36

(குறிப்பு[ – தேவாரப் பாடல் வரிகள் திருப்பூவணப் புராணப் புத்தகத்திலிருந்தபடியே இங்கு அச்சிடப்பட்டுள்ளன)

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியது

(1-ம் திருமுறை)

பண் தக்கேசி

திருச்சிற்றம்பலம்

அறையார் புனலு மாமலரு மாடர வார்சடைமேற்

குறையார் மதியஞ் சூடி மாதோர் கூறுடை யானிடமா

முறையான் முடிசேர் தென்னர் சேரர் சோழர் கடாம் வணங்குந்

திறையா ரொளிசேர் செம்மை யோங்கு தென்றிருப்பூவணமே (1)

மருவார் மதின்மூன் றொன்ற வெய்து மாமலை யான்மடந்தை

யொருபால் பாக மாகச் செய்த வும்பர் பிரானவனூர்

கருவார் சாலியாலை மல்கிக் கழன்மன்னர் காத்தளித்த

திருவான் மலிந்த சேடர் வாழுந் தென்றிருப்பூவணமே (2)

போரார் மதமா வுரிவை போர்த்துப் பொடியணி மேனியனாய்க்

காரார் கடலி னஞ்ச முண்ட கண்ர்தல் விண்ணவனூர்

பாரார் வைகைப் புனல்வாய் பரப்பிப் பன்மணி பொன் கொழித்துச் சீரார் வாரி சேர நின்ற தென்றிருப் பூவணமே (3)

கடியா ரலங்கற் கொன்றை சூடிக் காதிலொர் வார் குழையன்

கொடியார் வெள்ளை யேறு கந்த கோவண வன்னிடமாம்

படியார் கூடி நீடி யோங்கு பல்புக ழாற் பரவச்

செடியார் வைகை சூழ நின்ற தென்றிருப் பூவணமே (4)

கூரார் வாளி சிலையிற் கோத்துக் கொடிமதில் கூட்டழித்த

போரார் வில்லி மெல்லிய லாளோர் பால் மகிழ்ந் தானிடமா

மாரா வன்பிற் றென்னர் சேரர் சோழர்கள் போற்றிசைப்பத்

தேரார் வீதி மாட நீடு தென்றிருப் பூவணமே (5)

நன்று தீதென் றொன்றி லாத நான்மறை யோன்கழலே

சென்று பேணி யேத்த நின்ற தேவர் பிரானிடமாங்

குன்றி லொன்றி யோங்க மல்கு குளிர்பொழில் சூழ் மலர்மேற்

றென்ற லொன்றி முன்றி லாருந் தென்றிருப் பூவணமே (6)

பைவா யரவ மரையிற் சாத்திப் பாரிடம் போற்றிசைப்ப

மெய்வாய் மேனி நீறு பூசி யேறுகந் தானிடமாங்

கைவாழ் வளையார் மைந்த ரோடுங் கலவியினா னெருங்கிச்

செய்வார் தொழிலின் பாட லோவாத் தென்றிருப்பூவணமே (7)

மாட வீதி மன்னிலங்கை மன்னனை மாண்பழித்துக்

கூட வென்றி வாள்கொ டுத்தான் கொள்கையி னார்க் கிடமாம்

பாட லோடு மாட லோங்கிப் பன்மணி பொன் கொழித்து

வோடி நீரால் வைகை சூழு முயர்திருப் பூவணமே (8)

பொய்யா வேத நாவி னானும் பூமகள் காதலனுங்

கையாற் றொழுது கழல்கள் போற்றக் கனலெரி யானவனூர்

மையார் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்துச்

செய்யார் கமலந் தேன ரும்புந் தென்றிருப் பூவணமே (9)

அலையார் புனலை நீத்த வருந்தே ரருமன் புசெய்யா

நிலையா வண்ண மாய வைத்த நின்மலன் றன்னிடமா

மலைபோற் றுன்னி வென்றி யோங்கு மாளிகை சூழ்ந்தயலே

சிலையார் புரிசை பரிசு பண்ர்ந் தென்றிருப்பூவணமே (10)

