"
  1. துன்பத்தின் கற்பனை

கவலையும் துன்பமும் துக்கமும் வாழ்க்கையின் சாயைகள். உலகம் முழுவதிலும் கவலையால் கலங்காத உயிரே இல்லை; துன்பத்தால் துடியாத மனமே இல்லை; துக்கத்தால் துளியாத கண்ணே இல்லை. உலகத்தில் பிணியும் மரணமுமாகிய எமதூதரால் உயிர்க்குயிராகிய உறவினர் பிரிக்கப்பட்டுத் துக்கமாகிய இருட் போர்வையால் மூடப்படாத குடும்பம் இல்லை. வலியதாகவும் எளிதில் அறுக்க முடியாததாகவும் தோற்றுகிற தீமைவலையில் சகல மனிதரும் முன்னர்ச் சிக்கிப் பின்னர்க் கவலையாலும் துன்பத்தாலும் துக்கத்தாலும் வருந்துகின்றனர்.

இவ்வருத்தத்திலிருந்து தப்புவதற்காகப் புருஷர்களும் ஸ்திரீகளும் எண்ணிறந்த உபாயங்களைச் செய்கின்றனர்; எண்ணிறந்த மார்க்கங்களிற் பிரவேசிக்கின்றனர்; அவற்றால் அழிவில்லாத ஓர் சுகத்தை அடையலாமென்று நம்புகின்றனர். சிலர் மதுபானம் செய்தும், விபச்சாரம் செய்தும் திரிகின்றனர்; சிலர், உலகக் குழுவை விட்டு நீங்கித் தனித்த ஓர் இடத்தை அடைந்து, தம்மைச் சுற்றிப் பல போக்கியப் பொருள்களை அமைத்துக் கொண்டு வசிக்கின்றனர்; சிலர் பொருளையோ புகழையோ அவாவி, அவற்றை அடைதற்காக மற்றைய எல்லாற்றையும் கீழ்ப்படுத்துகின்றனர்; சிலர் மதசம்பந்தமான சடங்குகளைச் செய்து திருப்தியடைகின்றனர்.

அவாவிய சுகம் எல்லாருக்கும் கிடைப்பது போலத் தோன்றுகின்றது; ஆன்மா சிறிது காலம் துன்பத்தை மறந்து இன்பத்துள் களிக்கின்றது. அதனால் கடைசியில் ஒருநாள் ஒரு பெரும் நோயோ, துக்கமோ, கவலையோ கேடோ தன்னைப் பலப்படுத்திக் கொள்ளாத ஆன்மாவைத் திடீரெனத் தாக்குகின்றது; ஆன்மா அதுவரையில் கொண்டிருந்த இன்பம் சிதறுண்டு போகின்றது. அப்படியே ஞானத்தால் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளாத மனிதனுடைய ஆன்மாவின்மீது எந்த நிமிஷத்திலும் விழுந்து அதனை அழித்துவிடத்தக்க ஒரு கூரிய வாள் ஒவ்வொரு பொறியின்பத்தின் தலைமீதும் தொங்கிக் கொண்டிருக்கின்றது.

குழந்தையானது குமரன் அல்லது குமரியாவதற்கு அழுகின்றது; குமரனும் குமரியும் தமது கழிந்த குழந்தைப் பருவத்தை நினைத்துப் பெருமூச்சு எறிகின்றனர். எளிய மனிதன் தனது வறுமை விலங்கால் வருந்துகின்றான்; வலிய மனிதன் தன்பால் வறுமை வந்துவிடுமோ என்ற அச்சத்தால் வருந்துகிறான் அல்லது தான் சுகமெனக் கருதுகின்ற நிலையற்ற ஒரு சாயையை அடைவதற்காக உலகத்தை வருத்துகிறான். சில வேளைகளில் ஆன்மா ஒரு மதத்தைத் தழுவுவதாலோ, ஒரு மனோதத்துவ சாஸ்திரத்தைக் கற்பதாலோ ஒரு மனக்கொள்கையை அல்லது தொழிற் கொள்கையை அனுசரிப்பதாலோ, தான் நிலையுள்ள அமைதியையும் சுகத்தையும் அடைந்துவிட்டதாகக் கருதுகின்றது. ஆனால் விலக்கமுடியாத ஓர் ஆபத்து அம்மதத்தைத் தகுதியற்றதாக்கி விடுகின்றது; அத்தத்துவ சாஸ்திரத்தைப் பயனற்றதாக்கிவிடுகின்றது; பல வருஷங்களாக வருந்திக் கைக்கொண்ட அக்கொள்கையை ஒரு நிமிஷத்தில் தூள் தூளாக்கி விடுகின்றது.

