
நண்பர்களே, உங்களின் குழப்பம் புரிகிறது. தவறு தவறு என்று நீங்கள் உரத்துக் கூறுவது என் செவிகளில் விழுகிறது.
என்ன இரவு 8.30 மணிக்கு, சூரிய ஒளியில் கடற்கரை பிரகாசித்துக் கொண்டிருந்ததா? யாரிடம் கதை விடுகிறீர்கள் என நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும் இதுதான் உண்மை, உண்மை, உண்மை.
பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது என்பதும், பூமி 90 டிகிரி செங்குத்தான் அச்சில் இருந்து இருபத்து ஒன்றரை டிகிரி சாய்வாக இருப்பதும் நாம் அறிந்ததே. இதன் காரணமாகவே இரவும், பகலும் மாறி, மாறி வருகிறது என்பதும் நமக்குத் தெரிந்ததே.
ஆனால் இந்தக் கதையெல்லாம், பூமியின் வட துருவத்திலும், தென் துருவத்திலும் செல்லுபடி ஆகாது. இங்கே பகல் ஆறு மாதம். இரவு ஆறு மாதம்.
The trajectory of the sun above Concordia over a 24 hour period
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 21 ஆம் தேதி முதல், மார்ச் 21 ஆம் தேதி வரை சூரியன் தென் துருவத்தில் மறைவதே இல்லை. டிசம்பர் 21 ஆம் தேதியில் இருந்து, மார்ச் 21 ஆம் தேதிவரை, சூரிய வெளிச்சம் மெல்ல, மெல்லக் குறையும். மார்ச் 21 முதல் ஜுன் 21 வரை சூரியன் தலைமறைவாகி, இருளையே பரிசாய் வழங்கும். ஜுன் 21 முதல் வெளிச்சம் மெல்ல, மெல்ல தலை தூக்கி, செப்டம்பர் 21 முதல் மீண்டும் பகல் தொடங்கும்.
இதுதான் அண்டார்டிகா. அதோ, தொலைவில் தெரிகிறதல்லவா. அதுதான்,
தக்ஷின் கங்கோத்ரி.