக்கும் இவரின் படைப்புகள். இப்படிப் பட்ட கதைகளைத் தான் நாம் இயல்பாகவே விரும்புகிறோம். எவ்வளவோ தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஒட்டிய படங்களை வந்தாலும் நாம் விரும்புவது எதார்த்தமான கதைகளில் நம்மைத் தொலைக்கத் தான்.

இப்படிப்பட்ட எளிமையான கதைக்களன்களைக் கையாள்வது மிகக் கடினமானதும் கூட. பலர் இதனை முயற்சித்துத் தோற்றிருக்கிறார்கள். வெற்றி கண்ட மிகச் சில இயக்குனர்களும் இது போன்ற எளிமையான நடையை கொஞ்சம் கடினமான அம்சங்களை உள்வாங்கவே பயன்படுத்தியிருக்கிறார்கள். அதாவது படத்தில் ஒழிந்திருக்கக் கூடிய சஸ்பென்ஸ் அல்லது குறியீடு போன்றவற்றை உணர்த்துவதற்காக கதையை மெதுவாக நகர்த்திச் செல்ல முயன்றிருப்பார்கள். இது சற்றே செயற்கையான உணர்வையே கொடுக்கும். க்யூப்ரிக்ப் படங்களில் இப்படி இருக்காது. எளிய நடையை மிக நேர்த்தியாகக் கையாண்டு கதையின் வலிமையை அதே நடையில் எடுத்துச் செல்வார். சுருக்கமாகச் சொன்னால், க்யூப்ரிக்கின் படங்களைப் பார்ப்பதற்கான மனநிலை எப்போதுமே நமக்கு இருக்கும். அதுவே அவரின் வெற்றி.

வேறெந்த‌ இயக்குனரும் க்யூப்ரிக் அளவிற்கு பல்வேறு வகைமைகளைத் தொட்டிருக்க முடியுமா என்று தெரியவில்லை. இவரின் ஒவ்வொரு படத்திற்கு அவ்வளவு வேறுபாடுகள், எவ்வித ஒற்றுமையும் கண்டுவிட முடியாது, பிரம்மிப்பைத் தவிர. இவரின் பெரும்பாலான படங்கள் நாவல்களை அடிப்படையாகக் கொண்டவை. தன் படங்களுக்கான கதைகளை ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலி, ஜெர்மன் என பல்வேறு மொழிகளிலிருந்து க்யூப்ரிக் தேடிப்பிடித்துத் தேர்ந்தெடுத்திருப்பது தெரிகிறது.

இவர் படங்களின் மற்றொரு சிறப்பு அம்சம் வசனங்கள். மற்ற படங்களின் மூலம் நமக்கு இயல்பாகப் பழக்கப்பட்ட சுவாரஸ்யமான கேள்வி பதில் வகையான வசனங்கள் மட்டுமல்ல. மொழியின் திறனை மிக அழகாகப் பயன்படுத்தியிருப்பார். ஆங்கிலத்தின் அழகை நான் அதிகமாக உணர்ந்தது க்யூப்ரிக் படங்களின் வசனங்களில் தான். தமிழில் கூட அவற்றினை அவ்வளவு அழகாகவும் சுருக்கமாகவும் சொல்ல முடியாது என்று பலமுறை தோன்றியிருகிறது. இவற்றைத் தவிர இவருடைய படங்களில் இசை, கேமராவின் ஈடுபாடு பிரம்மிக்கவைக்கும். சினிமா உலகிற்கான க்யூப்ரிக்கின் ஈடுபாடு அளப்பரியது. திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, தயாரிப்பு, எடிட்டிங் என பல துறைகளில் ஈடுபட்டிருக்கிறார். மனித உளவியல் சார்ந்த பல்வேறு அம்சங்களை எடுத்துரைக்கும் இவரின் படைப்புகள் வலிமையான உணர்வுகளைக் கொடுக்க வல்லவை. என்னளவில், க்யூப்ரிக் இயக்குனர்களின் ஆசான்.