அப்படியானால் துன்பத்திலிருந்தும் துக்கத்திலிருந்தும் தப்புவதற்கு மார்க்கம் இல்லையா? தீமையின் கட்டுகளை அறுப்பதற்கு உபாயங்கள் இல்லையா? ஸ்திரமான அமைதியும் நிலையுள்ள செல்வமும் நித்திய சுகமும் வெறுங் கனவுகளா? இல்லை. ஒரு மார்க்கம் இருக்கிறது; அதனால் தீமையை வேரோடு களைந்து விடலாம். ஓர் உபாயம் இருக்கிறது; அதனால் பிணியையும் மற்றைய பிரதிகூல நிலைமைகளையும் சந்தர்ப்பங்களையும் அடியோடு நீக்கி விடலாம்; ஒரு முயற்சி இருக்கின்றது; அதனால் வறுமை வருமோ என்ற அச்சமே உண்டாகாத ஸ்திரமான செல்வத்தை அடையலாம். ஓர் அப்பியாசம் இருக்கின்றது; அதனால் முடிவும் அழிவும் இல்லாத அமைதியையும் சுகத்தையும் அடையலாம். இப்பெரும் பேற்றை அடையச் செய்யும் மார்க்கத்தின் தொடக்கம் துன்பத்தின் தன்மையைச் சரியாக அறிதலேயாம்.

துன்பத்தை வெறுத்தலோ கவனியாதிருத்தலோ போதாது; அதனை அறிய வேண்டும். துன்பத்தை நீக்கும்படி கடவுளைப் பிரார்த்தித்தல் போதாது; அஃது எதன் பொருட்டு வந்திருக்கிறதென்றும், அஃது எதனை உங்களுக்குக் கற்பிக்க நிற்கிறதென்றும் நீங்கள் அறியவேண்டும். உங்களைப் பந்தப்படுத்துகிற விலங்குகளைப் பார்த்து நீங்கள் பெருமூச்சு விடுவதாலும், சத்தமிடுதலாலும், அழுவதாலும் யாதொரு பயனும் இல்லை; அவை எதற்காக உங்களைப் பந்தப்படுத்தியிருக்கின்றனவென்றும் நீங்கள் அறிய வேண்டும். ஆதலால் நண்பர்களே! நீங்கள் உங்களுக்கு அந்நியராக நின்று கொண்டு, நீங்கள் உங்களை ஆராய்ந்தறிதற்குத் தொடங்க வேண்டும்; அநுபவம் என்னும் கலாசாலையில் நீங்கள் கீழ்ப்படிதலில்லாத மாணவராயிருப்பதை விட்டு, நீங்கள் பணிவோடும் பொறுமையோடும் உங்கள் அபிவிர்த்திக்கும் பூர்ணத்துவத்திற்கும் அத்துன்பம் கொண்டிருக்கும் பாடங்களைக் கற்கத் தொடங்க வேண்டும். ஏனெனில், துன்பமானது சரியாக அறியப்பட்ட காலையில் அது பிரபஞ்சத்தில் அளவற்ற ஒரு சக்தியன்றென்றும் தத்துவமன்றென்றும், ஆனால் கழிந்து போகக்கூடிய ஒரு மனித அநுபவமென்றும் தெரியவரும்; ஆதலால், துன்பமானது கற்க விரும்புகிறவர்களுக்கு ஓர் ஆசிரியன் போல உதவுகின்றது. துன்பமானது உங்களுக்குப் புறத்திலுள்ள ஒரு பொருளன்று; அஃது உங்கள் அகத்தின் ஓர் அநுபவம்; நீங்கள் உங்கள் அகத்தைப் பொறுமையோடு ஆராய்ந்து பார்த்து ஒழுங்குபடுத்துவதால் நீங்கள் துன்பத்தின் மூலத்தையும் தன்மையையும் நாளடைவில் காண்பீர்கள்; பின்னர் அஃது உங்களை விட்டு அறவே நீங்கிவிடும்.

