"

ஒரு சஞ்சிகை தொடங்க வேண்டும் என்பது ஒரு தசாப்தத்துக்கும் மேலாகக் காத்திருக்கும் கனவு. கல்லூரி தினங்களில் நானும் நண்பன் இரா.இராஜராஜனும் தமிழ்என்ற பெயரில் ஓரிதழ் தொடங்க முயன்றோம். அப்போதைய எங்கள் பொருளாதார மற்றும் அனுபவ‌ பலம் அதற்குச் சாதகமாய் இல்லை. இடைப்பட்ட காலம் கொணர்ந்த‌ மாற்றங்கள் இன்று ‘தமிழ்’ என்ற இந்த மின்னிதழைச் சாத்தியமாக்கி இருக்கிறது.

தமிழ்’ ஒரு காலாண்டிதழ். சீராக வருடத்திற்கு நான்கு இதழ்கள் கொண்டு வரத் திட்டம். இது ஓர் இலவச இதழ். இணையத்தில் இருக்கும் எவரும் சுலபமாகத் தரவிற‌க்கிக்கொள்ள ஏதுவாக இலவச PDF கோப்பாகக் கிடைக்கும். படைப்பாளிகள் அனைவரும் சன்மானம் ஏதுமின்றியே இவ்விதழில் பங்களித்திருக்கிறார்கள்.

இது குமுதம், விகடன், குங்குமம் போல் முழுமையான வெகுஜன இதழும் அல்ல; காலச்சுவடு, உயிர்மை, தீராநதி போல் அடர்த்தியான சிற்றிதழும் அல்ல. இப்போதைக்கு ‘தமிழ்’ ஓர் இடைநிலை இதழ். இதற்கு முன்னோடி என குமுதம் ஜங்ஷன், விண் நாயகன், இந்தியா டுடே இலக்கியச் சிறப்பிதழ்கள், டைம்ஸ் தீபாவளி மலர்கள், தி இந்து பொங்கல், தீபாவளி மலர்கள் போன்ற பத்திரிக்கைகளைச் சொல்லலாம்.

கலை, இலக்கியம், திரைப்படம், அரசியல், சமூகம், அறிவியல் ஆகிய விஷயங்கள் இந்த இதழின் பிரதான உள்ளடக்கங்களாக அமையும். முக்கிய விஷயம் இந்த இதழில் பங்களிப்பவர்கள் – சில நன்கறியப்பட்ட படைப்பாளிகளும், பல முகமறியாப் புதியவர்களும் இதில் எழுதுவார்கள். இவ்விதழில் எழுதியுள்ளவர்கள் சிலருக்கு ட்விட்டர், ஃபேஸ்புக் அல்லது வலைப்பூ தாண்டி இது தான் முதல் பத்திரிக்கைப் பங்களிப்பு.

வரும் இதழ்களிலும் சமூக வலைதளங்களில் பொழுதுதீர்க்கும் அக்கப்போர்கள் தாண்டி தரமாய் எழுதக் கூடியவர்கள் பங்களிப்பார்கள். சினிமாக்காரர்களால் பொதுவாய் வேலை வெட்டி இல்லாதவர்களின் குப்பை எழுத்து என முன்வைக்கப்படும் பொதுப்புத்திக் கருத்துக்கு எளிய எதிர்வினையாக இதைக் கொள்ளலாம்.

ஒவ்வொரு இதழிலும் ஒரு முக்கியமான சமகாலத் தமிழ் எழுத்தாளுமையின் விரிவான நேர்காணல் இடம்பெறும். அவரது முகமே அந்த இத‌ழின் அட்டையை ஓவியமாய் அலங்கரிக்கும். அவ்வகையில் இவ்விதழில் ஜெயமோகனின் நேர்காணல் இடம் பெறுகிறது. ஒவ்வொரு இதழும் ஒரு முன்னோடிப் பத்திரிக்கையாளருக்கு / எழுத்தாளருக்குச் சமர்ப்பணம் செய்யப்படும். இம்முறை காலச்சுவடு நிறுவனர் சுந்தர ராமசாமிக்கு. போலவே ஒவ்வொரு இதழையும் ஒரு முக்கியப்‌ பத்திரிக்கையாளர் / எழுத்தாளர் வெளியிடுவார். தொடக்கம் ஞாநி. அவர்களுக்குச் செய்யும் ஒரு மரியாதையாகவே இதைப் பார்க்கிறேன்.

இது முழுக்க முழுக்க ஒரு மின்னிதழ். தயாரிப்பு முதல் வெளியீடு வரை எல்லாமே இணைய வழி! இதழுக்குப் படைப்புகள் பெறுவது, தேர்ந்தெடுப்பது, நேர்காணல் செய்வது, வடிவமைப்பு செய்வது, வெளியீட்டு விழா எல்லாமே இணையத்தில் மூலமே நடக்கும். இது ஒரு பரிசோதனை முயற்சி.

இது ஒரு தொடக்கம். இதற்கு வாசகர்க‌ளின் வரவேற்பும், அன்பர்களின் ஆதரவும் கிட்டும் என நம்புகிறேன். இதன் வழி தமிழ் எழுத்தும் வாசிப்பும் சில அடிகள் முன்னகர்ந்தால் அதை வெற்றி எனக் கொள்வேன். இதழ் பற்றிய உங்கள் எதிர்வினைகளை (முக்கியமாய் எதிர்மறைக் கருத்துக்களை) எனக்கு எழுதுங்கள்.


License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் மின்னிதழ் - இதழ் - 1 Copyright © 2015 by தமிழ் மின்னிதழ் குழு is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.