*

க்யூரிக்கின் சிறந்த படம் எதுவென்று முடிவெடுப்பது கடினமான செயல். நான் கேட்ட / படித்த வரையில் ஒவ்வொருவரும் அவரது ஒவ்வொரு படத்தை கிட்டத்தட்ட எந்த படத்தையும் மிச்சம் வைக்காமல் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், Eyes Wide Shut அவ்வளவு வெகுவாக க்யூப்ரிக்கின் சிறந்த படமாகக் கருதப்படவில்லை என்பது சற்றே ஆச்சார்யமானது. இதன் காரணம் புரிந்துகொள்ளக் கூடியது தான்.

ஓர் உதாரணம், இயக்குனர் மணிரத்னம் எடுத்த படங்களில் மற்ற படைப்புகளின் சிறப்பினை கொஞ்சம் சுலபமாகவே புரிந்துகொள்ள முடிந்தாலும் மெளன ராகம் படத்தின் சிறப்பைப் புரிந்துகொள்வதில் சற்றே சிரமங்கள் இருக்கலாம். காரணம் அது உணர்வுகள் சார்ந்தது. Eyes Wide Shut அது போலவே, ஆனால் அதை விட பன்மடங்கு வலிமை வாய்ந்த படம். இதில் கையாளப்பட்டிருக்கும் மனித உளவியல் எளிதாகப் புரிந்து கொள்வதரிது. கணவன் மனைவி உறவின் ஆழத்தை இவ்வளவு நுணுக்கமாகச்சொன்ன படம் வேறில்லை.

1926-ம் ஆண்டு வெளிவந்த Traumnovelle எனும் ஜெர்மன் நாவலை மையமாகக் கொண்டு உருவான படம். படம் வெளியான ஆண்டு 1999. இப்படத்தின் கரு என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒரு கணவன்மனைவியின் வாழ்வில் இரண்டே நாட்களில் நடக்கும் விஷயங்களை சொல்லும் கதை தான் இது. அந்த இரண்டு நாட்களில் நடக்கும் சம்பவங்கள், அதனால் தம்பதிகளுக்கு இடையில் நடக்கும் மனப் போராட்டங்கள் தான் கதையை நகர்த்துகிறது. முக்கியமாக, கதையின் நாயகனுக்கு ஏற்படும் உளவியல் பரிமாற்றங்களே இப்படத்தின் மாபெரும் வலிமை. ஓர் ஆணின், தன்னை நேர்மையானவனாக நடந்த விரும்பும் ஒரு மனிதனின் நுண்மையான உணர்வுகளை இவ்வளவு தெளிவாகக் காட்டிய படைப்பு வேறு இருக்க முடியுமா என்று தெரியவில்லை. தாம்பத்தியம், காதல் போன்றவற்றையும் அதனுடன் பிணைந்த உணர்வின் வெளிப்பாடுகள், அதைத் தாண்டிய போராட்டங்கள் ஆகியவற்றை நேர்த்தியான முறையில் ஆராய்கிறது இப்படம். கணவன் மனைவிக்குள் இருக்கும் உச்சபட்ச பகிர்வு, முதிர்ச்சி ஆகியவற்றை மிக அழகாக சித்தரிக்கிறது இப்படம். உங்கள் இணையுடன் சேர்ந்து பார்க்கக் கூடிய அழுத்தமான ஒரு படம்.