ஒவ்வொரு துன்பத்தையும் திருத்தலும் பரிகரித்தலும் கூடும்; ஆதலால், அது நிலையில்லாதது. அது பொருள்களின் உண்மையான இயற்கையையும் சம்பந்தத்தையும் அறியாத அஞ்ஞானத்தால் வேரூன்றியிருக்கிறது; அவ்வஞ்ஞான நிலைமையில் நாம் இருக்குங் காலமெல்லாம் நாம் துன்பத்திற்கே ஆளாகியிருக்கிறோம். பிரபஞ்சத்திலுள்ள சகல துன்பங்களும் அஞ்ஞானத்தின் காரியங்கள்; அவற்றின் கற்பனைகளை நாம் கற்றுக் கொள்வதற்கு விருப்பமுடையவராகவும் தயாராகவும் இருப்போமானால், அவை நம்மை முற்றிலும் உயர்ந்த அறிவாளிகளாக்கிவிட்டு நீங்கி விடும். ஆனால் மனிதர் எப்பொழுதும் துன்பத்தில் இருக்கின்றனர்; அஃது அவரை விட்டு நீங்குவதில்லை. ஏனெனில் அஃது அவருக்குக் கற்பிக்கக் கொண்டிருக்கும் பாடங்களை அவர் கற்பதற்குத் தயாராகவும் விருப்பமுடையவராகவும் இல்லை. யான் ஒரு குழந்தையை அறிவேன். அதன் தாய் அதனை இராக் காலத்தில் படுக்கைக்கு கொண்டு போனபோதெல்லாம் எரிகின்ற மெழுகுவர்த்தியுடன் அது விளையாட விரும்பி அழுவதுண்டு. ஓர் இரவில் தாய் வெளியிற் போயிருந்த சமயத்தில் குழந்தை மெழுகுவர்த்தியைக் கையில் எடுத்தது. அது குழந்தையின் கையைச் சுட்டு விட்டது. அக்காலம் முதற்கொண்டு அக்குழந்தை மெழுகுவர்த்தியுடன் விளையாட ஒருபோதும் விரும்பியதில்லை. அது தனது ஒரு மடச்செய்கையினால் பெற்றோர் வார்த்தைக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்ற பாடத்தைப் பூர்த்தியாகப் படித்துக் கொண்டது; நெருப்பு சுடுமென்ற ஞானத்தையும் அடைந்துவிட்டது. சகல துன்பங்களுடைய இயல்புகளையும், நோக்கங்களையும் முடிவுகளையும் பூர்த்தியாக விளக்குவதற்கு இவ்வொரு சம்பவமே போதுமானது. குழந்தை நெருப்பின் உண்மையான இயல்பை அறியாத அஞ்ஞானத்தால் வருந்தியது போலப் பெரிய குழந்தைகளாகிய மனிதர், தாம் அடைந்தபோது தமக்கு வருத்ததைக் கொடுக்கும் பொருள்களின் உண்மையான இயல்புகளை அறியாத தமது அஞ்ஞானத்தால் அவற்றை அடைய அலாவியும் அழுதும் அடைந்து வருந்துகின்றனர். இரண்டிற்கும் ஒரே ஒரு வேற்றுமை உண்டு. பெரிய குழந்தைகளாகிய மனிதரின் அஞ்ஞானமும் துன்பமும் அதிக ஆழத்தில் வேரூன்றியனவாகவும் எளிதில் நீக்க முடியாதனவாகவும் இருக்கின்றன.

