வின்சென்ட் காபோ(சிங்காரம்)
அடுத்தவர்களுக்கு ஆலோசனை என்றால் தன் காசை செலவழித்தாவது பஸ் ஏறி வந்து பல யோசனைகளைக்கூறி தானே அவற்றை நிராகரித்துவிட்டு நீயே யோசித்து ஏதாவது முயற்சி செய் என கூறி தன் வழியே செல்லும் நவீன பூச்செரிந்து ஆசிர்வாதிக்கப்பட்ட தாவோ இவர் என்று இவரே நினைத்துக்கொண்டு பலவற்றிலும் வாயை விட்டு வாங்கிக்கட்டிக்கொள்ளும் லோக்கல் ப்ரூஸ்லீ இவர்.
இவரின் தொகுப்பாசிரிய பணி என்பது குறிப்பிட்ட எல்லை கொண்டது என்பதால் இவரின் ஸ்டேண்டப் , சிட்டிங் அப் காமெடிகளை தன்னியல்பாகவே வெளிப்படுத்தி, சிரித்தால் என்னய்யா ஏய்யா என்பார் இந்த அப்பாவி கல்லாப்பொட்டி சிங்காரத்தின் அதி தீவிர ரசிகர். முதலில் பேச ஆரம்பிக்கும்போது அடடா, திக்குவாய் போல என்று நினைப்பவர்கள் பின் சரவெடியாய் மன்மத சஞ்சீவி காணொளிகளைப்போல மணிக்கணக்காக அன்னாரது பேச்சு நீளும் போதுதான் அறிவார்கள்; கண்ணிவெடியில் சிக்கினால் கூட கால்தான் போயிரும், அநியாயத்திற்கு ஆர்.டி. எக்ஸ் பாமில் அல்லவா சிக்கியிருக்கிறோம் என்று. எழுத்து சீரியசாத்தான் இருக்கும் என்று இவர் அங்கப்பிரதட்சணம் செய்து கூறியும் கூட லைஃப்ஸ்டைல் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் இவரை நம்பாமல் சிரித்துக்கொண்டே ரன்னிங்ல கூட காமெடி பண்றீங்களே என துளசி டீ கொடுத்து அடிக்கடி வந்துட்டுப்போங்க சார் என்று கூறி அனுப்பிவிட்டார்.
ஜோ ஃபாகஸ்
தீவிரமான விஷயங்களைப்பற்றி மட்டுமே எழுதுவேன் என்ற குறிக்கோளோடு தாளில் பென்சிலால் மட்டுமே அடித்து திருத்தி எழுதும் பழக்கமுடையவர் ஜோ ஃபாக்ஸ். எழுதும்போது தீவிரநிலையில் எழுதும் விஷயங்களைக்காட்டிலும் மிகத்தீவிரமாக பல பாக்கெட்டுகள் ஜிலேபி தின்னும் பழக்கம் கொண்டவர். சரி இது ஒரு ஜிலேபி கேசப்பா என்று ஒதுக்கமுடியாதபடி மிகத்தீவிரமான தாராளமயம், உலகமயமாக்கம் பற்றிய சூழல்களை அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்களைக் காட்டிலும் மிகவிரிவாக தொகை நூலாக வெளியிடலாமா என்று தோன்றும் அளவு பேசும் விஷயம் தெரிந்த புரட்சிக்காரர் இவர். இவரின் ஆளுமை தெரிந்தபின் இவரை கோமாளி மேடை நண்பர்கள் அணுகியபோது, இவரின் அறையைப் பார்த்து, இது மனிதன் வாழும் வீடா என்று பயந்தே போய்விட்டனர். அறை முழுக்க மின்விசிறி காற்றில் தாள்கள் பறக்க, சிகரெட் புகை அறை முழுக்க டிசம்பர் பனி போல உறைந்திருக்க தலித் சமூக செயல்பாடுகள் பற்றி டி. ஆர். நாகராஜ் எழுதிய கெட்டி அட்டை ராயல் அளவு கொண்ட ஆங்கிலப்புத்தகத்தினை கதவில் சாய்ந்து படித்துக்கொண்டிருந்தார். இது இவரின் தொகுப்பில் வரும் முதல்நூல் பின்னாட்களில் இவரின் முழுமையான நூல்கள் வெளிவரக்கூடும். தற்போது புதிய நூல்களின் தொகுப்பிலும், தன் எழுத்துக்களை சேகரித்து எழுதியும் வருகிறார். பெரும் நம்பிக்கை கொண்டெழுதும் மனிதநேய சமத்துவ மார்க்சிய லெனினிய சிந்தனையாளர் இவர். பல உள்ளடங்கிய கிராமங்களில் களப்பணியும் ஆற்றியிருக்கிறார்.