மருத்துவராக இருக்கும் நாயகன் தன மனைவி, குழந்தையுடன் மிகவும் மகிழ்ச்சியான, வசதியான, முக்கியமாக நேர்மையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறான். தன் மனைவி, குழந்தை மீது தீராத அன்பு கொண்டவனாக இருக்கிறான். ஓர் இரவு, தம்பதிகள் தன் குடும்ப நண்பரின் பிறந்தநாள் விழாவிற்குச் செல்கிறார்கள். இதுவே படத்தின் முதல் காட்சி. விழாவில் கணவனும் மனைவியும் தனித்தனியாகப் பிரிந்து கொண்டாடுகிறார்கள். தன் மனைவி வேறொருவனுடன் இணைந்து நடனம் ஆடுவதை நாயகன் கவனிக்கிறான். தன் கணவன் வேறு இரு பெண்களுடன் இருப்பதை நாயகி கவனிக்கிறாள். அடுத்த நாள் இயல்பாகவே நகர்கிறது. இதைப் பற்றி இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அன்றிரவு இருவரும் போதைப் பொருள் ஒன்றைப் புகைத்தபடியே அன்னியோன்யமாகக் ‌காதலில் ஈடுபடுகிறார்கள். அப்பொழுது மனைவி இந்தப் பேச்சை ஆரம்பிக்கிறாள். இப்பொழுது இருவருக்கும் இடையில் ஒரு நீண்ட உரையாடல் நடக்கிறது.

உலக சினிமா பார்த்த classic conversation-களில் இந்த உரையாடலுக்கு முதல் வரிசையில் நிச்சயம் ஓர் இடம் உண்டு (என்னைக் கேட்டால் முதல் இடமே இதற்குத் தான்). தாங்கள் சென்ற விழாவில் தன் கணவனுடன் இருந்த இரண்டு பெண்களைப் பற்றி விசாரிக்கிறாள் நாயகி. பதிலுக்குத் தன் மனைவியுடன் நடனமாடிய ஆண் யார்? அவனுக்கு என்ன தேவை? என்று விசாரிக்கிறான் நாயகன். அதன் பிறகு நடக்கும் உரையாடலின் மிகச் சுருக்கமான வடிவம் இங்கே:

நாயகி: என்னுடன் நடனமாடியவனுக்கு என்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ள ஆசை.

நாயகன்: அதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. ஏனெனில், என் மனைவி பேரழகி.

நாயகி: நான் அழகி என்பதால் என்னிடம் பேச ஆண்களுக்கு இருக்கும் ஒரே காரணம் என்னைப் புணர வேண்டும் என்பது மட்டுமே. அப்படித் தானே?

நாயகன்: அவ்வளவு நிச்சயமாக அல்ல. ஆனால் கிட்டத்தட்ட அப்படியே. ஆண்கள் எப்படியென்று நம் இருவருக்குமே தெரியும்.

நாயகி: எனில், நீ ஏன் அப்படி இல்லை? நேற்றைய விழாவில் அந்த அழகிகளுடன் நீ ஏன் உடலுறவு வைத்துக்கொள்ள நினைக்கவில்லை?

நாயகன்: ஏனென்றால் நான் உன்னைக் காதலிக்கிறேன். உன்னை மணந்திருக்கிறேன். உன்னை காயப்படுத்த விரும்பவில்லை.

நாயகி: எனவே நீ அவர்களிடம் உறவு கொள்ளாதது என் மீது காட்டும் இரக்கமே தவிர, உண்மையில் உறவு கொள்ள எண்ணம் இல்லாமல் இல்லை?

நாயகன்: நாம் உட்கொண்ட போதைப்பொருள் உன்னை ஆக்கிரமிக்கிறது.

நாயகி: நேரடியாக பதில் சொல், உன் மருத்துவமனையில் உன்னை ஆலோசிக்க வரும் பெண் உன்னிடம் ஆர்வம் காட்டினால் உனக்கு என்ன தோன்றும்?

நாயகன்: அப்படி நடக்க வாய்ப்பில்லை. பெண்களால் அவ்வளவு சுலபமாக அப்படி எண்ண முடியாது.

நாயகி: இது தான் கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடக்கும் பரிணாம வளர்ச்சியா? ஆண்களுக்கு மட்டும் சுதந்திரம், ஆசைகள் உண்டு. பெண்கள் எனில் அடங்கி இருக்க வேண்டுமா?