நன்மைக்கு ஒளியையும் தீமைக்கு இருளையும் உபமானங்களாகக் கூறுகின்றனர். இவ்வுபமானங்கள் நன்மை தீமைகளுடைய முழு அர்த்தத்தையும் உண்மையையும் விளக்கத்தக்கவை. ஒளி பிரபஞ்சமெல்லாம் விளங்கும் சூரியனது உண்மைத் தோற்றம். அதுபோல, நன்மை பிரபஞ்சமெல்லாம் பரவி உயிர்களைக் காக்கும் மெய்ப்பொருளினது உண்மைத்தோற்றம். இருள்சூரியனது ஒளியின் ஒரு பாகத்தை மறைக்கும் பூமியினது நிழலாகிய இன்மைப் பொருள். அதுபோலத் தீமை மெய்ப்பொருளினது நன்மையின் ஒரு பாகத்தை மறைக்கும் ஜீவனது நிழலாகிய இன்மைப் பொருள். இரவு தனது கருப்புப் போர்வையால் நமது பூமியின் ஒரு பக்கத்தை மாத்திரம் மறைக்கிறது. அது மற்றைய பாகங்களிலெல்லாம் ஒளி விளங்கிக் கொண்டிருக்கிறது. அதுபோல, அஞ்ஞானம் தனது கேடும் துன்பமும் துக்கமுமாகிய கருப்புப்போர்வையால் மெய்ப்பொருளின் ஒரு பாகத்தை மாத்திரம் மறைக்கிறது; அதன் மற்றைய பாகங்களிலெல்லாம் ஆக்கமும் இன்பமும் சுகமும் விளங்கிக் கொண்டிருக்கின்றன. ஒளிமயமான சூரியனைப் பூமி மறைப்பதால் அஃது இருளால் மூடப்படுகின்றது. அப்படியே ஞானமயமான மெய்ப்பொருளை ஜீவன் மறைப்பதால் ஜீவன் அஞ்ஞானத்தால் மூடப்படுகின்றது. இருளால் மூடப்பட்ட புவியினர்கள் நல்ல வழியையும் தீய வழியையும் அறியமாட்டாது தீய வழியில் சென்று இடர்ப்படுகின்றனர். அவ்வாறே, அஞ்ஞானத்தால் மூடப்பட்ட ஜீவர்கள் நன்மையையும் தீமையையும் பகுத்தறிய மாட்டாது தீமையைப் புரிந்து கேட்டையும் துன்பத்தையும் துக்கத்தையும் அடைந்து வருகின்றனர். இரவின் இருளையடைந்தே பகலின் ஒளிக்குச் செல்ல வேண்டும். அவ்வாறே, அஞ்ஞானத்தின் துன்பத்தை அநுபவித்தே ஞானத்தின் இன்பத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால், “சிலர் துன்பத்தின் வழியாகச் செல்வானேன்?” என்று வினவல் கூடும். அஞ்ஞானத்தால் நீங்கள் அவ்வழியிற் பிரவேசித்திருக்கிறீர்கள்; நீங்கள் அவ்வழியாகச் செல்வதனால் இன்பத்தின் பெருமையை நன்கு அறிவீர்கள்; இருள் வழியாகச் செல்பவர் ஒலியின் பெருமையை நன்கு அறிவது போல் துன்பம் அஞ்ஞானத்தின் நேரான காரியமாதலால் துன்பத்தின் கற்பனைகளைப் பூரணமாய் கற்று முடித்தபொழுது அஞ்ஞானம் நீங்கி விடுகிறது; அதன் இடத்தில் ஞானம் வந்து அமருகிறது, ஆனால் கீழ்ப்படிதல் இல்லாத ஒரு குழந்தை தனது பள்ளிக்கூடத்துப் பாடங்களைப் படியாமல் எப்பொழுதும் மடமையில் இருந்து கொண்டு மேன்மேலும் சிட்சை அடைந்து கொண்டிருத்தல் போல், மனிதரிற் சிலர் துன்பங்களின் கற்பனைகளைக் கல்லாமல் எப்பொழுதும் அஞ்ஞானத்தில் இருந்துகொண்டு நோயும் ஆசாபங்கமும் துக்கமுமாகிய சிட்சைகளை மேன்மேலும் அடைந்துகொண்டிருத்தல் கூடும். எவன் தன்னைச் சூழ்ந்திருக்கிற துன்பத்தினின்று நீங்கிக் கொள்ள விரும்புகிறானோ, அவன் துன்பத்தின் கற்பனைகளைக் கற்றுக்கொள்வதற்கு விருப்பமுடையவனாகவும் கடுமையான முயற்சி செய்யத் தயாராகவும் இருத்தல் வேண்டும். ஏனெனில், கடுமையான முயற்சியின்றி ஞானத்தையாவது சாந்தியையாவது நிலையான சுகத்தையாவது ஒரு சிறிதும் அடைய முடியாது.

