காலடியில் மிருதுவாய் ஒரு பொருள். கர்னல் குனிந்து தடவிப் பார்த்தார்.
ஓர் மனித உடல்.
பனியில் சற்றேறக்குறைய முழுவதுமாய், புதைந்து போன நிலையில், விறைத்துப் போன ஓர் உடல். அவசர அவசரமாகப் பனியினை அகற்றி, உடலினைத் தூக்கமுயன்றனர். முடியவில்லை. உடலோடு பனியானது அகற்ற இயலாத நிலையில் ஒட்டிக் கொண்டிருந்தது. தலையும், இரு கைகளும் மட்டுமே வெளிப்புறம் தெரிந்ததே தவிர, உடலானது, பனிக் கட்டிக்குள் முழுவதுமாய் மறைந்திருந்தது.
லேசாக, மிகவும் லேசாக, இளம் சூடாய், மிகவும் இளம் சூடாய், மெதுவாக, மிக மெதுவாக மூச்சுக் காற்று வந்து கொண்டிருந்தது. உயிர் இருக்கிறது. காப்பாற்றி விடலாம். சுதாகர் ராவ் அவர்களின் இரு கைகளையும், ஆளுக்கொரு கையால் பிடித்து இழுத்தனர். உடல் மட்டும் வரவில்லை. உடலோடு ஒட்டியிருந்த பனியும், ஒரு பெரு மூட்டையாய், ஒடலோடு ஒட்டியவாரே வந்தது. இருவரும், ஆளுக்கு ஒரு கையால் சுதாகர் ராவ் அவர்களையும், மற்றொரு கையால் நைலான் கயிற்றினையும் பிடித்துக் கொண்டு, பனி மூட்டைக்குள் புதைந்திருந்த சுதாகர் ராவ் அவர்களை, பனியோடு இழுத்துக் கொண்டு ஏணி வரை வந்தனர்.
அதற்குள் மற்றவர்களும் ஏணி வழியே எட்டிப் பார்க்கவே, அனைவரின் உதவியுடனும், ஏணியில், சுதாகர் ராவை மெதுவாக மேலே ஏற்றினர். பின் ஆய்வுத் தளத்திற்குள் இறக்கினர். ஆய்வுத் தளத்திற்கு வெளியே அதிக நேரம் இருப்போமேயானால்,குளிரினாலும், பனிக் காற்றினாலும், உடலின் வெளிப் பாகங்களிலும், பனி உடையின் மேற்புறத்திலும் பனி உறையத் தொடங்கி விடும். முகம், மீசை, தாடி, கண் இமை போன்ற இடங்களில் பனி உறைந்து கட்டியாகிவிடும். கண் இமையினை மூடக் கூட இயலாது. இப் பனியை கைகளாலும் அகற்ற இயலாது. கைகளால், உடலில் உறைந்திருக்கும் பனியை நீக்க முயன்றால், முகம், தோல், முடி இவையெல்லாம், பனியோடு சேர்ந்து பிய்த்துக் கொண்டு வந்து விடும்.
எனவே இப்பனியினை நீக்குவதற்கான ஒரே வழி, இவற்றை உருக வைப்பதுதான்.
பாராட்டுக்கடிதம்
சுதாகர் ராவ் அவர்களின் உடலினைச் சுற்றியும், கழுத்திலும், முகத்திலும் சூடான தண்ணீர் பைகள் வைக்கப் பட்டன. மேலும் ஆய்வுத் தளத்தில் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும், ஜெனரேட்டரின், விசிறியின் மூடி திறக்கப்பட்டது. அதன் அருகில் சுதாகர் ராவ் நிற்க வைக்கப்பட்டார். ஜெனரேட்டரின் விசிறியானது வெப்பத்தை வெளித் தள்ளும். எனவே மின் விசிறியின் வெப்பத்தால், சுதாகர் ராவ் அவர்களின் உடலில் ஒட்டியிருந்த, பனி மூட்டை, கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்தது.
உடலும் கொஞ்சம் கொஞ்சமாக, சூடேறத் தொடங்கியது.
சுதாகர் ராவ் மெல்லக் கண் விழித்தார்.
ஆய்வுக் குழுவினர் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.
ஆய்வுக் குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்ட, சில நாட்களில், இரவில், வானில் அந்த அதிசயம் அரங்கேறியது.