நாயகன்: அப்படியில்லை. ஆனால் பெண்களுக்கு பொதுவாக இப்படியான ஆசைகள் இருக்காது.

நாயகி: ஆண்களுக்குத் தெரிந்தது அவ்வளவு தான்.

நாயகன்: எனக்கு உன் மேல் நம்பிக்கை இருக்கிறது.

இதன் பிறகு நாயகி தன் கணவனைப்பார்த்து நீண்ட எள்ளலோடு சிரிக்கிறாள். சிரித்துவிட்டு தான் மறைந்து வைத்திருந்த ஒரு ரகசியத்தைத் தன் கணவனிடம் சொல்கிறாள். இதில் முக்கியமான விஷயம், நாயகி வெளிப்படுத்தும் அந்த ரகசியம் ஒரு சம்பவம் கூட அல்ல. வெறும் கற்பனைகள் நிறைந்த ஓர் ஆசை. ஒருவருக்கொருவர் காதலித்து மகிழ்ச்சியான வாழ்க்கையில் இருக்கும்போது தன் மனைவியிடம் இருந்த ஓர் ஆழமான ஆசையை உணர்ந்தபின் தடுமாறும் ஓர் ஆணின் உளவியல் வெளிப்பாடே இப்படத்தின் மைய உணர்வு என்று சொல்லலாம். இதன் பிறகு வரும் ஒவ்வொரு காட்சியும் நாயகனின் மனம் எவ்வித தடுமாற்றங்களைக் கொண்டிருக்கும் என்பதை மிகத் துள்ளியமாக எதார்த்தமாக விளக்குகின்றன.


உரையாடல் முடிந்த உடனே வரும் தொலைப்பேசி அழைப்பு தன் நண்பர் ஒருவர் இறந்ததாகச் சொல்கிறது. அவரைப் பார்க்கக் கிளம்புகிறான் மனதளவில் அதிர்ச்சி கொண்ட நாயகன். இறந்தவரின் மகளுக்கு ஆறுதல் கூறுகிறான் நாயகன். அவளோ தன் தந்தையின் பிணத்திற்கு முன்னரே நாயகனை முத்தமிட்டு காதலிப்பதாகச் சொல்கிறாள். தன் காதலனைப் பிரிந்து நாயகனிடம் வாழ ஆசைப்படுவதாகச் சொல்கிறாள். சற்று நேரத்தில் அவளுடைய காதலன் அங்கே வந்ததும் நாயகன் அங்கிருந்து கிளம்புகிறான்.

அன்று நடந்த சம்பவங்கள் அவனை வெகுவாக பாதிக்கின்றன. தான் உயிருக்குயிராகக் காதலித்த, தான் முழுமையாக நம்பிய தன் மனைவியின் வினோத ரகசிய ஆசையும், அதன் பின் நடந்த சம்பவங்களும் அவனுள் ஒரு வெறுமையை நிரப்பி விடுகிறது. வாழ்க்கை மீதும், பெண்கள் மீதும் ஒரு வித வெறுப்பு கலந்த அதிருப்தி ஏற்பட்டிருக்கும் மனநிலைக்குச் செல்கிறான். நாயகன் கொண்டிருக்கும் disturbed மனநிலையை மிக இயல்பான காட்சிகளின் மூலமாகவே வெளிப்படுத்தி இருக்கிறது இத்திரைப்படம்.

