"

5

Swappnam : கனவுகளுக்கான இசை

எஸ் . சுரேஷ்

இளையராஜா ஒரு நடன நிகழ்ச்சிக்கு இசையமைக்கிறார் என்ற செய்தி பலரை ஆச்சர்யபட வைத்ததோடு ஓர் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது . Swappnam ( ஸ்வப்னம் ) எனப் பெயரிடப்பட்ட இந்நிகழ்ச்சியின் சில தேந்தெடுக்கப்பட்ட பாடல்கள் குறுந்தகடு வடிவில் வெளிவந்தது . அப்பாடல்களை பற்றிய ஒரு பார்வை .

  1. Dreams of the Young – Symphony ஏழிசையாய் ( அபிஷேக் ரகுராம் )

வயலின்கள் ஒன்று கூடி அலையென எழுகின்றன . மேற்கத்திய இலக்கணப்படி முன்ன‌கர்ந்திருக்கும் இசைக்குள் எப்படியோ காம்போதி ஊடுருவிவிடுகிறது . நாம் கச்சேரியில் கேட்கும் காம்போதி அல்ல . ஒரு கீற்று தான் . எங்கிருந்தோ மிதந்தும் வரும் பெருங்காய வாசம் போல் . அந்த மேற்கத்திய இசை முடியும் தருவாயில் ராகத்தை இன்னும் சற்று அழுத்தமாக அடியிட்டுக் காட்டுகிறார் . அபிஷேக் சபாக்களில் பாடப்படும் காம்போதி பாடுகிறார் . வீணையும் வேணுவும் அவருக்கு துணை வருகின்றன . மெட்டு இனிமையாக முன்னகர்கிறது . நடுவில் மிருதங்கம் , கடம் , கஞ்சிரா , மோர்சிங் என்று தாள வாத்யங்கள் தனிக் கச்சேரியை நடத்துகின்றன . பாடல் முடியும் பொழுது ஒரு கச்சேரி கேட்ட திருப்தி ஏற்படுகிறது .

  1. Adoration – திருவாசகம் : காதார் குழையாட ( பூர்ணிமா சதீஸ் & வசுதா ரவி )

மாணிக்கவாசகர் அருளிய‌ திருவெம்பாவைப் பாடல் இது . ஜோக் ராகத்தில் அமைந்த இந்த பாடல் எடுத்தவுடன் களை கட்டி விடுகிறது . ‘ வண்டின் குழாம் ஆட’ என்று பாடகர்கள் பாடியவுடன் , வயலின்கள் சேர்ந்து வண்டின் ரீங்காரத்ததை ஒலிக்கின்றன . ஆனால் இது அப்பட்டமாக நம் காதில் கேட்காமால் ஜோக் ராகத்தின் இன்னொரு முகமாகக் கேட்க வைத்திருப்பது இசை ஞானிக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று . தாளம் சர்வலகுவில் சென்றாலும் , தாளத்திற்கும் மேட்டிற்கும் நடுவில் ஏதோ ஒரு டென்ஷனை ஓட விட்டிருக்கிறார் இளையராஜா . இதனால் நம் கவனம் பாடலை விட்டு சிதறாமல் இருக்கிறது . பூர்ணிமாவும் வசுதாவும் இந்த படலை அழகாகப் பாடியுள்ளார்கள் . நம்மை நடனம் ஆடச்செய்யும் பாடல் இது .

  1. Romance – பிரதீப்த ரத்னோஜ்வாலா ( சரத் குழுவினர் )

இப்பாடலில் மிருதங்கமும் பக்வாஜும் சங்கீர்ணம் மற்றும் மிஷ்ரம் அடுத்தடுத்து வாசிக்கின்றன என ராஜேந்திர குமார் என்ற இசை ரசிகர் தன விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார் . இதில் நடக்கும் தாள ஜாலங்களை என்னால் இன்னும் உள்வாங்கமுடியவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் .

