இந்நூலில் மொத்தம் பதினெட்டு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன என்றால் சமூகத்திற்கான தனிமனித பங்களிப்பு என்ற வகையில் உள்ளது. தனி மனித பொருளாதாரம், குடும்பம் என்று பல சுழல்காற்றுகளிடையே இந்த பதினெட்டு கட்டுரைகளிலும் உள்ள மனிதர்கள் தங்கள் மனதின் உள்ளொளியை அணையவிடவில்லை. சமூகத்திற்கு பயன்படும் வகையில் பல பொருட்களை உருவாக்கியிருக்கிறார்கள். இவை அனைத்தும் சுயமான அகத்தூண்டுதலினால் நிகழ்ந்துள்ளன என்பதை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது.
தனக்கு ஏற்படும் ஒரு பிரச்சனைக்கான தீர்வாக ஒன்றைத் தேடும்போது பலரும் அதே பிரச்சனைக்கான தீர்வுகளைத் தேடி அலைந்துகொண்டிருப்பது கண்டு நிலைமையைப் புரிந்துகொண்டு தான் கண்டுபிடித்த பொருளை சமூகத்திற்கானதாக மாற்றுகிறார்கள். இப்படித்தான் சாதாரண மனிதன் சமூகத்தைப் புரிந்துகொண்டு செயலாற்ற முடியும். எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இதுபோன்ற மனிதர்கள் ஒரு பார்வையில் தன்னையொத்த மனிதர்களுடன், ஆத்மாக்களுடன் இணைந்துவிடுவார்கள்.
வீடு என்ற பாதுகாப்பான இடத்திலிருந்து வெளிவந்த பின்தான் தெருவில் விளக்கு இல்லாதது, வெளிச்சம் இல்லாதது நமக்கு நினைவு வருகிறது. இவர்கள் தங்களின் வாழ்வையே பலரது ஏளனத்திற்கும், கிண்டலுக்கும், நக்கல் சிரிப்புக்கும் பணயமாக வைத்து இன்றும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இறுதிக்கட்டுரையான ஒடிசாவின் ஐன்ஸ்டீன் கட்டுரையில் பண்டா தனது இயந்திரங்கள் உருவாக்கும் ஆர்வத்திற்காக தனது மனைவியின் நகைகளையே விற்றிருக்கிறார் என்பதை படிக்கும்போது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. தோழர்களே! நமது தேசம் இயங்குவது இது போன்ற தன்னை எரித்து பிறருக்கு வெளிச்சம் மனிதர்களால்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த கட்டுரைகளைப் படியுங்கள். உதவும் எண்ணம் இருக்கிறவர்கள் அதை தங்கள் பையில் உள்ள பணமாக கருத வேண்டியதில்லை. தங்கள் அறிவாக கூட கருதலாம். இன்று நாம் பெறும் பல உரிமைகள், வசதிகள் இவர்கள் போன்றவர்களால்தான் கிடைத்தது. அர்ப்பணிப்பும், நேர்மையும், திட்டமும் கொண்ட உழைப்பு இல்லாமல் இவை சாத்தியமேயில்லை என்பதை இக்கட்டுரைகளைப் படித்தவுடன் உணருவீர்கள். நன்றி.
அன்புடன்,
கார்த்திக் வால்மீகி