திண்ணார் புரிசை மாட மோங்கு தென்றிருப் பூவணத்துப்

பெண்ணார் மேனி யெம்மி றையைப் பேரிய லின் றமிழா

னண்ணா ருட்கக் காழி மல்கு ஞானசம் பந்தன்சொன்ன

பண்ணார் பாடல் பத்தும் வல்லார் பயில்வது வானிடையே (11)

திருச்சிற்றம்பலம்

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியது

(3-ம் திருமுறை)

பண் காந்தார பஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

மாதமர் மேனிய னாகி வண்டொடு

போதமர் பொழிலணி பூவணத்துறை

வேதனை விரவல ரரண மூன்றெய்த

நாதனை யடிதொழ நன்மை யாகுமே (1)

வானணி மதிபுல்கு சென்னி வண்டொடு

தேனணிபொழிற்றிருப் பூவ ணத்துறை

யானநல் லருமறை யங்க மோதிய

ஞானனை யடிதொழ நன்மை யாகுமே (2)

வெந்துய ருறுபிணி வினைக டீர்வதோர்

புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை

யந்திவெண் பிறையினோ டாறு சூடிய

நந்தியை யடிதொழ நன்மை யாகுமே (3)

வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடிப்

பூசனைப் பொழி றிகழ் பூவ ணத்துறை

யீசனை மலர்புனைந் தேத்து வார்வினை

நாசனை யடிதொழ நன்மை யாகுமே (4)

குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை

பொருந்திய பொழிற் றிருப் பூவணத்துறை

யருந்திற லவுணர்த மரண மூன்றெய்த

பெருந்தகை யடிதொழப் பீடை யில்லையே (5)

வெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மிய

பொறியர வணி பொழிற் பூவ ணத்துறை

கிறிபடு முடையினன் கேடில் கொள்கைய

னறுமல ரடி தொழ நன்மை யாகுமே (6)

பறைமல்கு முழவொடு பாட லாடலன்

பொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறை

மறைமல்கு பாடலன் மாதொர் கூறின

னறைமல்கு கழ றொழ வல்ல லில்லையே (7)

வரைதனை யெடுத்தவல் லரக்க னீண்முடி

விரற னி லடர்த்தவன் வெள்ளை நீற்றினன்

பொருபுனல் புடையணி பூவ ணந்தனைப்

பரவிய வடியவர்க் கில்லை பாவமே (8)

நீர்மல்கு மலருறை வானு மாலுமாய்ச்

சீர்மல்கு திருந்தடி சேர கிற்கிலர்

போர்மல்கு மழுவினன் மேய பூவண

மேர்மல்கு மலர்புனைந் தேத்த லின்பமே (9)

மண்டை கொண் டுழிதரு மதியி றேரருங்

குண்டருங் குணம்பல பேசுங் கோலத்தர்

வண்டமர் வளர்பொழின் மல்கு பூவணங்

கண்டவ ரடி தொழு தேத்தல் கன்மமே (10)

புண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறை

யண்ணலை யடிதொழு தந்தண் காழியு

ணண்ணிய வருமறை ஞான சம்பந்தன்

பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே (11)

திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியது

திருத்தாண்டகம்

திருச்சிற்றம்பலம்

வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும்

வளர்சடைமே லிளமதியந் தோன்றுந் தோன்றுங்

கடியேறு கமழ் கொன்றைக் கண்ணி தோன்றுங்

காதில்வெண் குழைதோடு கலந்து தோன்று

மிடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்று

மெழி றிகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்

பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்

பொழி றிகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே (1)