ஒரு மனிதன் ஓர் இருட்டறையுள் போய் அதன் கதவை அடைத்துக்கொண்டு உலகத்தில் ஒளியென்பதே இல்லையென்று சொல்லலாம்; ஆனால், ஒளி, வெளியில் எங்கும் நிறைந்திருக்கிறது; இருள் அவனுடைய சிறிய அறையில் மாத்திரம் இருக்கிறது. அப்படியே நீங்களும் மெய்ப்பொருளின் ஒளி உங்கள் மீது படாமல் மறைத்துக் கொள்ளலாம்; அல்லது உங்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிற வெறுப்பு, சுயநலம், பாவம் முதலிய மதில்களை இடித்துச் சர்வ வியாபகமான பேரொளியைக் காணற்குத் தொடங்கலாம்.

நீங்கள் உங்களை ஆண்மையோடு ஆராய்ந்து பார்த்து துன்பமானது கழிந்துபோகும் ஒரு நிலைமையென்றும், அஃது உங்களால் உண்டு பண்ணப்பட்டதென்றும், உங்களுடைய சகல கேடுகளும்; துன்பங்களும், துக்கங்களும், சிறிதும் பிழையாத ஒரு சட்டப்படி உங்கள்பால் வந்திருக்கின்றனவென்றும், அவற்றை நீங்கள் விரும்புவதாலும், அவற்றை நீங்கள் அடைவதற்கு அருகர்களானதாலும் அவை உங்களைச் சார்ந்திருக்கின்றனவென்றும், அவற்றை முன்னர் அநுபவித்துப் பின்னர் அறிவதால் நீங்கள் மிக்க பலமும் ஞானமும் மேம்பாடும் அடைவீர்களென்றும் நீங்கள் அபரோட்சகமாக அறியுங்கள். அவ்வபரோட்ச ஞானத்தை நீங்கள் பூர்த்தியாக அடைந்தபொழுது, நீங்கள் உங்கள் நிலைமைகளைத் திருத்திக் கொள்ளவும், சகல துன்பங்களையும் இன்பங்களாக மாற்றிக் கொள்ளவும், உங்கள் ஊழை விலக்கிக் கொள்ளவும் வல்லவர்களாவீர்கள்.

நேரிசை வெண்பா
நீளிரவில் துன்புற்று நெஞ்சுடையும் காவலனே!
வாளொளியைப் பார் அந்த மாமலைமேல்;-நாளின்
ஒளிக்கொளியா நிற்கின்ற ஓர்மெய்யின் தூதன்
களிப்பொடுவைத் தான்மலைமேல் கால்.
(வாள்-பிரகாசமுள்ள)
இரவிலெழும் போயோ டிருட்குழுவை யோட்டும்.

License

Icon for the Public Domain license

This work (வலிமைக்கு மார்க்கம் by வ.உ.சி) is free of known copyright restrictions.

Share This Book