இந்தப் பாடல் சேர்ந்திசைக்கு ( குரல் ) முக்கியத்துவம் கொடுக்கிறது . சொற்களுக்கு ஏற்றார்போல் மெட்டில் ஒரு காம்பீர்யம் இருக்கிறது . அதே சமயம் அதில் ஒரு மென்மையும் இருக்கிறது . இந்த இரண்டையும் எப்படி ஒன்று சேரக் கலந்தார் என்பது அந்த கடவுளுக்கும் இசைஞானிக்குமே தெரியும் . நடுவில் வரும் ஸ்வரக்கோர்வைகள் பாடலை இன்னும் மெருகேற்றுகின்றன . சரத்தும் ஏனைய பாடகர்களும் அருமையான ஒரு கட்டிடத்தை எழுப்பியுள்ளனர் . இந்த பாடல் வெறும் நான்கு நிமிட பாடல் என நம்பமுடியவில்லை . அந்த நான்கு நிமிடத்திற்குள் எவ்வளவு தந்திரங்களை ஒளித்து வைத்திருக்கிறான் இந்த மனிதன் .

  1. Recognition – Voice Symphony கூவின பூங்குயில் ( பூர்ணிமா சதீஸ் குழுவினர் )

பிலஹரி ராகத்தை எடுத்து அதை மேற்கத்திய சேர்ந்திசைச் சட்டகத்திற்குள் கொண்டு வருவது சுலபமல்ல . இதற்கு முன் இளையராஜா ‘கூந்தலிலே மேகம் வந்து’ பாடலை பிலஹரி ராகத்தில் கொடுத்திருக்கிறார் . ஆனால் அது செவ்வியல் தன்மை வாய்ந்ததாக இருக்கும் . இங்கு பாடல் ஆரம்பிக்கும் முன்பு பல குரல்கள் பிலஹரியின் வெவ்வேறு ஸ்வரங்களை ‘ஹம்’ செய்ய எல்லாம் சேர்ந்து நம் காதில் இனிமையாக விழும் . முற்றிலும் மேற்கத்திய ஹார்மனி பின்பற்றி செய்யப்பட்ட ஒன்று இது . அந்த vocal ஹார்மனி முடிந்தவுடன் பூர்ணிமா ‘கூவின பூங்குயில்’ விருத்தம் போல் பாடி முடிப்பார் . அவர் முடித்தவுடன் பல குரல்கள் மறுபடியும் ஹார்மொனி பாட ஆரம்பிக்கும் . இம்முறை ஹம் செய்வதற்குப் பதிலாக ஸ்வரங்களைப் பாடும் . வேறொரு இசையமைப்பாளராக இருந்திருந்தால் இதை ஓர் அருமையான பரிசோதனை முயற்சி என்றும் அவரின் ஆக சிறந்த ஆக்கம் என்றும் நாம் போற்றியிருப்போம் . ஆனால் ராஜா இது போல் பல விஷயங்கள் தினமும் செய்வதால் ராஜ ரசிகர்களாகிய நாம் ரசித்துவிட்டு இவற்றைக் கடந்துவிடுகிறோம் .

  1. Reverence – பஜேஹம் ( ராஜஸ்ரீ பாதக் குழுவினர் )

இந்த ஆல்பத்தின் சிறந்த பாடகியான ராஜஸ்ரீ பாதக் நமக்கு இங்கு அறிமுகமாகிறார் . இது பிரபலமான ஒரு பஜன் . முன்பு ஒரு பாடலுக்குச் சொன்னது போல் , இதிலும் ராஜா இரு முரண்களை ஒருங்கிணைக்கிறார் . ஒரு பக்கம் பாடல் நம்மை ஆழ்ந்த தியான நிலைக்கு கொண்டு செல்கிறது . அதே சமயம் இந்தப் பாடலில் ஒரு கம்பீரம் இருக்கிறது . இவ்விரு உணர்வுகளையும் பாதக் த‌ன் குரலில் அற்புதமாக வெளிப்படுத்துகிறார் . இடையிசையில் வரும் புல்லாங்குழலும் வீணையும் பாடலுக்கு மேலும் இனிமை கூட்டுகின்றன .