தான் வந்துவிட்ட வேலை முடிந்தும் நாயகன் வீடு திரும்பாமல் சாலையில் நடந்தவாறே இருக்கிறான். இதுபோன்ற சூழ்நிலைகளில் ஒருவனை ஆக்கிரமிக்கும் numbness, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க விரும்பாத மனநிலை போன்றவற்றை மிக இயல்பாக புரியவைக்கிறது இப்படம். ஓர் அதிர்ச்சி மனிதனின் வாழ்வின் மீதான நம்பகத்தன்மையை எவ்வளவு எளிதாக விரட்டியடிக்கும் என்பதை நாயகனின் உணர்வுகளின் மூலமாகக் காட்டியிருக்குறார் இயக்குனர். வெறுமை, வெறுப்பு, தனிமை, அவமானம், தூக்கி எறியப்பட்ட உணர்வு, வாழ்வின் மீது பற்றின்மை போன்றவற்றை எந்த‌ வசனமும் இன்றி நேர்த்தியாக சொல்லியிப்பது ஆச்சர்யம். இதன் பிறகு வரும் சம்பவங்கள் சில க்ளாஸிக் டச்.

சாலையில் நடந்தபடியே இருக்கும் நாயகனை ஒரு விலைமாது நெருங்குகிறாள். அழைக்கிறாள். இம்மாதிரியான வெறுமை கலந்த மனநிலையில் பொதுவாக ஏதாவது ஒரு விஷயத்தில் தன்னை ஆக்கிரமித்துக் கொள்ள நினைப்பதே மனித மனம். குறிப்பாக ஆண்களின் மனம். இதை அற்புதமாக வெளிப்படுத்துகிறது இக்கதை. அதுவரை நேர்மையானவனாக, வேறு எந்தப் பெண்ணையும் நெருங்காத நாயகன் இப்பொழுது விலைமாதுவின் அழைப்பை ஏற்கிறான். அவள் மூலமாக தன் வெறுமையைத் தொலைக்க நினைக்கிறான். அவள் இடத்திற்குச் சென்று அவளிடம் நெருங்க ஆரம்பிக்கும்பொழுது அவனுடைய அலைபேசிக்கு மனைவியிடமிருந்து அழைப்பு வருகிறது. சாதாரணமாக வீட்டிற்கு வர நேரம் ஆகுமா?’ என்று விசாரித்துவிட்டு முடித்துவிடுகிறாள். அதன்பின் அவனால் தொடர முடியவில்லை. விலை மாதுவிடம் பணத்தை கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுகிறான். மனதினுள் பாதித்த ஒரு விஷயம் மனிதனை எவ்வளவு எளிதாக உள்ளிழுத்து அவனை மாற்றக்கூடியது என்பதை சூழ்நிலைகளின் மூலமாக இதனை விட சிறப்பாக யாரும் உணர்த்த முடியாது.

இதன் பின் மறுபடியும் நாயகன் வீடு திரும்ப மனமில்லாமல் வெறுமை உணர்வோடு சாலையில் நடக்கிறான். அப்போது ஒரு பாரில் தனக்குத் தெரிந்த நண்பன் பியானோ வாசிப்பதாக அறிந்து அங்கே செல்கிறான். கனமான உணர்வுகளுடன் இருக்கும் மனம் தனக்கு comfort-ஆன ஏதாவது விஷயத்தில் தன்னை ஈடுபடுத்துக்கொள்ள விரும்பும். அதன் நீட்சியே நாயகன் இவ்விடங்களுக்குச் செல்வது.

பொதுவாக பெரும்பாலான திரைப்படங்களில் ஒரு விஷயத்தால் பாதிக்கப்பட்ட ஒருவன் மேற்கொள்ளும் அதிரடி மாற்றங்கள், வில்லனாவது அல்லது தியாகியாவது, போன்ற exaggerated பாதிப்புகளையே பதிவிட்டிருப்பார்கள். சொல்லப்போனால் மனதில் ஏற்படும் பாதிப்பையே exaggerated உணர்வுகளாகவே பெரும்பாலான படங்கள் காட்டுகின்றன. ஆனால் இப்படத்தில் நாயகன் மேற்கொள்ளும் ஒவ்வொரு சம்பவமும் அது தொடர்பாக எடுக்கும் ஒவ்வொரு முடிவும் ஒரு மனிதனின் இயல்பான reflex. அதன் அர்த்தமும் தேவையும் அவன் மனம் அனுபவிக்கும் போராட்டங்களால் விளக்க முடிந்தவை.

