
பிற்பகல் 3.00 மணி அளவில், ஆய்வகத்தில் அமர்ந்திருந்த சுதாகர் ராவ், காற்றின் வேகம், திடீர் திடீரென திசை மாறுவதை கவனித்தார். காற்றின் வேகத்தையும், திசையினையும் காட்டும் கருவி சரிவர வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்தார். வெளியில் உள்ள கருவியில் இருந்து, ஆய்வகத்தில் உள்ள கருவிக்கு வரும் இணைப்பில், ஏதோ கோளாறு என்பது தெரிந்தது. புகைப் போக்கி போன்ற அமைப்புடைய அவசர கால, பாதை வழியே ஏறி மெதுவாக எட்டிப் பார்த்தார். வானிலைக் கருவி இருக்கும் இடம் 15 மீ தூரத்தில் தெளிவாய் தெரிந்தது.

Dhakshin Gangothri sky View
சுதாகர் ராவ் அப்பொழுது, கடும் குளிரினை எதிர் கொள்ளும் உடையினைக் கூட அணிந்திருக்க வில்லை. சாதாரண உடையிலேயே இருந்தார். 15அடி தூரம்தானே, ஒரு சில நிமிடத்தில் திரும்பிவிடலாம் என்று நினைத்தார்.இறங்கினார். நடந்தார். கருவியைச் சரி செய்தார். நிமிர்ந்து பார்த்த பொழுது, ஆய்வகத்தையே காணாமல் திகைத்தார். பனிக் காற்றின் அடர்த்தி ஆய்வகத்தையே மறைத்து விட்டது. காற்றானது கிழக்கு திசையில் இருந்து மேற்கு நோக்கி, வெகு வேகமாய் வீசிக் கொண்டிருந்தது.
சுதாகர் ராவ் யோசித்தார். ஆய்வகம் இருக்கும் திசையை நோக்கி நடந்தால், புயல் காற்றானது, தன்னை அதன் போக்கில் தள்ளும் என்பதையும், அதனால் பாதையில் இருந்து விலகி தத்தளிக்க நேரிடும் என்பதையும் உணர்ந்தார். கிழக்கு நோக்கி காற்றை எதிர்த்து நடக்கத் தொடங்கினார். ஆனாலும்தான் இறங்கி வந்த ஏணியைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
சற்றே மேற்கு நோக்கி நடந்தால், நிச்சயமாக ஆய்வுத் தளத்தின் சுவற்றினைத் தொட்டு விடலாம். சுவற்றினைப் பிடித்து விட்டோமானால், சுவற்றைத் தடவிக் கொண்டே நடந்தால், ஏணி இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்து விடலாம் என்று எண்ணி, திசை மாறி நடக்கத் தொடங்கினார். பனிப் புயலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, திசை மாறிவிட்டோமோ என்ற பயம் அவரைத் தொற்றிக் கொண்டது.பனிப் புயலின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பற்றி, கர்னல் அவர்கள் சொன்னது நினைவிற்கு வரவே, அவ்விடத்திலேயே அமர்ந்து கொண்டார். அமர்ந்த சில நிமிடங்களிலேயே, பனி உடம்பின் அத்தனை எழும்புகளிலும் புகுந்து, நாடி நரம்புகளை எல்லாம் சில்லிடச் செய்தது.
நேரம் செல்லச் செல்ல, கொஞ்சம் கொஞ்சமாக நினைவினை இழக்கத் தொடங்கினார்.