ஆணாகிப் பெண்ணாய வடிவு தோன்று

மடியவர்கட் காரமுத மாகித் தோன்று

மூணாகி யூர் திரிவா னாகித் தோன்று

மொற்றைவெண் பிறைதோன்றும் பற்றார் தம்மேற்

சேணாக வரைவில்லா லெரித்த றோன்றுஞ்

செத்தவர்த மெலும்பினாற்செ றியச் செய்த

பூணார் மரைநார்ம் பொலிந்து தோன்றும்

பொழி றிகழும் பூவணத் தெம் புனித னார்க்கே. (2)

கல்லாலின் னீழற்க லந்து தோன்றுங்

கவின்மறையோர் நால்வர்க்கு நெறிக ளன்று

சொல்லாகச் சொல்லியவா தோன்றுந் தோன்றுஞ்

சூழரவு மான்மறியுந் தோன்றுந் தோன்று

மல்லாத காலனைமுன் னடர்த்த றோன்று

மைவகையா னினைவார்பா லமர்ந்து தோன்றும்

பொல்லாத புலாலெலும்பு பூணாய்த் தோன்றும்

பொழி றிகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. (3)

படைமலிந்த மழுவாளு மானுந் தோன்றும்

பன்னிரண்டு கண்ர்டைய பிள்ளை தோன்று

நடைமலிந்த விடையோடு கொடியுந் தோன்று

நான்மறையி னொலி தோன்று நயனந் தோன்று

முடைமலிந்த கோவணமுங் கீழுந் தோன்று

மூரல்வெண் சிரமாலை யுலாவித் தோன்றும்

புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும்

பொழி றிகழும் பூவணத்தெம் புனித னார்க்கே (4)

மயலாகுந் தன்னடியார்க் கருளுந் தோன்று

மாசிலாப் புன்சடைமேன் மதியந் தோன்று

மியல்பாக விடுபிச்சை யேற்ற றோன்று

மிருங்கட னஞ் சுண்டிருண்ட கண்டந் தோன்றுங்

கயல்பாயக் கடுங்கலுழிக் கங்கை நங்கை

யாயிரமா முகத்தினொடு வானிற் றோன்றும்

புயல் பாயச் சடைவிரித்த பொற்புத் தோன்றும்

பொழி றிகழும் பூவணத் தெம் புனித னார்க்கே (5)

பாராழி வட்டத்தார் பரவி யிட்ட

பன்மலரு நறும்புகையும் பரந்து தோன்றுஞ்

சீராழித் தாமரையின் மலர்க ளன்ன

திருந்தியமா நிறத்தசே வடிக டோன்று

மோராழித் தேருடைய விலங்கை வேந்த

னுடல் றுணித்த விடர்பாவங் கெடுப்பித் தன்று

போராழி முன்னீந்த பொற்புத் தோன்றும்

பொழி றிகழும் பூவணத்தெம் புனித னார்க்கே (6)

தன்னடியார்க் கருள் புரிந்த தகவு தோன்றுஞ்

சதுர்முகனைத் தலையரிந்த தன்மை தோன்று

மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்

வேழத்தி னுரிவிரும்பிப் போர்த்த றோன்றுந்

துன்னியசெஞ் சடைமேலோர் புனலும் பாம்புந்

தூயமா மதியுடனே வைத்த றோன்றும்

பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்

பொழி றிகழும் பூவணத் தெம் புனித னார்க்கே (7)

செறிகழலுந் திருவடியுந் தோன்றுந் தோன்றுந்

திரிபுரத்தை யெரிசெய்த சிலையுந் தோன்று

நெறியதனை விரித்துரைத்த நேர்மை தோன்று

நெற்றிமேற் கண்டோன்றும் பெற்றந் தோன்று

மறுபிறவி யறுத்தருளும் வகையுந் தோன்று

மலைமகளுஞ் சலமகளு மலிந்து தோன்றும்

பொறியரவு மிளமதியும் பொலிந்து தோன்றும்

பொழி றிகழும் பூவணத் தெம் புனித னார்க்கே (8)