பியானோ வாசிக்கும் நண்பனைச் சந்திக்கிறான் நாயகன். அவன் அன்றிரவு ஓரிடத்தில் நடக்கப்போகும் இன்னொரு சுவாராஸ்யமான நிகழ்ச்சியைப் பற்றிக் கூறுகிறான். அங்கே செல்ல விருப்பப்படும் நாயகனிடம் அதன் ஆபத்தை எடுத்துச் சொல்கிறான் நண்பன். நாயகன் கேட்பதாக இல்லை. அங்கே செல்வதற்குத் தேவையான உடைகள், முகமூடி போன்றவற்றை விளக்குகிறான் நண்பன். அனைத்துயும் வாங்கி தன்னைத் தயார்படுத்திக்கொண்டு இரவு நிகழ்ச்சி நடக்கும் Houseக்கு செல்கிறான் நாயகன்.

இதன் பிறகு படம் ஒரு சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் பாதையில் பயணிக்கிறது. ஆபத்து எனத் தெரிந்தும் தன்னை அவ்வுலகத்திற்குப் போக வைத்து விடுகிறது நாயகனின் மனம். இதற்குப் பிறகு நடக்கும் விஷயம் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கும். படம் முழுக்க நாயகனுடன் நம்மை பயணிக்க வைத்துவிட்ட கதை, இந்த இடத்திற்குச் சென்ற நாயகனுடன் சேர்த்து நம்மை அவ்விடத்திற்கு கொண்டு சென்று ஒரு புது உலகத்தைப் பார்ப்பது போல ஆச்சர்யப்படுத்தும். உண்மையில் இது கதாசிரியர் உருவாக்கிய புது உலகம் தான். இந்தக் காட்சி நான் பார்த்த சுவாரஸ்யமான காட்சிகளில் ஒன்று. புராண கதைகளில் நாம் விரும்பிக் கேட்டிருக்கக் கூடிய சுவாரஸ்யமான சம்பவங்களை நினைவு படுத்தக்கூடிய காட்சி. நாயகன் உட்பட அனைவரும் முகமூடி அணிந்திருக்கிறார்கள். அங்கே இருப்பவர்களையும் நடக்கும் விஷயங்களையும் ஆச்சர்யமாகப் பார்க்கிறான் நாயகன். அந்த ஆச்சர்யத்தில் மூழ்கி தன் உணர்வுகளையும் நேரங்களையும் அங்கே செலவிட நினைக்கிறான். அப்போது ஒரு பெண் நாயகனை அடையாளம் கண்டுகொள்கிறாள். நாயகன் மேலும் அதிர்ச்சியடைகிறான். முகமூடி அணிதிருக்கும் தன்னை எப்படி சரியாக இந்தப் பெண்ணால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. இந்தப் பெண் யார்? என்கிற குழப்பம் ஏற்படுகிறது. அவள் நாயகனை எச்சரிக்கிறாள். இவ்விடம் பெரும் ஆபத்து நிறைந்தது. எனவே உடனே அங்கிருந்து சென்றுவிடும்படி அறிவுரை கூறுகிறாள். அவள் சொன்னது போலவே நாயகன் சிறிது நேரத்தில் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறான். எவ்வித ஆபத்தில் சிக்குகிறான் என்பது முதல், அதிலிருந்து எப்படி தப்பித்துக்கொள்கிறான், தன்னைக் காப்பாற்ற நினைத்தது யார், அதற்கான காரணங்கள் என்னென்ன என்று நாயகன் கண்டுபிடிப்பது வரை அனைத்தும் சுவாரஸ்யமானவை. படத்தின் இந்த சுவாரஸ்யப் பயணம் பார்ப்பவர்களை முற்றிலுமாக ஆக்கிரமிக்கக் கூடியது.