  1. Realisation – அம்மையே அப்பா ( சுதா ரகுநாதன் , வசுதா ரவி , ஸ்ரீநிவாஸ் மற்றும் குழுவினர் )

இந்தத் திருவாசக செய்யுள் ராஜாவின் ‘திருவாசகம்’ ஆல்பத்தில் நாம் கேட்ட ஒன்று தான் . அங்கு அவர் மேற்கத்திய இசையைப் பின்பலமாக வைத்து பாட்டிற்கு இசையமைத்திருப்பார் . இங்கு கானடா ராகத்தைத் தேர்ந்தெடுக்கிறார் . முதலில் வெறும் வயலின் பக்கத்தில் ஒலிக்க சுதாவை பாட வைக்கிறார் . சுதாவின் குரலில் தேனாக ஒலிக்கிறது கானடா . அவர் பாடி முடித்தவுடன் வீணை கானடாவை அதே இனிமையுடன் மீட்டுகிறது . இதற்குப் பிறகு குரல்களின் அருமையான சேர்ந்திசை தொடங்குகிறது . வசுதாவும் ஸ்ரீநிவாசும் செய்யுள் பாட , சேர்ந்த குரல்கள் கானடவை ஹார்மனி வடிவில் பாடுகின்றன . இந்த இசைக் கோர்வை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது . ஒரே செய்யுள் . பல்வேறு வடிவங்கள் .

  1. Wisdom – அய்யேமெத்த கடினம் ( பரத் சுந்தர் )

இது நந்தனார் சரித்திரத்தில் உள்ள‌ பாடல் . தண்டபாணி தேசிகர் பிரபலப்படுத்திய மெட்டு . மிருதங்கம் வாசிக்கும் நடை அருமையாக உள்ளது . மாறி வரும் நடை பாடலுக்கு கூடுதல் கவனத்தைச் சேர்க்கிறது . பரத் சுந்தர் நன்றாக பாடியிருக்கிறார் .

  1. Awakening – கோழி சிலம்ப ( சரத் , அபிஷேக் ரகுராம் , வசுதா ரவி மற்றும் பூர்ணிமா சதீஸ் )

இரவு பத்து மணிக்குக் கேட்டாலும் நம்மை இந்தப் பாடல் காலை ஐந்து மணிக்குக் கூட்டிச் சென்றுவிடும் . சூரியன் இன்னும் உதிக்காத இளங்காலை வேளைப்பாடலிது . மெதுவாக தட்டிக்கொண்டிருக்கும் மிருதங்கம் திடீரென்று ஒரு ஃபரன் வாசிக்கிறது . எல்லோரும் அருமையாகப் பாட , கடைசியில் வரும் சேர்ந்திசை இந்த பாடலை வேறொரு நிலைக்குக் கொண்டு சென்றுவிடுகிறது . இரண்டு நிமிடப் பாடல்தான் . இருந்தாலும் அதில் பல விஷயங்களைப் புகுத்தி , நம் மனதுக்குள் நுழைப்பது ராஜாவுக்குக் கை வந்த கலை .

  1. Dream of the Old – விஷ்வேச்வர் தர்ஷன் ( ராஜஸ்ரீ பாதக் , அபிஷேக் ரகுராம் மற்றும் குழுவினர் )

இது சுவாதித் திருநாளின் பிரபலமான மெட்டு . கச்சேரிகளில் அடிக்கடி பாடப்படுகிறது . மனதை வருடிக்கொடுக்கும் பாடல் . ராஜஸ்ரீயும் அபிஷேக்கும் அருமையாகப் பாடுகிறார்கள் .

  1. Truth – அன்பும் சிவமும் ( இசை ஞானி இளையராஜா )

ராஜாவின் குரலில் திருமூலரின் திருமந்திரம் வாசிக்கப்பட்டு ஆல்பம் நிறைவடைகிறது .

ஆல்பத்தில் மூன்று சிறப்பம்சங்கள் உள்ளன : ஒன்று இதில் வரும் வித விதமான தாள கதிகள் . ஆல்பம் முழுதும் தாள வாதியங்கள் தம் ஸ்தானத்தை நிறுவிக்கொண்டே இருக்கின்றன . இரண்டாவது சேர்ந்திசை . நம் கர்நாடக ராகங்களை வைத்து அற்புதமான சேர்ந்திசையை இசைஞானி கொடுக்கிறார் . மூன்றாவது எல்லா மெட்டுக்களும் மென்மையாகவும் மதுரமாகவும் அதே சமயம் நாட்டியத்திற்கு உகந்ததாக உள்ளன .

ஒரு முறை ‘ஸ்வப்னம்’ ஆல்பத்தைக் கேட்டால் அதிலிருந்து மீள்வது கடினமாக இருக்கும் .

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் மின்னிதழ் - இதழ் - 1 Copyright © 2015 by தமிழ் மின்னிதழ் குழு is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.