அருப்போட்டு முலைமடவாள் பாகந் தோன்றும்

மணிகிளரு முருமென்ன அடர்க்குங் கேழன்

மருப்போட்டு மணிவயிரக் கோவை தோன்று

மணமலிந்த நடந்தோன்று மணியார் வைகைத்

திருக்கோட்டி னின்றதோர் திறமுந் தோன்றுஞ்

செக்கர்வா னொளிமிக்குத் திகழ்ந்த சோதிப்

பொருப்போட்டி நின்றதிண் புயமுந் தோன்றும்

பொழி றிகழும் பூவணத் தெம் புனித னார்க்கே (9)

ஆங்கணைந்த சண்டிக்கு மருளி யன்று

தன்முடிமேல லர்மாலை யளித்தல் தோன்றும்

பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று

பலபிறவி யறுத்தருளும் பரிசுந் தோன்றுங்

கோங்கணைந்த கூவிளமு மதமத் தம்முங்

குழற்கணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும்

பூங்கணைவே ளுருவழித்த பொற்புத் தோன்றும்

பொழி றிகழும் பூவணத் தெம் புனித னார்க்கே (10)

ஆருவ வுள்குவா ருள்ளத் துள்ளே

யவ்வுருவாய் நின்கின்ற வருளுந் தோன்றும்

வாருருவப் பூண்முலைநன் மங்கை தன்னை

மகிழ்ந் தொருபால் வைத்து கந்த வடிவுந் தோன்றும்

நீருருவக் கடலிலங்கை யரக்கர் கோனை

நெறுநெறென வடர்த்திட்ட நிலையுந் தோன்றும்

போருருவக் கூற்றுதைத்த பொற்புத் தோன்றும்

பொழி றிகழும் பூவணத் தெம் புனித னார்க்கே (11)

திருச்சிற்றம்பலம்

(இத் திருப்பதிகம் அகத்திய முனிவர் திரட்டியருளிய தேவாரத் திரட்டிற் சேர்ந்த சிறப்புடையது)

சுந்தரர் பாடியது

பண் இந்தளம்

திருச்சிற்றம்பலம்

திருவுடை யார்திரு மால ய னாலு

முருவுடை யாருமை யாளையொர் பாகம்

பரிவுடை யா ரடை வார்வினை தீர்க்கும்

புரிவுடை யாருறை பூவண மீதோ. (1)

எண்ணி யிருந்து கிடந்து நடந்து

மண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார்

பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப்

புண்ணிய னாருறை பூவண மீதோ. (2)

தெள்ளிய பேய்பல பூதம வற்றோடு

நள்ளிரு ணட்டம தாட வின்றோர்

புள்ளுவ ராகு மவர்க்கவர் தாமும்

புள்ளுவ னாருறை பூவண மீதோ. (3)

நிலனுடை மான்மறி கையது தெய்வக்

கனலுடை மாமழு வேந்தியோர் கையி

லனலுடை யா ரழ கார்தரு சென்னிப்

புனலுடை யாருறை பூவண மீதோ. (4)

நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார்

கடைகடை தோறிடு மின்பலி யென்பார்

துடியிடை நன்மட வாளொடு மார்பிற்

பொடியணி வாருறை பூவண மீதோ. (5)

மின்னனை யாடிரு மேனிவி ளங்கவொர்

தன்னமர் பாகம தாகிய சங்கரன்

முன்னினை யார்புர மூன்றெரி யூட்டிய

பொன்னனை யானுறை பூவண மீதோ (6)

மிக்கிறை யேயவ றுன்மதியால் விட

நக்கிறை யேவிர லாலிற வூன்றி

நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம்

புக்குறை வானுறை பூவண மீதோ (7)

(பாடல் 8-9 கிடைக்கப்பெறவில்லை)

சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவண

மாரவி ருப்பிட மாவுறை வானை

யூர னுரைத்த சொன்மாலைகள் பத்திவை

பாரி லுறைப்பவர் பாவ மறுப்பரே (10)

திருச்சிற்றம்பலம்

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

திருப்பூவணப் புராணம் Copyright © 2015 by மு​னைவர். கி. காளைராசன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book