இதன் பிறகு நாயகன் வீடு திரும்பியதும் அவன் மனைவி தூக்கத்திலிருந்து விழிக்கிறாள். தான் கண்ட கனவை நாயகனிடம் சொல்கிறாள். அது நாயகனை மேலும் அதிர்ச்சியாக்குகிறது. மனைவி முன்பே சொன்ன அதிர்ச்சியான ஓர் ஆசையின் நீட்சியாக இருக்கிறது அவளின் இந்தக் கனவு. நாயகனின் உணர்வுகள் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிகிறது. கைவிடப்பட்ட நிலையில் தன்னை உணர்கிறான். மறுநாள் தான் கடந்து செல்லும் சம்பவங்களும் அவனின் உணர்வுகளை வலிமைப்படுத்துகின்றன. உலகில் அனைத்துமே காமம் நோக்கி நகர்வதாக உணர்கிறான். அன்புக்கோ, காதலுக்கோ இடமில்லாத உலகில் தான் வீசியெறியப்பட்டதாக உணர்கிறான். மீண்டும் தன்னை எதிலாவது இணைத்துக்கொள்ள முற்படுகிறான். தான் சென்று வந்த விலைமாது, தான் சந்தித்த நண்பனின் இடம், தான் சென்ற மாய உலகமான House அனைத்திற்கும் மறுபடியும் செல்கிறான். House சம்பந்தமாக தன் கேள்விகள் அனைத்திற்கும் விடை கண்டுபிடிக்கிறான். எல்லாம் முடிந்து நாயகன் அன்றிரவு வீடு திரும்பியதும். சென்ற இரவு தான் Houseக்காக வாங்கிய முகமூடி தன் மனைவி அருகில் இருப்பதைக் காண்கிறான். அழுதபடியே சென்ற இரவு நடந்த அனைத்து உண்மைகளையும் மனைவியிடம் சொல்கிறான்.

இரண்டு உணர்ச்சிமிக்க விஷயங்கள். ஒன்று நாயகியின் வலிமையான ஆசையும் அதை ஒட்டிய கனவும். இரண்டு நாயகன் அன்றிரவு சென்று வந்த பாதைகள். இருவருக்கும் அடுத்தவர் சொன்ன உண்மைகள் அதீத வேதனையைக் கொடுக்கிறது. மனைவியின் கனவால் பாதிக்கபட்ட கணவன். கணவனின் ஓர் இரவு நிஜ சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மனைவி என்கிற மனநிலையில் இருவரும் இருக்கிறார்கள்.

க்யூப்ரிக் வசனங்களின் சிறப்பைக் குறிப்பிட்டிருந்தேன். படத்தின் இறுதிக்காட்சியில் இடம்பெறும் வசனம்:

Wife: The reality of one night, let alone that of a whole lifetime, can ever be the whole truth.

Husband: And no dream is ever just a dream.

ஒரு கனவும், ஓரிரவு நடந்த நிஜமும் எவ்வளவு வலிமை வாய்ந்தவை என்பதையே அவர்கள் பேசிக்கொள்ளும் வசனங்கள் உணர்த்துகின்றன. தான் மட்டும் அறிந்த தன் வாழ்வின் அந்தரங்கமான விஷயங்களை இருவரும் பரஸ்பரம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்ட பின் அவர்களின் மனநிலை எப்படியிருக்கும். அதனை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே படத்தின் க்ளைமாக்ஸ். வேதனை மிகுந்த தங்கள் உணர்வுகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். பின் அவர்கள் இணைகிறார்களா? பிரிகிறார்களா? என்கிற முடிவை படத்தின் கடைசி ஒற்றை வார்த்தையில் சொல்கிறார் இயக்குனர். அது – FUCK.

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் மின்னிதழ் - இதழ் - 1 Copyright © 2015 by தமிழ் மின்னிதழ் குழு is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.